search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உத்தரகோசமங்கை"

    • திருவாதிரை மற்றும் ஆருத்ரா விழா மிகவும் பிரசித்தி பெற்றது.
    • நடராஜர் சன்னதி ஆருத்ரா தரிசன தினத்தில் மட்டும் திறக்கப்படும்.

    ராமநாதபுரம்:

    கடவுளுக்கு உகந்த மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை மற்றும் ஆருத்ரா விழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். குறிப்பாக நடராஜரை இந்த நாளில் வழிபட்டால் துன்பங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

    ராமநாதபுரம் அருகே திருஉத்தரகோசமங்கை கிராமத்தில் பழமையும், பெருமையும் வாய்ந்த மங்களநாதர் கோவில் அமைந்துள்ளது. இங்கு மரகத நடராஜர் சன்னதி தனியாக அமைந்திருக்கிறது. அங்குள்ள பச்சை மரகதக்கல்லால் ஆன 6 அடி உயரம் கொண்ட மரகத நடராஜர் சன்னதி ஆருத்ரா தரிசன தினத்தில் மட்டும் திறக்கப்படும்.

    நடராஜப்பெருமாள் சிதம்பரத்தில் அம்பலத்தில் ஆடியதாகவும், மதுரையில் கால் மாறி ஆடியதாகவும், திருஉத்தரகோசமங்கையில் அறையில் ஆடியதாகவும் வரலாறு. மற்ற கோவில்களில் நடராஜரின் கற்சிலைகள், பஞ்சலோக சிலைகளையே காணமுடியும். இங்கு பச்சை மரகதக்கல்லால் உருவாக்கப்பட்ட நடராஜர் சிலை இருக்கிறது.

    மத்தளம் முழங்க மரகதம் உடைபடும் என்ற முதுமொழிக்கு ஏற்ப மரகத நடராஜர் சிலை ஆண்டின் அனைத்து நாட்களிலும் சந்தனம் பூசி பாதுகாக்கப்படுகிறது. ஆருத்ரா தரிசனத்திற்காக மட்டும் சந்தனக்காப்பு களையப்பட்டு மரகத நடராஜர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அன்று ஒரு நாள் மட்டும் அந்த சன்னதி விழாக்கோலம் பூண்டிருக்கும்.

    இந்த ஆண்டு ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு திருஉத்தரகோசமங்கை மங்களநாதர் கோவிலில் கடந்த 18-ந்தேதி காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது. அப்போது முதல் தினமும் சுவாமி-அம்பாள், நடராஜரும் மக்களுக்கு விஷேசமாய் அருள்பாலித்து வருகின்றனர்.

    விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனம் களைதல் வைபவம் இன்று நடை பெற்றது. இதற்காக மரகத நடராஜர் சன்னதி இன்று காலை 8 மணிக்கு திறக்கப்பட்டது. அப்போது நடராஜர் மீது பூசப்பட்ட சந்தனங்கள களையப்பட்டு ஜொலிக்கும் மரகதக்கல்லில் சுய உருவமாக நடராஜர் காட்சியளித்தார். அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் பக்தி பெருக்குடன் நடராஜரை வழிபட்டனர்.

    பின்னர் பால், பன்னீர், மாபொடி, மஞ்சப்பொடி, திரவியப்பொடி, தேன், இள நீர் உள்பட 32 வகையான பொருட்களால் நடராஜருக்கு மகா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் நடராஜரை வரிசையாக சென்று தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இன்று நள்ளிரவில் மீண்டும் நடராஜருக்கு அபிஷேகம் நடைபெறும்.

    நாளை அதிகாலையில் சூரிய உதயமாகும் நேரத்தில் நடராஜருக்கு மீண்டும் சந்தனம் சாத்தப்பட்டு சிறப்பு அலங்காரங்களுடன் பூஜை நடைபெறும். நாளை மாலை வரை மட்டுமே மரகத நடராஜர் சன்னதியில் தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். அதன் பிறகு நடராஜர் சன்னதி மூடப்படுகிறது.

    இந்த கோவிலின் சிறப்பே இங்கு அருள்பாலிக்கும் மரகதக்கல் நடராஜர் மீது பூசிய சந்தனத்தை சூடான நீரில் கரைத்து அருந்தினால் எந்த நோயாக இருந்தாலும் குணமாகும் என்பது ஐதீகம். மருத்துவ குணம் நிறைந்த இந்த சந்தனத்தை பக்தர்கள் போட்டி போட்டு வாங்கி செல்கிறார்கள்.

    இந்த விழாவையொட்டி, ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இன்று (26-ந்தேதி) உள்ளூர் விடுமுறை அறி வித்து கலெக்டர் விஷ்ணு சந்திரன் உத்தரவிட்டுள்ளார். அதேபோல் பல்வேறு ஊர்களில் இருந்து உத்தரகோச மங்கைக்கு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.

    ஒரே ஆண்டில் நடைபெறும் இரண்டாவது ஆருத்ரா தரிசன விழா இதுவாகும். அதாவது இந்த ஆண்டின் (2023) ஜனவரி மாதம் 5-ந்தேதி ஒரு ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

    விழாவையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவின் பேரில் கீழக்கரை டி.எஸ்.பி. சுதிர்லால் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • தமிழகத்தில் உள்ள கோவில்களில் மிகவும் பழமையானதாகும்.
    • மரகத நடராஜர் சன்னதி ஆருத்ரா அன்று மட்டுமே திறக்கப்படும்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரத்தில் இருந்து சுமார் 17 கி.மீ. தொலைவில் திரு உத்தரகோசமங்கை கிராமத்தில் அமைந்துள்ளது மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி கோவில். இந்த கோவில் தமிழகத்தில் உள்ள கோவில்களில் மிகவும் பழமையானதாகும்.

    ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் மரகத நடராஜர் சன்னதி அமைந்துள்ளது. ஆண்டுதோறும் இந்த கோவிலில் உள்ள மரகத நடராஜர் சன்னதியானது ஆருத்ரா திருவிழா அன்று ஒரு நாள் மட்டுமே திறக்கப்படும்.

    இந்தநிலையில் திருஉத்தரகோசமங்கை மங்களநாதர் கோவிலில் இந்த ஆண்டின் ஆருத்ரா திருவிழாவானது கடந்த 18-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. திருவிழா தொடங்கியதில் இருந்து தினமும் சுவாமி-அம்பாள் மற்றும் நடராஜர் பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகின்றனர்.

    ஆருத்ரா தரிசன திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணி அளவில் மரகத நடராஜர் சன்னதியானது திறக்கப்படுகின்றது. தொடர்ந்து நடராஜர் மீது பூசப்பட்டுள்ள சந்தனங்கள் முழுவதுமாக களையப்படுகிறது. பின்னர் நடராஜருக்கு பால், பன்னீர், மாபொடி, மஞ்சப்பொடி, திரவியப் பொடி, தேன், இளநீர் உள்ளிட்ட 32 வகையான மங்கல பொருட்களால் அபிஷேகம் நடைபெறுகிறது.

    தொடர்ந்து அன்று இரவு 11 மணி அளவில் நடராஜருக்கு மீண்டும் ஆருத்ரா மகா அபிஷேகம் நடைபெறுகிறது. அபிஷேகம் முடிந்து நாளை மறுநாள் (27-ந்தேதி) காலை சூரிய உதயமாகும் நேரத்தில் நடராஜருக்கு சந்தனம் சாத்தப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெறுகிறது. 27-ந்தேதி மாலை மீண்டும் நடராஜர் சன்னதியானது மூடப்படுகிறது.

    நாளை (26-ந்தேதி) காலையில் இருந்து நாளை மறுநாள் மாலை வரையிலும் மட்டும் மரகத நடராஜர் சன்னதியில் தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

    ஆருத்ரா தரிசனம் நாளை நடைபெறு வதை முன்னிட்டு திருஉத்தரகோசமங்கை கோவிலில் நாளை பகல் மற்றும் இரவு முழுவதும் சென்னை, மதுரை, பெங்களூரு உள்ளிட்ட பல ஊர்களை சேர்ந்த பரதநாட்டிய கலைஞர்களின் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    நாளை நடைபெறும் ஆருத்ரா தரிசனத்திற்கான ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர் விஷ்ணுசந்திரன் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரை, திவான் பழனிவேல் பாண்டியன் மற்றும் கோவில் பணி யாளர்கள் செய்து வருகின்றனர்.

    ஆண்டுதோறும் ஒரு நாள் மட்டுமே மரகத நடராஜர் சன்னதியானது பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கோவிலின் முகப்பில் இரு கோபுரங்கள் உள்ளன.
    • இறைவன் தாண்டவமாடி காட்சி தரும் ஐதீகம் நடைபெறுகிறது.

    உத்தரகோசமங்கை ஆலய அமைப்பு மிக சிறப்பானதாகும். இந்த கோவில் முன் பகுதி மிகவும் விஸ்தாரமாக உள்ளது. வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்களை இங்கு நிறுத்தவும், ஓய்வு எடுக்கவும் தாராளமான இடவசதி உள்ளது.

    கோவிலின் முகப்பில் இரு கோபுரங்கள் உள்ளன. இடது பக்கம் அம்பிகை சன்னதிக்கு எதிரில் சிவசக்தி என்ற பெயரில் ஐந்து நிலைகளோடு ஒரு கோபுரம் உள்ளது. வலது பக்கம் ஈசன் சன்னதிக்கு எதிரில் உள்ள ராஜகோபுரமும் மிகப்பழமை வாய்ந்து ஏழு நிலைகளோடு உள்ளது. அந்த இரு கோபுரங்களும் நம்மை ஒருங்கே வரவேற்கும் அழகு மனதுக்கு உற்சாகத்தை தரும்.

    இரு வெளிக்கோபுரங்கட்கும் உள் கோபுரங்களும் உள்ளன. வலது பக்க உள்கோபுரம் ஐந்து நிலைகள். இடது பக்க உள்கோபுரம் மூன்று நிலைகள். வலது பக்கம் உள்ள கோபுரத்தின் முன்னால் நர்த்தன விநாயகர், சுப்பிரமணியர் தரிசனம் பெறலாம். உட்புறம் வலப்பக்கம் குளம்.

    உள்கோபுரம் கண்டு தொழுது பிறகு உள்ளே செல்லலாம். இடது பக்க பிரகாரத்தில் வாகனங்கள் வாயிலைத் தாண்டி திரும்பினால் தட்சிணாமூர்த்தி தனியே கால் மேல் கால் மடித்துப்போட்டு, அபயவராத முத்திரைகளுடன் ஒரு கையை உயர்த்தி ஒரு கையை தாழ்த்தி அமர்ந்து காட்சி தருவதை காணலாம். சிவலிங்க பாணமும் நாகப் பிரதிஷ்டையும் பக்கத்தில் உள்ளன.

    விநாயகரை தொழுது பலிபீடம் கொடிமரம், நந்தி இவற்றை வணங்கியவாறே உள்வாயிலைத் தாண்டி சென்றால் பெரிய மண்டபத்தை அடையலாம். முதல் தூணில் குவிந்த கைகளுடன் ராமநாதபுரம் சேதுபதி, ஷண்முக ராஜேஸ்வர சேதுபதி, ராஜேஸ்வர முத்துராமலிங்க சேதுபதி முதலியோர் கற்சிலைகளாகக் காட்சி அளிக்கின்றனர். இந்த கோவிலில் பல டன் எடையுள்ள பெரிய கோவில் மணி உள்ளது. இதன் ஓசை 5 மைல் தொலை வரை கேட்கும்.

    பிரகாரச்சுவரில் திருவாசக பகுதிகளான பொன்னூசல், நீத்தல் விண்ணப்பம் பதிகங்கள் கல்லில் பொறித்துப் பதிக்கப்பட்டு உள்ளன. தொடர்வது அறுபத்துமூவர் மூலத்திரு மேனிகளின் தரிசனம், சப்த மாதாக்கள், முடிவில் விநாயகரும் ரிஷபாரூடரும் காட்சி தருகின்றனர்.

    வலம் முடித்து துவார பாலகர்களை தொழுது, உட்சென்றால் மூலவரின் அருமையான தரிசனம். எதிரில் நந்திதேவர், நீர்கட்டும் அமைப்பில் அனுக்ஞை விநாயகரைக் கும்பிட்டு உட்புறமாகப் பார்த்தால் மங்களேசுவரர் மங்களமாகக் காட்சி அளிக்கிறார் சதுர ஆவுடையார்.

    அடுத்த தரிசனம் மங்களாம்பிகை. நான்கு கரங்களுடன் அபயம் ஒரு கரம், ஒரு கரம் தொடையில் நிறுத்தி, இருகரங்களில் தாமரையில் ருத்ராட்சமும் ஏந்தித் தரிசனம் தருகின்றாள். இத்தலத்தில் சுவாமியை அம்பாள் பூசிப்பதாக ஐதீகம்.

    நடராஜாருக்குரிய ஆறு அபிஷேக காலங்களிலும் இச்சன்னத்தியில் இறைவன் தாண்டவமாடி காட்சி தரும் ஐதீகம் நடைபெறுகிறது.

    இத்தலத்தில் உள்ள எல்லா பிரகாரங்களும் அழகுமிக கற்தூண்களுடன் அமைந்துள்ளன. பிரகார அழகு ராமேஸ்வரத்தில் உள்ள மூன்றாம் பிரகாரத்தை நினைவூட்டுகிறது. தூண்களில் பிட்சாடனார், ஊர்த்தவர் சிற்பங்கள் உள்ளன. உலா வருவதற்குரிய நடராஜத் திருமேனிகள் வைக்கப்பட்டுள்ளன. வெளிச்சுற்றில் வல்ல¬ப விநாயகரைத் தரிசிக்கலாம்.

    ஆதிசிதம்பரம் எனப்படும் அற்புதத் தனிக்கோயிலை அடுத்து காணலாம். நடராஜப் பெருமானுக்குத் தனிக்கோயில், கோயிலுக்கு உள்ளேயே குளத்தின் எதிரில் உள்ளது. பலிபீடம், கொடிமரம், நந்தியை தொழுது முன்மண்டபம் சென்றால், சேதுபதிகள் வண்ணங்களில் சுதையில் தூண்களில் காட்சி அளிக்கின்றனர்.

    சுற்றிலும் அகழி அமைப்பு உள்ளது. எனவே சன்னதிக்கு உட்செல்ல மரப்படிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் தற்போது படியில் ஏறி இறங்காமல் செல்ல வழிசெய்துள்ளனர். கருவறை தெற்கு நோக்கிய சன்னதியாக உள்ளது. இங்கு அக்கினி மத்தியில் நடராஜப் பெருமான் ஆடுவதாக சொல்லப்படுகிறது. அம்பிகைக்கான அறையில் ஆடிய நடனத்தைத்தான் அம்பலவாணர், தில்லையம்பலத்தில் ஆடினார்.

    இங்குள்ள கூத்தப்பிரான்- நடராஜர் அதி அற்புதமானவர். ஐந்தரை அடி உயரம் முழுவதும் மரகதத்திருமேனி, விலை மதிப்பிட முடியாத இப்பெருமான் ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பிலேயே பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

    இப்பெருமான் வெளியே உலா வருவதில்லை. பெருமான் திருமேனியை உள்வைத்தே சன்னதி கட்டப்பட்டுள்ளதால் திருமேனியே வெளியே கொண்டுவர இயலாது.

    மார்கழி திருவாதிரையில் இப்பெருமானுக்கு மிகப்பெரிய அபிஷேகம் சிறப்பாக நடைபெறுகிறது. இதைச் செய்பவர்கள் திருப்பத்தூர் வள்ளல் ஆறுமுகம் பிள்ளையவர்களின் குடும்பத்தினர்.

    அன்று ஒருநாள் மட்டுமே சந்தனக்காப்பு முழுவதும் களையப்பட்டு, அபிஷேகங்கள் கண்கொள்ளாக் காட்சியாக அற்புதமாக நடைபெறும். வாழ்நாளில் ஒருமுறையாவது இந்நாளில் கட்டாயமாக சென்று தரிசிக்க வேண்டும்.

    அபிஷேக ஆராதனைகள் முடிந்த பிறகு மீண்டும் சந்தனக்காப்பு சார்த்தப்படும். அக்காப்பிலேயே அடுத்த மார்கழி திருவாதிரை வரை பெருமான் ஆண்டு முழுவதும் காட்சித் தருவார்.

    மார்கழித் திருவாதிரை நாளில், வாய்ப்பும் திருவருள் பெற்றவர்களும் அவசியம் சென்று ஆடல் வல்லானைத் தரிசித்து ஆனந்தம் பெறவேண்டும். நாள்தோறும் உச்சிக்காலத்தில் நடைபெறும் ஸ்படிகலிங்க, மரகதலிங்க, அன்னாபிஷேகம், தரிசனங்களை காண கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

    நடராஜர் சன்னதி வழிபாடு முடிந்தபிறகு முன் மண்டபம் செல்லலாம். அங்குள்ள சிறிய மேடையில் தான் உச்சிக்காலத்தில் ஸ்படிக, மரகத லிங்கங்களை வைத்து அபிஷேகம் செய்கின்றனர். அதை தரிசிக்கும்போதே வலப்பக்கச் சாளரத்தின் வழியே கைக்கூப்பிய நிலையில் உள்ள மாணிக்கவாசகரையும் இடப்பக்கம் சாளரம் வழியாக திரும்பி உமா மகேஸ்வரையும் ஒருசேரத் தரிசிக்கலாம்.

    உமாமகேஷ்வரர் சன்னதிக்கு படிகளேறிச் சென்று தரிசித்து விட்டு மறுபுறமுள்ள படிகள் வழியே இறங்கி பிராகர வலமாக வந்தால் திருப்பதிகங்கள் எழுதப்பட்டுள்ளதை பார்க்கலாம். குருந்த மர உபதேசக் காட்சி சந்நிதியும் கண்டு இன்புறலாம்.

    கல்லில் குருந்த மரம் செதுக்கப்பட்டு கீழே அமர்ந்து இறைவன் (குருமூர்த்தமாக) உபதேசிக்க எதிரிர் மாணிக்கவாசகர் உபதேசம் பெறும் காட்சி அற்புதமாக உள்ளது.

    இதையடுத்து மாணிக்க வாசகர் சன்னதி கண்டு வழிபடலாம். கோஷ்டமூர்த்தம் `ஏகபாத திரிமூர்த்தி' அருமையானது.

    நடராஜர் கோயிலுக்கு பக்கத்தில் தனியே சகஸ்ரலிங்க சந்நிதி உள்ள தனிக்கோயில் உள்ளது. மூலத்திருமேனியில் நெடுக்குக்கீற்றுகள் உள்ளன. 3 ஆயிரம் ஆண்டு பழமையான தலமரம் இருப்பதை அங்கு காணலாம். வியாசரும் காகபுஜண்டரும் இங்கு தவம் செய்வதாக ஐதீகம். இதன் பக்கத்தில்தான் தலவிருட்சமான இலந்தை மரம் உள்ளது.

    இந்த சகஸ்ரலிங்கக் கோயில் எழுந்ததற்கான வரலாறு, நடராசர் கோயிலில் முன் மண்டபத்தில் மேற்புறத்தில் வண்ண ஓவியமாக எழுதப்பட்டுள்ளது.

    ஆயிரம் சிவ வேதியர்களின் உருவம் பொறிக்கப்பட்ட ஒரே சிவலிங்கமான சகஸ்ரலிங்கத்தை தரிசனம் செய்துவிட்டு கடைசியாக மாணிக்கவாசகரை தரிசனம் செய்தல் வேண்டும். அதன்பிறகு வடக்குவாசல் வழியாக செல்ல வேண்டும். இப்படி முறையாக உத்தரகோச மங்கை தலத்தில் வழிபாடு செய்தால் மனிதர்களுக்கு பிடிக்கப்பட்ட தோஷங்கள், பாவங்கள், கிரகங்கள், மனச்சஞ்சலங்கள், பிணிகள் அனைத்தையும் பனித்துளி போல ஈசன், ஈஸ்வரி நீக்கிவிடுவார்கள் என்பது ஐதீகம் ஆகும்.

    • சிவன் மண்டோதரியின் முன்பு குழந்தை வடிவில் காட்சி தந்தார்.
    • ராவணனுக்கும் மண்டோதரிக்கும் திருமணம் நடக்க சிவன் அருள்பாலித்தார்.

    உத்தரகோசமங்கை மங்களேஸ்வரி உடனுறை மங்களநாதர் கோவில் பழம்பெருமை மிக்கது. ராவணனின் மனைவியான மண்டோதரிக்கு நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் இருந்தது. உலகிலேயே சிறந்த சிவபக்தனைத்தான் திருமணம் முடிப்பேன் என அவள் அடம் பிடித்தாள்.

    ஈசனைத் தியானித்தாள். சிவபெருமான் தான் பாதுகாத்து வந்த வேத ஆகம நூல் ஒன்றை முனிவர்களிடம் ஒப்படைத்து. `நான் மண்டோதரிக்கு காட்சிதரச் செல்கிறேன். திரும்பி வரும்வரை இதைப் பாதுகாப்பாக வைத்திருங்கள்' எனக் கூறிச் சென்றார்.

    சிவன் மண்டோதரியின் முன்பு குழந்தை வடிவில் காட்சி தந்தார். அப்போது ராவணன் அந்த குழந்தை சிவன் என்பதைப் புரிந்து கொண்டான். சிவனைத் தொட்டான். அந்த நேரத்தில் இறைவன் அக்னியாக மாறி ராவணனை சோதித்தார். உலகில் அனைத்தும் தீப்பற்றி எரிந்தன.

    சிவன் முனிவர்களிடம் விட்டுச் சென்ற வேத ஆகம நூலுக்கும் ஆபத்து வந்தது. முனிவர்கள் அதைக் காப்பாற்ற வழியின்றி, சிவன் வந்தால் என்ன பதில் சொல்வது என்ற பயத்தில், தீர்த்தத்தில் குதித்து இறந்தனர். அது `அக்னி தீர்த்தம்' எனப் பெயர் பெற்றது.

    அங்கிருந்த மாணிக்கவாசகர் மட்டுமே தைரியமாக இருந்து அந்த நூலைக் காப்பாற்றினார். பிறகு ராவணனுக்கும் மண்டோதரிக்கும் திருமணம் நடக்க சிவன் அருள்பாலித்தார்.

    மாணிக்கவாசகருக்கு தன்னைப் போலவே லிங்க வடிவம் தந்து கவுரவித்தார். இப்போதும் இத்தலத்தில் மாணிக்க வாசகர் லிங்க வடிவில் காட்சி தருகிறார்.

    பொதுவாக, ஒரு கோவிலுக்கு சென்றால் ஒருமுறை வணங்கி விட்டு உடனேயே திரும்பி விடுகிறோம். ஆனால் ஒரே நாளில் மூன்று வேளையும் சென்று தரிசித்து பலனை அடையத்தக்க வகையிலான கோவில் இது. வேறு எந்த தலத்திலும் காண முடியாத அற்புதமான மரகத நடராஜர் சிலை இங்கு உள்ளது. மார்கழி திருவாதிரை அன்று மட்டும் இதற்கு பூஜை உண்டு. மற்ற நாட்களில் சந்தனக் காப்பு சார்த்தப்பட்டிருக்கும்.

    ஈஸ்வரத் தலங்களிலேயே இங்கு மட்டும்தான் இறைவனுக்கு தாழம்பூ சார்த்தலாம் என்பது சிறப்பான செய்தி. ஏனெனில் இறைவனின் முடியைக் கண்டதாக தாழம்பூவின் சாட்சியுடன் பொய் சொன்ன பிரம்மா, இத்தலத்தில் வணங்கி சாப விமோசனம் பெற்றார். இறைவன் சுயம்புவாக ஒரு இலந்தை மரத்தடியில் தோன்றினார். அந்த மரம் இன்னும் உள்ளது.

    சித்திரை மாதம் திருக்கல்யாண விழா 12 நாட்கள், மார்கழி திருவாதிரை திருவிழா 10 நாட்கள் நடக்கின்றன.

    அம்பாள் மங்களேஸ்வரியை வணங்கினால் தடைபட்ட திருமணங்கள் நடக்கும். சுவாமியையும், அம்பாளையும் காலையில் வணங்கினால் முன்வினை பாவங்கள் நீங்கும். மதியம் வணங்கினால் இப்பிறவி பாவங்கள் தீரும். மாலையில் தரிசித்தால் ஆயுள் அதிகரிப்பதுடன் தொழில் மேன்மையும், பொரள் பெருக்கமும் ஏற்படும்.

    வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்குத் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூஜைகள் செய்து நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர்.

    • நடராஜர் சிலை விலை மதிக்க முடியாத 7 அடி உயரம் கொண்ட மரகத சிலையாகும்.
    • குளத்தின் தண்ணீருக்கு மேல் ஆகாயத்தில் நின்றது சிலை.

    உத்திரகோசமங்கை திருத்தலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் பார்ப்பதற்கு வேண்டி மரகத சிலை போன்று ஒரு மாதிரி ஐம்பொன் நடராஜர் சிலையை மிகவும் அழகாக வடிவமைத்து அமைத்துள்ளனர்.

    பல நூற்றாண்டுகளாக பல முஸ்லிம் மன்னர்கள், அண்டை நாட்டு மன்னர்கள், ஆங்கிலேயர்கள், டச்சுக்காரர்கள், வெள்ளைக்காரர்கள், கொள்ளையர்கள் உள்ளிட்டோர் கொள்ளையடிக்க முயற்சித்தும், மரகத சிலையை எடுக்க முடியவில்லை. நெருங்கவும் முடியவில்லை.

    1970-ம் ஆண்டு ஐம்பது பேர்கள் கொண்ட கொள்ளை கும்பல் ஒன்று உத்திரகோசமங்கை கோவிலின் மேற்குப்புற வாசல் வழியாக வந்து மரகத நடராஜர் சன்னதி பூட்டை உடைத்து, உடைக்க முடியாமல் வெல்டிங் மிஷின் வைத்தபோது வெல்டிங் வைத்தவனுடைய இடது கை பூட்டாக மாறியதால் தன் கையை வெல்டிங் வைத்து எடுக்கவும், கை இரண்டு துண்டாக விழுந்தவுடன் உணர்வு வந்தது.

    உடனே கொள்ளை கும்பல் பயந்து அருகில் இருந்த ஐம்பொன் நடராஜர் சிலையை எடுத்தக் கொண்டு காரில் தப்பித்து ஒருகல் தொலைவில் போகும்போது கொள்ளையர்களுக்கு கண் தெரியாமல் போய் விட்டது.

    உடனே ரோட்டுக்கு அருகிலுள்ள கண்ணாங்குடி கிராமத்துக்குச் சொந்தமான தண்ணீர் உள்ள குளத்தில் சிலையை போட்டு விட்டனர். அதன் பிறகே கொள்ளையர்களுக்கு கண் தெரிந்தது. உடனே தப்பி விட்டார்கள்.

    நடராஜர் சிலை கொள்ளையடிக்கப்பட்ட விபரம் மக்களுக்கு காட்டுத்தீ போல் பரவியது. மக்கள் சிலையைத் தேடும் பணியில் ஈடுபட்டார்கள்.

    கண்ணாங்குடியை சேர்ந்த ஒரு மாடு மேய்க்கும் சிறுவனால் கண்ணுக்குத் தென்பட்டது சிலை. குளத்தின் தண்ணீருக்கு மேல் ஆகாயத்தில் நின்றது சிலை. இந்த சிலையை கண்ட மக்கள் ஆனந்த வெள்ளத்தில் மூழ்கினார்கள். பின்பு சிலை ராமநாதபுரம் அரண்மனைக்கு எடுத்து செல்லப்பட்டது.

    மாலிக்காபூரிடம் இருந்து தப்பிய சிலை

    தென் இந்தியாவுக்கு படையெடுத்து வந்து இந்து கோவில்களை சூறையாடிய மாலிக்காபூர் ஒற்றர்கள் மூலம் உத்தரகோசமங்கை நடராஜர் கோவிலில் மரகதம் இருப்பதை அறிந்து கொண்டான்.

    உடனே உத்திரகோசமங்கை கோவிலில் உள்ள மரகத கல் நடராஜர் சிலையை கொள்ளையடிப்பதற்கு வேண்டி பெரும் படைகளுடன் சென்றான். உத்திரகோசமங்கை கோவிலில் உள்ள நடராஜர் சிலை விலை மதிக்க முடியாத 7 அடி உயரம் கொண்ட மரகத சிலையாகும். இந்த சிலை உலக அதிசயத்தில் ஒன்றாக உள்ளது.

    மாலிக்காப்பூர் உத்திரகோசமங்கை கோவிலை நெருங்கும்போது தான் வைத்திருந்த கோவில் வரைபடத்தை தொலைத்து விட்டார். இதனால் அவனும் அவன் படையினரும் உத்திரகோசமங்கைக்கு செல்வதற்கு பதில் ராமநாதபுரத்துக்கு சென்று விட்டனர். ஈசனே அவர்களை திசை மாற்றி விட்டதாக கூறப்படுகிறது.

    மாலிக்காபூர் ராமேஸ்வரம் கோவிலில் கொள்ளையடிக்க பொருள்கள் இல்லாமல் கருங்கல்லை எடுத்துச் சென்றார். இந்தியா வரலாற்றில் அலாவுதீன் கில்சிங்படை தளபதி மாலிக்காப்பூர்தான் உத்திரகோச மங்கை வழியாக ராமேஸ்வரம் வரை கொள்ளை அடித்தாக வரலாறு உள்ளது. ஆனால் அவன் கையில் பச்சை கல் நடராஜர் சிலை சிக்காமல் போனது ஈசன் அருளால் நடந்ததாகவே பக்தர்கள் இன்றும் நம்புகிறார்கள்.

    தாயுமானவர்

    தாயுமானவர் இறுதியாக ராமநாதபுரம் வந்து உத்திரகோசமங்கை திருத்தலத்திற்குச் சென்று சிவனைப் பற்றி மனமுருகப் பாடல்களை பாடினார். இந்தப் பகுதியில் 5 வருடங்களாக மழை பெய்யாமல் பஞ்சம் நிலவியது.

    ஆடு மாடுகள் தண்ணீர் இல்லாமல் செத்து மடிந்தது. மக்கள் கடும் பஞ்சத்தால் பிழைப்புக்கு இடம் பெயர்ந்து சென்று விட்டார்கள்.

    தாயுமான சுவாமிகள் ஈசன், ஈஸ்வரியின் பாதத்தை கெட்டியாக அணைத்தபடி மனமுருக பாடல்களை பாடினார். வான்மழை விடாது பெய்யத் தொடங்கியது.

    அந்த வான்மழையிலும் இறைவனின் அருள் மழையிலும், அன்று ஒரே நாளில் பேய் மழை பெய்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கண்மாய்கள், ஏரிகள், குளங்கள் எல்லாம் நிரம்பி விட்டது. மக்கள் பெருமகிழ்ச்சி அடைந்தார்கள். விவசாயம் விளைந்தது. மக்கள் பசியின்றி வாழ்ந்தார்கள்.

    • நடராஜர் சிலை உலக அதிசயத்தில் ஒன்றாக உள்ளது.
    • பச்சை மரகத கல் மேளதாளம் இசை, ஒலி, ஒளி சப்தம் தாங்காத தன்மை கொண்டது.

    ராமேசுவரம் மண்டபம் பகுதியைச் சேர்ந்த மரைக்காயர் என்ற மீனவர் பாய்மரப்படகு வைத்து மீன் பிடித்து தன் குடும்பத்தை நடத்தி வந்தார். ஒருநாள் அவர் கடலில் மீன்பிடித்துக் கொண்டு இருக்கும் போது கடலில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது. அலைகள் சூறாவளியாக உருவெடுத்து தாக்கு பிடிக்க முடியாதபடி புயல் காற்று வீசியது.

    பயங்கர இடி மின்னலுடன் பேய் மழை பெய்தது. அதனால் மரைக்காயரின் பாய்மர படகு திசை மாறிச் சென்றது. படகு எங்கு செல்லுகிறது என்று தெரியாமல் கடல் நீரோட்டத்தில் அடித்து செல்லப்பட்டது.

    கடல் நடுப்பகுதிக்கு படகு சென்று விட்டது. அப்போது திடீரென்று கடல்பாசி படிந்த பச்சை நிறத்துடன் கல்பாறையில் பாய்மரப் படகு மோதியது.படகு மோதிய வேகத்தில் அந்த பாறை மடமடவென்று படகின் மேலே விழுந்தது. மற்றும் இரண்டு பாறை கல் துண்டுகளும் விழுந்தன. அந்த நேரத்தில் புயல் காற்றும் பேய்மழையும், உடனே நின்று விட்டது.

    இதையறிந்த மரைக்காயர் தன் உயிரை காப்பாற்றியது இந்த பாறைக்கல்தான் என்று நினைத்தார். எப்படியும் அந்த பச்சை கல்லையும், 2 கல் துண்டுகளையும் ஊர் கொண்டு சேர்க்க வேண்டும் என்று முடிவு செய்தார். அதன்படி பச்சை நிறக்கல் மற்றும் 2 கல் துண்டுகளுடன் படகை ஓட்டிக் கொண்டு மண்டபம் வந்து சேர்ந்தார்.

    காணாமல் போன மரைக்காயரைக் கண்டு அவரது குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

    மரைக்காயர் தான் கொண்டு வந்த பாசிபடிந்த பாறைக்கல்லை தன் வீட்டுக்கு முன் வாசல் படிக்கல்லாக போட்டு விட்டார். இந்த வாசல் படிக்கல்லின் மேல் நடக்க நடக்க நாளடைவில் கல்லில் படிந்திருந்த கடல் பாசிகள் முழுவதும் போய்விட்டது. இதனால் பளபளவென்று பச்சை நிறத்தில் மின்னியபடி மிக அழகாக கல் கிடந்தது.

    இதை கண்ட மரைக்காயர் குடும்பத்தினர் பச்சை நிற கல்லின் அழகைக் கண்டு இந்த கல்லை மன்னருக்கு கொடுத்தால் நமக்கு ஏதாவது பொருள் கொடுப்பார் என்று நினைத்து மன்னருக்கு தெரிவித்தனர்.

    பாண்டிய மன்னன் தனது ஆட்களை மண்டபத்திலுள்ள மரைக்காயர் வீட்டுக்கு அனுப்பி பச்சை நிறக்கல்லை அரண்மனைக்கு எடுத்து வரும்படி உத்தரவிட்டார். பணியாட்கள் மரைக்காயர் வீட்டில் உள்ள பச்சை நிறக்கல்லை அரண்மனையில் சேர்த்தார்கள்.

    அந்த கல்லை கண்ட மன்னன் விலைமதிக்க முடியாத மரகத கல்லைக்கண்டு பெரும் மகிழ்ச்சி அடைந்தார். இந்த பச்சை மரகத கல்லைக் கொண்டு உத்தரகோசமங்கை திருத்தலத்தில் ஆருத்ரா தரிசனம் நடராஜருக்கு ஊத்துவதாண்டவம் நடனத்தை அப்படியே நாட்டியம் ஆடும்படி சிலை வடிக்க வேண்டும் என்று தீர்மானித்தார் மன்னர்.

    நடராஜர் சிலையை வடிக்க தலைசிறந்த சிற்பியைத் தேடிக்கொண்டு வரும்படி ஒற்றர்களுக்கு உத்தரவிட்டார். ஒற்றர்கள் தனித்தனியாக பல நாடுகளுக்கு அதாவது பாண்டியநாடு, சேரநாடு, சோழநாடு, நாஞ்சில்நாடு போன்ற நாடுகளில் மூலை முடுக்கெல்லாம் தேடியும் சிலை வடிக்கும் சிற்பி கிடைக்கவில்லை. இதனால் மன்னன் மிகுந்த கவலை கொண்டு இருந்தார்.

    ஒருநாள் மன்னர் இரவில் உறங்கும்போது ஈசன் கனவில் தோன்றினார். இலங்கை வேந்தன் முதலாம் கயவாகு என்பவரின் அரண்மனையில் சிவபக்தனான ரத்தினசபாபதி என்ற தலைசிறந்த சிற்பி இருப்பதாக தெரிவித்தார்.

    உடனே பாண்டிய மன்னன் இலங்கை வேந்தன் முதலாம் கயவாகுவை தொடர்பு கொண்டு, சிற்பியை அனுப்பி வைக்க கோரிக்கை விடுத்தார். அதன்படி ரத்தினசபாபதி என்ற சிற்பியை உத்தரகோசமங்கை திருத்தலத்துக்கு அழைத்து வந்து சேர்த்தார்கள். அவர்தான் பச்சை கல் நடராஜர் சிலையை வடித்தார்.

    இலங்கை சிற்பி வடித்த சிலை

    இலங்கை நாட்டைச் சேர்ந்த சிலை வடிக்கும் தலைசிறந்த சிற்பியான ரத்தின சபாபதி என்பவரிடம் பாண்டிய மன்னன் சிலை வடிக்க வேண்டிய வரைபடங்களையும், ஆருத்ரா தரிசனம் ஊத்துவதாண்டவம் நடராஜன் ஆடிய நடனத்தையும் தெளிவுபட விளக்கினார்.

    சிற்பி பச்சை மரகதகல்லில் நடராஜர் சிலையை செதுக்க ஆரம்பித்தார். முதலில் இரண்டு துண்டுகளாக இருந்த பச்சை மரகதகல்லை மிக அழகான வடிவம் அமைத்து இரண்டு துண்டுகளையும் மன்னரிடம் ஒப்படைத்தார் சிற்பி.

    மன்னர் ஒருதுண்டு பச்சை மரகத கல்லை பழனி முருகன் கோவிலின் அடிப்பீடத்தில் வைத்தார். மற்றொரு துண்டை மதுரை மீனாட்சியம்மன் கோவில் அடிப்பீடத்தில் வைத்தார். சிற்பி பச்சை மரகத கல்லில் 5 அடி உயரம் சிலையும், 1 அடி உயரம் பீடமும் சேர்த்த ஏழு அடி உயரம் கொண்ட பிரமாண்ட சிலையாக வடித்தார்.

    அந்த சிலை நடராஜர் உருவத்தில் பரதநாட்டிய கலையை வெளிப்படுத்தும் வகையில் பிரமாண்டமான சிலையாக இருந்தது. இந்த நடராஜர் சிலை உலக அதிசயத்தில் ஒன்றாக உள்ளது. இந்த சிலை ஒளி வெள்ளத்தில் உயிர்ப்புடன் இருப்பது போல் தோன்றுவதை நாம் உணர முடியும். அபூர்வமான இந்த விக்கிரகத்தில் மனித உடலில் உள்ளது போல் பச்சை நரம்புகள் இருப்பது போல் தத்ரூபமாக வடித்துள்ளார்.

    நடராஜர் சிலையை நாம் நேரில் பார்க்கும்போது அச்சு அசலாக பரதநாட்டியம் ஆடுவது போன்று காட்சியளிக்கும். இந்த சிலையை நேரில் கண்டவர்கள் கண்ணைக் கவரவும், பார்த்தவர்கள் பரவசம் அடையவும், சிலை வடித்தவுடன் மக்கள் மற்றும் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. பச்சை மரதக கல்லினால் வடிவமைக்கப்பட்ட நடராஜர் சிலையின் மேல் சூரிய ஒளிபட்டு கோவிலே இரண்டாக பிளந்துள்ளது.

    சிலையைப் பார்க்க வந்த பக்தர்கள் ஏற்படுத்திய பேச்சு சலசலப்பு சத்தமும், மேளத்தாள இசைகள், ஒலி, ஒளி முதலிய பேரொளிகள் நடராஜன் சிலை மேலேபட்டு அதிர்வுகள் ஏற்படுத்தின. இதை அறிந்த சிற்பி, எப்படி இந்த விக்கிரகத்தை காப்பாற்றுவது என்று நினைத்து மிக வேதனைப்பட்டு குழம்பிய நிலையில் ஈசன் காலடியில் மன்றாடி வழிமுறைகளைக் கேட்டார். உடனே ஒரு அசரீரி தோன்றியது.

    உத்தரகோசமங்கை திருத்தலத்தில் முன்விட்ட பார்வதி சாபத்தால் எனது உருவம் பொறிக்கப்பட்ட விக்கிரகம் பச்சை மரகத கல்லால் ஆனது. இந்த பச்சை மரகத கல் மேளதாளம் இசை, ஒலி, ஒளி சப்தம் தாங்காத தன்மை கொண்டது.

    மத்தளம் முழங்க, மரகதம் உடையும் என்ற சொல்லுக்கேற்ப எனது உருவச்சிலையை ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பால் பூசியவடியும் என்று கூறினார். பிறகு மார்கழி மாதம் பவுர்ணமி அன்று சந்தனத்தைக் கலைத்து ஒரு நாள் மட்டும் எனது முழு உருவத்தை பக்தர்கள் பார்க்கலாம் என்று கூறினார். எனது அனுமதி இல்லாமல் என் விக்கிரகத்தை மன்னரோ, மந்திரியோ, மக்களோ, திருடனோ, அரசியல்வாதிகளோ எடுத்துச் செல்ல முடியாது என்றும், அப்படி எடுக்க நினைப்பவர்களுக்கு உடனே கிறுக்கு(பித்து) பிடித்து விடும் என்றார்.

    அன்னியர்கள், யாத்ரீகர்கள் உத்தரகோசமங்கை மண்ணில் உட்கார்ந்து எழும்பும்போது கையை அசைத்துப் பின்புறமாக மண்ணை தட்டிச் செல்ல வேண்டும். அப்படி தட்டிச் செல்லாதவர்களுக்கு சிவன் உத்தரகோச மங்கையில் ஒருதுளி மண்ணை எடுக்க கூட சம்மதிக்க மாட்டார் என்று சொல்கிறார்கள்.

    பிரமாண்ட மணி

    உத்திரகோசமங்கை திருத்தலத்தில் பல டன் எடை கொண்ட மிகப்பெரிய மணி ஒன்று உள்ளது. அதன் சத்தம் 10 கிலோ மீட்டர் தொலைவு வரை கேட்கும் எனவே மணி ஓசை கேட்கும் எல்லை வரை சிவதலமாகும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.

    எனவே உத்திரகோசமங்கை மற்றும் சுற்று வட்டார ஊர்களிலுள்ள ஆண்கள் உழைத்து, தான் ஈட்டிய பொருள்களை அவர் அவர் மனைவி கையில் கொடுத்து வாங்கினால்தான் குடும்பம் முன்னேற்றமடையும் என்பது ஐதீகமாகும்.

    • அந்தரங்க அறையில் அம்பாள் சிலை உள்ளது.
    • பார்வதிக்கு சிவபெருமான் பிரணவ மந்திரத்தை உபதேசித்த இடம்.

    உத்தரகோசமங்கை கோவிலில் நடராஜருக்கு தனி சன்னதி கோவில் உள்ளது. இக்கோவிலின் மத்தியில் ராஜகோபுரம் மிக சிறப்பாக அமைந்துள்ளது. இதை சுற்றி அகழியுள்ளது.

    அகழியை சுற்றிலும் தீப்பிழம்பை மலைபோல் வளர்த்துக் கொண்டு ஈசன், ஈஸ்வரி அக்கினி கோளத்தில் யாரும் அறியாமல் மூலஸ்தனத்தின் ரகசிய அறைக்குள் முதல் பெண் பார்வதி தேவிக்கு பரத நாட்டிய கலையையும், அந்தரங்க கலை முழுவதையும் கற்றுக் கொடுத்துள்ளார். மற்றும் தேவ ரகசியத்தை தன்னில் பாதியாகக் கொண்ட பார்வதி தேவிக்கு சிவபெருமான் பிரணவ மந்திரத்தை உபதேசித்த இடமாகும்.

    இந்த அந்தரங்க அறையில் அம்பாள் சிலை உள்ளது. இந்த அறைக்கு யாரும் செல்ல மாட்டார்கள். ஆதியில் அந்தரங்க அறையில் ஈசன் ஈஸ்வரி பரதநாட்டியம் ஆடியதற்குத்தான் ஆதி சிதம்பரம் என்ற உத்தரகோசமங்கை என்று வழங்கப்படுகிறது. முதலில் அறையில் ஆடிய பிறகுதான் பின்பு அம்பலத்தில் ஆடினார் என்று சொல்லப்படுகிறது.

    எனவே இந்த மரகத நடராஜர் சன்னதிக்கு தெற்குபுறமாக வாசல் அமைந்துள்ளது. ஈசன்-ஈஸ்வரி பரதநாட்டியம் ஆடிய மரப்பலகை ஐந்தை இப்பொழுதும் காணலாம்.

    பரத நாட்டியத்தை முதல் முதலில் உத்திரகோசமங்கையில் ஆடல் அரசன் என்ற தெய்வம் சிவபெருமான் தான் அறிமுகம் செய்தார்.

    முதல் நாளில் சிவனும், பார்வதியும் `ஆனந்த தாண்டவம்' ஆடுகின்றார்கள். இரண்டாவது நாள் `சந்தியா தாண்டவம்'. மூன்றாவது நாள் `சம்ஹாரத் தாண்டவம்' ஆடுகின்றார்கள்.

    இந்த மூன்று நாட்களும் நடந்த நாட்டியத்திற்கு சிவபெருமான், பார்வதி ஆகியோரின் நடனம் ஒரே மாதிரியாக இருந்ததால் நடுவர்களால் சரியான தீர்ப்பு கூற முடியவில்லை. எனவே திருமால், பிரம்மன், இந்திரன் ஆகியோரிடம் பெரும் குழப்பம் ஏற்பட்டு விட்டது.

    நான்காவது நாள் ஊர்த்துவதாண்டவம் நடந்தது. ஆடவல்லான் நடராஜரின் கால் சதங்கை சப்தம் ரம்மியமாய் ஒலித்தது. பார்வதி, நடராஜன் ஆடும் சபையை நோக்கி நடந்தாள். நடராஜனின் அருகே சென்றாள்.

    சுவாமி ஆடல், கலை பெண்களுக்கே உரியது. நீர் ஆடி ஆட வல்லான் என்று பெயர் பெறுவது நல்லது அல்ல. என்னுடன் போட்டி நடனம் ஆடிப்பாரும் என பார்வதி தேவி சவால் விட்டாள்.

    ஈசனும் போட்டி நடனம் ஆட சம்மதித்தார். ஒருபுறம் பார்வதி, இன்னொருபுறம் சிவபெருமானான, நடராஜன் ஆட்டம் தொடங்கியது.

    இந்த போட்டி நடனத்துக்கு நாரதர் யாழை இசைத்தார். மகா விஷ்ணு மத்தளம் கொட்டினார். நந்திய பெருமான் தாளமிட்டார். பிரம்மா ஜதி சொல்லத் தொடங்கினார். ருத்திரன் நாதசுரம் வாசித்தார். சரஸ்வதி வீணையை மீட்டினாள்.

    வெற்றி யாருக்கு என புரியாத நிலையில் திகைத்து இருந்தார்கள் தேவர்கள். இந்த நாட்டியத்தில் பார்வதி சுழன்றாடினாள். வெற்றி யாருக்கு என்று புரியாத நிலையில் அனைவரும் சிவதாண்டவத்தையும், பார்வதி ஆட்டத்தையும் கண்டு களித்தனர்.

    ஆட்டம் சூடு பிடித்தது. இருவரும் சுழன்று சுழன்று ஆடினர். பார்வதியின் கால் சலங்கை கழன்று கீழே விழுந்தது. ஆடலரசன் தன் காதில் இருந்த ஒரு குண்டலத்தை கீழே விழச் செய்தார். பார்வதி கால் சதங்கையை சரி செய்து சிவபெருமானின் செயல்களைக் கூர்ந்து கவனித்தார்.

    சக்கரமாய் ஆடிவந்த சிவபெருமானின் ஒரு காலின் விரல்கள் கீழே கிடந்த குண்டலத்தை மெல்லக் கவ்வியது.

    சிவபெருமான் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்று புரியாது பார்வதி ஆடிக்கொண்டே நடப்பதைக் கவனித்தாள். கூடி இருந்தவர்களுக்கு ஈசனின் இந்த செய்கை புரியவில்லை. புரியாத குழப்பத்திலேயே ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தனர்.

    அடுத்த கணம் நடராஜர் தன் இடது காலை அழுந்த ஊன்றி வலது காலை நாட்டியமண்டபத்துக்கு அருகில் மரங்கள் சூழ்ந்த வனம் பகுதியை நோக்கி தில்லையின் எல்லையை நோக்கி நடந்தார். பின்னர் நடராஜன் தன் வலது காலை தூக்கி இடது காதை தொட்டார். ஆனால் அது போன்று பார்வதிதேவி செய்ய முடியவில்லை. தள்ளாடி கீழே விழுந்து மயக்கம் நிலையை அடைந்து தோல்வியுற்றாள்.

    இந்த `தலம்' ஊர்த்துவ தாண்டவம் ஆடி தன்னுடன் போட்டி நடனம் ஆடிய பார்வதியை ஈசன் வென்ற `தலம்' தான் உத்திரகோசமங்கை திருத்தலமாகும். இந்த போட்டி நடனத்திற்கு திருமால், பிரம்மன், இந்திரன் ஆகியோர்கள் நடுவர்களாக இருந்து பார்வதி தோல்வியுற்றதாகத் தீர்ப்பு வழங்கிய திருத்தலமாகும்.

    உத்தரகோசமங்கை திருத்தலத்தில் ஈசன், ஈஸ்வரியை பரதவ மகளாகவும், காளியாகவும், போகும்படி சாபம் இட்டத்தையும் இத்திருத்தலத்தில் ஈசனோடு ஆடிய நாட்டிய போட்டியில்தான் தோல்வியுற்றதையும் எண்ணி மிகுந்த மனவேதனைப்பட்டு தன் கணவர் என்று பாராமல் பார்வதி உத்தரகோசமங்கை திருத்தலத்தில் தன்னுடைய உருவ விக்கரகத்துக்கு பக்தர்கள் தினந்தோறும் பூ, பழம், தேங்காய், மேளதாளங்கள், இசை, சப்தம், ஒலி, ஒளியுடன் வழிபட்டு செல்வார்கள்.

    ஆனால் இத்திருத்தலத்தில் ஈசனுடைய உருவ விக்கிரகத்துக்கு ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் ஆருத்திர தரிசனம் பக்தர்கள் வழிபட்டு செல்ல வேண்டும். எனவே உத்தரகோசமங்கை திருத்தலத்தில் சக்திக்குத்தான் அதிக சக்தியுண்டு என்று ஈசனுக்கே ஈஸ்வரி சாபம் விடுத்தாளாம். இந்த சாபத்தினால்தான் ஈசனுடைய உருவச்சிலை மரகத கல்லால் அமைந்துள்ளது என்கிறார்கள். இந்த சிலை ஒலி, ஒளி, சப்தம் தாங்காத தன்மை கொண்டது.

    • சிவபெருமான் 108 நடனங்கள் புரிந்திருக்கிறார்.
    • மரகத நடராஜர் சிலை மீது சந்தனம் பூசப்படும்.

    ஒரு தடவை திருப்பாற்கடலில் பள்ளி கொண்டிருந்த மகாவிஷ்ணு திடீரென மகிழ்ச்சியில் திளைக்கத் தொடங்கினார். அவர் முகத்தில் தென்பட்ட சந்தோஷமானது சித்திரை பவுர்ணமி நிலவை போன்று பளிச்சிட்டது.

    பரந்தாமனின் முகத்தில் இன்று என்ன இவ்வளவு பிரகாசம் என்று சிவன் கேட்டார். அதற்கு மகாவிஷ்ணு உத்தரகோசமங்கை திருவாதிரை நாளன்று ஆடிய தங்களுடைய திருத்தாண்டவமே எனது மகிழ்ச்சிக்கு காரணம் என்றார்.

    இதைக்கேட்டதும் திருமாலையே மகிழ்ச்சியில் திளைக்கச் செய்த அந்த நாட்டியத்தை, தான் ஆடிய நாட்டியத்தை தானே பார்த்து ரசிக்க வேண்டும் என்ற ஆசை சிவபெருமானுக்கு ஏற்பட்டது.

    எனவே ஈசன் பாதி மார்புக்குமேல் மனிதராகவும், மார்புக்குக் கீழ் பாதி பாம்பாகவும் மாறி பதஞ்சலி முனிவர் ஆனார். ஈசன் ஆடிய திருநடனத்தை ஈசன் கண்டுகளித்த இடம்தான் ஆதிசிதம்பரம் என்ற உத்திரகோச மங்கையாகும்.

    சிவபெருமான் 108 நடனங்கள் புரிந்திருக்கிறார். அவற்றுள் 18 நடனங்கள் ஈசன் தனியாக ஆடியதாகும். ஈஸ்வரியுடன் ஆடியது 36, விஷ்ணுவுடன் ஆடியது 9, முருகப்பெருமானுக்காக ஆடியது 3, தேவர்களுக்காக ஆடியது 42-ம் ஆகும்.

    ஆதிசிதம்பரம் என்று அழைக்கப்படுகின்ற உத்தரகோசமங்கையில் மட்டும் நான்கு தாண்டவம் முதல் தடவையாக ஆடி உள்ளார். அந்த 4 தாண்டவங்கள் வருமாறு:-

    ஆனந்த தாண்டவம், சந்தியத் தாண்டவம், சம்விஹார தாண்டவம், ஊர்த்துவத் தாண்டவம் ஆகும். அடுத்து சிவபெருமான் சிதம்பரத்தில் ஆடிய தாண்டவம் மூன்று. அவை (1) திரிபுரந்தர தாண்டவம் (2) புஜங்கத் தாண்டவம் (3) லலிதாத் தாண்டவம் ஆகும்.

    மார்கழி மாத திருவாதிரை தினத்தன்று ஈசனின் நடனத்தை காண்பது விசேஷம்.

    இந்த ஆருத்ரா தரிசனத்தை காண தேவலோக தேவர்கள், ஞானிகள், சித்தர்கள், முனிவர்கள் ஆகியோர் உத்தரகோசமங்கைக்கு வருவார்கள். இங்கு நடனம் புரியும் நடராஜனை தரிசனம் செய்தால், இப்பிறவியல் செய்த பாவங்கள் விலகி இன்பமான வாழ்வு அமைவதுடன், சுமங்கலிப் பெண்களுக்குச் சுமங்கலி பாக்கியம் கிடைக்கும்.

    கன்னி பெண்களுக்கு நல்ல இடத்தில் திருணம் கைகூடும். ஆடவர்களுக்கு மனதில் தைரியமும் உடல் பலமும் கூடும். ஆருத்ரா தரிசனம் பன்மடங்கு பலன்களையும் நலன்களையும், வளங்களையும் வாரி வழங்கும் வழிபாடாக உள்ளது.

    அவரது ஐந்தொழில்களை ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளால் ஆகியவற்றை உணர்த்துவதாக அமையும் பொருட்டே இத்திருத்தலத்தில் பஞ்சகிருத்திய உற்சவம் நடந்து வருகிறது.

    உத்தரகோசமங்கை ஆதிசிதம்பரம் என்றும் பூலோக கைலாயம் என்றும் பூலோக சொற்கம் என்றும் உலகத்தில் முதல் தோன்றிய கோவில் என்ற பெருமை உண்டு. முக்தி கிடைக்க வழி செய்யும்.

    மனதை கவரும் மரகத நடராஜர்

    உத்தரகோசமங்கையில் உள்ள நடராஜர் சிலை 5 அடி உயரம் கொண்ட பச்சை மரகத கல்லால் ஆனது. அவர் பெயர் ரத்தின சபாபதி. அவரையே ஆதிசிதம்பரேசர் என்று அழைக்கின்றனர்.

    ஒளிவெள்ளத்தில் இந்த சிலையைப் பார்க்கும்போது உயிர்ப்புடன் இருப்பது போல் தோன்றுவதை நாம் உணர முடியும். அபூர்வமான இந்த விக்கிரகத்தில் மனித உடலில் உள்ளது போல் பச்சை நரம்புகள் இருப்பதைக் காணலாம். எனவே இந்த சிலை உலக அதிசயத்தில் ஒன்றாக உள்ளது.

    இந்த நடராஜர் விக்ரகம் மத்தளம் முழங்க மரகதம் உடைபடும் என்பதால் ஒலி, ஒளி அதிர்வுகளை தாங்க இயலாத தன்மை கொண்டது. எனவே இந்த கோவிலில் மேளதாளங்கள் எதுவும் இசைக்கப்படுவதில்லை. எந்த விதத்திலும் விக்கிரம் சேதப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பு சாத்தப்பட்டு பாதுகாத்து வருகிறார்கள்.

    வருடத்திற்கு ஒரு நாள் அதாவது மார்கழி மாதம் பவுர்ணமி நாளில் திருவாதிரை நட்சத்திரத்தில் மட்டும் சந்தனக்காப்பு கலைக்கப்படும். அன்று முழுவதும் சந்தனக்காப்பு இல்லாத மரகதக்கல் மேனியால் ஆன நடராஜரை, பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.

    அதனைத்தொடர்ந்து நடராஜர் சிலைமீது சந்தனாதிதைலம் பூசப்பட்ட பின்னர் வெண்ணெய், சந்தனம், குங்குமம், மஞ்சள் திரவியம், தேன், பால், தயிர், இளநீர் உள்பட 32 வகையான அபிஷேகம் நடைபெறும்.

    இந்த நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்வார்கள்.

    மேலும் நடராஜர் மீது பூசப்பட்டிருக்கும் சந்தனம் மருத்துவ குணம் கொண்டது என்பதால் அதனை பக்தர்கள் போட்டி போட்டு வாங்கி செல்வார்கள். இதையடுத்து அன்று இரவு சரியாக 12 மணி அளவில் சிறப்பு பூசைகள் நடத்தப்பட்டு மீண்டும் மரகத நடராஜர் சிலை மீது சந்தனம் பூசப்படும்.

    திருவாதிரை அன்று கோவிலில் அதிக கூட்டம் இருக்கும் காலை பத்து மணியில் இருந்து மரகத நடராஜரைப்பார்க்கலாம். இரவு 3 மணிக்கு மேல் சந்தனம் பூசிவிடுவார்கள் பிறகு அடுத்த வருடம்தான் மரகத நடராஜரை தரிசிக்க முடியும்.

    அதனால் இரவு சாமி தரிசனம் செய்யும்போது வரிசை யில் அதிகநேரம் நிற்கவேண்டியதிருக்கும் கூட்டமும் கட்டுக்கடங்காமல் இருப்பதால் சில நேரம் அதிக தொலைவில் இருந்து வந்து இருப்பவர்கள் மரகத நடராஜரை பார்க்காமலே சந்தனம் பூசப்பட்ட நடராஜரை பார்த்து செல்ல வாய்ப்பு உண்டு.

    இந்த ஏமாற்றத்தை தவிர்க்க காலையில் வந்துவிட்டால் கூட்டம் சற்று குறைவாக இருக்கும் நேரத்தில் மரகதநடராஜர் தரிசனத்தை எவ்வித சிரமமும் இன்றி தரிசித்து விட்டு செல்லலாம். வயதானவர்கள் குழந்தைகள் வைத்திருப்பவர்கள் காலையில் வந்து விடுவது சிறந்தது.

    முதல் பூஜை அம்பிகைக்கே....

    நடராஜர் சன்னத்திக்கு பின்புறம் பிரகாரத்தில் ஒரு அம்பிகை சன்னதி இருக்கிறது. ஆருத்ரா தரிசனத்திற்கு முதல் நாளில் இவளுக்கு பிட்டு, களி நைவேத்யம் படைத்து, மஞ்சள் பயிறு சாத்தி விசேஷ பூஜை நடக்கிறது. அதன் பின்பே நடராஜருக்கு பூஜை செய்யப்படுகிறது. இந்த அம்பிகை, திருவாதிரை விரதம் இருந்து சிவனருள் பெற்றார். இதன் அடிப்படையில் இவளுக்கு முதலில் பூஜை செய்யப்பட்டு அதன் பின்பு சிவனுக்கு பூஜை செய்வார்கள்.

    மங்களம் உண்டாகும்

    திருத்தலத்தை மிதித்தாலே மங்களம் யாவும் கைகூடிவரும் என்பதால் இங்கு எழுந்தருளி உள்ள இறைவர் இறைவிக்கு மங்களநாதர், மங்கள நாயகி எனத்திருமங்கள் வழங்குகின்றன.

    சிவபெருமானை வழிபட்ட ஆயிரம் சிவவேதியர்களும் ஒவ்வொரு லிங்க வடிவில் இறைவனோடு ஒன்றினர். அதுவே இங்கு சஹஸ்ரலிங்கமாக தரிசனம் தருகின்றது.

    ×