search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "reserve bank money robbery"

    சேலம்-சென்னை ரெயிலில் ரூ.6 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் வட மாநில கும்பலை பிடிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் மீண்டும் மத்திய பிரதேசத்திற்கு செல்ல உள்ளனர். #ChennaiTrainRobbery #RBIMoney
    சேலம்:

    சேலம்-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 8-ந்தேதி ரூ.6 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்டது. ரெயில் கூரையை அறுத்து ஓடும் ரெயிலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. கிருஷ்ணன் தலைமையிலான தனிப்படையினர் கொள்ளையில் ஈடுபட்டது மத்திய பிரதேசத்தை சேர்ந்த பார்தி இன கொள்ளையர்கள் என்பதை கண்டு பிடித்தனர்.

    இதையடுத்து அவர்களை கைது செய்யும் நோக்கில் தமிழகத்தில் இருந்து 50 போலீசாருடன் கடந்த நவம்பர் மாதம் மத்திய பிரதேசம் சென்ற சி.பி.சி.ஐ.டி. போலீசார் கொள்ளை கும்பல் தலைவன் மோஹர்சிங் (35), தினேஷ் (38), ரோஹன் (32) உள்பட 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    மேலும் இதில் தொடர்புடைய 8 பேரை பிடிக்க கடந்த நவம்பர் மாதம் 20-ந் தேதி தனிப்படையினர் மத்திய பிரதேச மாநிலம் குணா மாவட்டம் ருத்தியாயி போலீஸ் ஸ்டேசன் எல்லைக்குட்பட்ட கிராமங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.



    டிசம்பர் மாதம் 5-ந் தேதி தமிழக போலீசார் என கருதி மத்திய பிரதேச போலீசார் 2 பேரை கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டனர். மேலும் அம்மாநில சட்டசபை தேர்தல் பிரசாரம் அப்போது நடந்ததால் தமிழக போலீசாருக்கு மத்திய பிரதேச போலீசார் உதவி செய்யவில்லை.

    இதனால் அதே மாதத்தில் 12-ந் தேதி தமிழக போலீசார் சென்னை திரும்பினர். மேலும் கொள்ளையர்கள் எஸ்.எல்.ஆர். உள்பட பல நவீன ரக துப்பாக்கிகள் வைத்திருப்பதை சி.பி.சி.ஐ.டி. போலீசார் உறுதி செய்தனர்.

    இதையடுத்து மத்திய பிரதேச கொள்ளையர்களை கைது செய்ய ஆயுதம் தாங்கிய போலீசாரின் உதவி தேவைப்படுவது குறித்து தமிழக டி.ஜி.பி. ராஜேந்திரனிடம் சி.பி.சி.ஐ.டி. சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை ஏற்ற டி.ஜி.பி. ராஜேந்திரன் சி.பி.சி.ஐ.டி. போலீசாருடன் 50-க்கும் மேற்பட்ட கமாண்டோ படையையும் அனுப்ப முடிவு செய்தார்.

    இதனால் கமாண்டோ படை மற்றும் கூடுதல் போலீஸ் பாதுகாப்புடன் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வருகிற 7-ந் தேதி முதல் மத்திய பிரதேசத்தில் தேடுதல் வேட்டையில் ஈடுபட உள்ளனர். தமிழக போலீசாருக்கு, மத்திய பிரதேச போலீசார் உதவி செய்யாததால் தற்போது வரை கொள்ளையர்கள் அனைவரையும் கைது செய்ய முடியவில்லை.

    தற்போது தமிழகத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்ட கமாண்டோ படையுடன் சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் களம் இறங்குவதால் இந்த கொள்ளை வழக்கில் மீதம் உள்ள கொள்ளையர்களையும் கட்டாயம் கைது செய்வோம் என்று போலீசார் நம்பிக்கை தெரிவித்தனர். #ChennaiTrainRobbery #RBIMoney
    சென்னை ரெயில் கொள்ளை தொடர்பாக கைது செய்யப்பட்ட குற்றவாளிகள், ஏற்கனவே காஷ்மீரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை தீர்த்துக் கட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது. #SalemTrainRobbery #TrainRobbery #Demonetisation
    சென்னை:

    சேலம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடந்த 2016-ம் ஆண்டு ஓடும் ரெயிலில் மேற்கூரையில் துளை போட்டு ரூ.5.78 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் துப்பு துலக்கி மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த மோஹர் சிங், ருசி பார்தி, மகேஷ் பார்தி, காவியா, பில்டியா ஆகிய 5 கொள்ளையர்களை கைது செய்தனர்.

    இவர்கள் அனைவரையும் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். போலீஸ் காவல் முடிந்ததும் அனைவரும் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

    போலீஸ் விசாரணையில் ரெயில் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் அதிபயங்கரமான கொள்ளையர்கள் என்பது தெரிய வந்துள்ளது. கொள்ளை சம்பவங்களில் குடும்பத்தினரோடு ஈடுபடுவதை இக்கும்பல் வழக்கமாக வைத்துள்ளது.

    ரெயில் கொள்ளையில் முக்கிய குற்றவாளியான மோஹர் சிங்கின் குடும்பத்தினர், கடந்த 2006-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரை கொடூரமாக கொலை செய்தவர்கள். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான மோஹர் சிங்கின் உறவினரான கிரண் 2012-ம் ஆண்டு போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளான். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட இன்னொரு உறவினரான சங்காராமுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    ரெயில் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான கும்பல் தலைவன் மோஹர் சிங்கின் தந்தையின் சகோதரருக்கு பிறந்தவன் தான் கிரண். போலீசாரின் துப்பாக்கி குண்டுக்கு கிரண் இரையான பின்னரே மோஹர் சிங், கொள்ளை கூட்டத்துக்கு தலைவனாகி உள்ளான்.

    தனது குற்றச்செயல்கள் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்ததால் ஆத்திரம் அடைந்த மோஹர்சிங், கடந்த 2015-ம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலத்தில் 2 பேரை சுட்டுக் கொன்றான். இந்த கொலை வழக்கில் மோஹர் சிங்கின் மனைவி பன்வாரா, சகோதரர்கள் மற்றும் சகோதரி ஆகியோரும் சேர்க்கப்பட்டனர்.

    இதனை தொடர்ந்து போலீஸ் பிடி இறுகியதால் மோஹர் சிங்கும் அவனது கூட்டாளிகளும் தென் இந்தியாவுக்கு தப்பி வந்தனர். ஆந்திரா, கர்நாடகாவில் வியாபாரிகள் போல் தங்கி இருந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.

    கடந்த ஆண்டு மோஹர் சிங் தனது கூட்டாளிகளுடன் தமிழகத்தில் தஞ்சம் புகுந்தனர். விழுப்புரம், திண்டிவனம், விருத்தாசலம், சேலம், அரக்கோணம் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் ரெயில் நிலையங்களை ஒட்டி உள்ள பகுதிகளில் இக்கொள்ளை கும்பல் தங்கியது. அப்போது தான் சேலம் செல்லும் ரெயிலில் பணம் எடுத்து செல்லப்படுவது இவர்களுக்கு தெரிய வந்தது.

    கோப்புப்படம்

    சென்னை ரெயிலில் பணம் எடுத்து செல்லப்படுவதை முன் கூட்டியே தெரிந்து கொண்ட கொள்ளையர்கள் அதில் பயணம் செய்து ஒத்திகை பார்த்தனர்.

    கொள்ளை கும்பல் தலைவன் மோஹர் சிங் மற்றும் கூட்டாளிகள் காலியா ருசி, பில்டியா ஆகியோர் அயோத்தியா பட்டினம் மற்றும் விருத்தாசலம் ரெயில் நிலையங்களுக்கு இடையே ரெயிலில் பயணம் செய்து நோட்டமிட்டனர்.

    சின்ன சேலம்- விருத்தாசலம் ரெயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் 45 நிமிடங்கள் ரெயில் நிற்காமல் செல்வதை தெரிந்து கொண்டு அந்த நேரத்தில் கொள்ளையடிக்க திட்டம் போட்டனர்.

    இதன்படி சின்ன சேலம் ரெயில் நிலையத்தில் வைத்து 4 பேரும் பணம் இருந்த பெட்டியில் ஏறி கூரையை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் மரப் பெட்டியை உடைத்து 6 லுங்கிகளில் கொள்ளையடித்த பணத்தை மூட்டை கட்டி மேலே ஏறினார்கள்.

    பின்னர் வயலூர் மேம்பாலம் அருகே இந்த மூட்டைகளை வீசினர். அங்கு ஏற்கனவே காத்திருந்த மோஹர் சிங்கியின் கூட்டாளிகள் பணமூட்டைகளை பத்திரமாக எடுத்து கொண்டு தப்பினர். பின்னர் ரெயிலில் இருந்து இறங்கிய கொள்ளையர்களும் அவர்களோடு சேர்ந்து கொண்டனர். அனைவரும் சொந்த ஊருக்கு சென்று பணத்தை பங்கு போட்டனர். சினிமாவை மிஞ்சும் வகையில் திட்டம்போட்டு வடமாநில கொள்ளையர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். #SalemTrainRobbery #TrainRobbery #Demonetisation
    ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததால் ரெயிலில் கொள்ளையடித்த ரூ.2 கோடியை எரித்ததாக கைதான கொள்ளையர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். #SalemTrainRobbery #TrainRobbery #Demonetisation
    சென்னை:

    சேலத்தில் இருந்து சென்னை வந்த எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8-ந்தேதி ரூ.5 கோடியே 78 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.

    இவை அனைத்தும் பழைய மற்றும் கிழிந்த நோட்டுகள். சேலம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் இருந்து சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    ரெயில் வரும் வழியில் மேற்கூரையில் துளையிட்டு அந்தப்பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. 2 ஆண்டுகளுக்குப்பின் துப்பு துலங்கிய இந்த கொள்ளை தொடர்பாக மத்தியபிரதேசத்தைச் சேர்ந்த மோகர்சிங், கிருஷ்ணா, மகேஷ்பாரதி மோகன் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள்.

    இவர்களில் 5 பேரை போலீசார் நேற்று விருத்தாசலம், சின்னசேலம், ஆத்தூர், அயோத்தியாபட்டிணம், வாழப்பாடி, சேலம் ஜங்‌ஷன், செவ்வாய்ப்பேட்டை ரெயில்வே குட்ஷெட் ஆகிய இடங்களுக்கு நேரில் அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது கொள்ளையர்கள் எப்படி கொள்ளையடித்தோம் என்பதை நடித்து காட்டினார்கள். அவற்றை போலீசார் வீடியோ எடுத்தனர்.

    இந்த கொள்ளையில் மொத்தம் 16 பேர் சம்பந்தப்பட்டுள்ளனர். தற்போது 7 பேர் பிடிபட்டுள்ளனர். மேலும் 9 பேரை தேடிவருகிறார்கள். 16 பேரும் பல்வேறு குழுக்களாக தமிழகம் வந்து 4 மாதம் தங்கி திட்டமிட்டு கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

    சின்ன சேலத்தில் இருந்து விருத்தாசலம் வரை ரெயில் தண்டவாளத்தில் பாலம் அமைக்கும் பணி நடப்பதால் அந்த இடத்தில் ரெயில் மெதுவாக செல்லும் இதை நோட்டமிட்ட கொள்ளையர்கள் அந்த இடத்தில் ரெயில் சென்றபோது கட்டர் மூலம் துளையிட்டு பணத்தை கொள்ளையடித்துச்சென்றுள்ளது தெரிய வந்தது. 4 பேர் மட்டும் ரெயிலின் மேல் கூரையில் ஏறி துவாரம் போட்டுள்ளனர்.


    கொள்ளையடிக்கப்பட்ட 5.78 கோடியை கொள்ளையர்கள் அனைவரும் சரிசமமாக பங்குபோட்டு உல்லாசமாக செலவு செய்தனர். சொந்த ஊரில் நிலம் மற்றும் சொத்துக்களையும் வாங்கியுள்ளனர். மீதம் உள்ள ரூ.2 கோடியை வங்கியில் டெபாசிட் செய்ய முடியாததாலும் செலவழிக்க முடியாமலும் பதுக்கி வைத்து இருந்தனர்.

    இந்தநிலையில் 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ந்தேதி மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என்று அறிவித்ததால் கொள்ளையர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அவற்றை கிழித்து போட்டு யாருக்கும் தெரியாமல் தீவைத்து எரித்து விட்டதாக போலீசில் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.

    7 கொள்ளையர்களின் 13 நாள் போலீஸ் காவல் நாளையுடன் முடிவடைவதால் நாளை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்கள். #SalemTrainRobbery #TrainRobbery
    சேலத்தில் இருந்து சென்னை வந்த ரெயிலில் ரூ.5.70 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கைதான மேலும் 5 பேர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். #ChennaiTrainRobbery #RBIMoney
    சென்னை:

    சேலத்தில் இருந்து சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ந்தேதி ரூ.5.78 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    சேலம் நாமக்கல் பகுதியை சேர்ந்த வங்கிகளில் இருந்து பழைய கிழிந்த ரூபாய் நோட்டுகள் சேகரிக்கப்பட்டன. இப்படி சேகரிக்கப்பட்ட ரூ.342 கோடி பணம் 226 அட்டை பெட்டிகளில் பாதுகாப்பாக அடுக்கப்பட்டு ஒரு ரெயில் பெட்டியில் வைக்கப்பட்டது. இந்த பெட்டியை சீல் வைத்து அதன் வெளியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த ரெயிலின் 19 பெட்டிகளில் பயணிகளும் பயணம் செய்தனர்.

    இப்படி பயணிகளோடு வந்த ரெயிலில் பலத்த பாதுகாப்பையும் மீறி 4 பெட்டிகளை உடைத்து கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் 2 ஆண்டுகளுக்கு பின்னர் துப்பு துலங்கியது.

    சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையில், மத்திய பிரதேச மாநில கொள்ளையர்களே இந்த துணிகர கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    கோப்புப்படம்

    இது தொடர்பாக கடந்த 12-ந்தேதி தினேஷ், ரோகன் பார்பி ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில் ரெயில் கொள்ளை வழக்கில் மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மோகர்சிங் என்ற கொள்ளையன் உள்பட 5 பேர் மத்திய பிரதேசத்தில் கைது செய்யப்பட்டனர்.

    அங்கு வேறு ஒரு வழக்கில் கைதாகி சிறையில் இருந்த 5 கொள்ளையர்களையும் அம்மாநில கோர்ட்டில் அனுமதி பெற்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்று சென்னைக்கு அழைத்து வந்தனர்.

    காலை 11.30 மணி அளவில் மோகர்சிங் உள்ளிட்ட 5 பேரும் சைதாப்பேட்டை 11-வது கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன் பிறகு புழல் சிறையில் அடைக்கப்படும் 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக போலீசார் மனுதாக்கல் செய்ய உள்ளனர்.

    மோகர்சிங் கொள்ளை கும்பலுக்கு தலைவனாக செயல்பட்டது தெரியவந்துள்ளது. இதன் பின்னணியில் உள்ள மற்ற கொள்ளையர்கள் பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ரெயில் கொள்ளையர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இன்று காலையில் சி.பி.சி.ஐ.டி உயர் போலீஸ் அதிகாரிகளிடம் நிருபர்கள் போனில் தொடர்பு கொண்டு பெயர் உள்ளிட்ட விவரங்களை கேட்டனர். ஆனால் யாரும் சரியாக பதில் அளிக்கவில்லை. இதில் என்ன ரகசியம் என்பது அவர்களுக்கே வெளிச்சமாகும்.  #ChennaiTrainRobbery #RBIMoney
    சேலத்தில் இருந்து சென்னை வந்த ரெயிலில் ரூ.5.78 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நெருங்கியதால் வடமாநில கும்பல் தங்களது செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்து தப்பியுள்ளனர். #ChennaiTrainRobbery #RBIMoney
    சேலம்:

    சேலத்தில் இருந்து சென்னைக்கு கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8-ந்தேதி இரவு சென்ற ரெயிலின் தனிப்பெட்டியில் ரூ.323 கோடி கொண்டு செல்லப்பட்டது. சென்னை செல்லும் வழியில் ரெயிலின் மேற்கூரையை துளையிட்டு ரூ.5.78 கோடியை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    சென்னை எழும்பூருக்கு மறுநாள் அதிகாலை சென்றபோது தான் இந்த கொள்ளை சம்பவம் பற்றி போலீசாருக்கு தெரியவந்தது.

    தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகிறார்கள். பல்வேறு கட்டங்களாக இந்த விசாரணை முடுக்கி விடப்பட்டது.

    இந்த வழக்கில் கொள்ளையர்கள் குறித்து துப்பு துலக்க ரெயில் பெட்டி சேலத்திற்கு எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்ற விபரத்தை எடுத்த அதிகாரிகள், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) உதவியை நாட முடிவு செய்தனர்.

    இஸ்ரோ விஞ்ஞானிகளிடமும் ஆலோசனை நடத்தினார்கள்.

    இதையடுத்து ரெயில் கொள்ளை நடந்த அன்று சேலத்தில் இருந்து சென்னை வரை உள்ள 350 கிலோ மீட்டர் தூரத்தில் செயற்கைக்கோளில் பதிவாகியிருந்த படங்களை விஞ்ஞானிகள் எடுத்தனர். இந்த படங்களை சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் அவர்கள் ஒப்படைத்தனர்.

    இந்த புகைப்படங்களை கொண்டு ரெயில் எங்கு வரும்போது, கொள்ளை நடந்தது? என்ற தகவலை திரட்டினார்கள். இதில் சேலத்தில் இருந்து விருத்தாச்சலம் வரையில் உள்ள பகுதிகளில் தான் ரெயிலின் மேற்கூரை வெட்டப்பட்டது தெரிய வந்தது.


    சுமார் 1 லட்சம் செல்போன் எண்களை ஆய்வு செய்ததில் இந்த கொள்ளை சம்பவத்தில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த கும்பல் ஈடுபட்டுள்ளது கண்பிடிக்கப்பட்டது.

    கொள்ளை நடந்து 2 ஆண்டுகள் கழித்து இந்த வழக்கில் துப்பு துலங்கியதால் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சுறுசுறுப்பு அடைந்தனர். மத்திய பிரதேச மாநில போலீசாருடன் இணைந்து கொள்ளையர்களை பிடிப்பதற்கான பணியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஈடுபட்டனர்.

    சேலம் கோட்டத்திற்கு உட்பட்ட சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள ரெயில்வே நிலையங்களில் வடமாநிலங்களை சேர்ந்த ஏராளமான ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

    கொள்ளை கும்பலுடன் இந்த ஊழியர்களில் யாருக்காவது தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து கடந்த 2 நாட்களாக சேலம் கோட்டத்தில் வேலை பார்த்து வரும் வடமாநில ஊழியர்களின் செல்போன் எண்களை கைப்பற்றி சி.பி.சி.ஐ.டி. போலீசார் மற்றும் சைபர் கிரைம் போலீசார் இணைந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

    இதனால் விரைவில் குற்றவாளிகள் பிடிபடலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

    இதற்கிடையே விசாரணையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை அறிந்த வடமாநில கொள்ளையர்கள் உஷார் அடைந்துள்ளனர். போலீசார் தங்களை நெருங்குவதை அறிந்த அவர்கள், கடைசியாக தாங்கள் பயன்படுத்தி வந்த செல்போன் எண்களை சுவிட்ச் -ஆப் செய்து விட்டு வேறு இடங்களுக்கு தப்பி ஓடிவிட்டனர்.

    இதனால் போலீசாரால் கொள்ளையர்களின் இருப்பிடத்தை கண்டு பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கொள்ளையர்களை பிடிக்கும் நடவடிக்கையில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இருந்தாலும், கொள்ளையில் ஈடுபட்ட கும்பலை பிடிக்க 20 பேர் கொண்ட 4 தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.  #ChennaiTrainRobbery #RBIMoney
    சேலம்-சென்னை ரெயிலில் ரூ.5.78 கோடி கொள்ளையடித்த கும்பல் மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. #ChennaiTrainRobbery #RBIMoney
    சென்னை:

    சேலம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த ரூ.5.78 கோடி கொள்ளை சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ரெயில் பெட்டி கூரையில் துளை போடப்பட்டு, சினிமா காட்சிகளையும் மிஞ்சும் வகையில் நடந்த இந்த கொள்ளையில் ஈடுபட்டது யார்? எந்த இடத்தில் வைத்து இந்த துணிகர கொள்ளை நடந்தது? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை கண்டுபிடிக்க முடியாமல் ரெயில்வே போலீசாரும், தமிழக போலீசாரும் திணறினார்கள்.

    ரூ.5.78 கோடியை அள்ளிச்சென்றது வடஇந்திய கொள்ளை கும்பல்தான் என்று உறுதியாக தெரியவந்த நிலையில், கொள்ளையர்கள் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதை துல்லியமாக கண்டுபிடிப்பது சவாலாக இருந்தது. என்றாலும் தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனம் தளராமல் போராடி, தேசிய அளவில் பல்வேறு தகவல்களையும் பெற்று அந்த கொள்ளை கும்பல் பற்றி துப்பு துலக்கி விட்டனர்.

    சரியாக 2 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கொள்ளை சம்பவத்தில் கொள்ளையர்களை போலீசார் நெருங்கியுள்ளனர். இதுபற்றிய முழு விபரம் வருமாறு:-

    பொதுத்துறை வங்கிகளில் சேர்ந்து விடும் பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் பயன்படுத்த முடியாத கிழிந்த ரூபாய் நோட்டுக்களை அந்தந்த வங்கிகள், ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி மாற்றிக் கொள்வது வழக்கத்தில் உள்ளது. அதன்படி சேலம் மண்டலத்தில் உள்ள பல்வேறு வங்கிகளில் சேர்ந்து விட்ட சுமார் 342 கோடி ரூபாய் பழைய நோட்டுக்கள் கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 8-ந்தேதி சேலம்-சென்னை எக்ஸ்பிரஸ் (தடம் எண்.11064) ரெயிலில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அந்த 342 கோடி ரூபாயும், பண நோட்டு மதிப்புக்கு ஏற்ப பிரித்து 226 அட்டைப் பெட்டிகளில் அடைத்து அனுப்பப்பட்டன.

    அந்த 226 அட்டை பெட்டிகளும் ஒரு ரெயில் பெட்டிக்குள் முழுமையாக அடுக்கப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டிருந்தது. சேலம்- சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலின் 19 பயணிகள் பெட்டிகளுக்கு மத்தியில் பணம் இருந்த பெட்டி இணைக்கப்பட்டிருந்தது. மறுநாள் (ஆகஸ்டு 9-ந்தேதி) காலை அந்த எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னை எழும்பூரை வந்து சேர்ந்தும் பணம் இருந்த பெட்டி மட்டும் தனியாக யார்டு பகுதிக்கு கொண்டு நிறுத்தப்பட்டது.

    அன்று பகல் 11 மணி அளவில் ரிசர்வ் வங்கி அதிகாரிகளும், ஊழியர்களும் 226 பணப்பெட்டிகளை எடுத்துச் செல்ல வந்தனர். ரெயில் பெட்டியின் “சீல்” அகற்றி விட்டு உள்ளே சென்ற ஊழியர்கள், 4 அட்டை பெட்டிகள் உடைத்து திறக்கப்பட்டு பண நோட்டுகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ரெயில் பெட்டியின் கூரையில் 2 அடி நீளம் 1½ அடி அகலத்துக்கு துளை போடப்பட்டு கொள்ளை நடந்து இருப்பதை அறிந்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    ரெயில்வே போலீசார் எழும்பூர் யார்டு பகுதிக்கு சென்று கொள்ளை நடந்த ரெயில் பெட்டியை ஆய்வு செய்தனர். பணம் இருந்த 4 பெட்டிகள் திறக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. ஒரு பெட்டியில் இருந்த ரூ.500, ரூ.1000 மதிப்புள்ள நோட்டுக்கள் அனைத்தையும் கொள்ளையர்கள் அள்ளி இருந்தனர்.

    மற்றொரு பெட்டியில் பாதி அளவு பணத்தை எடுத்திருந்தனர். 2 பெட்டிகளில் குறைந்த மதிப்புடைய 5 ரூபாய், 10 ரூபாய் நோட்டுக்கட்டுக்கள் இருந்ததால் அவற்றை கொள்ளையர்கள் தொடவில்லை. மொத்தம் ரூ.5.78 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது போலீசார் விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டது.


    4 பேர் சேர்ந்து கியாஸ் கட்டர் மூலம் ரெயில் பெட்டி கூரையில் துளை போட்டிருப்பது தடயவியல் சோதனையில் தெரிந்தது. ஆனால் அவர்கள் சேலம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் ஓடிக் கொண்டிருந்தபோது கைவரிசை காட்டினார்களா? அல்லது நின்றபோது கைவரிசை காட்டினார்களா? என்பதில் மாறுபட்ட தகவல்கள் கிடைத்தன. துளை போடப்பட்ட பெட்டி கேரளாவில் இருந்து வரவழைக்கப்பட்டிருந்ததால், அங்கே துளைக்கான வெல்டிங் போடப்பட்டிருக்கலாமா என்று விசாரணை நடந்தது.

    பிறகு சேலம்-சென்னை வழித்தடத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த வழித்தடத்தில் மொத்தம் 12 இடங்களில் அந்த ரெயில் நிற்கும். அதில் விருத்தாச்சலம் ரெயில் நிலையத்தில் மட்டும் கூடுதல் நேரம் நிற்கும். ஆகஸ்டு 8-ந்தேதி இரவு அந்த ரெயில் விருத்தாசலத்தில் சுமார் 1 மணி நேரம் நின்றது. எனவே விருத்தாசலத்தில் வைத்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டி இருக்கலாமா என்றும் போலீசார் விசாரித்தனர்.

    சேலம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் சேலத்தில் இருந்து விருத்தாச்சலம் வரை டீசலிலும், விருத்தாச்சலம் முதல் சென்னை வரை மின்சாரத்திலும் இயக்கப்படுகிறது. விருத்தாசலத்தில் இருந்து சென்னை வரை உள்ள மின் கம்பிகளுக்கு இடையே அமர்ந்து நிச்சயம் கொள்ளையடிக்க இயலாது. எனவே சேலம் முதல் விருத்தாசலத்துக்குள்தான் கொள்ளை நடந்திருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகித்தனர்.

    இதையடுத்து சேலம்- விருத்தாச்சலம் இடையில் உள்ள சுமார் 138 கி.மீ. தூர வழித்தடத்தில் சென்று போலீசார் ஆய்வு செய்தனர். ரெயில் நிலையங்களில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராக்களையும் ஆய்வு செய்தனர். ஆனால் எந்த ஒரு துப்பும் துலங்கவில்லை.

    இதற்கிடையே செங்கல்பட்டு, தாம்பரம் ரெயில் நிலைய சி.சி.டி.வி. கேமிராக்களை ஆய்வு செய்த போது ரெயில் பெட்டி கூரையில் துளை போடப்பட்டதற்கான அறிகுறி எதுவும் இல்லாமல் இருந்தது. இதனால் அந்த பெட்டி எழும்பூர் யார்டில் நிறுத்தப்பட்டிருந்த போது கொள்ளை நடந்து இருக்குமோ என்று சந்தேகம் ஏற்பட்டது.

    சேலம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் காலையிலேயே சென்னைக்கு வந்து சேர்ந்துவிட்ட நிலையில் 11 மணிக்குத்தான் ரிசர்வ் வங்கி ஊழியர்கள் வந்தனர். எனவே இடைப்பட்ட 2 மணி நேரத்தில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டி இருக்கலாம் என்று கூறப்பட்டது. இதிலும் சரிவர துப்பு துலங்காததால் விசாரணை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது.

    தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். சேலம் முதல் சென்னை வரை ரெயில் நிலையங்களில் விசாரித்தனர். சுமார் 80 ரெயில்வே தொழிலாளர்கள் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து விசாரிக்கப்பட்டனர். ஆனால் அதிலும் துப்பு துலங்கவில்லை.

    இதையடுத்து தொழில் நுட்ப உதவியை பயன்படுத்தி, கொள்ளையர்களை கண்டு பிடிக்க முடிவு செய்தனர். அதன்படி சேலம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் வழித்தடம் பகுதியில் குறிப்பிட்ட நேரத்தில் பதிவாகி இருந்த செல்போன் உரையாடல்களை ஆய்வு செய்தனர்.

    சேலம் முதல் விழுப்புரம் வரை பதிவாகி இருந்த செல்போன் உரையாடல்கள் உன்னிப்பாக கேட்கப்பட்டன. அதில் சந்தேகப்படும் படியான உரையாடல்களை மட்டும் தனியாக பிரித்து எடுத்தனர். அந்த உரையாடல்கள் எந்தெந்த எண்கள் கொண்ட மொபைல் போன்களில் இருந்து சென்றுள்ளது என்று ஆய்வு செய்யப்பட்டது.

    முதல் கட்ட விசாரணையில் அந்த செல்போன் எண்களை பயன்படுத்துபவர்கள் சேலம் பகுதிக்கு புதிதாக வந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த செல்போன் எண்களை உடையவர்கள் எந்த மாநிலத்தில் இருந்து வந்தனர் என்று ஆய்வு நடந்தது. தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் ஒத்துழைப்புடன் இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டன.

    சில மாத கடும் போராட்டத்துக்குப் பிறகு சமீபத்தில் அந்த செல்போன்களுக்கு உரியவர்கள் மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. மத்திய பிரதேசத்தில் குறிப்பிட்ட ஒரு பகுதியில் வசிக்கும் கொள்ளையர்கள் அவர்கள் என்ற துப்பு துலங்கியுள்ளது. அந்த கொள்ளையர்கள் வட இந்தியாவில் பல நகரங்களில் பெரிய அளவில் கைவரிசை காட்டியவர்கள் என்று தெரியவந்துள்ளது.

    4 அல்லது 5 கொள்ளையர்கள் சேலம் பகுதியில் சுமார் 1 வாரம் தங்கியிருந்து நோட்டமிட்டு கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். சி.பி.சி.ஐ.டி போலீசார் சேலம் ஐங்‌ஷன் ரெயில் நிலைய சி.சி.டி.வி. கேமிராக்களில் பதிவான காட்சிகள் மற்றும் சேலம்- விழுப்புரம் இடையே நெடுஞ்சாலைகளில் உள்ள டோல்கேட்களில் பதிவான சி.சி.டி.வி. காட்சி பதிவுகள் மூலம் கொள்ளையர்களை அடையாளம் கண்டிருப்பதாக தெரிகிறது.

    தேசிய புலனாய்வு அமைப்புகள் மற்றும் மத்திய பிரதேசத்தில் உள்ள குற்ற ஆவண காப்பக பதிவேடுகளில் உள்ள குற்றவாளிகளின் படங்களுடன், சி.பி.சி.ஐ.டி. போலீசார் சேகரித்து வைத்திருந்த சந்தேகப்படும் நபர்களின் படங்கள் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டன. அதில் சில குற்றவாளிகள் பற்றிய தகவல்களை மத்திய பிரதேச போலீசார் அளித்துள்ளனர்.

    இதன் மூலம் ரெயிலில் ரூ.5.78 கோடி கொள்ளையடித்த கும்பல் மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அந்த கொள்ளையர்களைப் பிடிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர். இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. #ChennaiTrainRobbery #RBIMoney 
    ×