search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செய்யாத்துரை"

    செய்யாத்துரை மகனின் நண்பர் வீட்டில் சோதனை நடத்துவதற்காக இன்று காலை சென்னை வருமான வரித்துறை இணை இயக்குநர் தலைமையில் 8 பேர் கொண்ட அதிகாரிகள் வந்தனர். #ITRaid #SPK

    காரைக்குடி:

    நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் செய்யாத்துரை மற்றும் அவரது மகன்கள் வரி ஏய்ப்பு மோசடி செய்ததாக வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவரது வீட்டில் இருந்து கோடிக்கணக்கான ரொக்கமும், தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. செய்யாத்துரை மற்றும் அவரது மகனின் உறவினர்கள் வீட்டிலும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர்.

    இந்த நிலையில் செய்யாத் துரையின் மகன் நாகராஜின் நண்பர் கிருஷ்ணன் என்பவரது வீடு காரைக்குடி சுப்பிரமணியபுரம் தெற்கு 4-வது வீதியில் உள்ளது.

    இங்கு சோதனை நடத்துவதற்காக இன்று காலை சென்னை வருமான வரித் துறை இணை இயக்குநர் தலைமையில் 8 பேர் கொண்ட அதிகாரிகள் வந்தனர். அப்போது கிருஷ்ணனின் வீடு பூட்டப்பட்டிருந்ததால் அதிகாரிகள் சோதனை நடத்தாமல் திரும்பிச்சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. #ITRaid #SPK

    அருப்புக்கோட்டையில் வருமான வரித்துறையினரின் சோதனையில் செய்யாத்துரை வீடு மற்றும் அலுவலகங்களில் ரூ.450 கோடி சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. #ITRaid #SPK

    மதுரை:

    தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு எஸ்.பி.கே. நிறுவனத்தில் நடந்துள்ள வருமான வரி சோதனை அடுத்தடுத்து அதிர்ச்சியூட்டும் தகவல்களை தந்த வண்ணம் உள்ளது.

    சாலை ஒப்பந்ததாரர் செய்யாத்துரை நடத்தி வரும் இந்த நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததோடு மட்டுமின்றி பல ஆயிரம் கோடிக்கு சொத்துக்கள் சேர்த்து வைத்திருப்பதும் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுபற்றிய விவரங்கள் வருமாறு:-

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை தலைமை இடமாக கொண்டு சாலை பணி ஒப்பந்த நிறுவனமான எஸ்.பி.கே. அன்கோ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தை அருப்புக்கோட்டை பாலையம் பட்டியை சேர்ந்த செய்யாதுரை மற்றும் அவரது மகன்கள் நாகராஜன், பாலசுப்பிரமணி, கருப்பசாமி, ஈஸ்வரன் ஆகியோர் நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிறுவனத்தின் கிளை அலுவலகங்கள் சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வருகிறது. நூற்றுக்கணக்கானவர்கள் இந்த நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்கள்.

    தமிழகத்தில் நெடுஞ்சாலை பணிகளில் முக்கியமாக திகழும் எஸ்.பி.கே. குழுமம் பல நூறு கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்து இருப்பதாக வருமான வரித்துறைக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது. இதை தொடர்ந்து கடந்த 16-ந்தேதி வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

    சென்னை, மதுரை, அருப்புக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள செய்யாதுரைக்கு சொந்தமான எஸ்.பி.கே. நிறுவனங்கள், அலுவலகங்கள், வீடுகள், சார்பு நிறுவனங்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. வருமான வரித்துறை அதிகாரிகள் சுமார் 200 பேர் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

     


    இந்த சோதனையில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன் வீடு, நிறுவனமும் தப்பவில்லை. சென்னையில் மட்டும் 7-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடந்தது.

    கடந்த 16-ந்தேதி தொடங்கிய வருமானவரித்துறை சோதனை நேற்று இரவு முடிவுக்கு வந்தது. நேற்று செய்யாத்துரையின் வீட்டில் மட்டும்தான் சோதனை நடந்தது. அது முடிந்ததும் சோதனை நிறைவு பெற்றதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    5 நாட்கள் தொடர்ச்சியாக நடந்த இந்த வருமான வரி சோதனையில் ரூ.183 கோடி பணம் ரொக்கமாக சிக்கியது. சொகுசு கார்களில் இருந்து மட்டும் சுமார் ரூ.45 கோடி கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இதனாலேயே இந்த வருமான வரி சோதனைக்கு “ஆபரே‌ஷன் பார்க்கிங் மணி” என்று அதிகாரிகள் பெயர் சூட்டினார்கள்.

    பணம் மட்டுமின்றி 2 கிலோ தங்க நகைகளும் கிடைத்தன. கணக்கில் வராத 105 கிலோ தங்க கட்டிகளும் கைப்பற்றப்பட்டன. இந்த தங்க கட்டிகள் தி.நகர் மற்றும் மயிலாப்பூரில் உள்ள 2 நகை கடைகளில் வாங்கப்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது.

    இதற்கிடையே 5 நாட்கள் சோதனையில் நூற்றுக்கணக்கான ரகசிய ஆவணங்களை வருமான வரித்துறையினர் கண்டுபிடித்து பறிமுதல் செய்துள்ளனர். நுற்றுக்கும் மேற்பட்ட பென்டிரைவ்கள், கம்ப்யூட்டர் டிஸ்குகளில் அந்த ஆவணங்கள் பதிவு செய்து வைக்கப்பட்டிருந்தன. அவை அனைத்தையும் பறிமுதல் செய்த அதிகாரிகள் அவற்றை தீவிரமாக ஆய்வு செய்தனர்.

     


    அப்போது பினாமிகள் மூலம் பணப் பரிமாற்றம் நடந்து இருப்பது தெரிய வந்தது. போலி நிறுவனங்கள் மூலம் வரி ஏய்ப்பு செய்திருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது. அதாவது அரசியல்வாதிகளுக்கு பணம் கொடுக்கப்பட்ட விவரங்களும் இந்த ஆவணங்கள் மூலம் தெரிய வந்தது.

    இதையடுத்து செய்யாதுரையின் மகன் நாகராஜனை சென்னையில் இருந்து அருப்புக்கோட்டைக்கு அழைத்து வந்து அதிகாரிகள் விசாரித்தனர். சோதனையின்போது சிக்கிய ரொக்கப்பணம், தங்க கட்டிகள் தொடர்பாக செய்யாதுரை, அவரது மகன்களிடம் தனித்தனியாக வருமான வரித்துறை அதிகாரிகள் ஜெயராகவன், அஜய்ராபின் தலைமையிலான குழுவினர் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள்.

    மேலும் எஸ்.பி.கே. குழுமம் நடத்திவரும் நூற்பாலை, நட்சத்திர ஓட்டல், கல்குவாரி உள்ளிட்ட நிறுவனங்களில் நடந்த வரி ஏய்ப்பு குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது.

    இந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் மூலம் செய்யாத்துரையும் அவரது மகன்களும் கணக்கில் வராத ரூ.450 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதுபற்றியும் அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

    பிறகு அந்த ஆவணங்கள் அனைத்தையும் வருமான வரித்துறை அதிகாரிகள் 3 பெட்டிகளில் வைத்து எடுத்து சென்றனர். அந்த ஆவணங்களை மேலும் ஆய்வு செய்ய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அப்போது செய்யாதுரை குடும்பத்தினர் செய்துள்ள வரி ஏய்ப்பு தொடர்பான முழு விவரங்களும் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆவணங்கள் அனைத்தும் ஆய்வு செய்து சரி பார்க்கப்பட்ட பிறகு இந்த மோசடியில் தொடர்புடையவர்கள் விவரம் தெரிய வரும். அவர்களை விசாரணைக்கு அழைக்க வருமான வரித்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

    செய்யாதுரைக்கும் அவரது மகன்களும் மற்றும் அவரது நிறுவனங்களில் பணிபுரியும் முக்கிய நிர்வாகிகளுக்கும் இதற்காக சம்மன் அனுப்பப்படும். விரைவில் இதற்கான பணி தொடங்கும் என்று தெரிகிறது.

     


    எஸ்.பி.கே. நிறுவனங்களில் சோதனை முடிந்ததை தொடர்ந்து அனைத்து இடங்களிலும் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை அருப்புக்கோட்டையில் உள்ள எஸ்.பி.கே. குழும அலுவலகத்தில் உள்ள அறையில் ஒரே இடத்தில் வைத்தனர். அந்த அறையை வருமானவரித்துறையினர் ‘சீல்’ வைத்தனர்.

    சென்னை, அருப்புக்கோட்டை, மதுரை, காரியப்பட்டி பஞ்சாலை, கமுதி அருகே உள்ள கல்குவாரி, கீழமுடிமன்னார்கோட்டையில் உள்ள வீடு உள்பட பல்வேறு இடங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் அந்த அறைக்குள் உள்ளது.

    இதுவரை நடத்தப்பட்டுள்ள விசாரணையில் செய்யாதுரையும், அவரது மகன்களும் ஒருவருக்கொருவர் மாறுபாடான முரண்பட்ட தகவல்களை தெரிவித்துள்ளனர். எனவே அவர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் வைத்து இந்த ஆவணங்களை காட்டி விசாரணை நடத்த திட்ட மிட்டுள்ளனர்.

    விரைவில் இந்த விசாரணை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது செய்யாதுரைக்கும், அவரது சார்பு நிறுவனங்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் உள்ள தொடர்பு என்ன என்பது முழுமையாக தெரிய வரும். #ITRaid #SPK

    வருமான வரித்துறை சோதனையில் ரூ.180 கோடி, 105 கிலோ தங்கம் சிக்கிய விவகாரத்தில், காண்டிராக்டர் செய்யாத்துரைக்கு சம்மன் அனுப்பப்பட உள்ளது. #SPKgroup #ITRaid #IncomeTaxRaid
    சென்னை:

    வருமான வரித்துறை சோதனையில் ரூ.180 கோடி, 105 கிலோ தங்கம் சிக்கிய விவகாரத்தில், காண்டிராக்டர் செய்யாத்துரைக்கு சம்மன் அனுப்பப்பட உள்ளது. அவரை சென்னைக்கு அழைத்து வந்து விசாரிக்க வருமான வரித்துறை அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

    வரி ஏய்ப்பு உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறி, விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த அரசு முதல்நிலை காண்டிராக்டர் செய்யாத்துரையின் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த 2 நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.174 கோடி, 105 கிலோ தங்கம் மற்றும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் கணக்கில் காட்டப்படாத சொத்து ஆவணங்கள் கிடைக்காததால் 3-வது நாளாக வருமான வரித்துறையினர் நேற்றும் சோதனையில் ஈடுபட்டனர்.



    குறிப்பாக சென்னை, மதுரை மற்றும் அருப்புக்கோட்டை உள்ளிட்ட 30 இடங்களில் உள்ள வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனையை தொடர்ந்தனர்.

    கடந்த 3 நாட்களாக நடந்து வரும் வருமான வரித்துறையினர் சோதனையின்போது, செய்யாத்துரை மற்றும் அவருடைய மகன் நாகராஜ் ஆகியோர் 15-க்கும் மேற்பட்ட வங்கிகளில் கணக்குகள் வைத்திருப்பது தெரியவந்துள்ளது. அதுதொடர்பான ஆவணங்கள் மற்றும் வங்கி லாக்கர் சாவிகளை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

    செய்யாத்துரை கணக்கு வைத்துள்ள வங்கிகளில் கடந்த 10 ஆண்டுகளில் அவர் செய்துள்ள பணபரிமாற்ற விவரங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் வங்கிகளில் இருந்து பெற்றுள்ளனர். அத்துடன் செய்யாத்துரை, அவரது மகன்கள் மற்றும் துணை நிறுவன நிர்வாகிகளின் வங்கி லாக்கர்களையும் திறந்து சோதனையிட வங்கி அதிகாரிகளிடம் முறையான அனுமதியை பெற்று வருகின்றனர்.

    இதுதவிர சென்னையில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்ட அலுவலகத்தில் செய்யாத்துரை தொடர்பான ஆவணங்களை தேடியபோது, ரூ.4 கோடி சிக்கியது. இந்த பணம் செய்யாத்துரைக்கு சொந்தமானதா? என்பது குறித்து அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சிலரை நேரில் அழைத்து விசாரணை நடத்தவும் திட்டமிட்டு உள்ளனர்.

    அத்துடன் செய்யாத்துரை, அவருடைய மகன் நாகராஜ் மற்றும் அவர்களது நிறுவனங்களை சேர்ந்த நிர்வாகிகள், இயக்குனர்களிடம் நேரில் விசாரணை நடத்த வருமான வரித்துறை எண்ணியுள்ளது. இதற்காக செய்யாத்துரை உள்ளிட்டவர்களுக்கு சம்மன் அனுப்ப வருமான வரித்துறை தீவிரமாக களம் இறங்கி உள்ளது. இந்த விசாரணையின்போது மேலும் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகள் நம்புகின்றனர்.

    இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    செய்யாத்துரை மற்றும் அவரது நிறுவனங்களில் பறிமுதல் செய்யப்பட்ட பணம், தங்கத்தை மதிப்பிடும் பணி நடந்து வருகிறது. மேலும், பறிமுதல் செய்யப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கணக்கில் காட்டப்படாத பினாமி சொத்துகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    செய்யாத்துரை, நாகராஜிக்கு சொந்தமான ஸ்பின்னிங் மில் உள்ளிட்ட 3 நிறுவனங்களும் தலா ரூ.10 லட்சம் முதலீட்டில் தொடங்கப்பட்டன. இந்த நிறுவனங்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக இந்த 3 நிறுவனங்களின் சொத்து மதிப்பு ரூ.54 கோடியே 70 லட்சமாகும். இப்படி இருக்க தற்போது வரை எப்படி ரூ.180 கோடி, 105 கிலோ தங்கம் இவர்களுக்கு வந்தது? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம்.

    செய்யாத்துரை மற்றும் நாகராஜிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் சில தகவல்கள் சேகரிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து இவர்களை சென்னையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்துக்கு நேரில் அழைத்து விசாரணை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

    அத்துடன் செய்யாத்துரைக்கு தொழில் ரீதியாக மிக நெருக்கமாக இருப்பவர்களின் நிறுவனங்களில் சோதனை நடத்தப்பட்டதால், அவர்களையும் விசாரணைக்கு அழைப்பதற்காக அனைவருக்கும் சம்மன் அனுப்பவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த பணி ஓரிரு நாட்களில் நடைபெறும். இந்த விசாரணையில் மேலும் பல தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

    காண்டிராக்டர் செய்யாத்துரைக்கு சொந்தமான எஸ்.பி.கே. கட்டுமான நிறுவனம் மற்றும் டி.வி.எச். நிறுவனத்தில் வருமான வரி சோதனை நடந்தது. இந்த சோதனையின் போது தீபக் என்பவருக்கு சொந்தமான கோவிலாம்பாக்கத்தில் உள்ள எவால்வு குளோத்திங் கம்பெனியிலும் வருமான வரி சோதனை நடந்ததாக தவறாக செய்தி வெளியானது. எவால்வு குளோத்திங் நிறுவனத்தின் உரிமையாளர் தீபக் இல்லை என்றும், எவால்வு குளோத்திங் நிறுவனத்துக்கும், எஸ்.பி.கே. அல்லது டி.வி.எச். நிறுவனங்களுக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என்றும் எவால்வு குளோத்திங் நிறுவன வக்கீல் டி.மோகன் தெரிவித்து உள்ளார்.

    மயிலாப்பூர் வீரபெருமாள் கோவில் தெருவில் உள்ள நாகராஜின் உதவியாளர் பூமிநாதன் வீட்டில் நேற்று நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்களையும், பணத்தையும் வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

    அவருடைய பெற்றோரிடம் விசாரித்ததில், தனது மகன் கம்பெனிக்கு வேலைக்கு சென்றுவிட்டு வரும்போது பைகளை எடுத்து வருவார். கம்பெனிக்கு சொந்தமான பொருட்கள் என்பதால் அவற்றை நாங்கள் என்ன ஏது என்று கேட்கவில்லை. ஆனால் கடந்த சில நாட்களாக பெரிய பைகளையும், சூட்கேசுகளையும் கொண்டுவந்தார். அதில் என்ன இருக்கிறது என்று நாங்கள் கேட்கவில்லை என்று அதிகாரிகளிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    அந்த தெருவில் வசிப்பவர்களும் பூமிநாதன் பெரிய பைகளையும், சூட்கேசுகளையும் கொண்டு வந்ததாக வருமான வரித்துறை அதிகாரிகளிடம் தெரிவித்து உள்ளனர்.

    மயிலாப்பூர், பங்கார அம்மாள் கோவில் தெருவில் வசித்து வரும் காரைக்குடியை சேர்ந்த நகை ஆசாரி முத்தையா என்பவர், பிரபல நகை கடைகளுக்கும், வெளிமாநிலங்களில் உள்ள நகை கடைகளுக்கும் நகைகளை செய்து கொடுத்து வருகிறார்.

    இந்த நிலையில் இவருடைய வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இங்கிருந்து ஆவணங்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.  #SPKgroup #ITRaid #IncomeTaxRaid
    ஆட்டுத்தரகு செய்து வந்த செய்யாத்துரை குபேரனாக மாறியது எப்படி? என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளன.
    மதுரை:

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள கீழமுடி மன்னார்கோட்டையில் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்தவர் செய்யாத்துரை.

    இவர் கடந்த 1980-ம் ஆண்டில் தனது பூர்வீக கிராமத்தை விட்டு அருப்புக்கோட்டை பகுதிக்கு வந்தார். அங்கு பாலையம்பட்டி பகுதியில் குடியேறிய செய்யாத்துரை ஆரம்பத்தில் ஆடுகளை வாங்கி இறைச்சி கடைகளுக்கு கொடுக்கும் வேலையில் ஈடுபட்டார்.

    மொத்தமாக ஆட்டுச் சந்தையில் ஆடுகளை கொள்முதல் செய்து கடைகளுக்கு கொடுத்த செய்யாத் துரைக்கு ஓரளவுக்கு வருமானம் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து தனது தொழிலை மாற்ற யோசித்தார். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு இருந்த அரசியல் பிரமுகர்களின் தொடர்பு மூலம் சிறு, சிறு ரோடுகள், பாலங்கள் கட்டும் பணியில் ஈடுபட்டார்.

    அவருடன் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சுகன்யா ராமகிருஷ்ணன், சுந்தர்ராஜ் ஆகியோரும் இணைந்து செயல்பட்டனர்.

    இதன் மூலம் நாளுக்கு நாள் வளர ஆரம்பித்தார் செய்யாத்துரை. கல்குறிச்சி, கிருஷ்ணாபுரம் பகுதியில் நூற்பு ஆலைகளை தொடங்கும் அளவுக்கு வசதி ஏற்பட்டது.

    இந்த நேரத்தில் தனது பங்குதாரர்களை கழற்றி விட்ட செய்யாத்துரை எஸ்.பி.கே. நிறுவனம் என்ற பெயரில் ஒப்பந்த பணிகளை எடுக்கத் தொடங்கினார்.

    தனது மகன்கள் நாகராஜ், கருப்பசாமி, பாலசுப்பிரமணியன், ஈஸ்வரன் ஆகியோர் மூலம் சாலைப் பணிகளை செய்தார்.

    கோடிக்கணக்கில் நெடுஞ்சாலைத்துறையில் டெண்டர் எடுத்து பணி செய்த செய்யாத்துரைக்கு அமைச்சர்கள், அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள் என்று நட்பு வட்டாரங்கள் விரிய ஆரம்பித்தன.

    இதனால் நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித் துறைகளில் தனி ஆதிக்கம் செலுத்தி வந்த செய்யாத்துரைக்கு தமிழகம் முழுவதும் பல கோடி மதிப்புள்ள டெண்டர்கள் கிடைத்தன.

    இதனால் அரசு ஒப்பந்தப் பணிகளில் அசைக்க முடியாத ஜாம்பவானாக செய்யாத்துரை வலம் வந்தார்.

    மதுரையில் நடைபெற்று வரும் ரூ.200 கோடி மதிப்பிலான ரிங்ரோடு விரிவாக்கப்பணி, ரூ.56 கோடி மதிப்பிலான உயர் மட்ட மேம்பாலம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் ரூ. 1,000 கோடிக்கு மேல் ஒப்பந்த பணிகள் செய்யாத் துரையின் நிறுவனத்திற்கு கிடைத்தது.

    இந்த நிறுவனத்தில் மூத்த அமைச்சர்கள் சிலரின் வாரிசுகளும் பங்கு தாரர்களாக இருப்பதாக கூறப்படுகிறது.

    தனது தொழில் விருத்தியடைவதற்காக தனது மகன் நாகராஜை சென்னையிலும், ஈஸ்வரனை மதுரையிலும் தங்க வைத்தார். மற்ற மகன்கள் அருப்புக்கோட்டை மற்றும் பல்வேறு இடங்களுக்குச் சென்று ஒப்பந்தப் பணிகளை கவனித்து வந்தனர்.

    பலகோடி டெண்டர்களை எடுத்து பணி செய்தாலும் குறிப்பிட்ட காலத்தில் பணியை முடித்துக் கொடுப்பதில் கை தேர்ந்தவராக செய்யாத்துரை செயல்பட்டதால் அமைச்சர்கள் மட்டுமின்றி நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளின் நட்பு கரமும் செய்யாத்துரைக்கு அதிகமாகவே கிடைத்தது. இதற்காக பல கோடிகளும் கைமாறியது.

    இதன் மூலம் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்வது, பதவி உயர்வு வழங்குவது உள்ளிட்ட அதிகாரத்திலும் செய்யாத்துரை தலையிட்டு தனி ஆவர்த்தனம் நடத்தினார்.

    நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த பணிகளில் கொடி கட்டி பறந்த செய்யாத்துரை இப்போது வரி ஏய்ப்பு புகாரில் சிக்கியுள்ளார். அவரது நிறுவனம் மற்றும் வீடுகள், வங்கி கணக்குகள் அங்குலம், அங்குலமாக வருமான வரித்துறை அதிகாரிகளால் அலசி ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    செய்யாத்துரையின் இந்த திடீர் வளர்ச்சி வந்தது எப்படி? என்பது குறித்து வருமான வரித்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

    செய்யாத்துரையின் வீடுகள் மற்றும் கார்களில் கைப்பற்றப்பட்ட தங்க கட்டிகள், பணக்குவியல்கள், சொத்து ஆவணங்கள் சினிமாவை மிஞ்சும் வகையில் உள்ளன.

    இந்த சொத்துக்கள், பணக்குவியல்கள் எப்படி செய்யாத்துரைக்கு கிடைத்தது? என்பது குறித்தும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    ஆட்டுத்தரகு செய்து வந்த செய்யாத்துரை சில ஆண்டுகளில் ‘குபேரனாக’ உயர்ந்தது குறித்தும், அவரது கடந்த கால நடவடிக்கைகள் குறித்தும், இதற்கு உடந்தையாக இருந்த அரசியல் புள்ளிகள், அதிகாரிகள் வட்டம் ஆகியவையும் விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளது.

    எனவே செய்யாத்துரை மட்டுமின்றி அரசியல் புள்ளிகள், அதிகாரிகளுக்கும் வருமான வரித்துறையினரின் இந்த அதிரடி பெரும் கிலியை ஏற்படுத்தி உள்ளது.
    ×