search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tuticorin constituency"

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட தூத்துக்குடி தொகுதிக்கு விருப்ப மனு கொடுத்திருந்த கனிமொழியிடம் மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார். #kanimozhi #mkstalin #parliamentelection

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் ஏற்கனவே பெறப்பட்டிருந்தது. ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தது 25 பேர் விருப்ப மனு கொடுத்து இருந்தனர்.

    தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி எம்.பி. போட்டியிடுவார் என்பது கட்சி நிர்வாகிகளுக்கு ஏற்கனவே தெரியும் என்பதால் அவரை தவிர வேறு யாரும் விருப்ப மனுதாக்கல் செய்யவில்லை. தூத்துக்குடி தொகுதிக்கு கனிமொழி பெயரில் 33 பேர் விருப்ப மனு கொடுத்திருந்தனர்.

    அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு தொகுதி வாரியாக விருப்ப மனு கொடுத்திருந்தவர்களை அழைத்து நேர்காணல் நடத்தினார்.

    தூத்துக்குடி தொகுதிக்கு விருப்ப மனு கொடுத்திருந்த கனிமொழியும் மு.க.ஸ்டாலின் நடத்திய நேர்காணலில் பங்கேற்றார்.

    கனிமொழியிடம் தூத்துக்குடி தொகுதியின் வெற்றி வாய்ப்பு குறித்து கேட்டறிந்த மு.க.ஸ்டாலின் அவருக்கு வாழ்த்தும் தெரிவித்தார்.

    இந்த நேர்காணலின்போது முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு, பொருளாளர் துரைமுருகன், மாவட்டச் செயலாளர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன் உடன் இருந்தனர்.

    நேர்காணலில் திருநெல்வேலி தொகுதிக்கு 39 நிர்வாகிகளும் கன்னியாகுமரி தொகுதிக்கு 25 பேர்களும் வந்திருந்தனர்.

    இவர்கள் ஒவ்வொருவரிடமும் மு.க.ஸ்டாலின் நேர் காணல் நடத்தினார். மற்ற தொகுதிகளுக்கும் இன்று மாலை வரை நேர்காணல் நடைபெறுகிறது. #kanimozhi #mkstalin #parliamentelection

    தூத்துக்குடி தொகுதியில் கனிமொழியை எதிர்த்து தமிழிசை சவுந்தர ராஜனை போட்டியிட வைக்க பா.ஜனதா தலைமை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. #kanimozhi #tamilisai #parliamentelection

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலை சந்திக்க தமிழ்நாட்டில் அ.தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், தி.மு.க. தலைமையில் மற்றொரு அணியும் உருவாகி உள்ளது. தற்போது தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டி பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

    பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, நேற்று மதுரையில் 18 பாராளுமன்ற தொகுதி பா.ஜனதா பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

    பின்னர் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். அவரிடம் பா.ஜனதாவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளின் பட்டியல் அளிக்கப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. சார்பில் பா.ஜனதாவிடம் அளிக்கப்பட்டுள்ள உத்தேச பட்டியலில் வடசென்னை, சிவகங்கை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை ஆகிய தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.

    சிவகங்கையில் எச்.ராஜா, கன்னியாகுமரியில் மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணன், கோவையில் சி.பி. ராதாகிருஷ்ணன் அல்லது வானதி சீனிவாசன், தூத்துக்குடியில் தமிழிசை சவுந்தர ராஜன் ஆகியோர் போட்டியிட அதிகம் வாய்ப்பு உள்ளது.

    தூத்துக்குடியில் தி.மு.க. சார்பில் கனிமொழி எம்.பி. போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

    ஏற்கனவே அவர் தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மக்களை சந்தித்து வருகிறார். அவர் தூத்துக்குடியில் போட்டியிடுவது உறுதி என்று மாவட்ட செயலாளர் கீதா ஜீவன் சமீபத்தில் அறிவித்தார்.

    இதையடுத்து அவரை எதிர்த்து பலமான வேட்பாளரை நிறுத்த பா.ஜனதா ஆலோசனை நடத்தி வருகிறது. நேற்று மதுரை வந்த அமித்ஷாவுடன் இதுபற்றி ஆலோசனை நடத்தப்பட்டது.

    கனிமொழியை எதிர்த்து மாநில பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தர ராஜனை போட்டியிட வைக்க பா.ஜனதா தலைமை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

    தமிழிசை தென் சென்னையில் போட்டியிட விரும்பினார். அவருக்கு வட சென்னை தொகுதியை விட்டுக்கொடுக்க அ.தி.மு.க. முன்வந்தது.

    இதை அவர் ஏற்கவில்லை. இதனால் அவர் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பா.ஜனதா தொகுதி பட்டியலில் வடசென்னைக்கு பதில் மதுரை தொகுதி சேர்க்கப்பட்டுள்ளது. அங்கு ஆர்.சீனிவாசனை போட்டியிட வைக்க திட்டமிட்டு தொகுதியை மாற்றித் தருமாறு அ.தி.மு.க.விடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. #kanimozhi #tamilisai #parliamentelection

    ×