search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெல்டா மாவட்ட விவசாயிகள்"

    ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக்கோரி வருகிற 26-ந்தேதி டெல்டா மாவட்ட விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக பிஆர் பாண்டியன் கூறினார். #PRPandian
    தஞ்சாவூர்:

    தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தஞ்சையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காவிரியின் குறுக்கே கர்நாடகம் இனி அணை கட்டி தமிழகத்திற்கு செல்லும் தண்ணீரை தடுக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பில் கூறி உள்ளது. கீழ்பாசனத்தை தடுக்கக்கூடாது என நிரந்தரமான சட்டமும் உள்ள நிலையில் மேகதாதுவில் அணை கட்ட விரிவான ஆய்வறிக்கை தயார் செய்வதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கி உள்ளது. இது சட்ட விரோதமானது.

    இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் கர்நாடகம் அணை கட்ட அனுமதி கொடுக்கவில்லை. ஆய்வுக்குத்தான் அனுமதி கொடுத்துள்ளோம் என்று மத்திய அரசு கூறுவது மோசடி நடவடிக்கையாகும். இதனை நீதிமன்றத்தில் தமிழக அரசு ஆதாரத்தோடு எடுத்துக்கூறி ஆய்விற்கான அனுமதியை ரத்து செய்ய முயற்சிக்க வேண்டும்.

    இந்த நிலையில் கர்நாடகாவை சேர்ந்த வாட்டாள்நாகராஜ், விவசாயிகள் சங்க தலைவர் என்ற போர்வையில் அணை கட்டுவதை தமிழகம் தடுத்தால் கன்னடத்தில் உள்ள தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என மிரட்டல் விடுத்து இருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். இனி ஒரு தமிழனுக்கு சிறு பாதிப்பு என்றாலும் நாங்கள் வேடிக்கை பார்க்க மாட்டோம். அவர் மீது தேச துரோக வழக்கின் கீழ் நடவடிக்கை எடுத்து கன்னட தமிழர்களை பாதுகாக்க வேண்டும்.

    திருவாரூர் மாவட்டம் திருக்கார வாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக்கோரி வருகிற 26-ந்தேதி (சனிக்கிழமை) குடியரசு தினத்தன்று தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, திருவாரூர் மாவட்ட விவசாயிகள் பங்கேற்கும் உண்ணாவிரதப்போராட்டம் நடைபெறுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #PRPandian
    மேட்டூர் அணை திறக்கப்படாததால் காவிரி பாசன பகுதிகளில் இந்த ஆண்டும் தொடர்ந்து 7-வது ஆண்டாக குறுவை சாகுபடி செய்ய இயலாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். #metturdam #deltafarmers
    தஞ்சாவூர்:

    காவிரி பாசன பகுதியில் வழக்கமாக சாகுபடி பணிகள் மேற்கொள்ள மேட்டூர் அணையில் இருந்து இன்று (12-ம் தேதி) தண்ணீர் திறக்கப்படும். இந்த தண்ணீர் கல்லணைக்கு 16-ம் தேதி வந்து சேர்ந்து கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய்களில் தண்ணீர் திறக்கப்படும்.

    இதைத்தொடர்ந்து காவிரி ஆற்றின் துணை ஆறுகள், கிளை வாய்க்கால் வழியாக 2லட்சத்து 6 ஆயிரத்து 267 ஏக்கர் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்படும். வெண்ணாறு பாசன பகுதியில் 1 லட்சத்து 21 ஆயிரத்து 422 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்படும்.

    கல்லணை கால்வாய் பகுதியில் 87 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்படும். கடந்த 6 ஆண்டுகளாக குறித்த தேதியான ஜூன் 12-ல் மேட்டூர் அணை தண்ணீர் திறக்கப்படாததால் குறுவை சாகுபடி முற்றிலும் பொய்த்து போனது. இதனால் காவிரி வெண்ணாறு கல்லணை கால்வாய் பாசன பகுதியிலில் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் மிகுந்த துயரத்திற்கு உள்ளாயினர். 1934-ல் மேட்டூர் அணை கட்டப்பட்டு முறையாக பாசன பகுதிகளுக்கு தண்ணீர் விட தொடங்கியதில் இருந்து ஜூன் 12-ம் தேதி 15 முறைதான் திறக்கப்பட்டதாக பொதுப்பணித்துறை பதிவுகள் தெரிவிக்கின்றன. ஜூன் 12-க்கு முன்னராக 11 முறை திறக்கப்பட்டதாக பொதுப்பணித்துறை பதிவுகள் தெரிவிக்கின்றன.

    பொதுப்பணித்துறை பதிவுகள் இப்படி இருந்த போதிலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பின்னர். தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டங்கள் விளைவாக காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. பின்னர் ஜூன் 1-ம் தேதி காவிரி மேலாண்மை ஆணையம் குறித்த அறிவிப்பு முறையாக அரசிதழில் வெளியிடப்பட்டது.

    இந்த நடவடிக்கைகளால் காவிரி பாசன விவசாயிகள் மத்தியில் இந்த ஆண்டு குறுவை சாகுபடி செய்ய முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.

    குட்டை போல் காட்சி அளிக்கும் மேட்டூர் அணை

    காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டால் அணைகளை இந்த ஆணையம் தன் வசம் எடுத்துக் கொண்டு தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீர் பெற்றுத் தரும் என்று விவசாயிகள் நம்பினார்கள். தற்போதய சூழலில் மேட்டூர் அணையில் தண்ணீர் இருப்பு வெறும் 38 அடியாக உள்ளது. கர்நாடக அணைகளில் தண்ணீர் இருப்பு நிலை குறித்து தெளிவான தகவல்கள் ஏதும் இல்லை. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதாக தகவல்கள் வந்து கொண்டுள்ளன. தென்மேற்கு பருவமழை தொடங்கி விட்டதாக வானிலையாளர்கள் தெரிவித்தனர்.

    தென்மேற்கு பருவ மழையால் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. காவிரி தலைப்பில் மழை பெய்து கர்நாடகாவின் அணைகளை தாண்டி இன்னமும் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வந்து சேரவில்லை.

    காவிரி பாசன பகுதிகளில் இந்த ஆண்டும் தொடர்ந்து 7-வது ஆண்டாக குறுவை சாகுபடி செய்ய இயலாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

    குறுவை சாகுபடி இல்லாததால் விவசாயிகள் மட்டும் அல்லாமவ் விவசாய தொழிலாளர்களும் வேலை இல்லாத நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். காவிரி ஆணையம் வந்துவிட்டது. விடிவு காலம் பிறந்துவிட்டது என்று எண்ணிய விவசாயிகள் மீண்டும் இயற்கையிடம் சரண் அடைவதை தவிர வேறு வழியில்லை என்று கூறுகின்றனர்.

    மழை பெய்தால் மட்டுமே மேட்டூர் அணை நிரம்பி காவிரி பாசன விவசாயம் வசப்படும். இனி வருண பகவான் கருணை இருந்தால் மட்டுமே பிழைக்கலாம் என்று கருதுகின்றனர். #metturdam #deltafarmers

    ×