search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tandoori recipes"

    தணலில் வேக வைத்த தந்தூரி இறைச்சி வகைகளை சாப்பிடலாமா? நமது உடலுக்கு அது உகந்ததுதானா என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    எண்ணெயில் பொரிக்காமல் தயிர் மற்றும் பிற மசாலாப் பொருட்கள் சேர்த்து நெருப்பில் சுட்டு எலுமிச்சை, வெங்காயம், வெள்ளரிக்காய் போன்றவற்றால் அலங்கரிக்கப்பட்டு தயாரிக்கப்படும் தந்தூரி வகை இறைச்சிகள் தற்போது அசைவப் பிரியர்களில் அதிகமானவர்களை ஈர்த்து வருகிறது.

    இதுபோன்று தணலில் வேக வைத்த தந்தூரி இறைச்சி வகைகளை சாப்பிடலாமா? நமது உடலுக்கு அது உகந்ததுதானா என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

    ‘‘சுகாதாரமான நிலையில் இருக்கக்கூடிய இறைச்சிகளை அப்படியே தீயில் சுட்டு சாப்பிடுவதால் மோசமான உடல்நலப் பிரச்சனைகள் எதுவும் ஏற்படாது. ஆனால், அதில் சுவை, நிறம் போன்ற காரணங்களுக்காக சேர்க்கப்படும் பொருட்களிலுள்ள ரசாயனப் பொருட்கள் மற்றும் அதிகளவிலான மசாலாப் பொருட்களையும் சேர்த்து நீண்ட நேரம் ஊற வைத்து, பின்னர் தீயில் சுட்டு தயார் செய்கிறபோதுதான் உடல்நல பிரச்சனைகள் உண்டாகிறது.
     
    அதேபோல அதிகளவு தீயில் சுட்டு கருகிய நிலையிலோ அல்லது சரியான அளவில் வேகாமலோ இருக்கிற இறைச்சிகளை சாப்பிடுவதாலும் உடல்நலப் பிரச்சனைகள் உண்டாகக் கூடிய வாய்ப்பு அதிகம். மீன் மற்றும் சிக்கன், மட்டன் போன்ற இறைச்சி வகைகள் அனைத்திலும் தந்தூரி உணவுகள் தயாரிக்கப்படுகிறது. இவ்வகை இறைச்சிகளின் மீது மசாலாவை தடவி 6 மணி நேரமோ அல்லது இன்னும் கூடுதல் நேரமோ ஊற வைக்கப்படுகிறது.

    பார்க்க வண்ணமயமாகவும், சாப்பிடும்போது அதிக ருசியுடனும் இருக்க வேண்டும் என்பதற்காக, இவ்வகை இறைச்சிகளுடன் உடல்நலனுக்கு தீங்கு உண்டாக்கும் சில ரசாயனப் பொருட்கள் அடங்கிய பதப்படுத்திகள் மற்றும் சுவையூட்டிகளை சேர்த்து, கிரில்டு பாக்ஸ் அல்லது தந்தூரி அடுப்பில் வேக வைக்கப்படுகிறது.



    இவ்வாறு இந்த இறைச்சிகளை தீயில் அதிக வெப்பநிலையில், தேவையான அளவு நேரம் சுட்டு இவ்வகை உணவுகளைத் தயாரிக்கின்றனர்.

    மேலும் தந்தூரி உணவுகளில் சரியான முறையில் பதப்படுத்தப்படாத, சுகாதாரமற்ற நிலையிலுள்ள இறைச்சிகள் அல்லது மீதமாகும் இறைச்சியை குளிர்சாதனப் பெட்டிகளில் நீண்ட நாட்கள் வைத்தும் சிலர் பயன்படுத்துகின்றனர். இதுபோன்ற காரணங்களே உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படுவதற்குக் காரணமாகிறது.

    சுகாதாரமற்ற நிலையில் இருக்கும் இதுபோன்ற உணவுகளை அடிக்கடி, அதிக அளவு எடுத்துக் கொள்வதால் அல்சர், வயிற்றுவலி, வயிற்று எரிச்சல், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் மட்டுமல்லாமல் இதயக் குழாய்களில் அடைப்பு, வயிற்றுப் புற்றுநோய்  போன்ற பிற புற்றுநோய்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது.

    தந்தூரி உணவு நம் நாட்டு சூழலுக்கு ஏற்ற உணவாக இல்லாவிட்டாலும், நமது உடலுக்கு ஏற்ற உணவாக இல்லாவிட்டாலும் அவற்றை சிறிது சிறிதாக சாப்பிட்டு வந்தால் அவை நம் உடலுக்கு ஏற்ற உணவாக மாறிவிடும். ஆனால், அதற்கு நாம் ஜீரண சக்தி, உணவின் அளவு, கால சூழ்நிலை என்கிற மூன்று விதிகளை கருத்தில் கொள்வது அவசியம்.



    தந்தூரி வகை இறைச்சி உணவுகளை உட்கொள்ளும்போது நன்றாக பசித்திருக்க வேண்டும். அதை சாப்பிடுகிறவர்களுக்கு நல்ல ஜீரண சக்தி இருக்க வேண்டும். அதற்கு முன்னர் சாப்பிட்ட உணவு ஜீரணமாகி இருக்க வேண்டும். புளித்த ஏப்பம், வயிற்றுப் பொறுமல், வயிற்று வலி, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் இருக்கக் கூடாது. இதுபோன்ற உடல்நல பிரச்சனைகள் இருப்பவர்கள் இவ்வகை உணவு சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். 

    இவ்வகை உணவுகளை எடுத்துக்  கொள்ளும்போது சரியான அளவு தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும். இரவு நேரங்களில் நமது ஜீரண உறுப்புகளின் செயல்திறன் குறைந்து உடல் ஓய்வு நிலைக்கு தயாராகும் என்பதால், எளிதில் ஜீரணமாகும் எளிய உணவுகளை இந்நேரங்களில் எடுத்துக் கொள்வதே உடல் நலனுக்கு நல்லது. எனவே நல்ல ஜீரண சக்தி இருப்பவர்களாக இருந்தாலும் இரவு நேரங்களில் இதுபோன்ற தந்தூரி இறைச்சி உணவுகளை தவிர்ப்பது நல்லது. இந்த மூன்று விதிகளை கருத்தில் கொண்டு தந்தூரி வகை இறைச்சிகளை சாப்பிட்டால் எந்தவித தீங்கும் ஏற்படாது.

    தந்தூரி முறையில் சமைக்கப்பட்ட இறைச்சியானது மிருதுவாக மாறி எளிதில் ஜீரணிக்கக்கூடியதுதான். இருந்தபோதும் அதை மேற்கண்ட மூன்று விதிமுறைகளையும் பின்பற்றி சாப்பிடுவதே சரியானதாக இருக்கும்.

    இந்த வகை இறைச்சியை சாப்பிட்ட பின்பு அஜீரண பிரச்சனை ஏற்படுபவர்கள், ஆயுர்வேத மருந்தகத்தில் கிடைக்கும் அஷ்ட சூர்ணம் என்ற மருந்தை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து அதை சீரகத் தண்ணீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் இந்தப் பிரச்சனை சரியாகும். 
    ஓட்டலில் தந்தூரி சிக்கன் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே எளிய முறையில் தந்தூரி சிக்கன் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சிக்கன் - அரை கிலோ
    தயிர் - 175 மில்லி (ஒரு தம்ளர்)
    தந்தூரி மசாலா - சிறிதளவு
    தந்தூரி கலர் பொடி - ஒரு சிட்டிகை
    எலுமிச்சம்பழம் - ஒன்று
    வறுத்து அரைத்த தனியா, சீரகம், மற்றும் அரைத்த இஞ்சி மற்றும் பூண்டு போன்றவை - தலா ஒரு சிறிய தேக்கரண்டி.
    மிளகாய்த்தூள், மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    கோழி இறைச்சியில் தோலுரித்து நான்கு துண்டுகளாக்க வேண்டும்.

    கூரிய கத்தியை கொண்டு ஒவ்வொரு துண்டிலும் 2, 3 இடங்களில் கீறி விடலாம்.

    வறுத்து அரைத்த தனியா, சீரகம் மற்றும் அரைத்த இஞ்சி, பூண்டு, மிளகாய் தூள், மிளகு தூள், உப்பு ஆகியவற்றை இறைச்சியில் பூசி தந்தூரி கலர் பொடி, தந்தூரி மசாலா கலந்து தயிருடன் இரவு முழுவதும் ஊற வைக்கவும்.

    மறுநாள் தந்தூரி ஓவன் அல்லது கம்பி வலை அடுப்பு மீது வைத்து தணலில் 15 முதல் 20 நிமிடங்களுக்கு வாட்டி எடுக்கவும்.

    பின்னர் எலுமிச்சம் பழத்தை வாட்டப்பட்ட இறைச்சி மீது பிழிந்துவிட்டு சூடான தந்தூரி சிக்கனை பரிமாறவும்.

    தந்தூரி சிக்கன் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×