search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருணாநிதி இறுதி ஊர்வலம்"

    தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி அரங்கத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது.
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் அடைந்ததை தொடர்ந்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக நேற்று சென்னை ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டது.

    அவரது உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பிற மாநில முதல்-மந்திரிகள், அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்-நடிகைகள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

    முக்கிய பிரமுகர்களுக்கு தனி வழியும், பொது மக்களுக்கு தனி வழியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் ராஜாஜி ஹாலில் பொதுமக்களின் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருந்தது.

    கருணாநிதியின் உடலை பார்த்து விட வேண்டும் என்ற ஆர்வத்தில் பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு சென்றனர். சிலர் தடுப்புகளை தகர்த்து விட்டு சென்றனர். ஒரு கட்டத்தில் முக்கிய பிரமுகர்களின் பாதையில் பொதுமக்கள் புகுந்தனர். இதில் நெரிசல் ஏற்பட்டது. அப்போது பொதுமக்கள் 26 பேர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர்.

    அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் வழியிலேயே எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த செண்பகம் (60), ஒரு ஆண் ஆகியோர் இறந்தனர்.

    ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி சரவணன் (37), துரை (56) ஆகியோர் பலியானார்கள். இதனால் சாவு எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.

    பலியான துரை மதுரை மதிசியம் பகுதியை சேர்ந்தவர். தி.மு.க. முன்னாள் பகுதி செயலாளரான இவர் கருணாநிதி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற போது ஏற்கனவே 2 முறை சென்னை வந்துள்ளார். கருணாநிதியின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்வதற்காக வந்தவர் ராஜாஜி அரங்கத்தில் அஞ்சலி செலுத்த சென்ற போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். இவருக்கு சுப்புலட்சுமி என்ற மனைவியும் 3 மகன்களும் உள்ளனர்.

    காயமடைந்த மற்ற 22 பேரில் 15 பேர் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார்கள். நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த குழந்தை வேலு, அம்பத்தூரை சேர்ந்த பாலகிருஷ்ணன், சென்னையை சேர்ந்த தங்கராஜ், சத்யா, கென்னடி, வேலூரை சேர்ந்த ஜெயராமன், காஞ்சீபுரத்தை சேர்ந்த சேட்டு ஆகிய 7 பேர் தற்போது ஆஸ்பத்திரியில் உள்ளனர். அவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தி விட்டு வீடு திரும்பிய மயிலாப்பூரை சேர்ந்த ஜெகதீஷ் கார்த்திக் என்ற வாலிபரும் பலியானார்.

    நேற்று காலை 11 மணி அளவில் கருணாநிதியின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக சென்ற ஜெகதீஷ் கார்த்திக், மாலை 3 மணி அளவில் வீடு திரும்பினார். வீட்டுக்கு வந்ததும் மனைவி சுமித்ராவிடம் தண்ணீர் வாங்கி குடித்த அவர் திடீரென சுருண்டு விழுந்து பலியானார்.

    இதுபற்றி மயிலாப்பூர் போலீசில் சுமித்ரா அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்த ஜெகதீஷ் கார்த்திக்குக்கு 13 வயதில் மகளும், 2 வயதில் மகனும் உள்ளனர். ஜெகதீஷ் தனியார் நிறுவனத்தில் மானேஜராக பணிபுரிந்து வந்தார்.
    தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி ஹால் பகுதியில் தொண்டர்கள் செருப்பு உள்பட 8 டன் குப்பை அகற்றப்பட்டது. #RajajiHall #KarunanidhiFuneral
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் பொதுமக்கள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்தது. லட்சக்கணக்கானவர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

    கருணாநிதியின் உடல் அடக்கம் இரவு 7 மணிக்கு முடிந்தாலும் தொண்டர்கள் கலைந்து செல்ல நேரம் நீடித்தது.

    அதன் பின் மாநகராட்சி அதிகாரிகள் அந்த பகுதியில் உள்ள குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    துணை கமி‌ஷனர் பிரியதர்ஷினி மேற்பார்வையில் மண்டல அதிகாரி வீரப்பன் தலைமையில் 150 ஊழியர்கள் துப்புரவு பணியினை மேற்கொண்டனர்.

    ராஜாஜி அரங்கத்தை சுற்றிலும் செருப்புகள் சிதறி கிடந்தன. நெரிசலில் சிக்கிய தொண்டர்கள் தங்கள் கால்களில் அணிந்து வந்த செருப்பினை எடுக்க முடியாமல் விட்டுச் சென்றனர். செருப்புகள் மட்டுமே ஒரு டன் அளவில் குவிந்து உள்ளது. தண்ணீர் பாட்டில்கள், உணவு கழிவுகள், டம்ளர் உள்ளிட்ட அனைத்து குப்பைகளும் மலைபோல் குவிந்தன. அவற்றை சுத்தம் செய்வதற்கு பெரும்பாடாகி விட்டது.

    ராஜாஜி ஹால் அருகில் 8 டன் குப்பைகளையும், அண்ணா சாலை, வாலாஜா ரோடு, காமராஜர் சாலை வரையில் 10 டன் குப்பை அகற்றப்பட்டுள்ளன. இந்த பணியில் 60 ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    மாலையில் தொடங்கிய துப்புரவு பணி அதிகாலை 4.30 மணிவரை நீடித்தது. மொத்தம் 18 டன் குப்பை அகற்றப்பட்டதாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். #RajajiHall #KarunanidhiFuneral
    தி.மு.க. தலைவர் கருணாநிதி உடலை அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்யலாம் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்த 5 மணி நேரத்தில் சமாதி தயாராகி விட்டது. #DMKLeader #Karunanidhi #KarunanidhiFuneral
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் அடக்கம் மெரினா கடற்கரையில் கடைசி நேர பரபரப்புக்கு பின்புதான் நடைபெற்றது.

    முன்னதாக அரசிடம் மெரினாவில் அண்ணா சமாதி அருகே இடம் ஒதுக்க தி.மு.க. கேட்டபோது கோர்ட்டில் வழக்குகள் இருப்பதால் காந்தி மண்டபம் அருகே இடம் ஒதுக்குவதாக தமிழக அரசு கூறிவிட்டது. இதனால் தி.மு.க. சார்பில் இரவோடு இரவாக ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டது.

    அவசர வழக்காக இதனை எடுத்துக் கொண்ட ஐகோர்ட்டு காலை 8.30 மணிக்கு விசாரணையை தொடங்கியது. 11.30 மணி வரை வக்கீல்கள் வாதம் நடந்தது. 11.30 மணிக்கு மேல் அண்ணா சமாதி அருகே கருணாநிதி உடல் அடக்கம் செய்யலாம் என்று தீர்ப்பளித்தது.

    இதையடுத்து பொதுப் பணித்துறை அதிகாரிகள் மெரினா கடற்கரையில் அண்ணா சமாதி பின்புறம் கருணாநிதி உடல் அடக்கத்துக்கான ஏற்பாடுகளில் துரிதமாக ஈடுபட்டனர். தீர்ப்பு வெளியான உடனேயே பொதுப்பணித்துறை செயலாளர் பிரபாகரன் மற்றும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அமுதா, அனுஜார்க், கார்த்திகேயன், உமாநாத், சந்தோஷ் பாபு ஆகியோர் மின்னல் வேகத்தில் செயல்பட்டனர்.

    கோர்ட்டு தீர்ப்பு எப்படி வந்தாலும் இரு விதமான வரைபடத்தை தயாரித்து வைத்திருந்தனர். மெரினாவில் இடம் ஒதுக்க கோர்ட்டு உத்தரவிட்டதும் அதற்கான வரைபடத்தை அதிகாரிகள் கொண்டு வந்து தி.மு.க. நிர்வாகிகளிடம் அதை காட்டி சமாதி அமையும் இடத்தை விளக்கினார்கள். சமாதிக்காக 1.72 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது.

    தி.மு.க. மூத்த நிர்வாகிகள் துரைமுருகன், ஐ.பெரிய சாமி, ஏ.வ.வேலு உள்ளிட்டோரும், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள்.


    இதைத்தொடர்ந்து அடுத்த சில நிமிடங்களில் பொக்லைன் எந்திரங்கள், ஊழியர்கள் வரவழைக்கப்பட்டனர். குண்டும் குழியுமாக கிடந்த மணல்பரப்பு சமப்படுத்தப்பட்டது. 10 அடி நீளம், 7 அடி அகலம், 6 அடி உயரத்துக்கு செவ்வக வடிவில் பள்ளம் தோண்டப்பட்டு சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. 4.30 மணிக்கு இந்த பணி முடிவடைந்து சமாதியை சுற்றிலும் சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டது.

    ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மேற்பார்வையில் பொதுப் பணித்துறை என்ஜினீயர் ராஜசேகர் தலைமையில் ஊழியர்கள் இந்த பணிகளை 5 மணி நேரத்தில் செய்து முடித்தனர். கருணாநிதி இறுதி ஊர்வலம் தொடங்கும் போது சமாதியும் தயாராகி விட்டது.

    சமாதியின் அடியில் காங்கிரீட் செங்கற்கள் வைத்து கட்டப்பட்டதாக ஊழியர்கள் தெரிவித்தனர். முக்கிய பிரமுகர்கள் அமர்வதற்கான டெண்டுகளும், இருக்கைகளும் போடப்பட்டன.

    ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா கருணாநிதி குடும்ப உறுப்பினர்களிடம் உடல் அடக்கம் செய்வது தொடர்பான அரசு நடைமுறைகளை எடுத்துக்கூறி பம்பரம்போல் சுழன்று செயல்பட்டார். #DMKLeader #Karunanidhi #KarunanidhiFuneral 
    தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி ஹாலில் அஞ்சலி செலுத்த வந்த தலைவர்கள் தொண்டர்களின் நெரிசலில் சிக்கினர். #DMKLeader #Karunanidhi #KarunanidhiFuneral
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்த லட்சக்கணக்கான தொண்டர்கள், பொதுமக்கள் குவிந்தனர்.

    இதனால் அவரது உடல் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி ஹால் மக்கள் வெள்ளத்தில் குலுங்கியது. மேலும் ராஜாஜி ஹால் நோக்கி நடந்து சென்றதால் சாலைகளிலும் கூட்டம் அலைமோதியது.

    முக்கிய பிரமுகர்கள், தலைவர்கள் வாலாஜா சாலை வழியாக சென்று அஞ்சலி செலுத்தவும், பொது மக்கள் அண்ணாசாலை வழியாக செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    நேரம் செல்ல செல்ல மக்கள் கூட்டம் அதிகமாகி கொண்டே போனது. இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.

    கருணாநிதி உடலை அடக்கம் செய்ய மெரீனாவில் இடம் ஒதுக்கி ஐகோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணிக்காக போலீசார் அனுமதிக்கப்பட்டனர். இதனால் ராஜாஜி ஹாலில் போலீசார் பற்றாக்குறை நிலவியது.

    இந்த சமயத்தில் மதியத்துக்கு பிறகு ராஜாஜி ஹாலில் கருணாநிதி உடல் அருகே முண்டியடித்தப்படி கூட்டம் சென்றது. இதில் தலைவர்கள் சிக்கி தவித்தனர். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூட்டத்தில் சிக்கி வந்துதான் அஞ்சலி செலுத்த முடிந்தது.


    அப்போது நெரிசலும் ஏற்பட்டதால் ராகுல்காந்தியால் வெளியேற முடியவில்லை. இதையடுத்து ராகுல் காந்தியை ஜன்னல் வழியாக ஏறி குதித்து வெளியே செல்லலாம் என்று அவரிடமும் பாதுகாப்பு அதிகாரிகளிடமும் தெரிவிக்கப்பட்டது.

    முதல் தளத்தில் உள்ள ஜன்னல் வழியாக ராகுல் காந்தி ஏறி குதித்தார். பின்னர் கீழ் தளத்தில் இருந்த காரில் ஏறி புறப்பட்டார்.

    உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ், லாலுபிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் ஒன்றாக வந்தனர். அவர்களும் நெரிசலில் சிக்கியபடிதான் வந்தனர். அவர்களை பாதுகாப்பு அதிகாரிகள் கஷ்டப்பட்டு அழைத்து வந்தனர்.

    கர்நாடக முதல்வர் குமாரசாமி, முன்னாள் முதல்வர் சித்தராமையா, கேரள முதல்வர் பினராயி விஜயன், கவர்னர் சதாசிவம் ஆகியோரும் கூட்டத்தில் நீந்திதான் வந்தனர்.

    நடிகர் சத்யராஜ், அவரது மகன் சிபிராஜ் நெரிசலில் சிக்கினர். இதில் சத்யராஜ் வியர்வையால் நனைந்து விட்டார். கருணாநிதி உடலை பார்த்ததும் அவர் கண்ணீர் விட்டு அஞ்சலி செலுத்தினார். #DMKLeader #Karunanidhi #KarunanidhiFuneral
    தி.மு.க. தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலத்தில் சுமார் 3 லட்சம் பேர் பங்கேற்றதாக போலீஸ் தரப்பில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. #DMKLeader #Karunanidhi #KarunanidhiFuneral
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நிலை கடந்த திங்கட்கிழமை கவலைக்கிடமாக மாறியதுமே பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் ஆழ்வார்பேட்டை காவேரி ஆஸ்பத்திரி முன்பு குவிந்தனர்.

    மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை அவர் உடல்நிலை மேலும் மோசம் அடைந்ததால் வெளி மாவட்டங்களில் இருந்தும் தொண்டர்கள் சென்னைக்கு வரத் தொடங்கினார்கள். அன்று மாலை 6 மணிக்கு கருணாநிதி மரணம் அடைந்த தகவல் பரவியதும் மேலும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர்.

    அன்றிரவு கருணாநிதி உடலை வீட்டுக்கு கொண்டு செல்லவே 1½ மணி நேர பயணத்தை எதிர்கொள்ள வேண்டியதிருந்தது. அதற்கு காரணமே வெள்ளம் போல திரண்டு விட்ட தி.மு.க. தொண்டர்கள்தான். ஆயிரக்கணக்கான தொண்டர்கள் “வீர வணக்கம், வீர வணக்கம்... கலைஞருக்கு வீர வணக்கம்” என்று முழங்கியபடி சென்றது உணர்ச்சிமயமாக இருந்தது.


    புதன்கிழமை காலை முதல் மதியம் வரை தி.மு.க.வினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக கருணாநிதி உடல் ராஜாஜி ஹாலில் வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதும், பொதுமக்கள் ராஜாஜி ஹாலுக்கு படையெடுத்தனர். அண்ணாசாலை வழியாக வந்து அஞ்சலி செலுத்தி விட்டு சிவானந்தா சாலை வழியாக மக்கள் வெளியேற ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதனால் அந்த இரு சாலைகளிலும் திரும்பிய திசையெல்லாம் மனித தலையாக, மக்கள் வெள்ளமாக காணப்பட்டது.

    மதியம் பொதுமக்கள் வருகை கணிசமாக அதிகரித்தது. கருணாநிதி இறுதி ஊர்வலம் வாலாஜா சாலை வழியாக வரும் என்பது தெரிய வந்ததும் லட்சக்கணக்கான மக்கள் அந்த சாலையில் குவிந்தனர். இதனால் அந்த பகுதியே குலுங்கியது.

    பிற்பகலிலும் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த மக்கள் அலை, அலையாக வந்தபடி இருந்தனர். இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்தி ஒழுங்குபடுத்த போலீசார் கடும் சவாலை சந்தித்தனர். இறுதி ஊர்வலம் தொடங்குவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த பொதுமக்கள் முண்டியடித்ததால் நெரிசல் உருவானது.

    இதையடுத்து அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு அமைதி ஏற்படுத்தப்பட்டது.



    மாலை 4.30 மணிக்குப் பிறகு இறுதி ஊர்வலம் தொடங்கியதும் தொண்டர்களும் அலை, அலையாக பின் தொடர்ந்து அணிவகுத்து வந்தனர். இதற்கிடையே லட்சக்கணக்கான தொண்டர்கள் கடற்கரை சாலையில் குவிந்தனர். இதனால் நேற்று மாலை அந்த பகுதியும் மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது. அவர்கள் அனைவரும் கருணாநிதி உடலுக்கு இறுதி சடங்குகள் முடியும் வரை தலைவா..... தலைவா.... என்று விண்ணதிர கோ‌ஷமிட்டப்படி இருந்தனர்.

    கருணாநிதி உடல் அடக்கம் செய்யப்பட்டு இரவு 7.30 மணிக்குப் பிறகு தி.மு.க. தொண்டர்களும், பொதுமக்களும் கலைந்து செல்லத் தொடங்கினார்கள். தொண்டர்கள் முழுமையாக கலைந்து செல்ல சுமார் 5 மணி நேரம் ஆனது.

    லட்சக்கணக்கான மக்கள் வருகையால் கருணாநிதி இறுதி ஊர்வலம் மறக்க முடியாத ஊர்வலமாக மாறியது. இந்த இறுதி ஊர்வலத்தில் சுமார் 3 லட்சம் பேர் பங்கேற்றதாக போலீஸ் தரப்பில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

    ஆனால் கருணாநிதி இறுதி ஊர்வலத்தில் சுமார் 5 லட்சம் பேர் வரை கலந்து கொண்டதாக தி.மு.க. வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. #DMKLeader #Karunanidhi #KarunanidhiFuneral

    இறுதி ஊர்வலத்தில் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அமைதி காத்து கருணாநிதிக்கு இறுதி வணக்கம் செலுத்தும்படி திமுக தலைமைக் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. #DMK #RIPKarunanidhi #Marina4Karunanidhi #KarunanidhiFuneral
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதியின் உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அஞ்சலி நிகழ்ச்சி முடிந்ததும், அவரது உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சதுக்கத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. கருணாநிதியின் இறுதி ஊர்வலம் மாலை 4 மணிக்கு தொடங்குகிறது.

    இதுதொடர்பாக திமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-



    திமுக  தலைவரும் தமிழின தலைவருமான கலைஞரின் புகழுடன் தாங்கிய இறுதி ஊர்வலம் இன்று மாலை 4 மணியளவில் ராஜாஜி ஹாலில் இருந்து புறப்பட்டு, சிவானந்தா சாலை வழியாக தந்தை பெரியார் சிலையைக் கடந்து, பேரறிஞர் அண்ணா சிலை வந்தடைந்து, அங்கிருந்து வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா சதுக்கத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

    கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களும் இறுதி ஊர்வலத்தில் அமைதி காத்து, தமிழினத்தின் ஒப்பற்ற தலைவர் கலைஞருக்கு இறுதி வணக்கம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு திமுக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது. #DMK #RIPKarunanidhi #Marina4Karunanidhi #KarunanidhiFuneral 
    ×