search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "shops shut down"

    செங்கோட்டையில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து இன்று கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் தெருக்கள் வெறிச்சோடியுள்ளன. #VinayagarChathurthi #GaneshChathurthi
    செங்கோட்டை:

    செங்கோட்டையில் நேற்று விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து ஏராளமான வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.

    ஏ.டி.எம்.கண்ணாடி உடைக்கப்பட்டது. கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து செங்கோட்டையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

    இதனிடையே பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் குண்டாறில் இன்று கரைக்கப்பட உள்ளன. அப்போது விநாயகர் சிலைகள் அனைத்தும் மீண்டும் ஊர்வலமாக கொண்டு செல்லப்படும். இந்த ஊர்வலத்தின்போது மீண்டும் மோதல் ஏற்படாமல் தடுக்க போலீசார் முன் எச்சரிகை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள். இதற்காக வழக்கத்தை விட கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளார்கள். பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார் நேரடியாக கண்காணித்து வருகிறார்.

    கலவர தடுப்பு வாகனமான வருண் வாகனம் வரவழைக்கப்பட்டுள்ளது. இதனிடையே செங்கோட்டையில் நேற்று நடந்த மோதலை தொடர்ந்து இன்று கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் முக்கிய வீதிகள் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன. தெருக்களில் போலீசார் ரோந்து சுற்றி வருகிறார்கள். #VinayagarChathurthi  #GaneshChathurthi

    கருணாநிதியின் மறைவையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் 2-வது நாளாக கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. பஸ்கள் ஓடவில்லை.
    திருவாரூர்:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். இதையொட்டி திருவாரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகள் நேற்று முன்தினம் அடைக்கப்பட்டன. பஸ் போக்குவரத்தும் நிறுத்தப் பட்டது.

    நேற்று 2-வது நாளாக திருவாரூர் பகுதிகளில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பஸ் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் பஸ் நிலையம் வெறிச்சோடி காணப் பட்டது. ரெயில்கள் இயங்கிய போதும் பயணிகள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. லாரிகள், வேன்கள், கார்கள், ஆட்டோக்கள் என அனைத்தும் இயக்கப்படவில்லை. சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டன. திருவாரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள் கருணாநிதியின் உருவப்படத்தை வைத்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.



    தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவையொட்டி அவர் படித்த திருவாரூர் வ.சோ.ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கருணாநிதியின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரமேஷ் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் கலந்து கொண்டனர். திருவாரூர் கமலாலயம் கிழக்கு கரையில் தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் சண்முகராஜ் தலைமையில் கட்சியினர் கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். திருவாரூர் விஜயபுரம் வர்த்தக சங்க தலைவர் பாலமுருகன் தலைமையில் வர்த்தகர்கள் ரெயில் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு சென்று பஸ் நிலையம், தெற்கு வீதி வழியாக நகராட்சி அலுவலகத்தில் ஊர்வலத்தை நிறைவு செய்தனர். பின்னர் கருணாநிதிக்கு புகழ் அஞ்சலி செலுத்தப்பட்டது.

    கருணாநிதியின் மறைவையொட்டி திருவாரூரில் பல்வேறு பகுதிகளில் வீடுகள் தோறும் கருப்புக்கொடி கட்டி துக்கம் அனுசரித்தனர். பூக் கடைகள், பிளக்ஸ் போன்ற கடைகள் மட்டுமே திறந்து இருந்தன.

    திருவாரூர் பஸ் நிலையம், கடைவீதி போன்ற முக்்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சொந்த ஊர் திருவாரூர் என்பதால், அவருடைய பிரிவை தாங்க முடியாமல் திருவாரூர் பகுதியே சோகத்தில் மூழ்கியது.

    நன்னிலம், கங்களாச்சேரி, ஆண்டிப்பந்தல், பனங்குடி, சன்னா நல்லூர், பூந்தோட்டம், பேரளம், கொல்லுமாங்குடி ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டன. அதேபோல கருணாநிதியின் மறைவையொட்டி கோட்டூர், பெருகவாழ்ந்தான், களப்பாள், விக்கிரபாண்டியம், திருநெல்லிக்காவல் ஆகிய பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

    கருணாநிதியின் மறைவையொட்டி மன்னார்குடியில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. பஸ் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. 
    மெட்ரோ ரெயில் வழித்தடத்தை கண்டித்து புரசைவாக்கம், பட்டாளத்தில் இன்று கடைகள் அடைப்பு போராட்டம் நடந்தது. வியாபாரிகள் கடை அடைப்பு போராட்டத்தால் அப்பகுதிகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காகவும் விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது.

    கோயம்பேடு- ஆலந்தூர், சின்னமலை- விமான நிலையம் வரை உயர்மட்ட பாதையிலும் திருமங்கலம்- சென்ட்ரல், சைதாப்பேட்டை- டி.எம்.எஸ். வரை சுரங்கப்பாதையிலும் மெட்ரோ ரெயில் சேவை நடந்து வருகிறது.

    பயணிகள் பொதுமக்களிடையே வரவேற்பு ஏற்பட்டதையொட்டி மெட்ரோ ரெயில் திட்டம் சென்னை மாநகரம் முழுவதும் விரிவுப்படுத்தப்பட்டு வருகிறது.

    2-வது கட்டமாக மாதவரம்- சிறுசேரி வரை மெட்ரோ ரெயில் பாதை அமைக்க திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. ரூ.85 ஆயிரம் கோடி செலவில் இந்த பணிகள் தொடங்கப்பட உள்ளது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    மாதவரம்- சிறுசேரி வரையிலான மெட்ரோ வழித்தடம் மாதவரம் மில்க் காலனி, மூலக்கடை, செம்பியம், பெரம்பூர் மார்க்கெட், பெரம்பூர் மெட்ரோ, அயனாவரம், ஓட்டேரி, பட்டாளம், பெரம்பூர் பேரக்ஸ் ரோடு, டவ்டன் சந்திப்பு, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, கெல்லிஸ், கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு, ஸ்டெர்லிங் ரோடு சந்திப்பு, நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு, ஜெமினி, ராயப்பேட்டை, ராதாகிருஷ்ணன் சாலை, ஆழ்வார்பேட்டை கச்சேரி ரோடு, மந்தைவெளி சாலை, அடையார் வழியாக சிறுசேரியை சென்றடைகிறது.

    இந்த திட்டத்துக்கு புரசைவாக்கம், பட்டாளம் பகுதியை சேர்ந்த வியாபாரிகள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். மெட்ரோ வழித்தட பாதை பட்டாளம், டவ்டன் சந்திப்பு, புரசைவாக்கம் வழியாக அமைக்கப்படுவதால் 5 ஆயிரம் வியாபாரிகளின் குடும்பத்தினர், பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். புரசைவாக்கத்தில் வியாபாரம் முழுமையாக பாதிக்கப்படும்.

    ஓட்டேரியில் இருந்து பிரிக்ளின் சாலை வழியாக நேரடியாக கெல்லிஸ் செல்லும் வகையில் மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதையை மாற்றி அமைக்க வேண்டும் என வலியுறுத்தியும் மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் புரசைவாக்கம், பட்டாளத்தில் இன்று வியாபாரிகள் கடைகளை அடைத்தனர். இப்பகுதியில் உள்ள சுமார் 1000 கடைகள் மூடப்பட்டு இருந்தது.

    புரசைவாக்கம் தானா தெருவில் வணிகர் சங்க பேரவை தலைவர் த.வெள்ளையன் தலைமையில் 500 வியாபாரிகள் கருப்பு சட்டை அணிந்து மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

    புரசை வியாபாரிகள் சங்க தலைவர் எஸ்.நாகபூ‌ஷணம், செயலாளர் வி.ராமலிங்கம், பொருளாளர் பி.கே.ஹரி கிருஷ்ணன், மாவட்ட தலைவர் ப.தேவராஜ், நிர்வாகிகள் இப்ராகிம், ராயல்அலி, கமல், ரவி, அப்துல்லா, சுதா, அருண் பிரசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    வியாபாரிகள் கடை அடைப்பு போராட்டத்தால் இன்று புரசைவாக்கம், பட்டாளம், டவ்டன் பகுதிகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. #MetroTrain
    ×