என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐபிஎல் அணி"

    • லக்னோ மற்றும் உத்தரப் பிரதேச மக்கள் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியைத் தங்கள் இதயங்களில் வைத்து வரவேற்றனர்.
    • இந்த சின்னம் மக்கள் காட்டிய அன்பு மற்றும் நம்பிக்கைக்கு நாங்கள் செலுத்தும் ஒரு மரியாதையாகும்.

    2026ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பு லக்னோ அணி தனது இலச்சினை மாற்றியுள்ளது. ஆர்.பி.எஸ்.ஜி குழுமத்திற்குச் சொந்தமான 'மான்செஸ்டர் சூப்பர் ஜெயண்ட்ஸ்' அணியின் லோகோவுடன் ஒத்துப்போகும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அறிவிப்பு வெளியிட்டுள்ள லக்னோ அணி,

    "இன்று, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் தனது புதிய இலச்சினையை வெளியிடுகிறது. இது வெறும் புதிய வடிவம், புதிய தோற்றம் மட்டுமல்ல. மாறாக, இந்த நகரம், இந்த மாநிலம் மற்றும் ஆரம்பத்திலிருந்தே இந்த அணியுடன் உறுதுணையாக நின்ற ஒவ்வொரு ரசிகரின் உணர்வையும் சுமந்து நிற்கும் ஒரு அடையாளம்.

    இந்த புதிய சின்னம் கருடன், கிரீடம் மற்றும் யானை ஆகிய மூன்று வலிமையான அடையாளங்களை ஒன்றிணைக்கிறது. இவை ஒவ்வொன்றும் லக்னோ மற்றும் உத்தரப் பிரதேசத்தின் ஆழமான கதைகளைச் சொல்கின்றன.

    கருடன் துணிச்சலைக் குறிக்கிறது. உயர்ந்து எழுவதற்கான துணிச்சல், சவால்களை எதிர்கொள்ளும் துணிச்சல் மற்றும் ஒருபோதும் பின்வாங்காத மன உறுதி ஆகியவற்றை இது குறிக்கிறது. சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி விளையாட விரும்பும் அச்சமற்ற கிரிக்கெட்டையும், நாம் அனைவரும் இணைந்து உயர்ந்தால் எந்தக் கனவும் பெரியதல்ல என்ற நம்பிக்கையையும் இது பிரதிபலிக்கிறது.

    கிரீடம் பெருமை மற்றும் பொறுப்பைக் குறிக்கிறது. ஒவ்வொரு முறையும் இந்த அணி களத்தில் இறங்கும்போது, கோடிக்கணக்கான மக்களின் எதிர்பார்ப்புகளைச் சுமந்து செல்கிறது. இந்த சீருடையை அணிவது ஒரு கௌரவம் என்பதையும், அந்த கௌரவத்தை ஒவ்வொரு நாளும் உழைப்பால் ஈட்ட வேண்டும் என்பதையும் இந்த கிரீடம் நினைவூட்டுகிறது.

    இந்த இலச்சினையின் மையத்தில் யானை அமைந்துள்ளது. யானை என்பது வலிமை, புத்திசாலித்தனம், பொறுமை மற்றும் ஒற்றுமையின் அடையாளமாகும். இது ரசிகர்களின் அசைக்க முடியாத ஆதரவைப் பிரதிபலிக்கிறது; ஒரு போட்டியின் முடிவைப் பொறுத்து மாறாமல், ஒவ்வொரு பருவத்திலும் உறுதியாக நிற்கும் அந்த விசுவாசத்தைக் குறிக்கிறது.

    இவை அனைத்தும் இணைந்து, ஒரு இலச்சினை என்பதைத் தாண்டி ஒரு புதிய அடையாளத்தை உருவாக்குகின்றன. இந்தச் சின்னம் லக்னோவின் வீதிகளுக்கும், வீட்டிலிருந்து போட்டியை ரசிக்கும் குடும்பங்களுக்கும், ஒரு நாள் இந்தச் சீருடையை அணிய வேண்டும் என்று கனவு காணும் இளம் ரசிகர்களுக்கும் சொந்தமானது. இது வரலாறு, பெருமை மற்றும் இன்னும் மேலான ஒரு சாதனைக்கான வாக்குறுதியையும் சுமந்து நிற்கிறது." என தெரிவித்துள்ளது. 

    இதுதொடர்பாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் உரிமையாளரும், ஆர்.பி.எஸ்.ஜி குழுமத்தின் துணைத் தலைவருமான கோயங்கா கூறியுள்ளதாவது;

    இந்த புதிய இலச்சினை உணர்வுப்பூர்வமாக மிக நெருக்கமானது. முதல் நாளிலிருந்தே லக்னோ மற்றும் உத்தரப் பிரதேச மக்கள் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியைத் தங்கள் இதயங்களில் வைத்து வரவேற்றனர். இந்தச் சின்னம் அவர்கள் காட்டிய அன்பு மற்றும் நம்பிக்கைக்கு நாங்கள் செலுத்தும் ஒரு மரியாதையாகும். கருடன் உயரே பறக்க வேண்டும் என்ற எங்கள் கனவுகளைப் பிரதிபலிக்கிறது. கிரீடம், நாங்கள் களமிறங்கும் ஒவ்வொரு முறையும் நீங்கள் எங்கள் மீது வைக்கும் பெருமையைப் பிரதிபலிக்கிறது. மேலும் யானை, இந்த பிராந்தியத்திற்கே உரித்தான வலிமை மற்றும் விசுவாசத்தைப் பிரதிபலிக்கிறது.

    இது வெறும் அடையாள மாற்றம் மட்டுமல்ல; இது ஒரு வாக்குறுதி. இந்த நகரத்தை நாங்கள் கௌரவிப்போம், எங்களது வேர்களுக்கு மதிப்பளிப்போம், முழு மனதுடன் விளையாடுவோம் என்ற வாக்குறுதி. ஒவ்வொரு ஓட்டமும் (Run), ஒவ்வொரு விக்கெட்டும், ஒவ்வொரு தருணமும் எங்களது ரசிகர்களின் உணர்வுகளைச் சுமந்து நிற்கும். 

    இந்தப் புதிய இலச்சினை இனி சீருடைகள், வணிகப் பொருட்கள், டிஜிட்டல் தளங்கள் மற்றும் அனைத்து அதிகாரப்பூர்வ அடையாளங்களிலும் இடம்பெறும். இது ஒற்றுமை, லட்சியம் மற்றும் ஒருமித்த உணர்வு ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது.

    லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் என்பது வெறும் ஒரு அணியை மட்டும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. அவர்கள் ஒரு நகரத்தின் பெருமையைச் சுமந்து செல்கிறார்கள். அனைவருடனும் இணைந்து, இந்தப் பயணம் தொடர்கிறது." என தெரிவித்துள்ளார்.

     

    • இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தனி பயிற்சியாளர் தேவை என்று ஐ.பி.எல். அணியின் உரிமையாளர் ஒருவர் கூறியுள்ளார்.
    • ஒவ்வொருவரும் தங்களது வரம்புக்குள் இருப்பது முக்கியம்.

    விசாகப்பட்டினம்:

    விசாகப்பட்டினத்தில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 271 ரன் இலக்கை இந்திய அணி 39.5 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜெய்ஸ்வால் சதமும் (116 ரன்), ரோகித் சர்மா (75 ரன்), விராட் கோலி (65 ரன்) அரைசதமும் விளாசினர். வெற்றியின் மூலம் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் சொந்தமாக்கியது.

    இதனையடுத்து இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையே 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் நடத்தப்படுகிறது. இதன் முதலாவது ஆட்டம் கட்டாக்கில் நாளை நடக்கிறது.

    இந்நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கிரிக்கெட்டுடன் எந்த தொடர்பும் இல்லாதவர்கள் சில விஷயங்களை பற்றி சொன்னார்கள். ஐ.பி.எல். அணியின் உரிமையாளர் ஒருவர் (டெல்லி அணியின் உரிமையாளர் பார்த் ஜின்டால்) இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தனி பயிற்சியாளர் தேவை என்று கூறியுள்ளார். கிரிக்கெட்டுக்கு சம்பந்தமே இல்லாத நபர் இவ்வாறு சொன்னது ஆச்சரியமாக உள்ளது. ஒவ்வொருவரும் தங்களது வரம்புக்குள் இருப்பது முக்கியம். நாங்கள் மற்றவர்களின் விஷயத்தில் தலையிடுவது கிடையாது. எனவே, நாங்கள் என்ன செய்தாலும் அதில் தலையிட அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை.

    இவ்வாறு கம்பீர் கூறினார்.

    • சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகி ஆண்டு முழுவதும் தங்களுடைய லீக் போட்டியில் விளையாடும்படி பேரம் பேசப்பட்டுள்ளது.
    • இங்கிலாந்து வீரர்களை போல ஆஸ்திரேலிய 20 ஓவர் வீரர்களையும் அணுகி உள்ளனர்.

    லண்டன்:

    இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் 'டைம்ஸ் லண்டன்' பத்திரிகையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வரும் 6 இங்கிலாந்து வீரர்களை சில ஐ.பி.எல். அணிகளின் உரிமையாளர்கள் அணுகி உள்ளனர்.

    இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், இங்கிலாந்து கவுண்டி அணி நிர்வாகம் ஆகியவற்றை விடுத்து தங்களுடன் இணைந்து முழுமையாக பணியாற்றுவது தொடர்பாக வீரர்களுடன் தொடக்க நிலை பேச்சு நடத்தப்பட்டுள்ளது.

    கால்பந்து விளையாட்டில் உள்ளது போலவே வீரர்கள் லீக் அணிகளுடன் ஆண்டு ஒப்பந்த முறையில் பணியாற்றுவது தொடர்பாக உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் வீரர்கள் சங்கம் ஆலோசித்து வரும் நிலையில் இது நிகழ்ந்துள்ளது.

    சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகி ஆண்டு முழுவதும் தங்களுடைய லீக் போட்டியில் விளையாடும்படி இங்கிலாந்தை சேர்ந்த 6 முன்னணி வீரர்களை சில ஐ.பி.எல். அணிகளின் உரிமையாளர்கள் சுமார் ரூ.50 கோடி வரை ஊதியமாக பேரம் பேசி உள்ளனர்.

    ஐ.பி.எல். அணிகள் உரிமையாளர்கள் சமீபகாலமாக தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், வெஸ்ட் இண்டீஸ் என பல நாடுகளில் நடைபெறும் லீக் போட்டிகளின் அணிகளையும் வாங்கி உள்ளன. இங்கிலாந்து வீரர்களை போல ஆஸ்திரேலிய 20 ஓவர் வீரர்களையும் அணுகி உள்ளனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தற்போதுள்ள 3+1 விதிகளின்படி அணியில் ஏற்கனவே உள்ள 3 வீரர்களையும் ரைட் டு மேட்ச் (ஆர்டிஎம்) மூலம் ஒருவரையும் தக்கவைத்துக்கொள்ள முடியும்.
    • இந்த எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு ஆதரவாகவும் எதிராகவும் குரல்கள் எழுந்துள்ளன.

    ஐபிஎல் 2024 தொடர் கோலாகலமாக நடந்து முடிந்துள்ள நிலையில் அடுத்த ஐபிஎல் தொடருக்காக இப்போதே ரசிகர்கள் காத்திருக்கத் தொடங்கிவிட்டனர். இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ, ஐபிஎல் 2025 தொடருக்கான ஆலோசனையில் இறங்கியுள்ளதாக தெரிகிறது.

    முன்னதாக அடுத்த ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் நடைபெற உள்ள நிலையில் அணிகளில் ரிடன்ஷன் விதிகளின்படி வீரர்களை தக்கவைத்துக் கொள்ளும் எண்ணிக்கையை அதிகரிக்க பிசிசிஐ தீவிரமாக ஆலோசித்து வருவதாக தெரிகிறது.

    தற்போதுள்ள 3+1 விதிகளின்படி அணியில் ஏற்கனவே உள்ள 3 வீரர்களையும் ரைட் டு மேட்ச் (ஆர்டிஎம்) மூலம் ஒருவரையும் தக்கவைத்துக்கொள்ள முடியும்.இந்த எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு ஆதரவாகவும் எதிராகவும் குரல்கள் எழுந்துள்ளன. ரிடன்க்ஷன் எண்ணிக்கையை அதிகரிப்பது ஏலத்தை அர்த்தமற்றதாகிவிடும் என்று சில ஐபிஎல் மூத்த அதிகாரிகள் அபிப்பிராயப்படுகின்றனர்.

     

    ஏலங்கள் ஐபிஎல் தொடர்களின் முக்கியமான அங்கம் என்றும் ஐபிஎல் போட்டிகளுக்கு இணையாக ஏலங்களும் தொடரை சுவாரஸ்யமானதாக மாற்றுகிறது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். ஐபிஎல் தொடருக்கு அழகு சேர்க்கும் ஏலங்கள், ரிடன்க்ஷன் எண்ணிக்கை 4 இல் இருந்து 6 முதல் 8 வரை அதிகரிக்கப்பட்டால் அதன் முக்கியத்துவத்தை இழந்துவிடும் என்றும் இது ஐபிஎல் தொடருக்கு ஆரோக்கியமானதாக இருக்காது என்றும் கூறப்படுகிறது.

     

     

    விராட் கோலி உள்ளிட்ட சில முக்கிய வீரர்களே ஒரே அணியின் அடையாளமாக மாறியுள்ளனர். அவர்கள் இதுநாள் வரை ஒரே அணிக்கு விளையாடி வருகின்றனர். மற்றைய வீரர்களும் ஒரே அணியின் அடையாளமாக மாறினால் ஏலம் எடுக்கும் முறை தேவைப்படாது. ஆனால் பெரும்பான்மை வீரர்கள் ஒரே அணியுடன் தங்களை ரசிகர்கள் மத்தியில் அடையாளப்படுத்திக்கொள்ள இன்னும் வெகு காலம் ஆகும். அதுவரை ஏல முறை தொடரவே செய்யும். இதுவே ரிட்டன்க்ஷன் முறைக்கு தீர்வாக இருக்குமே தவிர ரிட்டன்க்ஷன் எண்ணிக்கையை அதிகரிப்பது பயனற்றது என்று கூறப்படுகிறது.

    இதற்கு மாற்றுக்கருத்தாக, "ஐபிஎல் அணிகள் ஏலம் எடுத்த வீரர்கள் மீது அதிக அளவில் முதலீடு செய்கிறது, அவர்களுக்கு நேரத்தையும் பணத்தையும் செலவளித்து பயிற்சி தந்து தயார் படுத்துகிறது. இதனால் அந்த வீரர் அந்த அணியிலேயே தொடர்ந்து விளையாடுவதே நியாயமானதாக இருக்கும். இதற்கு ரிட்டன்க்ஷன் எண்ணிக்கையை அதிகரிப்பது மிகவும் பயனளிக்கும்" என்றும் சில மூத்த ஐபிஎல் அதிகாரிகளால் கூறப்படுகிறது.

     

    அடுத்த ஐபிஎல் தொடர்பாக பிசிசிஐ சார்பில் அணி உரிமையாளர்களுடன் சமீபத்தில் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அது நிகழவில்லை. புதியதாக செய்யவேண்டிய மாற்றங்கள் குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும் இது குறித்து ஐபிஎல் அணி உரிமையாளர்களின் கருத்துக்களை பெற்ற பின் முடிவு செய்யப்படும் என்றும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    ×