search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெல்லி மழை"

    • டெல்லியில் இருந்து சென்னைக்கு செல்லவிருந்த மூத்த அரசு அதிகாரி ஒருவர், தனது விமானம் 5 மணி நேரத்திற்கும் மேல் தாமதமாக வந்ததாக தெரிவித்தார்.
    • அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகரித்து 36.8 டிகிரி செல்சியசாக இருந்தது.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியின் பல பகுதிகளில் நேற்று மாலை திடீரென கனமழை பெய்தது. கடுமையான வெயிலில் தவித்த பொதுமக்கள் சிறிது நேரம் பெய்த மழையால் சற்று நிம்மதி அடைந்தனர்.

    இந்தநிலையில் மோசமான வானிலை காரணமாக டெல்லி விமான நிலையத்தில் 15 விமானங்கள் திருப்பி விடப்பட்டன. மேலும் பல விமானங்களும் தாமதமாக வந்தன.

    இந்த விமானங்களில், 9 விமானங்கள் ஜெய்ப்பூருக்கும், தலா 2 விமானங்கள் அமிர்தசரஸ் மற்றும் லக்னோவிற்கும், தலா ஒரு விமானம் மும்பை மற்றும் சண்டிகருக்கும் திருப்பி விடப்பட்டதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    டெல்லியில் இருந்து சென்னைக்கு செல்லவிருந்த மூத்த அரசு அதிகாரி ஒருவர், தனது விமானம் 5 மணி நேரத்திற்கும் மேல் தாமதமாக வந்ததாக தெரிவித்தார்.

    இதுகுறித்து இந்திய வானிலை மையம் கூறும் போது, டெல்லியில் வானிலை திடீரென மாறியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகரித்து 36.8 டிகிரி செல்சியசாக இருந்தது. பலத்த காற்றும் லேசான மழையும் பெய்தது. அடுத்த 7 நாட்களுக்கு டெல்லியில் வெப்ப அலைக்கான சாத்தியம் ஏதும் இல்லை என்று தெரிவித்துள்ளது.

    • தென்மேற்கு டெல்லி வசந்தவிகார், முகிர்தா, ஆர்.கே. புரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலை பலத்த மழை கொட்டியது.
    • மழை காரணமாக டெல்லி-நொய்டா தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    புதுடெல்லி:

    தென்மேற்கு டெல்லி வசந்தவிகார், முகிர்தா, ஆர்.கே. புரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலை பலத்த மழை கொட்டியது. இதனால் ரோடுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது.

    மழை காரணமாக டெல்லி-நொய்டா தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றது. வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் வாகன ஓட்டிகள் தவிப்புக்குள்ளானார்கள்.

    டெல்லியில் மேலும் 5 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • பலத்த மழை காரணமாக டெல்லியில் முக்கிய சாலைகளில் வெள்ளம் இடுப்பளவுக்கு இருந்தது.
    • டெல்லியில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பல இடங்களில் நிவரண முகாம் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

    புதுடெல்லி:

    வடமாநிலங்களில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. தலைநகர் டெல்லியில் நேற்று இரவு முதல் தொடங்கிய மழை இன்று காலை வரை விடிய விடிய பெய்தது.

    தொடர் மழை காரணமாக டெல்லியில் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழை தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. டெல்லி புறநகர் பகுதியான நொய்டாவிலும் கடும் வெள்ள சேதம் ஏற்பட்டுள்ளது.

    பலத்த மழை காரணமாக டெல்லியில் முக்கிய சாலைகளில் வெள்ளம் இடுப்பளவுக்கு இருந்தது. இதனால் வாகனங்கள் வெள்ளத்தில் மிதந்தபடி சென்றன. பெரும்பாலான இடங்களில் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

    டெல்லியில் தொடர்ந்து மழை பெய்யும் என்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் யமுனை நதியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டு இருக்கிறது.

    டெல்லியில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பல இடங்களில் நிவரண முகாம் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

    • யமுனை ஆற்றில் மறுபடியும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    • தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

    டெல்லி, இமாசலபிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் பலத்த மழை கொட்டியதால் பல நகரங்களை வெள்ளம் சூழ்ந்தது. டெல்லி யமுனை ஆற்றில் வரலாறு காணாத வகையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. பின்னர் வெள்ளம் வடிய தொடங்கிய நிலையில் டெல்லியில் மீண்டும் மழை பெய்து வருகிறது. நேற்று பல இடங்களில் மழை வெளுத்து வாங்கியது.

    இதனால் யமுனை ஆற்றில் மறுபடியும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அபாய அளவை தாண்டி தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது. நேற்று காலை யமுனையில் 205.96 மீட்டர் அளவாக இருந்த நீர்மட்டம் இரவு 9 மணி அளவில் 206.42 மீட்டராக உயர்ந்தது.

    இன்று காலை இது 206.56 மீட்டர் நீர்வரத்து அதிகரித்ததால் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் தவிப்புக்கு உள்ளானார்கள்.

    யமுனையில் நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் கரையோரம் தாழ்வான பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். டெல்லியில் கண்காணிப்பு பணியும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    • யமுனை ஆற்றின் நீர் ஊருக்குள் புகுந்ததால் டெல்லி நகரம் வெள்ளத்தில் தத்தளித்தது
    • தற்போது நீர்மட்டம் குறைந்து வந்தாலும், மீண்டும் கனமழை மிரட்டி வருவதால் வெள்ள அபாயம் நீங்கவில்லை

    கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள புதுடெல்லியில் 3 நாட்களாக உயர்ந்து கொண்டே வந்த யமுனை ஆற்றின் நீர்மட்டம் தற்போது மெதுவாக குறைய ஆரம்பித்திருக்கிறது. இருப்பினும் மக்களை செல்பி எடுக்கவோ அல்லது வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் குளிக்கவோ வேண்டாம் என்று புதுடெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டுவிட்டர் வழியாக வேண்டுகோள் விடுத்துள்ளார்

    நேற்று வடமேற்கு டெல்லியின் முகுந்த்பூர் சௌக் பகுதியில் வெள்ளத்தால் தேங்கிய நீரில் குளித்த 3 சிறுவர்கள், பள்ளத்தில் மூழ்கி இறந்தனர். இந்த செய்தி வந்த ஒரு நாளுக்குப் பிறகு முதல்வரின் வேண்டுகோள் வந்திருக்கிறது.

    அவர் டுவீட் செய்திருப்பதாவது:-

    சிலர் விளையாடவோ, நீச்சல் அடிக்கவோ, செல்பி எடுக்கவோ, வீடியோ எடுக்கவோ வெள்ள நீரில் செல்வதாக பல இடங்களிலிருந்து செய்திகள் வருகின்றன. தயவு செய்து இதை செய்யாதீர்கள். நீங்கள் உயிரிழக்க நேரிடும். வெள்ள அபாயம் இன்னும் தீரவில்லை. தண்ணீர் ஓட்டம் மிகவும் வலிமையானது. நீர்மட்டம் எப்போது வேண்டுமானாலும் உயரலாம்.

    இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

    சாந்திவன் பகுதியில் குழந்தைகள் வெள்ளத்தில் விளையாடும் ஒரு வீடியோவை இணைத்து பதிவிட்ட கெஜ்ரிவால், "இதுபோன்ற செயல்களை தவிர்க்கவும்" என அனைவரையும் கேட்டுக்கொண்டுள்ளார்.

    நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பல நாட்களாக பெய்த கனமழையைத் தொடர்ந்து, நகரின் யமுனை நதியில் நீர்மட்டம் ஆபாய கட்டத்தை தாண்டியது. இதனால் புதுடெல்லியின் சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனை தொடர்ந்து தாழ்வான பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டனர்.

    நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் 208.66 மீட்டராக இருந்த நீர்மட்டம், இன்று காலை 10 மணியளவில் 207.48 மீட்டராக குறைந்துள்ளது. இருப்பினும் அபாய கட்ட அளவை (205.33 மீட்டர்) தாண்டி 2 மீட்டருக்கு மேல் உயர்ந்தது.

    இந்திர பிரஸ்தா பகுதி ரெகுலேட்டரில் (வடிகால் சீராக்கும் கருவி) ஏற்பட்ட உடைப்பினால், நகரின் ஐடிஓ (ITO) அருகே உள்ள பகுதி மற்றும் ரிங் ரோடு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. சாந்திவனில் இருந்து கீதா காலனி வரையிலான ரிங் சாலையின் இரு பாதைகளிலும் கார்கள், ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் இதர இலகு ரக வாகனங்கள் செல்ல டெல்லி போக்குவரத்து காவல்துறை அனுமதி அளித்துள்ளது. இருப்பினும், சாந்திவனில் இருந்து ராஜ்காட் மற்றும் ஐஎச்பிடி (ISBT) நோக்கி செல்லும் சாலை இன்னும் மூடப்பட்டுள்ளது.

    • மெட்ரோ கட்டுமானப் பகுதியில் இன்று பிற்பகல் 3 மணியளவில் வெள்ளத்தில் குளிக்க குதித்தனர்.
    • சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

    வடமாநிலங்களில் பெய்த பேய்மழை காரணமாக யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தலைநகர் டெல்லி வெள்ளத்தில் மூழ்கியது.

    டெல்லியில் சாலை எங்கும் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மழைநீரை வெளியேற்றும் பணியில் டெல்லி அரசு ஈடுபட்டுள்ளது.

    இந்நிலையில், டெல்லியின் முகுந்த்பூரில் தேங்கி இருந்த வெள்ள நீரில் குளித்த மூன்று சிறுவர்கள் அதில் மூழ்கி உயிரிழந்தனர்.

    டெல்லி முகுந்த்பூரில் உள்ள மெட்ரோ கட்டுமானப் பகுதியில் இன்று பிற்பகல் 3 மணியளவில் வெள்ளத்தில் குளிக்க குதித்த சிறுவர்கள் நீரில் மூழ்கினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து வெள்ளத்தில் மூழ்கிய சிறுவர்களை மீட்டு உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் சிறுவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    உயிரிழந்த சிறுவர்கள் பியூஷ் (13), நிகில் (10), ஆஷிஷ் (13) என அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • தென்மேற்கு பருவமழையால் வடஇந்தியாவில் பேய்மழை
    • இமாச்சல பிரதேசம், டெல்லியில் எங்குபார்த்தாலும் வெள்ளம்

    தென்மேற்கு பருவமழை காரணமாக வட இந்தியாவில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லி, உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், உத்தர பிரதேசம், ஹரியானா, ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களில பேய்மழை பெய்தது.

    இதனால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. அணைகளிலும் நீர்மட்டம் ஜெட்வேகத்தில் உயர்ந்துள்ளது. ஹரியானா மாநிலம் யமுனா நகரில் அமைந்துள்ள ஹத்னிகுண்டு தடுப்பணையை அம்மாநில அரசு முன்னெச்சரிக்கை காரணமாக திறந்து விட்டது.

    இதனால் டெல்லி மாநிலத்தில் யமுனை ஆற்றில் நீர்மட்டம் அபாய கட்டத்தை தாண்டியுள்ளது. நேற்று மாலை 205.33 மீட்டரை தாண்டியது. இதனால் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் பழைய ரெயில் பாலம் அருகில் 206.28 மீட்டரை தாண்டியது. இன்று மதியம் 206.65 மீட்டரை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று அளித்த பேட்டியில் ''வெள்ள அபாயம் மோசமான நிலையில்தான் உள்ளது. ஆனால், அரசு எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்க தயாராக உள்ளது. 206 மீட்டரை தாண்டும்போது மக்களை வெளியேற்றும் பணி தொடரும்'' என்றார்.

    கிழக்கு டெல்லியின் சில இடங்களில் நேற்றிரவில் இருந்து அதிகாரிகள் மக்களை வெளியேற்றி வருகின்றனர். அதிகாரி ஒருவர் ''பாதிக்கப்படும் இடங்களில் வசிக்கும் மக்கள் மட்டும் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்'' என்றார்.

    ஹரியானா மாநிலம் 3 லட்சம் கனஅடி நீரை திறந்து விடுவதால் யமுனை ஆற்றில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. வழக்கமாக 352 கனஅடி நீர்தான திறந்து விடப்படும். தற்போது அதிகமாக திறந்து விடப்ப்டுள்ளது. தடுப்பணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் இரண்டு அல்லது மூன்று நாட்களில் டெல்லியை வந்தடையும்.

    ஏற்கனவே, வெள்ள அபாயம் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், 16 கட்டுப்பாட்டு அறைகளையும் திறந்து கண்காணித்து வருகிறது.

    உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், இமாசல பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், டெல்லி மாநிலங்களில் நீர்ப்பிடிப்பு பகுதிகளை உள்ளிடக்கியது யமுனை ஆறு. டெல்லியில் சுமார் 41 ஆயிரம் மக்கள் தாழ்வான பகுதியில் வசித்து வருகிறார்கள்.

    யமுனை ஆற்றில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நீர் அளவு (206.38) அபாயம் கட்டத்தை எட்டியது. 2019-ல் ஆகஸ்ட் 18 மற்றும் 19-ந்தேதிகளில் 8.28 லட்சம் கனஅடி நீர் வரத்தால் 206.6 மீட்டர் அளவை எட்டியது. 2013-ல் 207.32 மீட்டரை தொட்டது.

    • சிம்லா மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால் அங்குள்ள சப்பா மின் நிலையம் வெள்ளக் காடாக காட்சியளிக்கிறது.
    • இமாச்சல பிரதேசத்தில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக அளவில் மழை பெய்துள்ளது.

    சிம்லா:

    வட மாநிலங்களில் தற்போது பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 2 நாட்களாக பெய்து வரும் பலத்த மழையால் பல மாநிலங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.

    குறிப்பாக இமாச்சல பிரதேசத்தை மழை வெள்ளம் புரட்டி போட்டுள்ளது. இமாச்சல பிரதேச மாநிலத்தில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக பல மாவட்டங்கள் வெள்ளக் காடாக காட்சியளிக்கின்றன.

    தொடர் மழை காரணமாக இமாச்சல பிரதேசத்தில் உள்ள முக்கிய ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. குறிப்பாக பியாஸ் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தால் மண்டி மாவட்டத்தில் உள்ள பஞ்ச வக்த்ரா கோவில் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது.

    சிம்லா மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால் அங்குள்ள சப்பா மின் நிலையம் வெள்ளக் காடாக காட்சியளிக்கிறது.

    குலு மாவட்டத்தில் தசோல பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதியும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

    சட்லஜ் ஆற்றில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் ஆற்றின் இரு பகுதிகளையும் இணைக்கும் இரும்பு பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

    சிம்லாவில் காற்று, மழை காரணமாக ஒரு வீட்டின் மீது மரம் சரிந்து விழுந்தது. இதனால் வீடு இடிந்தது. அந்த இடிபாடுகளில் ஒருவர் சிக்கிக் கொண்டார். இதையடுத்து மீட்பு படையினர் விரைந்து சென்று அவரை மீட்டனர்.

    கனமழையால் இமாச்சல பிரதேசத்தின் பல மாவட்டங்களை இணைக்கும் முக்கிய சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி 700-க்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டு உள்ளன. அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. நிலச்சரிவில் ஒரு கிராமமே மண்ணோடு மண்ணாக புதைந்து போனது.

    பல இடங்களில் மின் கம்பங்கள் மீது மரங்கள் முறிந்து விழுந்து உள்ளதால் மின் இணைப்பு மற்றும் தொலை தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளன. இமாச்சல பிரதேச மாநிலம் உன்னா பகுதியில் அதிக பட்சமாக இதுவரை 22.8 செ.மீ. அளவுக்கு மழை கொட்டி உள்ளது.

    சோலன் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 13.5 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. இமாச்சல பிரதேசத்தில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக அளவில் மழை பெய்துள்ளது.

    கங்ரா, சம்பா, குலு, மண்டி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. சோலன், சிம்லா, சிர்மாவூர் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    டெல்லியில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி உள்ளது. இடைவிடாது கொட்டித் தீர்த்த கன மழையால் டெல்லியில் பல்வேறு சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

    பல இடங்களில் மத்திய மந்திரிகளின் வீடுகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    கிரேட்டர் கைலாஸ், பெரோசா சாலை, ரபீக் பார்க், வோதி ஸ்டேட் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் மூழ்கடித்தது. குடியிருப்பு பகுதிகளையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி உளளனர். ஐ.ஓ.டி. பகுதியில் குளம் போல் மழை நீர் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    கனமழை காரணமாக டெல்லி சுந்தர் நகர் மார்க்கெட் பகுதியில் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்தது.ரோகினி பகுதியில் சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த பகுதியில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.

    டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் இன்றும் கன மழை பெய்தது. கன மழையால் அரியானா மாநிலம் குருகிராமில் போக்குவரத்து முடங்கி உள்ளது. டெல்லி-மனேசர் நெடுஞ்சாலையில் வாகனங்கள் நீண்ட தொலைவுக்கு அணிவகத்து நிற்கின்றன. குருகிராமில் பல பகுதிளில் தண்ணீர் தேங்கியுள்ளது. அங்கு மின்சாரமும் தடைபட்டுள்ளது.

    டெல்லியில் 58 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அடுக்குமாடி குடியிருப்பின் கூரை இடிந்து விழுந்து பலியானார். பிரகதி மைதான சுரங்க பாதையில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் சுரங்கபாதை மூடப்பட்டு அங்கு போக்கு வரத்து தடை செய்யப்பட்டுள்ளது. யமுனா நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    பலத்த மழை காரணமாக டெல்லி, நொய்டா குரு கிராமில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது.

    வெள்ள மீட்பு பணிகள் தொடர்பாக அம்மாநில அதிகாரிகளுடன் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆலோசனை நடத்தினார்.

    அரியானா மாநிலத்தில் மழை வெள்ளம் பலத்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அம்மாநில முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் தனது நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளார். மீட்பு பணிகள் தொடர்பாக அவர் அதிகாரிகளின் அவசர கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

    ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திலும் பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது. இங்கு பெய்த கன மழை காரணமாக உதம்பூர் பகுதியில் உள்ள பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

    குஜராத் மாநிலத்திலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இங்குள்ள கடியா, தோரா பகுதியில் உள்ள நீர் வீழ்ச்சிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மலைப் பகுதிகளில் அதிக அளவில் மழை பெய்து வருகிறது.

    உத்தரகாண்ட் மாநிலத்திலும் பருவ மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் அங்கு சாலைகள் உள்ளிட்ட பல இடங்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ராம்கர் என்ற பகுதியில் சென்ற பஸ் வெள்ளத்தில் சிக்கியது. இதன் காரணமாக அதில் இருந்த பயணிகள் ஜன்னல் வழியாக வெளியே குதித்து உயிர் தப்பினார்கள்.

    உத்தரகாண்ட் மாநிலத்தில் 8 மாவட்டங்களில் இன்னும் 2 நாட்களுக்கு கன மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.

    கனமழை காரணமாக வட மாநில நதிகளில் வரலாறு காணாத வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கார்கள், வாகனங்கள், வீடுகள் என அனைத்துமே வெள்ளத்தில் அடித்து செல்லப்படுகின்றன. கங்கை நதியிலும் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

    வட மாநிலங்களில் பெய்த மழைக்கு இதுவரை 18 பேர் பலியாகி உள்ளனர்.

    பஞ்சாப் மாநிலத்தின் மால்வா மற்றும் டோபா பகுதியில் பலத்த மழை காரணமாக கால்வாய்கள், சாலைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.

    பஞ்சாப் மாநிலத்தில் 5 நதிகளில் வெள்ளம் பெருக் கெடுத்து ஓடுகிறது. வயல்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. நெல், பருத்தி ஆகியவை சேதம் அடைந்துள்ளன. அங்கு மீட்பு பணியில் ஈடுபட முதல்-மந்திரி பகவந்த் மான் உத்தர விட்டுள்ளார்.

    இதே போல் ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, கோவா, மேற்கு வங்காளம், சிக்கிம், அசாம், மேகாலயா, அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர் ஆகிய மாநிலங்க ளிலும் மழை பெய்து வருகிறது. இந்த பகுதிகளில் இன்னும் 3 முதல் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    நாடு முழுவதும் நேற்று இயல்பை விட 81 சதவீதம் அதிக மழை பெய்துள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் முதல்-மந்திரிகளுடன் மத்திய மந்திரி அமித்ஷா ஆலோசனை நடத்தினார். அங்கு மீட்பு பணிகளுக்கு உதவ பேரிடர் மீட்பு படையினரும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    • அடுத்த இரண்டு நாட்கள் கனமழை பெய்யும் என எச்சரிக்கை
    • இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர்

    பருவமழை கொட்டித்தீர்த்ததன் காரணமாக இமாச்சல பிரதேசத்தில் எங்கு பார்த்தாலும் வெள்ளாகாடாக காட்சி அளிக்கின்றன. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பாலங்கள் அடித்து செல்லப்பட்டுள்ளன. வாகனங்கள் இழுத்துச் செல்லப்பட்டன. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இரண்டு நாள் மழையில் இமாச்சல பிரதேசத்தில் மட்டும் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இந்த நிலையில் கனமழை அச்சுறுத்தல், வெள்ளத்தால் மாநிலம் தத்தளித்து வரும் நிலையில், மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ செய்தில் ''அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம். நாங்கள் 1100, 1070, 1077 ஆகிய மூன்று உதவி எண்களை அறிவித்துள்ளோம்.

    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, வெள்ளம் சூழ்ந்த பகுதியில் சிக்கியிருக்கும் நிலை ஏற்பட்டால் உதவிக்கு இந்த எண்களை அணுகலாம். உங்களுக்காக நான் எந்த நேரமும் உதவி செய்ய தயாராக இருப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.

    மேலும், எம்.எல்.ஏ.-க்கள் தங்களுக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் முகாம் அமைத்து மக்களுக்கு உதவ கேட்டுக்கொண்டள்ளார்.

    • டெல்லியில் 24 மணி நேரத்தில் 153 மில்லி மீட்டர் மலை
    • இமாச்சல பிரதேசத்தில் பல இடங்களில் நிலச்சரிவு

    தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக டெல்லி உள்ளிட்ட வடஇந்திய மாநிலங்களிலும் மழை பெய்து வருகிறது. நேற்று கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் டெல்லி, இமாச்சால பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், உத்தரகாண்ட், அரியானா மாநிலங்கள் வெள்ளத்தில் தத்தளித்தன. குறிப்பாக டெல்லியில் சாலைகள் ஆறுபோல் காட்சியளித்தன. எங்குபார்த்தாலும் வெள்ளமாக காட்சியளித்தன.

    கெஜ்ரிவால் அரசு மீது மக்கள் அதிருப்தி தெரிவிக்க, ஞாயிறுக்கிழமை அரசு ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கவில்லை. மழை வெள்ளத்தை வெளியேற்றும் பணியை துரிதப்படுத்த கெஜ்ரிவால் இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்.

    டெல்லி மாநிலம் 24 மணி நேரத்தில் 153 மில்லி மீட்டர் மழையை பெற்றுள்ளது. இது 1982-ம் ஆண்டுக்குப்பின் ஒரே நாளில் பெய்ய அதிகனமழை ஆகும். ஜூலை 15-ந்தேதி வரை கனமழை மற்றும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இமாச்சல பிரதச மாநிலத்தில் சுற்றுலா இடங்களில் திடீரென வெள்ளப்பெருக்கு காரணமாக கார் வெள்ளத்தில் அடித்துச் சென்ற காட்சியை பார்க்க முடிந்தது. பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

    ஜம்மு-காஷ்மீரில் திடீரென ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட, மக்கள் சிக்கி தவித்தனர். பின்னர் மீட்புப்படையினர் அவர்கள் மீட்டனர். இந்திய வானிலை மையம் டெல்லி, அரியானா, இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், ராஜஸ்தான், பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களில் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது.

    டெல்லியில் 58 வயது பெண் ஒருவர், வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து உயிரிழந்தார். ராஜஸ்தானில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தர பிரதேசத்தில் வீடிந்து 6 வயது மகளுடன் பெண் ஒருவர் பலியானார்.

    ஜம்மு-காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தில் இரண்டு ராணுவ வீரர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தனர்.

    மோசமான வானிலை காரணமாக கடந்த மூன்று நாட்களாக அமர்நாத் யாத்திரை நிறுத்தப்பட்டது.

    ஸ்ரீநகர்- ஜம்மு நெடுஞ்சாலையில் சாலை துண்டிக்கப்பட்டு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்று போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

    இமாச்சல பிரதேச மாநிலத்தின் சிம்லா, சிமாயுர், லஹாயுல், ஸ்பிட்டி, சம்பா, சோலன் பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இங்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.


    இதற்கிடையே கேரள மற்றும் கர்நாடகாவிலும் கனமழை பெய்துள்ளது. கேரளாவில் கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசரகோடு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • பல்வேறு பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
    • கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    வட மாநிலங்களில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. தலைநகர் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதலே மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் வரலாறு காணாத அளவில் ஒரே நாளில் 153 மிமீ மழை பதிவாகி உள்ளது.

    மழை, வெள்ளம் தொடர்பான விபத்துகளில் பலர் பலியாகி உள்ளனர். டெல்லியில் வீட்டின் கூரை இடிந்து விழுந்து 58 வயது நபர் உயிரிழந்தார். ராஜஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 4 பேர் பலியாகி உள்ளனர். ஜம்மு காஷ்மீரில் மழையால் ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்பட்டதையடுத்து அமர்நாத் யாத்திரை மூன்றாவது நாளாக நிறுத்தப்பட்டுள்ளது. குகைக்கோயிலுக்கு செல்லும் வழியில் பக்தர்கள் தொடர்ந்து முன்னேற முடியாமல் முகாம்களில் தங்கி உள்ளனர்.

    அரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களின் பல பகுதிகளிலும் கனமழை பெய்துள்ளது. தலைநகர் சண்டிகரில் நேற்று நாள் முழுவதும் மழை கொட்டித் தீர்த்தது.

    இதற்கிடையே வடமேற்கு மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் இன்றும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டெல்லி, அரியானா, இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

    தென் மாநிலங்களைப் பொருத்தவரை கேரளா, கர்நாடகாவில் இடைவிடாமல் மழை பெய்கிறது. கேரளாவின் கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • மழையால் விமான போக்குவரத்து முடங்கியது.
    • விமான பயணிகள் பல்வேறு சிரமங்களை சந்தித்தனர்.

    புதுடெல்லி:

    டெல்லி மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை திடீரென பலத்த மழை கொட்டியது. இடி, மின்னலுடன், வெளுத்து வாங்கிய இந்த மழையால் ரோடுகளில் வெள்ளம் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களை மழை நீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் தவிப்புக்கு உள்ளானார்கள்.

    ரோடுகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளானார்கள். கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இந்த மழையால் விமான போக்குவரத்தும் முடங்கியது. பல்வேறு நகரங்களில் இருந்து டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்துக்கு வந்த 22 விமானங்கள் வேறு பகுதிகளுக்கு திருப்பி விடப்பட்டன.

    லக்னோ, ஜெய்ப்பூர், டேராடூன், அகமதாபாத், சண்டிகர் ஆகிய விமான நிலையங்களுக்கு இந்த விமானங்கள் திருப்பி விடப்பட்டன. இதனால் அதில் பயணம் செய்த விமான பயணிகள் பல்வேறு சிரமங்களை சந்தித்தனர்.

    இந்த திடீர் மழையால் டெல்லி மாநகரம் குளுமையாக மாறியது.

    ×