search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இடைத்தேர்தல் ரத்து"

    ஜனவரி 28ந் தேதி நடப்பதாக இருந்த திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது ஏன்? என்பது தொடர்பாக விரிவான விபரங்கள் வெளியாகியுள்ளது. #ThiruvarurByElection #ElectionCommission

    சென்னை:

    கருணாநிதி மரணம் காரணமாக 7-8-2018 முதல் திருவாரூர் சட்டசபை தொகுதி காலி இடமாக உள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி காலியாக உள்ள தொகுதிக்கு 6 மாதங்களுக்குள் அதாவது 6-2-2019க்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

    அதன் அடிப்படையில் தேர்தல் ஆணையம் ஜனவரி 3-ந்தேதி அறிவிக்கை வெளியிட்டது. 28-ந்தேதி ஓட்டுப்பதிவு நடத்துவதற்கு ஏற்ப தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டது.

    தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கடந்த 3-12-2018 அன்று தேர்தல் ஆணையத்துக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார். அதில் அவர் கஜா புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கடும் பேரிழவு ஏற்பட்டு இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார். விவசாய பயிர்கள், தோட்டக்கலை பயிர்கள் அழிந்ததோடு 6 லட்சம் வீடுகள், 1½ லட்சம் மின் கம்பங்கள் சேதம் அடைந்து இருப்பதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

    கஜா புயல் பாதித்த 12 மாவட்டங்களில் திருவாரூர் மாவட்டமும் ஒன்று என்றும், அங்கு நிவாரணப் பணிகள் முடிந்து முழுமையான இயல்பு நிலை திரும்ப குறைந்தது 3 மாதங்கள் ஆகும் என்றும் கூறி இருந்தார். எனவே திருவாரூர் தொகுதிக்கு 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு முன்பு இடைத்தேர்தல் நடத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டு இருந்தார்.

    மேலும் தலைமைச் செயலாளர் தனது கடிதத்தில், காலி இடமாக உள்ள மேலும் 18 தொகுதிகளுக்கு ஏப்ரல் மாதத்திற்கு முன்பு இடைத்தேர்தல் நடத்த வேண்டாம் என்று கோரிக்கை விடுத்து இருந்தார். தமிழக அரசு தலைமை செயலாளரின் இந்த கடிதத்தை மத்திய உள்துறைக்கு தேர்தல் ஆணையம் அனுப்பி கருத்து கேட்டது.

    அதை ஏற்று கடந்த 31-12-2018 அன்று மத்திய உள்துறை அமைச்சகம் பதில் அளித்து இருந்தது. அதில், “தமிழ்நாட்டில் நவம்பர் 15-ந்தேதி தாக்கிய கஜா புயலில் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. அந்த பகுதிகளில் மாநில அரசு மூலம் நிவாரணப் பணிகள் நடந்து வருகிறது” என்று கூறப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் கடந்த 2-1-2019 அன்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் தேர்தல் ஆணையத்துக்கு இ.மெயில் மூலம் ஒரு வேண்டுகோள் விடுத்து இருந்தார். திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்டு இருந்தார். மறுநாள் 3-1-2019 அன்று அவர் தேர்தல் கமி‌ஷனரை நேரில் சந்தித்து இது தொடர்பாக மனு அளித்தார்.

    மேலும் கஜா புயல் தாக்குதல் காரணமாக மாநில அரசு அதிகாரிகள் அனைவரும் நிவாரணப் பணிகளில் தீவிரமாக உள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் தற்காலிகமாக மற்றொரு மாவட்டத்துக்கு இடம் பெயர்ந்து உள்ளனர். இதுபற்றி தலைமை தேர்தல் ஆணையம் தமிழக தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்டது. சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு செய்யலாம் என்று கூறி இருந்தார்.

     


    இதையடுத்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் திருவாரூரில் தேர்தல் நடத்த உகந்த சூழ்நிலை உள்ளதா? என்று கேட்கப்பட்டது. அதன் அடிப்படையில் மாவட்ட தேர்தல் அதிகாரி திருவாரூரில் கடந்த 5-1-2019 அன்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை அழைத்து கருத்து கேட்டார்.

    பா.ஜனதா, காங்கிரஸ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, தேசியவாத காங்கிரஸ், அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க. ஆகியவை உள்பட பல்வேறு கட்சிகள் திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டன. கஜா புயல் நிவாரப்பணிகள் நடந்து வருவதால் இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று இந்த கட்சிகள் கோரிக்கை விடுத்து இருந்தன.

    இது தொடர்பாக கடந்த 6-1-2019 அன்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கமான அறிக்கை ஒன்றை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி இருந்தார். அதில் கூறி இருந்ததாவது:-

    1. கஜா புயலால் இடம் பெயர்ந்துள்ள பட்டியலை தயாரிக்க மாநில நிர்வாகத்துக்கு கூடுதல் அவகாசம்.

    2. கஜா புயல் நிவாரணப் பணிகள் பாதிதான் முடிந்து உள்ளன. முழுமையாக முடிக்க அவகாசம் வேண்டும். நிவாரணப் பணிகளில் உள்ள அதிகாரிகள்தான் தேர்தல் பணிகளை செய்ய வேண்டி உள்ளது.

    3. தமிழ்நாட்டின் முக்கிய பண்டிகையான பொங்கல் திருநாள் தேர்தல் சமயத்தில் வருகிறது.

    4. டெல்டா மாவட்டங்களில் சம்பா அறுவடை நடைபெற உள்ளது. அந்த சமயத்தில் நேரடி நெல் கொள்முதல் மையங்கள் அமைக்கப்பட வேண்டி உள்ளது. அந்த சமயத்தில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீற வாய்ப்பு உள்ளது.

    5. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னமும் முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.

    6. இந்த சூழ்நிலையில் வியாபாரிகளும் இடைத்தேர்தல் நடத்தப்படுவதை விரும்பவில்லை.

    7. தமிழ்நாட்டில் பள்ளிகளில் பொதுத்தேர்தவு 2 வாரங்களில் நடைபெற உள்ளது. இந்த சமயத்தில் ஆசிரியர்களை தேர்தல் அதிகாரிகளாக பணியாற்ற வைப்பதில் இடையூறு உள்ளது.

    8. இத்தகைய சூழ்நிலையில் பொதுமக்கள் தேர்தல் நடைமுறைகளில் ஆர்வமுடன் தீவிரமாக பங்கேற்கமாட்டார்கள்.

    9. மேலும் திருவாரூர் இடைத்தேர்தல் குறித்து அனைத்து கட்சிகளிடமும் கருத்து கேட்டபோது அனைத்து கட்சிகளும் தேர்தலை நடத்த வேண்டாம் என்றும் ஒத்திவைக்க கோரியும் கருத்து தெரிவித்து உள்ளன.

    இவ்வாறு தமிழக தேர்தல் அதிகாரியின் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

    கஜா புயலால் திருவாரூர் மாவட்டத்தில் நிவாரணப் பணிகள் செய்ய வேண்டி இருப்பதை மாவட்ட கலெக் டர் மூலம் தெரிய வந்துள்ளது. இதை கருத்தில் கொண்டு தற்போது திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தலை சுமூகமாக நடத்த முடியாது என்ற முடிவுக்கு தேர்தல் ஆணையம் வந்தது.

    எனவே மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் -1951 பிரிவு 150, 30, 56 மற்றும் அரசியல் சட்டப்பிரிவு 326, பொது காரணங்கள் சட்டப்பிரிவு 21 ஆகியவற்றின் அடிப்படையில் திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுகிறது. இதன் விளைவாக திருவாரூர் தொகுதி மாவட்ட தேர்தல் அதிகாரி இதுவரை மேற்கொண்டு இருந்த தேர்தல் தொடர்பான அனைத்து பணிகளும், நடவடிக்கைகளும் செல்லாது என்று அறிவிக்கப்படுகிறது.

    தமிழக அரசின் கடிதம் மற்றும் கட்சிகளின் கருத்து அடிப்படையில் திருவாரூர் தொகுதி தேர்தல் ரத்து ஆகிறது. திருவாரூர் தொகுதியில் சுமூகமாக, நியாயமாக, அமைதியாக தேர்தல் நடத்த உகந்த சூழ்நிலை உருவான பிறகு மீண்டும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையர்களின் உத்தரவில் தெரிவிக்கபட்டுள்ளது.

    திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது குறித்து தமிழக அரசியல் தலைவர்கள் தெரிவித்த கருத்துக்களை விரிவாக பார்க்கலாம். #TiruvarurByElection
    சென்னை:

    திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் வருகிற 28-ந் தேதி நடைபெற இருந்த நிலையில், இடைத்தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    கஜா புயல் நிவாரணப் பணிகள் முடியாததால் திருவாரூரில் தேர்தலை ஒத்திவைக்க கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் இன்று காலை அறிவித்தது.

    இந்த அறிவிப்பு குறித்து தமிழக அரசியல் தலைவர்கள் கூறியதாவது:

    திருவாரூர் தேர்தலை இன்முகத்துடன் வரவேற்க தயாராக இருந்த நிலையில் ரத்தாகி விட்டது. தேர்தல் ரத்து செய்யப்பட்டது ஏமாற்றமளிக்கிறது என்று தமிழக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார்.

    மாவட்ட தேர்தல் அதிகாரி நடத்திய கூட்டத்தில் அனைத்துக்கட்சிகளும் தேர்தலை எதிர்த்தன. கஜா புயல் நிவாரணப் பணிகள் முடியாததால் திருவாரூரில் தேர்தலை ஒத்திவைக்க கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. பாஜக உள்நோக்கத்துடன் இடைத்தேர்தலை அணுகியது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறினார்.

    திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தலை ரத்து செய்தது சரியான நடவடிக்கையே. எனது கணிப்பின் அடிப்படையில் திருவாரூர் தேர்தல் நடக்கலாம், நடக்காமலும் போகலாம் என்றேன். புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தற்போது தேவை நிவாரணம்தான் தேர்தல் அல்ல என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறினார்.

    முதல்வரை பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சந்தித்தபோதே தேர்தல் ரத்து முடிவாகிவிட்டது. திருவாரூர் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டது வரவேற்கத்தக்கது என்று  காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கூறினார்.

    இதேபோல் திருவாரூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது தொடர்பான அறிவிப்பை விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    தேர்தல் ரத்து அறிவிப்பு அதிர்ச்சியளிப்பதாக திருவாரூர் தொகுதியில் அமமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எஸ். காமராஜ்  கூறினார். இடைத்தேர்தல் திட்டமிட்டு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

    அதிமுக, பாஜக நடவடிக்கைகளை வைத்தே தேர்தல் ரத்தாகும் என முன்கூட்டியே கணிக்க முடிந்ததாக தி.மு.க. வேட்பாளரான பூண்டி கலைவாணன் கருத்து தெரிவித்துள்ளார்.

    மத்திய - மாநில அரசுகள் திட்டமிட்டு தேர்தலை ரத்து செய்துள்ளன என்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சாகுல் அமீது கூறினார்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    மேலும் பல்வேறு அரசியல் பிரமுகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  #TiruvarurByElection 
    திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் வருகிற 28-ந் தேதி நடைபெற இருந்த நிலையில், இடைத்தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் இன்று உத்தரவிட்டுள்ளது. #Thiruvarur #ThiruvarurByElection #ElectionCommission
    திருவாரூர்:

    திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் பணிகளை நிறுத்திவைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    தமிழக சட்டசபைக்கு கடந்த 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலின்போது திருவாரூர் தொகுதியில் முன்னாள் முதல்- அமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி இரண்டாவது தடவையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    அந்த தேர்தலில் அவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளரை விட கூடுதலாக 68 ஆயிரத்து 316 வாக்குகள் பெற்றார். திருவாரூர் தொகுதியில் முதன் முதலாக 2011-ம் ஆண்டு களம் இறங்கிய போதும் அவர் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந்தேதி உடல் நலக்குறைவு காரணமாக கருணாநிதி மரணம் அடைந்தார். இதைத் தொடர்ந்து திருவாரூர் தொகுதி காலி இடமாக அறிவிக்கப்பட்டது. சட்ட விதிகளின்படி திருவாரூர் தொகுதியில் பிப்ரவரி 5-ந்தேதிக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதால் தலைமை தேர்தல் ஆணையம் இதுபற்றி ஆலோசித்து வந்தது.

    தமிழ்நாட்டில் திருவாரூர் தொகுதி தவிர திருப்பரங்குன்றம் மற்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளும் காலியாக இருப்பதால் 20 தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திருப்பரங்குன்றம் தொகுதி தொடர்பான வழக்கு கோர்ட்டில் இருப்பதாலும், தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் அப்பீல் செய்ய அவகாசம் இருப்பதாலும் அந்த 19 தொகுதிகளின் தேர்தலை சற்று தாமதித்து நடத்தலாம் என்று தலைமை தேர்தல் கமி‌ஷன் முடிவு செய்தது.

    இதையடுத்து திருவாரூர் தொகுதிக்கு மட்டும் இடைத்தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி வருகிற 28-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருந்த நிலையில், திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் பணிகளை நிறுத்திவைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இடைத்தேர்தல் பணிகளை நிறுத்துமாறு தமிழக தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

    கஜாபுயல் நிவாரணப் பணிகள் முடியாததால் திருவாரூரில் தேர்தலை ஒத்திவைக்க கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
    திருவாரூர் தேர்தலுக்கு எதிரான மனுக்கள் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்நிலையில் இந்த அறிவிப்பு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.   #Thiruvarur #ThiruvarurByElection #ElectionCommission
    ×