search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இடைத்தரகர்"

    • வெளியூரில் தயாரிக்கப்பட்டு விற்கப்படும் போலி பட்டு சேலைகளை வாங்கி, பெரும்பாலானோர் ஏமாந்து வருகிறார்கள்.
    • பட்டுச்சேலை விற்பனை இடைத்தரகர்களை ஒடுக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    காஞ்சிபுரம் பட்டு சேலை உலக புகழ்பெற்றது. இதற்கு கடந்த 2005-06-ம் ஆண்டு மத்திய அரசால் புவிசார்குறியீடு வழங்கப்பட்டது. திருமணம் உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகள் காஞ்சிபுரம் பட்டுச்சேலை இல்லாமல் முழுமை அடையாது. அந்த அளவிற்கு காஞ்சிபுரம் சேலை சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது.

    காஞ்சிபுரம் புடவையின் வலிமையும் மகத்துவமும் உலகெங்கிலும் உள்ள பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும்.

    இங்கு உற்பத்தி செய்யப்படும் பட்டுச் சேலைகளை வாங்க தமிழகம் மட்டும் அல்லாமல் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர்.

    தரமான அசல் பட்டுச் சேலைகளை வாங்க வேண்டும் என விரும்பி வரும் வாடிக்கையாளர்கள் தற்போது ஏமாற்றத்துக்கு உள்ளாகின்றனர். காஞ்சிபுரம் ஒரிஜினல் பட்டு சேலைகளை கண்டறிய முடியாமல் வெளியூரில் தயாரிக்கப்பட்டு விற்கப்படும் போலி பட்டு சேலைகளை வாங்கி, பெரும்பாலானோர் ஏமாந்து வருகிறார்கள்.

    மற்ற மாவட்டங்களில் நெசவு செய்யப்படும் சேலைகள், காஞ்சிபுரத்தில் விற்கப்படுவதாகவும் இந்த பட்டு சேலைகள், ஒரே தோற்றமுடையதாக நெசவு செய்யப்படுகின்றன. இதனால்,போலிகளை கண்டறிவதில், வெளியூர்களில் இருந்து வருபவர்கள் சிரமம் ஏற்படுகிறது என்றும் பட்டு உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.

    காஞ்சிபுரத்தில் 10-க்கும் மேற்பட்ட பட்டு விற்பனை கூட்டுறவு சங்கங்கள் கைத்தறி துணி நூல்துறையின் கீழ் செயல்பட்டு வருகின்றன.

    இங்கு விற்பனை செய்யப்படும் பட்டுச் சேலைகளில் அசல் ஜரிகையைக் கொண்டு நெசவாளர்கள் தரமாக நெய்து வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்கின்றனர். ஆனால், இதைத் தடுக்கும் வகையில் சில தனியார் பட்டு விற்பனைக் கடைகளில் ஒரிஜினல் போன்று வடிவமைப்பைக் காட்டி தரத்தைக் குறைத்து பட்டுகள் விற்பனை செய்து விடுகின்றனர்.

    மேலும் காஞ்சிபுரத்துக்கு வெளிமாநிலங்களில் இருந்து வரக்கூடிய வாடிக்கையாளர்கள் வாகன பதிவு எண்ணை குறி வைத்து இடைத்தரகர்கள் சிலர் வாகனங்களில் பின் தொடர்ந்து டிரைவர்களிடம் பேச்சு கொடுத்து அவர்களை தங்களுக்கு கமிஷன் கொடுக்கும் கடைகளுக்கு திசை திருப்பி விடுகின்றனர்.

    அங்கும் அசல் காஞ்சிபுரம் சேலைகள் விற்கப்படுவதில்லை என்பதால் போலியான பட்டுகளை வாங்கி பொதுமக்கள் ஏமாந்து செல்லும் நிலை தொடர்ந்து நடந்து வருகிறது.

    கடந்த சில மாதங்களாக இந்த இடைத்தரகர்களின் அட்டகாசங்கள் அதிரித்து உள்ளது. இதனால் காஞ்சிபுரத்துக்கு நம்பி வரும் பொதுமக்கள் ஏமாற்றம் அடையும் நிலை காணப்படுகிறது.

    இடைத்தரகர்களால் காஞ்சிபுரம் பட்டின் தரமும் மதிப்பும் சிதைத்து வருகிறது.

    இதனை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காஞ்சிபட்டு நெசவாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இது குறித்து அண்ணா, முருகன், காமாட்சியம்மன் உள்ளிட்ட பட்டு கூட்டுறவு சங்க நெசவாளர்கள் கூறியதாவது:-

    காஞ்சீபுரத்தில் பாரம்பரியம் மாறாமல் பல ஆண்டுகளாக பட்டுச் சேலை நெய்து தந்து வருகிறோம். தற்போது அறிஞர் அண்ணா, முருகன், காமாட்சியம்மன், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு பட்டு கூட்டுறவு சங்கங்கள் அசல் ஜரிகையைக் கொண்டு, தரமான பட்டுச் சேலைகளுக்கு வடிவமைப்பு தந்து, அவற்றை சிறந்த முறையில் வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ப கொடுக்கிறோம்.

    மேலும் தரத்துக்கேற்ப அரசால் விலை நிர்ணையிக்கப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு திருப்தியளிக்கும் வகையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் இடைத்தரகர்களால் நீண்ட தொலைவில் இருந்து காஞ்சிபுரத்துக்கு பட்டு சேலை வாங்க வரும் மக்கள் அசல் காஞ்சிபட்டு என நம்பி போலி பட்டு சேலைகளை வாங்கி செல்கின்றனர்.

    எனவே காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் பட்டு சேலை வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு போதிய அளவு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விளம்பர பதாகைகள் அமைக்க வேண்டும். இதேபோல் இடைத்தரகர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதுவே காஞ்சிபுரம் பட்டு கைத்தறி நெசவாளர்களின் பிரதான எதிர்பார்ப்பாக உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    கைத்தறி கூட்டுறவு சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

    காஞ்சிபுரம் பட்டு சேலை என கூறி, வெளியூர் சேலைகளை விற்கின்றனர். அவை பட்டு சேலையே கிடையாது. வெளியூரில் இருந்து வாங்கி வந்த, சாதாரண சேலைகளை ரூ.10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை, மோசடியாக விற்கின்றனர். இதை கண்காணிக்க வேண்டிய கைத்தறி துறை அதிகாரிகள் வேடிக்கை பார்க்கின்றனர்.

    கைத்தறி கூட்டுறவு சங்க கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களை திசை திருப்பி, புரோக்கர்கள் பலர் வலுக்கட்டாயமாக அழைத்து செல்கின்றனர். அவற்றை தட்டிக் கேட்கும் சங்க ஊழியர்களை, புரோக்கர்கள் ஒன்று சேர்ந்து மிரட்டுகிறார்கள். சில சமயங்களில் தாக்குகின்றனர்.

    காஞ்சிபுரத்தில் பட்டுச்சேலை விற்பனை இடைத்தரகர்களை ஒடுக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்தில் தேங்காய் சீசன் நிறைவடைந்த நிலையில் வரத்து குறைந்துள்ளது.
    • பண்டிகை நாட்கள் வரும் சூழலில் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்டது.

    உடுமலை :

    உடுமலை,பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், தென்னை விவசாயம் பிரதானமாக உள்ளது. தேங்காய், கொப்பரை விற்பனையில் கிடைக்கும் பணத்தை வைத்து விவசாயிகள், வாழ்க்கையை நகர்த்துகின்றனர்.தென்னை விவசாயத்துக்கான இடுபொருட்கள் விலை, ஆட்கள் கூலி அனைத்தும் உயர்ந்துள்ள சூழலில் கடந்த, 15 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு தேங்காய் விலை சரிந்தது விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

    தமிழகத்தில் கொப்பரை கொள்முதல் மையங்கள் திறக்கப்பட்டு மத்திய அரசு நிர்ணயித்த ஆதார விலையில், கிலோ 105.90 ரூபாய்க்கு கடந்த மாதம் வரை கொள்முதல் செய்யப்பட்டது.ஆனால் இதுவும் பெயரளவுக்கு மட்டுமே நடைபெற்றன. ஒரு விவசாயிடம் இருந்து ஒரு முறை மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது.மேலும், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ததற்கு பணம் பட்டுவாடா செய்யவும் காலதாமதம் ஏற்பட்டது. கொள்முதல் நாட்கள் நீட்டிக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில், அரசு அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை.இதுபோன்ற பிரச்னைகளால் கொள்முதல் செய்தும் விவசாயிகளுக்கு முழு பலன் கிடைக்கவில்லை.

    தமிழகத்தில் தேங்காய் சீசன் நிறைவடைந்த நிலையில் வரத்து குறைந்துள்ளது. தற்போது தொடர்ந்து பண்டிகை நாட்கள் வரும் சூழலில் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் அதற்கு நேர்மாறாக விலை குறைந்து வருவது விவசாயிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. வியாபாரிகள், பெருநிறுவனங்கள், இடைத்தரகர்கள் கைகோர்த்து சிண்டிக்கேட் அமைத்து விலையை குறைப்பதாகவிவசாயிகள் கூறுகின்றனர்.

    காங்கேயம் மார்க்கெட் நிலவரப்படி கடந்த வாரம், ஒரு டன் பச்சை காய் 24,500 ரூபாயாக இருந்தது. தற்போது 23 ஆயிரமாகவும், 26 ஆயிரம் ரூபாயாக இருந்த கருப்பு காய் 25 ஆயிரமாகவும் குறைந்துள்ளது.கடந்த சில வாரமாக ஒரு டின் (15 கிலோ) தேங்காய் எண்ணெய் 1,850 ரூபாயாக இருந்தது. நடப்பு வாரம் 1,770 ரூபாயாகவும் குறைந்துள்ளது. தேங்காய் பவுடர் கிலோ, 125 ரூபாயாக குறைந்துள்ளது. இது விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

    தமிழ்நாடு தென்னை உற்பத்தியாளர் சங்க மாநில பிரதிநிதி தங்கவேலு கூறியதாவது:- பருவமழை தொடர்ந்து பெய்ததால் கொப்பரை உற்பத்தி முற்றிலும் பாதிக்கப்பட்டது. தற்போது சீசன் நிறைவடையும் நிலையில் மார்க்கெட்டில் 50 சதவீதம் தேங்காய் வரத்து மட்டும் உள்ளது.ஆனால் கடந்த, 15 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு தேங்காய் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. சீசன் இல்லாத சூழலில், வரத்து குறைந்து விலை உயர்வது வாடிக்கை. ஆனால், 'சிண்டிக்கேட்' அமைத்து விலையை குறைக்கின்றனர்.அதே நேரத்தில் நுகர்வோருக்கு தேங்காய் எண்ணெய் விலை குறையவில்லை. விவசாயிகளை நசுக்கும் செயலாக இது கருதப்படுகிறது. ஆயில் நிறுவனங்கள், குறைந்த விலைக்கு கொள்முதல் செய்து கொள்ளை லாபம் பார்க்க திட்டமிடுகின்றன.கடந்தாண்டு மார்க்கெட்டில் 95 - 100 ரூபாய் வரை விலை இருந்தது. அப்போதும், சிண்டிகேட்' அமைத்து 80 ரூபாயாக குறைத்தனர். ஆனால், வரத்து குறைவால் விலை மீண்டும் உயர்ந்தது. அதே நிலை மீண்டும் வரும் என எதிர்பார்க்கிறோம்.தற்போது, ஓணம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, தீபாவளி என அடுத்தடுத்து பண்டிகைகள் வருகின்றன. இதனால் விலை உயரும் வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×