search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "indian bank"

    • புதிதாக பாஸ்புக் வேண்டும் என தனது புகைப்படத்தை கொடுத்து ஏழுமலையின் பெயரில் புதிய பாஸ்புக்கை வாங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
    • அதிர்ச்சி அடைந்த ஏழுமலை மீண்டும் வங்கிக்கு சென்று வங்கி அதிகாரிகளிடம் முறையிட்டார்.

    சென்னை:

    சென்னை எம்.ஜி.ஆர். நகர் சத்யா நகரில் வசித்து வருபவர் ஏழுமலை. இவர் மாநகரப் பேருந்து பஸ் கண்டக்டராக கே.கே. நகர் பணிமனையில் பணிபுரிந்து வருகிறார்.

    இவர் கடந்த மாதம் 24- ந் தேதி அசோக் நகர் பகுதியில் இருந்து கே.கே. நகர் பணிமனைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அந்த வழியாக அதே பணிமனையில் டிரைவராக பணிபுரிந்து வரும் அலெக்சாண்டர் ராஜா என்பவர் ஏழுமலையின் இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு ஏறி உள்ளார். அப்போது கே.கே. நகர் பணிமனையின் அருகில் ஏழுமலையின் இருசக்கர வாகனம் விபத்துக்கு உள்ளானது.

    ஏழுமலைக்கு அசோக் நகரில் உள்ள இந்தியன் வங்கியில் சேமிப்பு கணக்கு உள்ளது. கடந்த 13-ந் தேதி வங்கி கணக்கில் இருந்து 800 ரூபாய் எடுக்கப்பட்டது. அதற்கான குறுஞ்செய்தி தனது செல்போனுக்கு வந்ததால் அதிர்ச்சி அடைந்த ஏழுமலை அசோக் நகரில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் விசாரித்தார்.

    அப்போது வேறு ஒரு நபர் ஆதார் எண் மற்றும் ஏ.டி.எம். கார்டை காண்பித்து தனது பாஸ்புக் காணவில்லை என்றும் இதனால் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்து 800 ரூபாயை எடுத்து கொண்டு சென்றது தெரிய வந்தது. ஏழுமலையின் கை யெழுத்தை அலெக்சாண்டர் ராஜாவே போலியாக போட்டு பணம் கேட்டு உள்ளார். கையெழுத்தில் சந்தேகம் ஏற்படவே வங்கி அதிகாரிகள் அவரை விசாரித்துள்ளனர். நீண்ட காலமாக தனது கையெழுத்து மாறி உள்ளதாகவும் தற்போது தான் நேரடியாக வங்கிக்கு வந்து பணம் எடுப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.

    இதனால் சந்தேகம் அடைந்த ஏழுமலை சம்பந்தப்பட்ட நபரின் புகைப்படம் மற்றும் ஆவணங்கள் வங்கி அதிகாரிகளிடம் கேட்டார். அப்போதுதான் டிரைவர் அலெக்சாண்டர் ராஜா தனது பெயரில் போலியாக ஆதார் அட்டையில் புகைப் படத்தை மார்பிங் செய்து வங்கியில் கொடுத்ததும் அதேபோல் தனக்கு பாஸ்புக் இல்லை என்றும் புதிதாக பாஸ்புக் வேண்டும் என தனது புகைப்படத்தை கொடுத்து ஏழுமலையின் பெயரில் புதிய பாஸ்புக்கை வாங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    அதுமட்டுமின்றி ஏழுமலையின் வங்கிக் கணக்கில் இருந்து 10 லட்ச ரூபாய் தனக்கு கடன் வேண்டுமென இந்தியன் வங்கிக் கிளையில் கேட்டு அதற்கான விண்ணப்பத்தையும் பூர்த்தி செய்து கொடுத்து உள்ளார்.

    நேற்று மீண்டும் ஏழுமலைக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் இந்தியன் வங்கி மூலம் பத்து லட்ச ரூபாய் கடன் பெற்றுக் கொள்ளலாம் என வந்து உள்ளது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஏழுமலை மீண்டும் வங்கிக்கு சென்று வங்கி அதிகாரிகளிடம் முறையிட்டார்.

    அதன் பிறகு ஏழுமலை நண்பர்களுடன் சேர்ந்து கையும் களவுமாக வங்கிக்கு வந்த அலெக்சாண்டர் ராஜாவை பிடித்தனர். காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    லிப்ட் கேட்டபோது கீழே விழுந்த ஏழுமலையின் மணிபர்சில் இருந்து ஆவணங்களை எடுத்து அலெக்சாண்டர் ராஜா கைவரிசை காட்டி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    • பொதுமக்கள் வலியுறுத்தல்
    • ஏராளமான விவசாயிகள் கலந்து கலந்து கொண்டனர்

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றியம்,பாணாவரம் அடுத்த வெளிதாங்கிபுரம் ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு கிராம சபா கூட்டம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார்.

    துணைத்தலைவர் தணிகைமலை, வார்டு உறுப்பினர் செல்லப்பன் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பளாராக மாவட்ட ஊராட்சிக்குழு மற்றும் திட்டகுழு உறுப்பினர் சுந்தரம்மாள், நெமிலி ஒன்றிய செயலாளர் எஸ்.ஜி.சி.பெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில், வெளிதாங்கிபுரம் மக்கள் அளித்த கோரிக்கை மனுவில்,'எங்கள் பகுதியில் 1,500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

    வெளிதாங்கிபுரம் கிராமத்தில் ஏராளமான விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் உள்ளனர். இங்குள்ள விவசாயிகள் வங்கி கடன், பயிர் கடன் பெறவும், மாணவர்கள் கல்வி கடன் பெறவும், தேசியமயமாக்கப்பட்ட வங்கி தேவைப்படுகிறது.மேலும், வெளிதாங்கிபுரம் கிராமத்தில் ஏழை மக்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை செய்து வருகின்றனர்.

    இந்ததிட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் வங்கி கணக்கை துவக்க ஏதுவாக, இந்தியன் வங்கியின் கிளையை வெளிதாங்கிபுரத்தில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

    • ம.தி.மு.க. தலைமை நிலைய செயலர் துரை வைகோ வங்கி கிளை அமையவுள்ள இடத்தை பார்வையிட்டார்.
    • லேப் டெக்னீசியன் உள்ளிட்ட ஊழியர்களை சந்தித்து கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டியையடுத்த வில்லிசேரியில் இந்தியன் வங்கியின் கிளை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ம.தி.மு.க. தலைமை நிலைய செயலர் துரை வைகோ வங்கி கிளை அமையவுள்ள இடத்தை பார்வையிட்டார். அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த மக்களிடம், தங்கள் பகுதிக்கு நீண்ட நாள் கோரிக்கையான தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளை அமைய வுள்ளது. தாங்கள் அதை முறையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

    மேலும், அங்கிருந்த வங்கியின் மண்டல அலுவலக மேலாளர் பகவதி, வங்கி கிளை மேலாளர் ரகுநாத் ஆகியோருடன் வங்கி பணிகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது, வில்லிசேரி ஊராட்சி தலைவர் வேலன், துணைத் தலைவர் காசிராஜன், வில்லிசேரி வார்டு உறுப்பினர் கிருபா மற்றும் ம.தி.மு.க. நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர். தொடர்ந்து அவர், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று, அங்கு பணியில் இருந்த மருத்துவர் சரவணகுமார், லேப் டெக்னீசியன் உள்ளிட்ட ஊழியர்களை சந்தித்து கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

    மேலும், தங்கள் மருத்துவ மனையில் மேம்படு த்தப்பட்ட மருத்துவ மனை யாக மாற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கூறினார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் பேசியதாவது:-

    வில்லிசேரி மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் ஏராள மானோர் வெளிநாடுகளில் பணி புரிந்து வருகின்றனர். வங்கி பரிவர்த்தனைகளுக்காக பல கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டிய நிலை இருந்தது.

    இதை தவிர்ப்பதற்காக, வில்லிசேரி கிராமத்தில் வங்கி கிளை தொடங்க வேண்டும் என ம.தி.மு.க. பொதுசெயலர் வைகோ 2021 டிசம்பரில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கோரிக்கை மனு அனுப்பி வைத்தார். அதற்கு மத்திய நிதி அமைச்சர், டிசம்பர் 13-ம் தேதி அளித்த பதிலில், தங்கள் கோரிக்கையின்படி வில்லிசேரியில் கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி என ஏதேனும் ஒரு வங்கி அமைக்கப்படும் என பதில் அளித்திருந்தார்.

    அதன்படி, தற்போது இந்தியன் வங்கி இங்கு அமைய உள்ளது. இந்த வங்கி அமைவதற்கு இங்குள்ள மக்கள் எடுத்துக் கொண்ட முயற்சி தான் காரணம். இது அவர்களுக்கு கிடைத்த வெற்றி என்று கூறினார்.

    அப்போது, ம.தி.மு.க. மாநில துணை பொது செயலாளர் ராஜேந்திரன், வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ், கட்சியின் சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் விநாயகா ரமேஷ், ஒன்றிய செயலர்கள் கேசவநாராயணன், சரவணன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.



    வாராக்கடன் அதிகரித்துள்ளதால் என்ஜினீயரிங் படிப்புக்கு கடன் வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளதாக வங்கி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. #IndianBank
    சென்னை:

    ஏழை மாணவர்கள் என்ஜீனியரிங் படிப்பதற்கு மத்திய அரசு குறைந்த வட்டியில் கல்விக்கடன் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

    இத்திட்டத்தின் கீழ் வங்கிகளில் கடன் பெற்றவர்கள் படித்து ஒரு ஆண்டு வரை கடனை திருப்பி செலுத்த வேண்டியதில்லை. வட்டியை மட்டும் செலுத்தி வந்தால் போதும்.

    வேலை கிடைத்ததும் தவணை முறையில் செலுத்த வேண்டும். ஆனால் ஏராளமான மாணவர்கள் படிப்பு முடிந்தும் வேலை இல்லாமல் தவிக்கிறார்கள். அவர்கள் கடனை திருப்பி செலுத்துவதில்லை.

    தேசிய வங்கியான இந்தியன் வங்கியில் ஏராளமான கல்விக்கடன் வழங்கியதாக கூறப்படுகிறது. இதில் கோடிக்கணக்கில் வராக்கடனாக உள்ளது.

    இதையடுத்து என்ஜினீயரிங் படிப்புக்கு கடன் வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளதாக வங்கி வட்டாரங்கள் தெரிவித்தன.

    மருத்துவம், உயர்படிப்புகள், மேல்நாட்டு படிப்புகளுக்கு மட்டுமே கல்விக்கடன் வழங்கப்பட்டு வருகிறது.

    வராக்கடனை வசூலிக்க அதற்காக அங்கீகரிக்கப்பட்ட குழுக்களுக்கு அனுமதி வழங்குவது பற்றி பரிசீலித்து வருகின்றனர். #IndianBank
    இந்தியன் வங்கிக்கு கடந்த நிதி ஆண்டில் நிகர லாபம் ரூ.1,259 கோடியாகும் என்று வங்கி தலைவர் கிஷோர் கரத் சென்னையில் கூறினார்.
    சென்னை:

    நடப்பாண்டு நிறைவுற்ற காலாண்டிற்கான, இந்தியன் வங்கியின் முடிவுகளுக்கும் மற்றும் நிறைவுற்ற ஆண்டுக்கான தணிக்கை செய்யப்பட்ட நிதி நிலை அறிக்கைக்கு வங்கியின் இயக்குனர் குழுமம் ஒப்புதல் அளித்துள்ளது.

    இதுகுறித்து வங்கி தலைவர் கிஷோர் கரத், சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வங்கி 2017-18-ம் ஆண்டு வளர்ச்சியை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இயக்கலாபம் 25 சதவீதம் வளர்ச்சியடைந்து, ரூ.5 ஆயிரம் கோடியாக உயர்ந்து உள்ளது. இதில் ரூ.1,258.99 கோடி நிகர லாபமாகும்.

    வியாபார சிறப்பம்சங்களில் நிதி நிலை அளவு 15.80 சதவீதமாக வளர்ச்சி அடைந்ததன் மூலம் 2 லட்சத்து 52 ஆயிரத்து 176 கோடியாக உள்ளது. உலகளவில் கடன்கள் 23.14 சதவீதம் வளர்ச்சியடைந்து உள்ளது.

    வாரா கடன் வசூல் 65.98 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.

    முன்னுரிமை கடன்கள் ரூ.63 ஆயிரத்து 36 கோடி அளிக்கப்பட்டுள்ளது. நலிந்த பிரிவினருக்கான கடன்கள் ரூ.16 ஆயிரத்து 213 கோடியாகும். ‘பிரதான் மந்திரி முத்ரதா யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.2 ஆயிரத்து 37 கோடியே 46 லட்சம் வழங்கப்பட்டு உள்ளது. ‘அடல் பென்ஷன் யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3.52 லட்சம் வாடிக்கையாளர்கள் இணைக்கப்பட்டு உள்ளனர்.

    சராசரியாக கிளைக்கு 70 வாடிக்கையாளர்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் 80 வாடிக்கையாளர்கள் வீதம் சேர்க்கப்பட்டு உள்ளனர். உள்நாட்டில் 2 ஆயிரத்து 820 கிளைகள் உள்ளன. 3 ஆயிரத்து 399 தானியங்கி பணம் பட்டுவாடா மற்றும் பணம் செலுத்தும் ஏ.டி.எம். எந்திரங்கள் உள்ளன. வெளிநாடுகளில் 3 கிளைகள் இயங்கி வருகின்றன.

    வங்கியின் செயல்பாட்டை பாராட்டி சிறந்த செயல் திறன் விருது, சிறந்த வங்கி விருது, ஊழல் விழிப்புணர்வு தொடக்க முயற்சி விருது உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டு உள்ளன.

    வங்கியின் இயக்குனர் குழுமம், கடந்த மார்ச் 31-ந்தேதியோடு நிறைவடைந்த ஆண்டுக்கான ஈவுத்தொகை சென்ற ஆண்டை போல 60 சதவீதம் அறிவித்து உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வங்கி உயர் அதிகாரிகள் ஏ.எஸ்.ராஜீவ், எம்.கே.பட்டாச்சாரியா மற்றும் பொதுமேலாளர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். 
    ×