என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏடிஎம் கார்டுகள்"

    • இந்த கட்டணம் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் சில தனியார் வங்கிகளுக்கு இடையே வேறுபட்டு காணப்படுகின்றன.
    • கனரா வங்கியின் அனைத்து சேமிப்பு வங்கி கணக்குகளிலும் குறைந்தபட்ச இருப்பு தொகையை பராமரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்துள்ளது.

    சென்னை:

    வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுப்பது தொடர்பாக கட்டண விதிமுறைகளில் மாற்றம் செய்து ரிசர்வ் வங்கி சீரான இடைவௌியில் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. இதனை வங்கிகள் பின்பற்றி வாடிக்கையாளர்களிடம் இருந்து கட்டணம் வசூலித்து வருகின்றன.

    அதன்படி, வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிகளின் ஏ.டி.எம்.களில் இருந்து ஒரு மாதத்திற்கு 5 முறை இலவசமாக பணம் எடுக்க முடியும். தங்கள் வங்கி அல்லாத மற்ற வங்கிகளின் ஏ.டி.எம்.களில் இருந்து பெருநகரங்களில் ஒரு மாதத்துக்கு 3 முறையும், கிராமப்புறங்களில் 5 முறையும் இலவசமாக பணம் எடுத்து கொள்ளலாம்.

    ஏ.டி.எம்.களில் நிர்ணயிக்கப்பட்ட இந்த அளவை தாண்டி பணம் எடுக்கும்போது ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் வாடிக்கையாளர்களிடம் இருந்து வங்கிகள் கட்டணம் வசூலிக்கின்றன. இந்த கட்டணம் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் சில தனியார் வங்கிகளுக்கு இடையே வேறுபட்டு காணப்படுகின்றன. புதிய கட்டணத்தை பெரும்பாலான வங்கிகள் கடந்த மே மாதம் அமல்படுத்தின.



    இந்தநிலையில், இந்தியன் வங்கி சார்பில் அதன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு எஸ்.எம்.எஸ். (குறுந்தகவல்) பறந்தது. அதில், "ஜூலை 1-ந்தேதி முதல் இலவசமாக அனுமதிக்கப்பட்ட தடவைகளை தாண்டி பிற வங்கி ஏ.டி.எம்.களில் மேற்கொள்ளப்படும் நிதி பரிவர்த்தனைகளுக்கு ரூ.23 மற்றும் ஜி.எஸ்.டி.யும், நிதி அல்லாத சேவைகளுக்கு செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு ரூ.11 மற்றும் ஜி.எஸ்.டி.யும் விதிக்கப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.

    இந்தியன் வங்கி வாடிக்கையாளர்கள் இலவசமாக அனுமதிக்கப்பட்ட தடவைகளை தாண்டி பிற வங்கி ஏ.டி.எம்.களில் பணம் எடுக்கும்போது ரூ.21 மற்றும் ஜி.எஸ்.டி. வரியாக 3 ரூபாய் 78 காசுகள் சேர்த்து 24 ரூபாய் 78 காசுகள் தற்போது வசூலிக்கப்படுகிறது. ஜூலை 1-ந் தேதிக்கு பிறகு இந்த கட்டணம் ரூ.2 அதிகரித்து 26 ரூபாய் 78 காசுகள் என்ற அளவுக்கு உயரலாம் என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பிற வங்கிகளின் ஏ.டி.எம்.களில் பணம் எடுக்கும்போது, நாம் கணக்கு வைத்திருக்கும் வங்கிகள், அந்த வங்கிகளுக்கு தங்களது வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றியதற்காக ஏ.டி.எம். உள்பரிமாற்ற கட்டணங்களை செலுத்தும். அதற்காகவே பிற வங்கிகளின் ஏ.டி.எம்.களில் பணம் எடுக்கும்போது, கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    இதேபோல சில தனியார் வங்கிகளும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு பிற வங்கிகளில் அனுமதிக்கப்பட்ட தடவைகளை தாண்டி பணம் எடுப்பதற்கான கட்டண உயர்வை ஜூலை 1-ந் தேதி முதல் அமல்படுத்துவதாக தெரிவித்துள்ளன. இதற்கிடையே கனரா வங்கியின் அனைத்து சேமிப்பு வங்கி கணக்குகளிலும் குறைந்தபட்ச இருப்பு தொகையை பராமரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    சோழிங்கநல்லூரில் ஏ.டி.எம். கொள்ளையன் பிடிபட்டார். இது தொடர்பாக அவரது நண்பரை போலீசார் தேடி வருகின்றனர்.
    சென்னை:

    காஞ்சீபுரம் மாவட்டம் சோழிங்கநல்லூரில் உள்ள தங்கும் விடுதியில் பல்கேரியா நாட்டை சேர்ந்த பீட்டர் (வயது 47) தனது நண்பருடன் தங்கி இருந்தார். நேற்று காலை அவர்கள் ஓட்டல் அறையை காலி செய்து விட்டு வெளியே வரும்போது அவர்களது பையில் இருந்து ஏராளமான ஏ.டி.எம். கார்டுகள் இந்திய பணம் மற்றும் அமெரிக்க டாலர்கள் கீழே விழுந்தன. இதை பார்த்த விடுதி ஊழியர் சந்தேகத்தின் பேரில் பீட்டரை பிடித்து செம்மஞ்சேரி போலீசில் ஒப்படைத்தார்.

    அவருடன் தங்கி இருந்த அவரது நண்பர் தப்பி ஓடி விட்டார். போலீஸ் விசாரணையில் அவர்கள் போலியாக ஏ.டி.எம். கார்டுகள் தயாரித்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

    அவரிடம் இருந்து 50 போலி ஏ.டி.எம்.கார்டுகள், ரூ.10 லட்சம் இந்திய பணம், ரூ.3 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர், போலி ஏ.டி.எம். கார்டுகள் தயாரிக்க பயன்படும் ‘ஸ்கிம்மர்’ கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவர் விசாரணைக்காக மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.

    தப்பி ஓடிய அவரது நண்பரை போலீசார் தேடி வருகின்றனர். எந்தெந்த ஏ.டி.எம்.களில் அவர்கள் பணத்தை கொள்ளையடித்தனர்?. எவ்வளவு பணம் அவர்களால் கொள்ளையடிக்கப்பட்டது? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
    புதிய கார்டுகள் வழங்கப்படுவதால், ‘சிப்’ பொருத்தப்படாத ஏ.டி.எம். கார்டுகள் செயல் இழந்துவிடாது என்றும், தொடர்ந்து செல்லுபடியாகும் என்றும் வங்கி அதிகாரிகள் விளக்கம் அளித்து உள்ளனர். #ATMCard
    சென்னை:

    முன்பெல்லாம் ஒரு வங்கியில் கணக்கு வைத்து பராமரிப்பது என்பதே பெரிய விஷயமாக இருந்தது. ஆனால் இப்போது பல வங்கிகளில் கணக்குகள் இருப்பது பெரும்பாலானவர்களுக்கு சர்வ சாதாரணமாகிவிட்டது. அதனால் பலருடைய பாக்கெட்டுகளையும் வண்ண, வண்ண கலரிலான ஏ.டி.எம். டெபிட், கிரெடிட் கார்டுகள் அலங்கரித்து வருவதை பார்க்கமுடிகிறது.

    முன்பு உள்ள ஏ.டி.எம். கார்டுகளில் ரகசிய குறியீட்டு எண் (4 இலக்க பாஸ்வேர்ட்) இல்லாமல் மற்றொருவர் பணம் எடுத்து மோசடி செய்யும் நிலை இருந்தது. இதனால் அந்த ஏ.டி.எம். கார்டுகள் பாதுகாப்பு இல்லாததாக வங்கிகள் கருதின. இதையடுத்து புதிய தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கிய ‘சிப்’ பொருத்தப்பட்ட ஏ.டி.எம். கார்டுகளுக்கு மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கான பணிகளில் வங்கிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.


    பழைய ஏ.டி.எம். கார்டுகள் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு புதிய ஏ.டி.எம். கார்டுகளை வங்கிகள் கொடுத்து வருகின்றன. இந்தநிலையில் ‘சிப்’ பொருத்தப்படாத ஏற்கனவே இருக்கும் பழைய ஏ.டி.எம். கார்டுகள் டிசம்பர் 1-ந்தேதி (நேற்று) முதல் செயல் இழந்துவிடும் என்று தகவல் பரவியது. இதனை வங்கி அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

    மேலும் படிப்படியாக புதிய தொழில்நுட்பத்துக்கு ஏ.டி.எம். கார்டுகள் மாற்றப்பட்டு வருவதாகவும், பழைய ஏ.டி.எம். கார்டுகள் தொடர்ந்து செல்லுபடியாகும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.  #ATMCard
    ×