search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டாஸ்மாக் ஊழியர் தாக்குதல்"

    தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே டாஸ்மாக் ஊழியரை துப்பாக்கியால் சுட்டு ரூ.1½ லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டம், அரூரை அடுத்த கோட்டப்பட்டி அருகே சிட்லூரில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக நரிப்பள்ளியை சேர்ந்த மகரஜோதி (44) என்பவர் பணியாற்றி வருகிறார்.

    இவர் கடையில் மதுபானங்கள் விற்பனையான வகையில் வசூலான 1 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை எடுத்துக் கொண்டு இரவு தனது இரு சக்கர வாகனத்தில் சிட்லூர்- நரிப்பள்ளி சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    முகமூடி அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் மகரஜோதியை வழி மறித்தனர். அவரது மோட்டார் சைக்கிள் டேங்க் கவரில் இருந்த பணத்தை பறிக்க முயன்றனர்.

    ஆனால் அவர் பணத்தை எடுக்க விடாமல் தடுத்தார். இதனால் ஆத்திரமடைந்த 2 பேரில் ஒருவன் கைத்துப்பாக்கியால் மகரஜோதியை சுட்டான். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த மகரஜோதியிடம் இருந்த பணத்தை பறித்துக் கொண்டு இருவரும் தப்பி சென்றனர்.

    துப்பாக்கியால் சுட்டதில் காயமடைந்த மகரஜோதி, முதலில் அரூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இது குறித்து உடனடியாக ரோந்து போலீசாருக்கு கோட்டப்பட்டி போலீசார் தகவல் தெரிவித்தனர். உடனடியாக மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டு வாகன சோதனை நடத்தப்பட்டது.

    நரிப்பள்ளி அருகே போலீசாரை கண்டதும் 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடினர். அவர்களை விரட்டி சென்ற போலீசார் புதருக்குள் மறைந்திருந்த அவர்கள் 2 பேரையும் பிடித்தனர்.

    பிடிபட்ட கொள்ளையர்கள் 2 பேரும் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை சேர்ந்த சின்னதுரை மகன் வெங்கடேசன் (வயது28), நாகேஷ்வரா மகன் பரதன் (24) என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து துப்பாக்கியும், கொள்ளையடித்த பணம் 1 லட்சத்து 50 ஆயிரமும் மீட்கப்பட்டது.

    கடந்த ஆண்டு ஊத்தங்கரை அருகே டாஸ்மாக் ஊழியர்கள் முருகன், ஆனந்தன் ஆகியோரை துப்பாக்கியால் சுட்டு 3 லட்சத்து 50 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொள்ளையிலும் இவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். தொடர்ந்து கைதான 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மது விலையை விட கூடுதலாக பணம் வாங்கிய தகராறில் டாஸ்மாக் ஊழியரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த வெப்பாலம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் சர்தார் என்கிற நூருல்லா (வயது 24). 

    அதே பகுதியைச் சேர்ந்த கமல்பாஷா மகன் ஓஷின் என்கிற இம்ரான் (21). இவர்கள் 2 பேரும் நண்பர்கள். நூருல்லாவும், இம்ரானும் நேற்று மாலை 3 மணியளவில் சந்தூரில் உள்ள அரசு மதுபான கடைக்கு மது குடிக்க சென்றனர். அங்கு பணிபுரிந்த டாஸ்மாக் ஊழியர் மாரப்பனிடம் பணம் கொடுத்து மது பாட்டில்களை வாங்கினர். அப்போது மதுவின் விலையைவிட கூடுதலாக மாரப்பன் அவர்களிடம் பணம் கேட்டுள்ளார். இதனால் இருதரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. 

    இதில் ஆத்திரமடைந்த நூருல்லா, இம்ரான் ஆகிய 2 பேரும் சேர்ந்து மாரப்பனை மார்பிலும், உடலிலும் கல்லை எடுத்து தாக்கினர். இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். இந்த சம்பவம் குறித்து மாரப்பன் போச்சம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து டாஸ்மாக் ஊழியரை தாக்கிய 2 பேரை கைது செய்தனர்.
    கும்மிடிப்பூண்டி அருகே கொள்ளை முயற்சியில் டாஸ்மாக் கடை ஊழியரை கத்தியால் குத்திய மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வழி கிராமத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் நேற்று இரவு 10 மணியளவில் விற்பனையாளர் முரளி இருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம ஆசாமிகள் கத்தி முனையில் முரளியிடம் விற்பனையான பணத்தை கேட்டு மிரட்டினர். அதற்கு முரளி சூப்பர்வைசர் பணத்தை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு சென்று விட்டார் என்று கூறினார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த மர்ம ஆசாமிகள், கத்தியால் முரளியை குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    இதில் படுகாயம் அடைந்த முரளியை அக்கம் பக்கத்தினர் மீட்டு கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இது குறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடிவருகின்றனர்.

    இதற்கிடையில் கும்மிடிப்பூண்டி பகுதியில் பல்வேறு இடங்களில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு தொடர்ந்து பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருந்து வருவதாகவும், இதனை கருத்தில் கொண்டு போலீசார் டாஸ்மாக் ஊழியர்களின் நலன் காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டாஸ்மாக் ஊழியர்கள் சார்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு மனு ஒன்றும் அனுப்பப்பட்டு உள்ளது.
    ×