என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Trichy murder"

    • திருச்சி மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருந்த போதே இந்த படுகொலை நடந்துள்ளது.
    • திமுக ஆட்சிக்கு வந்ததற்கு பிந்தைய 4 ஆண்டுகளில் 7,000க்கும் கூடுதலான படுகொலைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருச்சி பீமநகர் பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் தாமரைச் செல்வன் என்ற இளைஞரை 5 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டி, வெட்டி படுகொலை செய்திருக்கிறது. சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவலர்கள் வாழும் பகுதியிலேயே ஓர் இளைஞர் ஓட , ஓட விரட்டி படுகொலை செய்யப் படுகிறார் என்றால் தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதை இதிலிருந்தே தெரிந்து கொள்ள முடியும்.

    பீமநகர் கீழத்தெருவைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான தாமரைச் செல்வன் இன்று காலை இரு சக்கர ஊர்தியில் வந்து கொண்டிருந்த போது, வேறு சில இரு சக்கர ஊர்திகளில் வந்த இளமாறன் என்பவர் உள்ளிட்ட 5 பேர் தங்களின் வாகனத்தை தாமரைச் செல்வனின் வாகனம் மீது மோதி கீழே தள்ளியுள்ளனர். அங்கேயே அவரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்ய முயன்ற போது, காவலர் குடியிருப்புக்குள் நுழைந்தால் தப்பி விடலாம் என்ற எண்ணத்தில் அவர் தப்பி ஓடியுள்ளார். ஆனாலும், கொலைகார கும்பல் எந்த அச்சமும் இல்லாமல் காவலர் குடியிருப்புக்குள் நுழைந்து தாமரைச் செல்வனை கொலை செய்திருக்கிறது. அதுவும் திருச்சி மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருந்த போதே இந்த படுகொலை நடந்துள்ளது.

    திமுக ஆட்சியில் கொலை செய்யக் கூடாத இடங்கள் என்று எதுவுமே இல்லை எனக் கூறும் அளவுக்கு எல்லா இடங்களிலும் கொலைகள் செய்யப்படுகின்றன. நெல்லை நீதிமன்ற வளாகத்தில் படுகொலை, தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் ஆசிரியை படுகொலை, சென்னை கிண்டி மருத்துவமனையில் மருத்துவருக்கு அரிவாள் வெட்டு என திரும்பும் திசையெங்கும் படுகொலைகள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. திமுக ஆட்சிக்கு வந்ததற்கு பிந்தைய 4 ஆண்டுகளில் 7,000க்கும் கூடுதலான படுகொலைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.

    தமிழ்நாட்டில் கொலைகள், கொள்ளைகள், பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்ட குற்றங்களைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசு, இந்த வழக்குகளில் குற்றவாளிகளை கைது செய்து விட்டதாக பெருமை பேசிக் கொள்கிறது. பாவங்களை செய்யக் கூடாது என்று கூறினால், பாவங்களை செய்தால் என்ன, அது தான் பரிகாரம் செய்து விட்டோமே? என்று கேட்பதைப் போலத் தான் திமுகவின் விளக்கம் அமைந்துள்ளது.

    கொலைகள் உள்ளிட்ட குற்றங்களைத் தடுக்கத் தவறிய திமுக, சட்டம் - ஒழுங்கு என்ற சொல்லை உச்சரிப்பதற்கான தகுதியை இழந்து விட்டது. அனைத்துக்கும் ஒரு முடிவு உண்டு, கொலை, கொள்ளைகளைத் தடுக்கத் தவறிய திமுக அரசுக்கு விரைவில் முடிவு கட்டப்படும். அதன் மூலம் தமிழகத்தில் குற்றச்செயல்கள் தடுக்கப்பட்டு, சட்டம் - ஒழுங்கு நிலை நாட்டப்படும்.

    • பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் கொலை நடைபெற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    • முதலமைச்சர் ஸ்டாலின், சம்பவ இடத்திற்கு சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் அருகே தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் பீமா நகர் கீழத் தெருவை சேர்ந்த தாமரைச்செல்வன் (வயது 27). இவருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது. இவர் தனியார் கம்பெனி ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல இன்று காலை வேலைக்கு செல்வதற்காக திருச்சி பீமா நகர் பழைய தபால் நிலைய சாலையில் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்திசையில் இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் தாமரை செல்வன் இருசக்கர வாகனத்தின் மீது மோதி உள்ளனர். பின்னர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது நான்கு பேரும் பயங்கர ஆயுதங்களை கையில் வைத்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உயிர் பயத்தில் அப்பகுதியில் அலறியடி ஓடியுள்ளார்.

    காவலர் குடியிருப்புக்குள் நுழைந்த தாமரை செல்வன் தில்லை நகரில் பணிபுரியும் காவலர் செல்வராஜ் வீடு திறந்து இருந்ததால் அந்த வீட்டிற்குள் நுழைந்து கிரைண்டர் பக்கத்தில் போய் ஒளிந்து கொண்டுள்ளார். ஆனாலும் அந்த கும்பல் விடாமல் வீட்டுக்குள் நுழைந்து எஸ்எஸ்ஐ செல்வராஜ் மற்றும் காவலர் குடும்பத்தின் கண்முன்னே தாமரை செல்வனை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனை கண்ட காவலர் குடும்பத்தினர் அலறி கூச்சலிட்டுள்ளனர்.

    இதனை சக காவலர்கள் கல்லால் கொலையாளிகளை தாக்கியுள்ளனர். ஆனால் அவர்கள் கையில் ஆயுதங்கள் இருந்ததால் அனைவரும் தூரத்தில் இருந்தே தாக்கியுள்ளனர். இதில், ஒருவர் பிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தாமரை செல்வன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் கொலை நடைபெற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி வந்துள்ள முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், சம்பவ இடத்திற்கு சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் அருகே தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

    திருச்சி அருகே தாயை தாக்கிய தந்தையை மகனே அடித்துக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவெறும்பூர்:

    திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 55). இவர் திருச்சி என்.ஐ.டி. கல்லூரியில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு ரத்தினம் என்ற மனைவியும், சுதர்சன், பிரியதர்சன் ஆகிய 2 மகன்களும், மதுமிதா என்ற ஒரு மகளும் உள்ளனர்.

    இதில் சுதர்சன் (23) ஐ.டி.ஐ. 2-ம் ஆண்டும், மதுமிதா 10-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். 2 மகன்களும் சமயபுரம் அருகில் உள்ள மாடக்குடி கிராமத்தில் தாத்தா வீட்டில் தங்கியிருந்து படித்து வருகிறார்கள்.

    குணசேகரனுக்கு குடிப்பழக்கம் இருந்தது. தினமும் குடித்து விட்டு, வீட்டு செலவுக்கு பணம் கொடுக்காததோடு மனைவி ரத்தினத்திடமும் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார்.

    இதற்கிடையே மகள் மதுமிதாவிற்கு பள்ளி கட்டணம் செலுத்துவதற்கு கூட பணம் இல்லாமல் ரத்தினம் சிரமப்பட்டு வந்தார். இதுபற்றி குணசேகரன் சற்றும் கவலைப்படாமல் தினமும் மது போதையில் வீட்டுக்கு வருவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். நேற்றும் அளவுக்கு அதிகமான போதையில் அவர் வந்தார்.

    அப்போது மகள் மதுமிதாவுக்கு பள்ளி கட்டணம் செலுத்தாதது குறித்து குணசேகரனுக்கும் அவரது மனைவி ரத்தினத்திற்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது குணசேகரன் ரத்தினத்தை அடித்தார்.

    இது குறித்து ரத்தினம் மாடக்குடியில் தாத்தா வீட்டில் இருந்த மகன்களுக்கு போன் செய்து தெரிவித்தார். உடனே சுதர்சனும், பிரியதர்சனும் வேங்கூருக்கு புறப்பட்டு வந்தனர்.

    நள்ளிரவு 1 மணிக்கு தந்தை குணசேகரனிடம் சுதர்சன் தாயை ஏன் அடித்தீர்கள் என தட்டி கேட்டார். அப்போது தந்தைக்கும் மகனுக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சுதர்சன், குணசேகரனை தந்தை என்றும் பாராமல் கட்டையால் தலையில் சரமாரியாக தாக்கினார்.

    இதில் குணசேகரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் மயங்கிய அவரை உறவினர்கள் காப்பாற்றி திருச்சியில் உள்ள மருத்துவனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை குணசேகரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து குணசேகரனின் மற்றொரு மகன் திருவெறும்பூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தந்தையை அடித்து கொன்ற மகன் சுதர்சனை தேடி வருகிறார்கள். அவர் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    குடும்ப தகராறில் மகனை கழுத்தை அறுத்துக் கொன்று தாய் தற்கொலை செய்த சம்பவம் திருச்சி பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    திருவெறும்பூர்:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆவூர் புதுப்பட்டியை சேர்ந்தவர் முருகன். இவர் புதுக்கோட்டை அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கோமதி. இவர்களுக்கு நந்தினி (16) என்ற மகளும், சரவணன் (14) என்ற மகனும் உள்ளனர். நந்தினி 11ம் வகுப்பும், சரவணன் 9-ம்வகுப்பும் படித்து வந்தனர். முருகன் தனது குடும்பத்தினருடன் திருச்சி குண்டூர் அய்யம்பட்டி பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வந்தார்.

    நேற்றிரவு அவர் பணிக்கு சென்று விட்டார். பின்னர் கோமதி, சரவணன் ஒரு அறையிலும், நந்தினி மற்றொரு அறையிலும் படுத்து தூங்கினர். இன்று காலை நந்தினி எழுந்து பார்த்த போது சரவணன் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். கோமதி தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கினார். இதைப்பார்த்த நந்தினி அதிர்ச்சியடைந்து கதறி அழுதார்.

    உடனே இது குறித்த தகவல் அறிந்ததும் திருச்சி நவல்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடல்களை பார்வையிட்டனர். பின்னர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்குஅனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கோமதி, சரவணனை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு, தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. அதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.

    அப்போது முருகன் புதிதாக வீடு கட்டி வருகிறார். இது தொடர்பாக கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் முருகன் கோமதியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் நேற்றிரவு முருகன் வேலைக்கு சென்றதும், தனது மகன் சரவணனின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு, அவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் வேறு ஏதேனும் காரணமா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மகனை கழுத்தை அறுத்துக் கொன்று தாய் தற்கொலை செய்த சம்பவம் திருச்சி பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×