என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Youth Arrsted"

    • வாலிபர் ஓட்டலில் வேலை பார்த்தபோது சனிக்கிழமை தோறும் விடுமுறை எடுத்து வந்துள்ளான்.
    • கைதான வாலிபரிடம் இன்று 2-வது நாளாக போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வடமாநில வாலிபரை 15 தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் சூலூர்பேட்டை ரெயில் நிலையத்தில் வடமாநில வாலிபரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

    அந்த வாலிபரை ரகசிய இடத்திற்கு கொண்டு சென்று போலீசார் விசாரணை நடத்தினார்கள். அவர் சூலூர்பேட்டையில் உள்ள ஒரு தாபா ஓட்டலில் வேலை செய்து வந்தது தெரியவந்தது.

    அந்த வாலிபர் ஓட்டலில் வேலை பார்த்தபோது சனிக்கிழமை தோறும் விடுமுறை எடுத்து வந்துள்ளான். கடந்த 12-ந்தேதி சனிக்கிழமையும் விடுமுறை எடுத்துவிட்டு சூலூர்பேட்டையில் இருந்து மின்சார ரெயிலில் ஏறி ஆரம்பாக்கம் வந்துள்ளான். அப்போது அவர் கஞ்சா போதையில் இருந்துள்ளான்.

    அந்த நேரத்தில் தான் அவன் சிறுமியை பின்தொடர்ந்து சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளான். மேலும் அவன், கஞ்சா போதையில் ஆரம்பாக்கம், அக்கம்மா பேட்டை, தடா பகுதிகளில் பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது.

    இதற்கிடையே ஆரம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் நேற்று பொதுமக்கள் குவிந்ததால் கைதான வாலிபரை போலீசார் நேற்று கவரப்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு விடிய விடிய அவனிடம் விசாரணை நடத்தப்பட்டது. இன்று 2-வது நாளாக அவனிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். கும்மிடிப்பூண்டி போலீஸ் டி.எஸ்.பி. ஜெயஸ்ரீ, ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி. சாந்தி, திருவள்ளூர் டி.எஸ்.பி. தமிழரசி, திருத்தணி டி.எஸ்.பி. கந்தசாமி ஆகியோர் இன்று காலை கவரப்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு சென்றனர். அவர்கள் கைதான வாலிபரிடம் இன்று 2-வது நாளாக விசாரணை நடத்தினார்கள்.

    அவனிடம் விசாரணை நடத்தி முடித்த நிலையில் அவனை கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் முடிவு செய்தனர்.

    கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்கு முன்பு அந்த வாலிபருக்கு மருத்துவ பரிசோதனை நடத்த போலீசார் முடிவு செய்தனர். இதையடுத்து அவனை வேனில் ஏற்றி மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து சென்றனர். மருத்துவ பரிசோதனை முடிந்ததும் அவனை கோர்ட்டில் ஆஜர்படுத்துகிறார்கள்.

    மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து செல்லும்போது அந்த வாலிபரை பார்ப்பதற்காக கவரப்பேட்டை போலீஸ் நிலையம் முன்பு ஏராளமான பொதுமக்கள் திரண்டு இருந்தனர். அவர்கள் வாலிபரை தாக்கலாம் என்று கருதி பொதுமக்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். அதன் பிறகே வட மாநில வாலிபரை மருத்துவ பரிசோதனைக்காக போலீசார் அழைத்து சென்றனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக தாபா ஓட்டல் உரிமையாளரிடமும் போலீசார் விசாரணை நடத்துகிறார்கள். சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்துள்ள நிலையில் அவருடைய புகைப்படத்தையோ, பெயர் உள்ளிட்ட விவரங்களையோ போலீசார் வெளியிடவில்லை. வழக்கு விசாரணை பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக பெயர் மற்றும் விவரங்களை போலீசார் வெளியிட மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆனாலும் அந்த வாலிபரின் புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்கள் மூலம் பரவி வருகிறது. அது அந்த வாலிபர்தானா என்பதை போலீசார் உறுதிப்படுத்தவில்லை.

    இந்த நிலையில் இன்று ஆரம்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு பொதுமக்கள் வந்து போராட்டம் நடத்தக்கூடும் என்பதால் அங்கு இன்று காலையிலேயே 150-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    • சாட்டிலைட் போனின் சிக்னல் பாம்பன் அக்காள்மடம் பகுதியில் கிடைத்தது.
    • இலங்கையை சேர்ந்தவரின் சாட்டிலைட் போன் எப்படி கிடைத்தது? என்று ஜான்பாலிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் குந்துகால் பகுதியில் ஒருவர் அனுமதியின்றி சார்டிலைட் போனை பயன்படுத்தி வருவதாக சென்னை டி.ஜி.பி. அலுவலகத்துக்கு ரகசிய தகவல் வந்தது. இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    பாம்பன் பகுதியில் சார்டிலைட் போனை பயன்படுத்திவரும் நபரை கண்டுபிடித்து கைது செய்ய அவர் உத்தரவிட்டார். போலீஸ் சூப்பிரண்டு உத்தரவை அடுத்து சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் பாம்பன் குந்துகால் பகுதியில் சோதனை நடத்தினர்.

    மேலும் சாட்டிலைட் போன் செயல்பாடு குறித்து கண்காணித்தனர். அப்போது சாட்டிலைட் போனின் சிக்னல் பாம்பன் அக்காள்மடம் பகுதியில் கிடைத்தது. அதனடிப்படையில் அந்த பகுதியில் போலீசார் சோதனை நடத்தினார்கள்.

    அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமாக நின்ற ஒரு வாலிபரை பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர், பாம்பன் புயல் காப்பகம் பகுதியை சேர்ந்த ஜான்பால்(வயது25) என்பதும், அவர் வைத்திருந்த சாட்டிலைட் இலங்கையை சேர்ந்த சுந்தரசெல்வம் என்பவருடையது என்பதும் தெரியவந்தது.

    இலங்கையை சேர்ந்தவரின் சாட்டிலைட் போன் எப்படி கிடைத்தது? என்று ஜான்பாலிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது பாம்பன் குந்துகால் பகுதியில் கிடந்த ஒரு பையில் ஒருவரது இலங்கை குடியுரிமை அடையாள அட்டை, இலங்கை பணம் ரூ.10ஆயிரம் மற்றும் சார்டிலைட் போன் ஆகியவை இருந்ததாகவும், அதனை தான் வைத்துக்கொண்டதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

    சார்டிலைட் போனை சிறப்பு அனுமதி பெற்றவர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். மற்ற யாரும் பயன்படுத்த அனுமதி கிடையாது. இருந்தபோதிலும் சட்டவிரோதமாக கடத்தல்காரர்கள் மற்றும் பயங்கரவாதிகள் பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் ஜான்பால் சாட்டிலைட் போனுடன் சிக்கியிருக்கிறார்.

    அவர் கூறியபடி கீழே கிடந்த பையில் இருந்துதான் சாட்டிலைட் போன் உள்ளிட்டவைகளை எடுத்தாரா? அல்லது அவருக்கு ஏதேனும் பயங்கரவாத கும்பலுடன் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் ஜான்பாலிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது.

    முதற்கட்டமாக அனுமதியின்றி சார்டிலைட் போனை பயன்படுத்திய குற்றத்துக்காக ஜான்பாலை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் சாட்டிலைட் போன் உரிமையாளரான இலங்கையை சேர்ந்த சுந்தர செல்வத்துக்கும், ஜால்பாலுக்கும் தொடர்பு உள்ளதா? அதனை மறைப்பதற்காக கீழே கிடந்தது என்று கூறுகிறாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இலங்கையை சேர்ந்தவரின் சார்டிலைட் போனுடன் பாம்பன் வாலிபர் சிக்கியுள்ள சம்பவம் ராமேசுவரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×