search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Release of water"

    • கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 13 ஆயிரத்து 938 கன அடி தண்ணீர் தற்போது திறக்கப்பட்டுள்ளது.
    • ஒகேனக்கல்லில் கடந்த ஒரு வாரமாக 1000 கனஅடியாக வந்த நீர்வரத்து இன்றும் அதே அளவில் தொடர்ந்து நீடித்து வந்து கொண்டிருக்கிறது.

    தருமபுரி:

    கர்நாடக மாநிலத்தில் பருவ மழை தீவிரம் அடைந்து வருகிறது. இதன்காரணமாக குடகு, ஆசன், மைசூர், மாண்டியா, பெங்களூரு ஊரகம், சாமராஜ்நகர் மாவட்டங்களில் சாலைகளில் தண்ணீர் ஆறாக ஓடுகிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கபினி மற்றும் கே.எஸ்.ஆர். அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.

    கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஹேமாவதி, ஹாரங்கி அணைகள் முழு கொள்ளளவு எட்டியதை தொடர்ந்து அங்கிருந்து உபரி நீர் திறந்து விடப்படுகிறது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்ணா தாலுகாவில் உள்ள கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    இதைத்தொடர்ந்து அணைக்கு நேற்று 44ஆயிரத்து 436 கனஅடியாக வந்த நீர்வரத்து இன்று காலை சற்று அதிகரித்து 48 ஆயிரத்து 25 கனஅடியாக அதிகரித்து உள்ளது. அணையில் இருந்து இன்று 2688 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    கே.ஆர்.எஸ். அணையின் மொத்த கொள்ளளவு 124.80 அடியாகும். தற்போது அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டி உள்ளது.

    இதேபோல் நீர்வரத்து தொடர்ந்து நீடித்தால் அடுத்த ஒரு சிலதினங்களுக்குள் அணை முழு கொள்ளவை எட்டி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கேரள மாநிலம் வயநாடு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் கபினி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையில் 80.51 அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

    கபினிஅணைக்கு நீர்வரத்து 25 ஆயிரத்து 896 கனஅடியாக உள்ளதால், அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீராக 11250 கன அடி நீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.

    கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 13 ஆயிரத்து 938 கன அடி தண்ணீர் தற்போது திறக்கப்பட்டுள்ளது.

    இந்த உபரி நீரானது நாளை கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக தமிழகத்திற்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இரு அணைகளில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் கர்நாடக-தமிழக எல்லையான பிலிக்குண்டுலு வழியாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்தடைகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு திறந்து விடப்பட்டுள்ள 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் தற்போது மெல்ல மெல்ல பிலிக்குண்டுலுவுக்கு வர தொடங்கியுள்ளது.

    ஒகேனக்கல்லில் கடந்த ஒரு வாரமாக 1000 கனஅடியாக வந்த நீர்வரத்து இன்றும் அதே அளவில் தொடர்ந்து நீடித்து வந்து கொண்டிருக்கிறது.

    இதன்காரணமாக ஒகேனக்கல்லில் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் சீறிபாய்ந்து செல்கிறது. தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது.

    கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் நாளை ஒகேனக்கல்லுக்கு வந்தடையும். இதன் காரணமாக மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து பிலிக்குண்டுலுவில் பரிசலில் சென்று நீர்வரத்தை கண்காணித்து வருகின்றனர். 

    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 94.04 அடியாக உள்ளது.
    • காலிங்கராயன் பாசனத்திற்கு 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை.

    பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2,47,000 விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

    இந்நிலையில் பவானிசாகர் அணையில் இருந்து தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்கு இதுவரை திறந்து விடப்பட்ட தண்ணீர் இன்று முதல் நிறுத்தப் பட்டுள்ளது.

    இதேபோல் இன்று முதல் காலிங்கராயன் பாசனத்திற்கு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 94.04 அடியாக உள்ளது. அணைக்கு வரும் நீரின் வரத்து வினாடிக்கு 254 கன அடியாக குறைந்தது.

    காலிங்கராயன் பாசனத்திற்கு 500 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கன அடி என மொத்தம் அணையில் இருந்து 700 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • வடகிழக்கு பருவமழை காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
    • பிரதான அணையான பாபநாசம் அணை நீர்மட்டம் இன்று காலை 89.20 அடியாக இருந்தது. அணைக்கு 884.77 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    நெல்லை:

    வடகிழக்கு பருவமழை காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    நேற்றும் ராதாபுரம், சங்கரன்கோவில் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்தது. இன்று காலை மலைப்பகுதி மற்றும் அணைப்பகுதிகளில் சில இடங்களில் மழை பெய்தது. இதன் காரணமாக குற்றாலத்தில் மெயினருவி, ஐந்தருவி, பழையகுற்றாலத்தில் மிதமான அளவில் தண்ணீர் விழுந்து வருகிறது.

    பிரதான அணையான பாபநாசம் அணை நீர்மட்டம் இன்று காலை 89.20 அடியாக இருந்தது. அணைக்கு 884.77 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    அணையில் இருந்து 1,204.75 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதேப்போல் சேர்வலாறு அணை நீர்மட்டம் 93.44 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 74.70 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 81.50 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 69.75 அடியாகவும், கடனா நதி அணை நீர்மட்டம் 67 அடியாகவும் உள்ளது. 36.10 அடி உயரம் கொண்ட குண்டாறு அணை ஏற்கனவே நிரம்பி விட்டதால் அணைக்கு வரும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் மணிமுத்தாறு அணையில் இருந்து பெருங்கால் பாசனம் மூலம் பயன்பெறும் 2,756.62 ஏக்கர் நேரடி மற்றும் மறைமுக பாசன பகுதிகளுக்கு இன்று முதல் தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

    அதன்படி மாவட்ட வருவாய் அதிகாரி ஜெயஸ்ரீ செல்லையா இன்று தண்ணீர் திறந்து விட்டனர். தொடர்ந்து அடுத்தாண்டு மார்ச் 31-ந் தேதி வரை 141 நாட்கள் இந்த தண்ணீர் திறந்து விடப்படும். இதன் மூலம் அம்பை வட்டத்தில் 2,756.62 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

    அதேபோல் கொடிமுடியாறு நீர்தேக்கத்தில் இருந்து இன்று முதல் தினமும் விநாடிக்கு 100 கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த தண்ணீர் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 10-ந்தேதி வரை 120 நாட்களுக்கு திறக்கப்படும்.

    இதனால் நாங்குநேரி மற்றும் ராதாபுரம் வட்டங்களில் உள்ள 5780.91 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

    ×