என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குபேர பூஜை"

    • ஸ்ரீலட்சுமி குபேர பூஜையின் போது குபேர யந்திரத்தை வைத்து வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும்.
    • சிவப்பு நிற பட்டுத் துணியின் மீது யந்திரத்தை வைத்து வைத்துத் தாமரை மலரைக் கொண்டு பூஜை செய்ய வேண்டும்.

    ஸ்ரீலட்சுமி குபேர பூஜையின் போது குபேர யந்திரத்தை வைத்து வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும்.

    பெரும் செல்வத்தை அளிக்கும் இந்த குபேர யந்திரத்தை, தீபாவளித் திருநாளில் மட்டுமன்றி, வியாழக்கிழமையும் பூச நட்சத்திரமும் கூடிய நாளிலும் செய்யலாம். குபேர யந்திரம் வரைவது எப்படி என்பதை அறிவோம்.

    புரசு இலையில் பலாச மலர்ச் சாறும் கோரோசனையும் சேர்த்து நாணல் தட்டையினால் எழுத வேண்டும். புரசு இலையும் பலாச மலரும் கிடைக்காதவர்கள் சந்தனம், பால் குங்குமம் கலந்த குழம்பால் எழுதலாம். அல்லது 3x3 அளவுள்ள தாமிரம், வெள்ளி அல்லது தங்கத் தகட்டில் யந்திரத்தை எழுதலாம்.

    சிவப்பு நிற பட்டுத் துணியின் மீது யந்திரத்தை வைத்து  தாமரை மலரைக் கொண்டு பூஜை செய்ய வேண்டும். இந்த வழிபாட்டின்போது, கட்டாயமாக 5 முகங்கள் கொண்ட குத்துவிளக்கில் நெய் தீபம் ஏற்ற வேண்டும்.



    இந்த வழிபாட்டை தீபாவளியில் தொடங்கி தொடர்ந்து 72 நாட்கள் பூஜை செய்துவர கோடி நன்மை கிடைக்கும். ஒவ்வொரு நாளும் குபேர மந்திரத்தை 1008 முறை உச்சரிக்க வேண்டும். 72 நாட்கள் பூஜை செய்ய முடியாதவர்கள் குபேர யந்திரத்தையும், லட்சுமி குபேரர் படத்தையும் வைத்து 48 நாட்கள் பூஜை செய்யலாம். இப்படி செய்துவர செல்வப் பெருக்கம் அதிகரிக்கும். இந்த யந்திர பூஜைக்கு கைமேல் பலன் கிடைக்கும்.

    வடக்கு முகம் நோக்கி அமரந்து பால் நைவேத்தியம் செய்ய வேண்டும். குபேர பூஜையுடன் தனலட்சுமி அல்லது சவுபாக்ய லட்சுமி படத்தையும் வைத்து பூஜிக்க வேண்டும்.

    ஸ்ரீலட்சுமி குபேர பூஜையுடன் நவகிரக பூஜையையும் செய்யலாம். கோதுமையில் சூரியனையும், நெல்லில் சந்திரனையும், துவரையில் அங்காரகனையும், பச்சைப் பயறில் புதனையும், கொண்டைக் கடலையில் குரு பகவானையும், மொச்சையில் சுக்கிரனையும், கறுப்பு எள்ளில் சனீஸ்வர பகவானையும், கறுப்பு உளுந்தில் ராகுவையும், கொள்ளில் கேதுவையும் ஆவாகனம் செய்து, நவகிரக ஸ்தோத்திரங்கள் பாராயணம் செய்து பூஜிக்கலாம்.

    • தீபாவளிக்கு முந்திய நாள் வீட்டில் லட்சுமி குபேர பூஜை செய்வதன் மூலம் செல்வ வளம் ஏற்படும்.
    • பிரிந்த குடும்பங்கள், மனங்கள் ஒன்று சேர்வதற்கும் தீபாவளி பண்டிகை பெரும் உதவியாக அமைகிறது.

    தீபாவளி என்றால் அதற்கு விளக்குகளின் வரிசை என்று பொருளாகும். தமிழகத்தில் அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் வரும் அமாவாசை தினத்தன்று தீபாவளி கொண்டாடப்படுகிறது. அந்த நாளன்று அதிகாலையில் பூஜை அறையில் 5, 9, 11 ஆகிய எண்ணிக்கைகளில் வரிசையாக தீபம் ஏற்றி வைத்து கடவுளை வழிபடுவது மரபாக கடைபிடிக்கப்படுகிறது.

    அன்று மாலை வீட்டின் முன்னால் குறைந்தபட்சம் இரு அகல் விளக்குகளாவது ஏற்றி வைப்பதும் ஐதீகமாகும். மற்ற நாட்களை விட தீபாவளி நாளில் தான் செல்வத்தின் அதிபதியான மகாலட்சுமி, வைத்திய கடவுளான தன்வந்திரி, மனித ஆயுளுடன் தொடர்பு கொண்ட எமதர்மன் ஆகியோர் ஆசிகளை வழிபாட்டின் மூலம் பெற முன்னோர்கள் வழிகாட்டியுள்ளனர்.

    மேலும், தீபாவளி அன்று எல்லா தேவதைகளும் பண்டிகை பொருட்களில் வாசம் செய்வதாகவும் ஒரு நம்பிக்கை இருக்கிறது. தலைக்கு தேய்த்துக் குளிக்கும் நல்லெண்ணையில் மகாலட்சுமியும், அரப்பு அல்லது சிகைக்காய் தூளில் சரஸ்வதி தேவியும், நெற்றியில் இடும் சந்தனத்தில் பூமாதேவியும், குங்குமத்தில் கௌரியும், பூக்களில் மோகினி, தண்ணீரில் கங்கையும், நாம் அணியும் புத்தாடைகளில் மகாவிஷ்ணுவும், இனிப்பு பலகாரங்களில் அமிர்தமும், தீபச்சுடரில் பரமாத்மாவும் இருப்பதாகவும் சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    வழக்கமாக தீபாவளியன்று அதிகாலையில் தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து வெந்நீரில் குளிப்பது வழக்கம். அதன் மூலம் நம்மிடம் உள்ள தீமைகள் அழிந்து, நல்லவை வந்து சேரும் என்பது நம்பிக்கையாகும். அவ்வாறு குளிக்கும் தண்ணீரில் அன்று ஒரு நாள் காலையில் மட்டும் கங்கை இருப்பதாக ஐதீகம். எனவே, அதில் சிறிது பசும்பால் கலந்து குளிப்பதும் மகாலட்சுமியின் அருளை பெற்றுத் தரும்.

     

    தீபாவளிக்கு முந்திய நாள் வீட்டில் லட்சுமி குபேர பூஜை செய்வதன் மூலம் செல்வ வளம் ஏற்படும். அந்த பூஜையில் ஐந்து விதமான பழ வகைகள் மற்றும் மூன்று விதமான பூக்களை படைப்பது விசேஷம். பழ வகைகளில் மாதுளை, செவ்வாழை, நெல்லிக்கனி ஆகியவை முக்கியம். பூ வகைகளில் தாமரை, மல்லிகை, செவ்வந்தி ஆகியவை சிறப்பிடம் பெறுகின்றன. அவ்வாறு லட்சுமி குபேர பூஜை செய்த பிறகு வீட்டில் உள்ள பெரியோர்களிடம் ஆசிர்வாதம் பெறுவதன் மூலம் சகல மங்களமும் நிலைக்கும் என்ற ஐதீகம் ஆண்டாண்டு காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    தீபாவளி நாளன்று வீட்டில் கரும்பு வைத்து மகாலட்சுமியை வழிபாடு செய்வதும் வட இந்திய மாநிலங்களில் வழக்கமாக இருந்து வருகிறது. அதன் மூலம் அவர்கள் வீட்டில் செல்வ வளம் பெருகுவதாக நம்புகிறார்கள். அத்துடன் வீட்டின் தலைவாசல், கதவு நிலைகள் ஆகியவற்றுக்கு சாமந்திப்பூக்களை கொண்டு வித விதமாக அலங்காரங்கள் செய்கிறார்கள்.

    அத்துடன், அன்று மாலை நேரம் செல்வத்தின் கடவுளான மகாலட்சுமியை வரவேற்கும் விதமாக வீட்டு வாசலில் இருபுறமும் அகல் விளக்குகளை ஏற்றி வைக்கிறார்கள். தீபாவளி தினத்தன்று பட்டாசுகளை வெடித்து கொண்டாடும் முறையிலும் ஒரு உள்ளர்த்தம் இருக்கிறது. அதாவது இருள் விலகி ஒளி பெருகுவது, தீமை விலகி நன்மையின் வெளிச்சம் ஏற்படுவது என்ற அர்த்தத்தில் மக்கள் விளக்கேற்றுவதுடன், பட்டாசுகளை வெடித்து தீபாவளி கொண்டாடுகிறார்கள்.

    அத்துடன் மகிழ்ச்சியை ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரம் தெரிவித்துக் கொள்ளும் வகையில் இனிப்புகளை வழங்கியும், புத்தாடைகளை அணிந்தும், அவற்றை பரிசுகளாக வழங்கியும் குடும்பத்துடனும் நண்பர்களுடனும் தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடுகிறார்கள்.

    சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் தீபாவளி நன்னாள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்றாலும், இன்னொரு முக்கியமான சடங்கும் அதன் கொண்டாட்டத்தில் அடங்கியிருக்கிறது. அதாவது, ஏதேனும் ஒரு காரணத்திற்காக குடும்பங்களில் ஒருவரோடு ஒருவர் பேசாமல், தொடர்பு கொள்ளாமல் இருந்தால் தீபாவளி நாளை முன்னிட்டு அவர்கள் ஒன்று சேர்வதற்கு உறவினர்கள் முயற்சிப்பார்கள்.

    அந்த வகையில், பிரிந்த குடும்பங்கள், மனங்கள் ஒன்று சேர்வதற்கும் தீபாவளி பண்டிகை பெரும் உதவியாக அமைகிறது. அவ்வாறு இணைந்த குடும்பங்களில் இரவு முழுவதும் சுடர் விடும்படி மாணிக்க தீபம் என்ற அகண்ட தீபத்தை ஏற்றி வைப்பார்கள். அதன் மூலம் அவரவர் குலதெய்வம் மற்றும் மகாலட்சுமியின் அருள் கிடைப்பதாக பொதுமக்களிடையே ஒரு பாரம்பரியம் உள்ளது.

    • லட்சுமி மற்றும் குபேர பகவானை வழிபடும்போது நாணய வழிபாடு மிகவும் முக்கியமானது.
    • குபேர பகவானின் 108 போற்றிகளை மனதார உச்சரிக்க வேண்டும்.

    தீபாவளி அன்று லட்சுமி குபேர பூஜையோடு குபேர பகவானுக்கு நாணய வழிபாடு செய்தால் செல்வத்தையும், ஐஸ்வரியத்தையும் அள்ளித்தருவார் என்பது நம்பிக்கை. குறிப்பாக லட்சுமி மற்றும் குபேர பகவானை வழிபடும்போது இந்த நாணய வழிபாடு மிகவும் முக்கியமானது. இந்த வழிபாட்டில், நாணயங்களை வைத்து அர்ச்சனை செய்வது, குபேரர் மற்றும் லட்சுமி தேவியின் அருள் பெறவும், பொருளாதார கஷ்டங்களை நீக்கி, நிலையான செல்வத்தை பெற உதவும் என்பது நம்பிக்கை.

    குபேர பகவானுக்கு உகந்த எண் 5. அதனால் ஒரு தட்டில் உங்கள்  கை நிறையும் அளவிற்கு 5 ரூபாய் நாணயங்களைப் போட்டு, அதைத் தட்டில் இருந்து இரு கைகளாலும் அள்ளி எடுப்பதும், மீண்டும் தட்டில் போடுவதுமாக இந்த வழிபாட்டைச் செய்ய வேண்டும்.

    இப்படி செய்யும் போது குபேர பகவானின் 108 போற்றிகளை மனதார உச்சரிக்க வேண்டும். போற்றி சொல்லியபடியே தட்டில் உள்ள நாணயங்களை இரு கைகளால் அள்ளி எடுப்பதும், மீண்டும் தட்டிலேயே போடுவதுமாக இருக்க வேண்டும். இவ்வாறு செய்வதால், நாணயங்களில் இருந்து ஒலி எழும்பும். அந்த ஒலியோடு சேர்ந்து குபேர மந்திரங்களை சொல்ல வேண்டும்.

    நாணய பூஜை செய்து முடித்தவுடன் பால் மற்றும் சர்க்கரை கலந்த சிவப்பு அவல் நைவேத்யம் செய்து, தீப தூபம் காட்டி நாணய வழிபாடு பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.

    தீபாவளி அன்று குபேர பகவானுக்காகச் செய்யப்படும் இந்த நாணய வழிபாடு, நிலையான செல்வத்தை நமக்கு அருளும் என்பது நம்பிக்கை.

    இந்த வழிபாட்டை தீப ஒளித் திருநாளன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், பிற்பகல் 1 மணி முதல் 2 மணி வரையும் அல்லது இரவு 8 மணி முதல் 9 மணி வரை புதன் ஓரையில் செய்ய வேண்டும்.

    • பல தலைமுறையாகத் தீராத கடன் தீரும். வாராக் கடன் வசூலாகும்.
    • நீண்ட நாள் நிலுவையில் இருந்த தீர்க்கமுடியாத சொத்து தொடர்பான வழக்குகள் கூட முடிவுக்கு வரும்.

    தொழில் ரீதியிலான வளர்ச்சி வேண்டுமென்றால் லட்சுமி குபேர பூஜையைத் தொடர்ந்து செய்ய வேண்டும். அப்படி செய்யும் போது தொழில் மேன்மை பெறும். வீட்டிலும் எப்போதும் தானிய வகைகள் நிரம்பி இருக்கும். உத்தியோகம், ஊதிய உயர்வு மற்றும் பணவரவு அதிகரிக்கும்.

    லட்சுமி குபேர பூஜை செய்தால் அந்த லட்சுமி குபேரர் உங்களின் தீராத கடன்களையும் தீர்ப்பார் என்பது நம்பிக்கை. பல தலைமுறையாகத் தீராத கடன் தீரும். வாராக் கடன் வசூலாகும். கடன் தீர்வது மட்டுமின்றி உங்களுக்கு கிடைக்கும் சொத்து பல்கிப் பெருகி பல தலைமுறைகளுக்கு நிலைத்து நிற்கும்.

    நீண்ட நாள் நிலுவையில் இருந்த தீர்க்கமுடியாத சொத்து தொடர்பான வழக்குகள் கூட முடிவுக்கு வரும். குடும்பத்தில் சந்தோஷமும் நிம்மதியும் பெருகும்.

    பணம், சொத்து என பொருளைத்தேடி ஓடிக்கொண்டே இருக்கும் மனிதன் அதை சம்பாதிக்கும் போது பலரது ஆசிகளை இழப்பது மட்டுமின்றி அறிந்தோ, அறியாமலோ பலவித பாவங்களையும், சாபத்தையும் சம்பாதிக்கிறான். ஒருவருக்கு கெடுதல் செய்தால் தான் பாவம் என்று அர்த்தமில்லை. ஒருவரை மனதளவில் காயப்படுத்திவிட்டாலும் அதுவும் பாவம் தான்.

    காலம் முழுவதும் தான் சுகமாக வாழ பிறரை வஞ்சித்தும், சாபத்தைப் பெற்றும் வாழும் மனிதர்களுக்கு அருளோ கடவுளின் ஆசியோ கிடைப்பதரிது. ஏனென்றால் குரோதம், மோகம், ஆணவம் ஆகிய இம்மூன்றும் செல்வத்தால், பொருளால் வருவது. இவை இருந்தால் நிச்சயமாக கடவுளின் அருள் கிடைக்காது.



    பாவங்களைப் போக்க என்ன செய்ய வேண்டும். கோவிலுக்கு சென்றால் பாவங்கள் போய்விடுமா என்றால் அதுதான் இல்லை. ஏனென்றால் கோவில்களுக்குச் செல்வதால்- தானதர்மம் வழங்குவதால் ஒருவர் பாவங்களை ஒருபோதும் அழிக்கமுடியாது. சக மனிதர்களிடம் அன்பு, பணிவு, அமைதி ஆகியவை இருந்தால், கடவுளின் அருளோடு பொருளும் தானாக வந்துசேரும்.

    உங்களின் பாவங்களைப் போக்கி இந்த தீப ஒளித் திருநாளை மகிழ்ச்சியாக கொண்டாட லட்சுமி குபேரரிடம், அறிந்தும் அறியாமலும் செய்த தவறுக்கு மன்னிப்புக் கோரி வழிபாடு செய்யுங்கள். இறை அருளோடு நிரம்பிய பொருள் பெற்று நல்வாழ்வு பெறுங்கள்.

    • குபேரன் நீங்காத செல்வத்தை அள்ளித் தருபவர்.
    • செல்வத்தையும், வளத்தையும் கொடுக்கும் அதிபதியாக விளங்குகின்றார் குபேரன்.

    செல்வத்துக்கு அதிபதியான லட்சுமியையும், அதனை காக்கும் குபேரனையும் தீபாவளி திருநாளில் ஒரு சேர தரிசித்து வந்தால், அவர்கள் வாழ்வில் செல்வம் செழிக்கும்.

    ஸ்ரீ லட்சுமி குபேரன் வாழப்பிறந்தவனுக்கு வடக்கு என்ற பழமொழி உருவானது. குபேரன் நீங்காத செல்வத்தை அள்ளித் தருபவர். ஆனால் செல்வத்துக்கு கடவுள் மகாலட்சுமி. செல்வத்தை பக்தர்களுக்கு முறையாக பகிர்ந்து அளிக்க அவர் பணித்தார். எனவே தான் குபேரன் லட்சுமி குபேரன் என்று அழைக்கப்படுகிறார்.

    குபேர பூஜையினை புதன் ஓரையில் செய்வது மிகுந்த செல்வ வளத்தினை தரும். மேலும் குபேரன் பிறந்த நட்சத்திரமாக கருதப்படும் பூச நட்சத்திரத்தன்றோ அல்லது வியாழக்கிழமை நாட்களிலோ வழிபாடு செய்வது மிகுந்த நன்மை தரும்.

    குபேரனுடைய நடத்தையை மெச்சி, எட்டு திசைகளில், ஒன்றான வடக்கு திசைக்கு அதிபதியாக குபேரனை நியமனம் செய்தார் பார்வதி தேவி. செல்வத்தையும், வளத்தையும் கொடுக்கும் அதிபதியாக விளங்குகின்றார் குபேரன். அவரை வணங்கினால், செல்வம் பெருகும், வளம் கொழிக்கும் என்பது நம் முன்னோர்கள் நம்பிக்கையாகும்.

    • பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் விரதம் இருந்து லட்சுமி குபேர பூஜை செய்யலாம்.
    • தாம்பூலத்தில் வைத்திருந்த தட்சணையை ஏழை சுமங்கலிகளுக்கு கொடுப்பது சிறப்பு.

    தீபாவளியை ஒட்டி மக்கள் செய்யும் வழிபாட்டில் குபேர லட்சுமி வழிபாடு முக்கியமானது. இந்த பூஜை செய்வதால் நம் இல்லத்தில் சகல ஐஸ்வரியங்களும் பெருகும் என்பது ஐதீகம். பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் விரதம் இருந்து லட்சுமி குபேர பூஜை செய்யலாம்.

    பூஜைக்கான ஏற்பாடுகளை தீபாவளிக்கு முந்தைய நாள் இரவே செய்து முடித்துவிடுவது நல்லது.

    தீபாவளி அன்று அதிகாலையிலேயே எழுந்து கங்கா நீராடல் செய்த பிறகு, பூஜை அறையில் லட்சுமி குபேரர் படம் மற்றும் குபேர யந்திரத்தை கிழக்கு அல்லது மேற்கு திசை பார்த்தபடி வைத்து, பூஜையறையையும் தெய்வத் திருவுருவங்களையும் மலர்களால் அலங்காரம் செய்யவேண்டும்.

    லட்சுமி குபேரர் படத்துக்கு மஞ்சள், குங்குமம் இட வேண்டும். சுவாமி படத்துக்கு முன்பாக தலை வாழை இலை விரித்து, அதில் நவதானியங்களைத் தனித்தனியாகப் பரப்ப வேண்டும். நடுவில் சுத்தமான தண்ணீர் நிரம்பிய சொம்பை வைத்து, தண்ணீரில் சிறிது மஞ்சள் சேர்க்க வேண்டும்.

    பிறகு, சொம்பின் வாயில் மாவிலைக் கொத்தைச் செருகி, அதன் நடுவில் ஒரு தேங்காயை மஞ்சள் பூசி, நிறுத்தின வாக்கில் வைக்க வேண்டும். வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் முதலான நிவேதனப் பொருட்களோடு, தட்சணையாக பணம் மற்றும் சில்லறை நாணயங்களையும் சேர்த்து, கலசத்துக்கு முன்பாக வைக்க வேண்டும்.

    தொடர்ந்து, மஞ்சளில் பிள்ளையார் பிடித்து, வாழை இலையின் வலது பக்கமாக வைக்க வேண்டும். அவருக்குக் குங்குமம் இட்டு அலங்கரிக்க வேண்டும். அதன்பிறகு, முழுமுதற் கடவுள் விநாயகர் வழிபாட்டோடு பூஜையை ஆரம்பிக்க வேண்டும். பிள்ளையார் மந்திரம், அஷ்டோத்திரம் சொல்லி வழிபடலாம். விநாயகரை வழிபட்ட பிறகு, மகாலட்சுமியின் ஸ்தோத்திரப் பாடல்களை பாராயணம் செய்ய வேண்டும். ஆனைமுகனே போற்றி.. விநாயகா போற்றி... அஷ்டலட்சுமியே போற்றி... குபேர லட்சுமியே போற்றி.. தனலட்சுமியே போற்றி.. என, அருள் தரும் தெய்வப் போற்றிகளைச் சொல்லியும் வழிபடலாம்.

    தொடர்ந்து, குபேர ஸ்துதியைச் சொல்லி வழிபட வேண்டும். ஸ்துதி தெரியாதவர்கள், குபேராய நமஹ... தனபதியே நமஹ.. என்று துதித்து, உதிரிப் பூக்களை கலசத்தின் மீது போட்டு அர்ச்சனை செய்ய வேண்டும். அர்ச்சனை செய்து முடித்ததும் வாழைப்பழம், காய்ச்சிய பசும்பால், பாயாசம் ஆகியவற்றை லட்சுமி குபேரருக்கு நைவேத்யம் செய்து, கற்பூர தீபாராதனையோடு பூஜையை நிறைவு செய்யவேண்டும். தாம்பூலத்தில் வைத்திருந்த தட்சணையை ஏழை சுமங்கலிகளுக்கு கொடுப்பது சிறப்பு. தீபாவளி அன்று லட்சுமி குபேர பூஜை செய்வதால், சங்கடங்கள், காரியத்தடைகள் நீங்கும். கடன் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம்; நம் இல்லத்தில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.

    • பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் செட்டிகுளத்தில் காமாட்சி உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
    • குபேர யாக வேள்வியில் கலந்து கொள்வதால் செல்வ வளம் பெருகும், கடன் பிரச்சினைகள் தீரும் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் செட்டிகுளத்தில் காமாட்சி உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 12 ராசிகளுக்கும் 12 தூண்களில் 12 குபேர பெருமான் வீற்றிருப்பது தனிச் சிறப்பாகும்.

    மேலும் சித்திரலேகா சமேத குபேர பெருமான் தனி சந்நிதியில் வீற்றிருக்கிறார். ஒவ்வொரு மாதமும் பூரட்டாதி நட்சத்திரம் அன்று குபேர யாக வேள்வி நடைபெறும். அதன்படி ஆவணி மாத குபேர யாக வேள்வி நடைபெற்றது.

    கணபதி ஹோமத்தோடு தொடங்கிய யாக வேள்வியில் பல்வேறு மூலிகை பொருட்கள் இடப்பட்டு மஹா பூர்ணாஹூதி, அதனையடுத்து சித்திரலேகா சமேத குபேர பெருமானுக்கு திரவியம், பால், தயிர், சந்தனம், மஞ்சள் மற்றும் ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட கலச தீர்த்தங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர் அலங்காரத்தோடு மஹா தீபாரதனை நடைபெற்றது.

    குபேர யாக வேள்வியில் கலந்து கொள்வதால் செல்வ வளம் பெருகும், கடன் பிரச்சினைகள் தீரும் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    ×