search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Union Govt"

    • பெங்களூரு-சென்னை விரைவு சாலையில் சுங்கச்சாவடி அமைக்கப்படும்.
    • மகாபலிபுரம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் 2 சுங்கச்சாவடிகள்.

    அடுத்த 2 ஆண்டுகளில் தமிழ்நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் மேலும் 20 புதிய சுங்கச்சாவடிகளை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    இது தொடர்பான விவரங்களையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில் குறிப்பிட்டப்படி, பெங்களூரு-சென்னை விரைவு சாலையில் ஸ்ரீபெரும்புதூர், மொளசூர், கோவிந்தவாடி, பாணாவரம், மேல்பாடி, வசந்தபுரம் இடங்களிலும் சுங்கச்சாவடி அமைக்கப்படும்.

    விழுப்புரம்-நாகை தேசிய நெடுஞ்சாலை: கெங்கராம்பாளையம்(விழுப்புரம்), கொத்தட்டை(கடலூர்), ஆக்கூர் பண்டாரவாடை (மயிலாடுதுறை), விக்கிரவாண்டி-நாகை தேசிய நெடுஞ்சாலையில் 3 சுங்கச்சாவடிகள், ஓசூர்-தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் 3 சுங்கச்சாவடிகள், சித்தூர்-தச்சூர் விரைவு சாலையில் 3 சுங்கச்சாவடிகள், மகாபலிபுரம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் 2 சுங்கச்சாவடிகள் என மொத்தம் 20 சுங்கச்சாவடிகளை அடுத்த 2 ஆண்டுகளில் அமைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது

    • இந்திய குடிமைப் பணிகளில் 1472 காலிப்பணியிடங்கள் உள்ளதாக மத்திய இணை மந்திரி தெரிவித்தார்.
    • மத்திய அரசு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    புதுடெல்லி:

    மத்திய அரசுப் பணிகளில் 9.79 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. மக்களவையில் காலிப்பணியிடங்கள் தொடர்பான கேள்விக்கு மத்திய பணியாளர் துறை இணை மந்திரி ஜித்தேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக இந்த பதிலை அளித்துள்ளார்.

    மத்திய இணை மந்திரி ஜித்தேந்திர சிங் தனது பதிலில் மேலும் கூறுகையில், '2021 மார்ச் செலவினத் துறையின் ஊதிய ஆய்வு அறிக்கையின்படி மத்திய அரசுக்கு கீழ் உள்ள பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் 9 லட்சத்து 79 ஆயிரத்து 327 பணியிடங்கள் காலியாக உள்ளன. மத்திய அரசு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது. அனைத்து துறைகளிலும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மற்றொரு கேள்விக்கு பதிலளித்த்த ஜிதேந்திர சிங், இந்திய குடிமைப் பணிகளில் 1472 காலிப்பணியிடங்கள் உள்ளது என தெரிவித்தார்.

    • பொது விநியோக திட்டத்தை முழுமையாக செயல்படுத்த அனைத்து ஆதரவும் வழங்கப்படும்.
    • ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் கீழ் மாநிலங்களின் முயற்சி பாராட்டத்தக்கது.

    மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை சார்பில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த உணவுத்துறை செயலாளர்கள் மாநாடு டெல்லியில் நடைபெற்றது. ஒரு நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை செயல்படுத்துதல் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து இந்த மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்பட்டன. அப்போது பேசிய மத்திய உணவுத்துறை செயலாளர் சஞ்சீவ் சோப்ரா கூறியுள்ளதாவது:

    தமிழகத்தில் ரேசன் கடைகள் மூலம் பொது விநியோக நடைமுறை சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில்  ரேசன் கடைகள் ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் பெற்றுள்ளது பாராட்டுக்குரியது. மத்திய உணவு மற்றும் பொது விநியோக துறையின் திட்டங்களை மாநிலங்கள் முழுமையாக செயல்படுத்துவதற்கு சாத்தியமான அனைத்து ஆதரவும் வழங்கப்படும்.

    2023-24 ஆம் ஆண்டிற்குள் அனைத்து அரசு திட்டங்களிலும் செறிவூட்டப்பட்ட அரிசியை முழுமையாக வழங்குவதை இந்திய அரசு இலக்காகக் கொண்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட கால அவகாசத்தில் செறிவூட்டப்பட்ட அரிசி கொள்முதல், விநியோகம் ஆகியவற்றை உறுதி செய்ய மாநிலங்கள் முழுமையாக தயாராக இருக்க வேண்டும்.

    நியாய விலைக் கடைகளின் நிதி நிலைத்தன்மையை மேம்படுத்த கூடுதல் வருவாய் வழிகளை மாநிலங்கள் ஆராய வேண்டும். ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் கீழ் புலம்பெயர்ந்தோருக்கு உணவு தானியங்களை உறுதி செய்வதில் மாநிலங்கள் எடுத்துள்ள முயற்சிகள் பாராட்டத்தக்கது. இத்திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து 91 கோடிக்கும் அதிகமானோர் பயன் அடைந்துள்ளனர்.

    • இது போன்ற தவறான தகவல்களை, பொதுமக்கள் மற்றவர்களுக்கு அனுப்ப வேண்டாம்.
    • கடன் தொடர்பான வதந்தியை நம்பி, வங்கி கணக்கு விவரங்களை யாருடனும் பகிர வேண்டாம்.

    புதுடெல்லி:

    ஆதார் அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் மத்திய அரசு 4 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் கடன் வழங்குகிறது என்ற தகவல் இணையத்தில் வேகமாக பரவியது. இந்நிலையில் இந்த தகவல் வதந்தி என மத்திய அரசு மறுத்துள்ளது. இது போன்ற தவறான தகவல்களையோ செய்திகளையோ மற்றவர்களுக்கு அனுப்ப வேண்டாம் என்று பொதுமக்களை மத்திய தகவல் பணியகம் கேட்டுக் கொண்டுள்ளது.

    மேலும் கடன் தொடர்பான இந்த வதந்தியை நம்பி தனிப்பட்ட தங்களது வங்கி கணக்கு விவரங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் கடந்த ஆகஸ்ட் மாதத்திலும் போலி செய்தி பரப்பட்டதாகவும், ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு ரூ.4 லட்சத்து 78 ஆயிரம் கடன் வழங்கும் திட்டம் எதையும் மத்திய அரசு அறிவிக்கவில்லை என்றும் மத்திய தகவல் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

    இதேபோல் மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டு கூடுதல் தவணை அகவிலைப்படி (டிஏ) ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் என்று மத்திய அரசின் துணைச் செயலர் நிர்மலா தேவ் கையொப்பத்துடன் போலி யான சுற்றறிக்கை வாட்ஸ் அப்பில் பரப்பப்பட்டதாகவும், ஆனால், நிதி அமைச்சகத்தின் செலவினத் துறை அத்தகைய உத்தரவு எதையும் பிறப்பிக்கவில்லை என்று தெளிவு படுத்தி உள்ளதாகவும் மத்திய தகவல் பணியகம் தெரிவித்துள்ளது.

    • அக்டோபர் 1ந் தேதி நிலவரப்படி, 205 லட்சம் மெட்ரிக் டன் அரிசி கையிருப்பில் உள்ளது.
    • அக்டோபர் 16ந் தேதி வரை 58 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

    தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் மற்றும் பிரதமரின் ஏழைகளுக்கான இலவச உணவு வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களுக்குத் தேவைப்படும் உணவு தானியங்கள் போதிய அளவில் கையிருப்பில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    உணவு தானியங்கள் கையிருப்பு குறித்த ஆய்வின்படி அக்டோபர் 1-ந் தேதி நிலவரப்படி, 227 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையும், 205 லட்சம் மெட்ரிக் டன் அரிசியும் மத்திய அரசின் தொகுப்பில் கையிருப்பில் உள்ளதாக நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதேபோல், 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 113 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையும், 237 லட்சம் மெட்ரிக் டன் அரிசியும் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2022-23-ஆம் ஆண்டுக்கான கரீப் பருவ கொள்முதல் தொடங்கியுள்ளதால் அக்டோபர் 16-ஆம் தேதி வரை 58 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பருவமழை சிறப்பாக பெய்து வருவதால், இதே அளவிலான நெல் உற்பத்தி இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

    • கனடா நிறுவனத்துடன், இந்திய உர நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம்.
    • இந்திய நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு 15 லட்சம் மெட்ரிக் டன் பொட்டாஷ் உரம் விநியோகம்.

    உலக அளவில் பொட்டாஷ் உர விநியோகத்தில் கனடாவின் கான்போடெக்ஸ் நிறுவனம் மிகப்பெரிய நிறுவனமான திகழ்ந்து வருகிறது. இந்த நிறுவனம் ஆண்டுக்கு 130 லட்சம் மெட்ரிக் டன் அளவில் உற்பத்தி செய்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.

    இந்நிலையில் இந்திய வேளாண் சமூகத்துக்கு நீண்ட காலத்திற்கு உரம் கிடைப்பதை உறுதி செய்யும் நடவடிக்கையாக மத்திய அரசு எடுத்துள்ளது. இதன்படி இந்திய உர நிறுவனங்களான கோரமண்டல் இன்டர்நேஷனல், சம்பல் உரங்கள் மற்றும் இந்திய பொட்டாஷ் நிறுவனங்கள் கனடாவின் கான்போடெக்ஸ் நிறுவனத்துடன், புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தம், மத்திய ரசாயணம் மற்றும் உரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியாவிடம் இன்று வழங்கப்பட்டது. 


    இதுகுறித்து தெரிவித்துள்ள மன்சுக் மாண்டவியா, நாடு முழுவதும் உர விநியோகம் மற்றும் விலையில் உள்ள நிலையற்ற தன்மையை இந்த ஒப்பந்தம் குறைக்கும் என்றார். தடையின்றி நீண்ட காலத்திற்கு பொட்டாஷ் உரம் இந்தியாவிற்கு கிடைப்பது உறுதி செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    இந்திய உர நிறுவனங்களுக்கு 3 ஆண்டு காலத்திற்கு ஆண்டுக்கு 15 லட்சம் மெட்ரிக் டன் பொட்டாஷ் உரத்தை, கனடாவின் கான்போடெக்ஸ் நிறுவனம் விநியோகம் செய்யும் என்றும் அவர் கூறினார். இந்த ஒப்பந்தம் மூலம், விவசாயிகளின் நலனும், நாட்டின் உணவு பாதுகாப்பும் உறுதி செய்யப்படும் என்று மந்திரி மன்சுக் மாண்டவியா குறிப்பிட்டார்.

    • பெரிய அளவில் மக்கள் கூடுவதை தவிர்க்குமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
    • பொது இடங்களுக்கு செல்வோர் முக கவசம் அணியவும், சமூக இடைவெளி பராமரிக்கவும் வலியுறுத்தல்.

    நாட்டின் 75வது சுதந்திர தின கொண்டாட்டம் வரும் 15ந் தேதி திங்கட்கிழமை நடைபெறுகிறது. இதனால் சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை வரை தொடர் விடுமுறை என்பதால், பொதுமக்கள் அதிக அளவில் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    சென்னை போன்ற பெரு நகரங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லவும் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா தொற்று அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.

    நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,561 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தலைநகர் டெல்லியில் மட்டும் புதிதாக 2,726 பேர் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக சுதந்திர தின கொண்டாட்டங்களின் போது பெரிய அளவில் மக்கள் கூடுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாநிலங்களையும் உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

    பொது இடங்களுக்கு செல்வோர் முக கவசம் அணியவும், சமூக இடைவெளியை பராமரிக்கவும், கைகளை அடிக்கடி சுத்தப் படுத்துமாறும் உள்துறை அமைச்சகம் வலியுறுத்தி உள்ளது.

    இதற்கிடையில், பல மாநிலங்கள் கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளை மீண்டும் தீவிரப்படுத்தி வருகின்றன. முக கவசம் அணிவதை கட்டயமாக்கி உள்ள டெல்லி அரசு, உத்தரவை மீறுபவர்களுக்கு தலா 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

    • தமிழகத்தில் மொத்தப் பரிசோதனைகளின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளது.
    • கொரோனா நடத்தை விதிமுறைகளை உறுதி செய்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

    மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண், தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலர் பி. செந்தில் குமாருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது;

    தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக, சராசரியாக தினசரி 2,044 பேருக்கு புதிதாகத் தொற்று பதிவாகியுள்ளது. தொற்றுப் பரவலை எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் பற்றி பலமுறை அரசுக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

    கடந்த ஜூலை 28ந் தேதி முடிவடைந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், கடந்த 4ந்தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் நடத்தப்பட்ட மொத்தப் பரிசோதனைகளின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

    வரவிருக்கும் மாதங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் பல்வேறு பண்டிகைகள், கொண்டாட்டங்களின் பின்னணியில் பொதுமக்கள் அதிகமாக கூடும் வாய்ப்புள்ளது. மாநிலங்களுக்கு இடையேயான மக்கள் பயணத்தை மேற்கொள்வதற்கும், குறிப்பிட்ட இடங்களில் ஒன்றுகூடுவதற்கும் இது வழிவகுக்கும். இது கொரோனா பெருந்தொற்று பரவுவதை எளிதாக்கும்.

    இதனை தடுக்க நோய்த்தொற்று மேலும் பரவுவதைத் தடுக்கவும் அரசு உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும். கண்காணிப்பு உத்திகள், விரிவான செயல்பாட்டு வழிகாட்டுதல்கள் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் பகிரப்பட்டுள்ளன.

    மேலும் அவற்றை இந்த வழிகாட்டுதல்களை திறம்பட பின்பற்றுவதையும், தொடர்ந்து கண்காணிப்பதையும் உறுதி செய்யுமாறு மாநிலங்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றன. சர்வதேச பயணிகளின் பரிந்துரைக்கப்பட்ட மாதிரிகளின் மரபணு வரிசைமுறை பின்பற்றப்பட வேண்டும்.

    சந்தைகள், மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து நிலையங்கள், பள்ளிகள், கல்லூரிகள், ரயில் நிலையங்கள் போன்ற நெரிசலான இடங்களில் கொரோனா நடத்தை விதிமுறைகளை உறுதிசெய்வதில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்.

    செப்டம்பர் 30 வரை அனைத்து அரசு தடுப்பூசி மையங்களில் , தகுதியுள்ள அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போடும் வேகத்தை அதிகரிக்கவும், 18 வயதுக்கு மேற்பட்ட தகுதியான மக்களுக்கு இலவச முன்னெச்சரிக்கை தடுப்பூசி (பூஸ்டர்) வழங்குவதை விரைவுபடுத்தவும் மாநிலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தொற்றுநோய் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை பாதுகாக்க நாம் புதுப்பிக்கப்பட்ட வீரியத்துடன் செயல்பட வேண்டும். மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் இந்த தொடர்ச்சியான மற்றும் கூட்டு முயற்சிகளில் மாநிலத்திற்கு தேவையான ஆதரவை தொடர்ந்து வழங்கும்.

    இவ்வாறு அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • இலங்கை விவகாரத்தில் இந்தியா தலையிட வேண்டும் என தமிழக எம்பிக்கள் கோரிக்கை.
    • அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மத்திய மந்திரிகள் விளக்கம் அளிக்க உள்ளனர்.

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக இன்று காலை டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. 

    பாராளுமன்ற கட்டிடத்தில் நடந்த இந்த கூட்டத்தில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், மத்திய நாடாளுமன்ற விவகார மந்திரி பிரகலாத் ஜோஷி, காங்கிரஸ் எம்.பி.க்கள் மல்லிகார்ஜுன கார்கே, ஜெய்ராம் ரமேஷ், மற்றும் பலர் கலந்து கொண்டனர். தமிழக கட்சிகள் சார்பில் அ.தி.மு.க. எம்.பி. டாக்டர் எம். தம்பிதுரை, தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர். 


    இந்த கூட்டத்தில், பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை விவகாரத்தில் இந்தியா தலையிட வேண்டும் என தமிழக எம்பிக்கள் கோரிக்கை வைத்தனர்.

    இதையடுத்து இலங்கையின் தற்போதைய சூழல் குறித்து விவாதிக்க செவ்வாய்க்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளதாக பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

    இந்த கூட்டத்தில் இலங்கை பிரச்சனை மற்றும் மத்திய அரசின் உதவிகள் தொடர்பாக மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், எஸ் ஜெய்சங்கர் ஆகியோர் விளக்கம் அளிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    • இந்த வழிகாட்டு நெறிமுறைகளை மீறுவோருக்கான தண்டனை வழங்குவது குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • தொடர்ந்து தவறு செய்வோருக்கு 50 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.

    நுகர்வோருக்கு பாதுகாப்பு அளிப்பதை நோக்கமாக கொண்டு,  தவறாக வழிகாட்டும் விளம்பரங்கள் மற்றும் அவற்றுக்கு ஒப்புதல் அளிப்பதை தடை செய்ய, வழிகாட்டு நெறிமுறைகளை, மத்திய நுகர்வோர் நலத்துறையின் கீழ் உள்ள மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ளது.

    அதன்படி, ஆதாரம் இல்லாத உரிமை கோரல்கள், மிகைப்படுத்தப்பட்ட வாக்குறுதிகளை அளித்தல், தவறான தகவல்களை அளித்தல் போன்றவற்றால் நுகர்வோர் ஏமாற்றப்படாமல் இருப்பதை இந்த வழிகாட்டு நெறிமுறைகள் உறுதி செய்கின்றன. இந்த வழிகாட்டு நெறிமுறைகளை மீறுவோருக்கான தண்டனை வழங்குவது குறித்து இதில் வரையறுக்கப்பட்டுள்ளது.

    சரியான தகவல் பெறும் உரிமை தெரிவு செய்யும் உரிமை, பாதுகாப்பற்ற பொருட்களுக்கு எதிராக பாதுகாத்து கொள்ளும் உரிமை, சேவைகளுக்கான உரிமை என பல்வேறு உரிமைகளை மீறும், உற்பத்தியாளர்கள், விளம்பரம் செய்வோர், தவறாக வழிகாட்டும் விளம்பரங்களுக்கு ஒப்புதல் அளிப்போர் ஆகியோருக்கு 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க முடியும் என்று மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

    தொடர்ந்து தவறு செய்வோருக்கு ரூ.50 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்றும், தவறாக வழிகாட்டும் விளம்பரங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் நிறுவனம், இத்தகைய விளம்பர தயாரிப்புக்கும், ஒப்புதல் அளிப்பதற்கும் முதலில் ஓராண்டு வரையும் தொடர்ந்து விதிமுறைகளை மீறினால் 3 ஆண்டு வரையும் ஆணையத்தால் தடை விதிக்க முடியும் என்றும் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அனைத்து மாநிலங்களுக்கு, மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.
    • நீர்நிலைகளில் பிளாஸ்டிக் கழிவுகளின் அளவை குறைக்க வேண்டும்

    மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:

    உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, ஒருமுறை மட்டும் உபயோகிக்கக்கூடிய பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத நாட்டை உருவாக்குவதையும், சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்கு பங்களிப்பு வழங்குவதையும் ஒரு இயக்கமாக மேற்கொள்ளப்பட வேண்டும்.

    உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, மரக்கன்றுகள் நடவும், தூய்மையைப் பராமரிக்கவும் மக்கள் அனைவரும் ஒன்றினைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி, கடந்த மே மாதம் 29ந் தேதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் தெரிவித்திருந்தார்.

    பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்க சிறப்பு முயற்சிகளை எடுப்பதோடு, பெருமளவில் மரக்கன்று நடுவதை, அனைத்து குடிமக்கள் – மாணவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சுய உதவிக் குழுக்கள், உள்ளூர் தொண்டு நிறுவனங்கள், சமூக சேவை அமைப்புகள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் மற்றும் தேசிய மாணவர் படையினர், பெருந் தொழில் நிறுவனங்களின் பங்கேற்புடன் மேற்கொள்ள வேண்டும்.

    மேலும், தூய்மை இந்தியா இயக்கம் 2.0-ன்படி, பிளாஸ்டிக் கழிவு மேலாண்மையில் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் அனைத்தும், குப்பை சேகரிக்கப்படும் இடத்திலேயே 100% அளவிற்கு அவற்றை தரம் பிரிப்பதுடன், பிளாஸ்டிக் உள்ளிட்ட உலர் கழிவுகளை பிரிப்பதற்கான வசதிகளையும் மேற்கொள்வது அவசியம்.

    அத்துடன், தரம் பிரிக்கப்பட்ட கழிவுகளை, மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றுவதன் மூலம், குப்பைக்கிடங்குகள் அல்லது நீர்நிலைகளில் பிளாஸ்டிக் கழிவுகளின் அளவையும் குறைக்க வேண்டும்.

    2,591 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் ஒருமுறை மட்டும் உபயோகிக்கக்கூடிய பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதித்து ஏற்கனவே நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.

    எஞ்சிய 2,100-க்கும் மேற்பட்ட நகர்ப்புற உள்ளாட்சிகளும், இந்த மாதம் 30ந் தேதிக்குள் ஒருமுறை மட்டும் உபயோகிக்கக் கூடிய பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

    இதற்கேற்ப மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்களுக்கு உரிய ஆதரவை வழங்குவதுடன், சிறப்பு நடவடிக்கைக் குழுக்களை அமைப்பது, திடீர் சோதனை நடத்துதல் மற்றும் தடை உத்தரவை மீறுவோருக்கு அதிக அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

    பிளாஸ்டிக் கழிவுகளை எரிபொருளாகவோ, அல்லது சாலை கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்தும் வகையிலோ, அனைத்து மாநில அரசுகள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், தங்களுக்கு அருகிலுள்ள சிமென்ட் ஆலைகள் மற்றும் பிற தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் மேற்கொள்ள வேண்டும்.

    மாநகராட்சி மேயர்கள், வார்டு கவுன்சிலர்கள், தன்னார்வ நிறுவனங்கள், உள்ளூர் தொண்டு நிறுவனங்கள், குடியிருப்போர் சங்கங்கள், சந்தை அமைப்புகள் , சுய உதவிக் குழுவினர், மாணவர்கள், இளைஞர் குழுக்களின் பங்கேற்புடன் கூடியதாக இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    இப்பணிகளை மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் ஆவணப்படுத்துவதுடன், உயர்மட்ட அளவில் கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×