search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Railway work"

    • போலீசார் ஈஸ்வரமூர்த்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • தர்மபுரியை சேர்ந்த டிரைவர் சக்திவேலை அழைத்துச் சென்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியான ராசிபுரம் பிரிவு ரோட்டில் இருந்து மல்லியகரை வரை சாலை விரிவாக்கப் பணி கடந்த 1 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

    இதேபோல் நரசிங்கபுரம் பழைய வீட்டு வசதி வாரியம் அருகே ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணியும் நடைபெற்று வருகிறது.

    இந்த பணிக்கு நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி (25) மேற்பார்வையாளராக இருந்தார். இன்று காலை பணியில் ஈடுபட்டிருந்த ஈஸ்வரமூர்த்தி, மேம்பாலம் கட்ட பள்ளம் தோண்டிய மண் மீது நடந்து சென்றபோது சறுக்கி விழுந்தார்.

    அப்போது இதை கவனிக்காமல் டிரைவர் சக்திவேல் என்பவர் பொக்லைன் எந்திரத்தை பின்னால் இயக்கினார். இதில் ஈஸ்வரமூர்த்தி மீது பொக்லைன் எந்திரம் ஏறியதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆத்தூர் நகர போலீசார் ஈஸ்வரமூர்த்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தர்மபுரியை சேர்ந்த டிரைவர் சக்திவேலை அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.

    மேம்பால பணியில் ஈடுபட்டிருந்த மேற்பார்வையாளர் பொக்லைன் எந்திரம் ஏறியதில் உடல் நசுங்கி பலியான சம்பவம் சக ஊழியர்கள், அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பெரும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    • சோழபுரம், செங்கோட்டையில் மேலும் 2 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
    • எடமன்-பகவதிபுரம் இடையே 34.677 கி.மீ. தொலைவுக்கான மின்மயமாக்கல் பணிகள் வருகிற டிசம்பர் மாதத்துக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மதுரை:

    விருதுநகர்-தென்காசி-செங்கோட்டை-பகவதிபுரம், இடமன்-புனலூர் இடையேயான ரெயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டு உள்ளன. இந்த மின்மாயமக்கபட்ட ரெயில் தண்டவாளத்தில் இன்று காலை மின்சார அதிவேக ரெயில் எஞ்சின் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

    தெற்கு ரெயில்வே முதன்மை தலைமை மின் பொறியாளர் சித்தார்த்தா தலைமையில் மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் சோதனை ஓட்டத்தை நேரில் ஆய்வு செய்தனர்.

    விருதுநகரில் இருந்து காலை 8.05 மணிக்கு புறப்பட்ட ஆய்வு ரெயில், மதியம் புனலூருக்கு சென்றது. அடுத்தபடியாக புனலூரில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்படும் அதிவேக என்ஜின் ரயில், 4.35 மணிக்கு எடமன் செல்லும். இதனைத் தொடர்ந்து பகவதிபுரத்தில் இருந்து மாலை 4:55 மணிக்கு புறப்படும் அதிவேக ரயில், இரவு 8.30 மணிக்கு விருதுநகர் வரும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    விருதுநகர்-தென்காசி-செங்கோட்டை பிரிவில் ஒட்டுமொத்தமாக 140.89 கி.மீ. தொலைவுக்கு ரெயில் பாதைகள் உள்ளன. இதில் 129.99 கி.மீ. தொலைவிற்கு மின்மயம் ஆக்கப்பட்டு உள்ளது. இந்த பிரிவில் 8 ரெயில் நிலையங்கள் உள்ளன. இதற்காக மின்சார நுகர்வு விருதுநகர், வஞ்சி மணியாச்சி துணை மின் நிலையங்களில் இருந்து பெறப்படுகிறது. இது தவிர சோழபுரம், செங்கோட்டையில் மேலும் 2 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.

    அடுத்தபடியாக திருத்தங்கல்-பாம்பு கோவில் சந்தை பிரிவில் சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், சங்கரன் கோவில், கடையநல்லூர், தென்காசி ஆகிய பகுதிகளில் துணை செக்சன் போஸ்டர்கள் அமைக்கப்பட உள்ளது.

    விருதுநகரில் உள்ள ஓவர் ஹெட் எலக்ட்ரிக் டிராக்ஷன் டிப்போ, ராஜபாளையத்தில் புதிதாக அமைய உள்ள டிப்போ ஆகியவை மேற்கண்ட பிரிவின் மின்சார பராமரிப்பு தேவையை பூர்த்தி செய்யும். விருதுநகரில் உள்ள டவர் வேகன் சைடிங்குடன், புதிதாக ராஜ பாளையத்தில் டவர் வேகன் சைடிங் வருகிறது.

    செங்கோட்டை-பகவதிபுரம் மற்றும் எடமன்-புனலூர் பிரிவில் ஒட்டு மொத்தமாக 16.71 கி.மீ தொலைவுக்கு ரெயில் பாதைகள் உள்ளன. இதில் 14.70 கி.மீ. ரயில் பாதை மின்மயம் ஆக்கப்பட்டு உள்ளது. இந்த ரெயில் பாதையில் 2 பிளாக் ஸ்டேசன்கள் உள்ளன. இதற்காக தென்மலையில் செக்ஷனிங் போஸ்டர்கள் உள்ளன.

    அடுத்தபடியாக புதிய ஆரியங்காவு, எடமன், பகவதிபுரம் ஆகிய இடங்களில் துணை செக்ஷனிங் போஸ்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இவற்றுக்கான மின்சார பராமரிப்பு தேவையை விருதுநகர், ராஜபாளையத்தின் ஓவர் ஹெட் எலக்ட்ரிக் டிராக்ஷன் டிப்போக்கள் பூர்த்தி செய்யும். விருதுநகரில் ஏற்கனவே டவர் வேகன் சைடிங் உள்ளது. இதுதவிர ராஜபாளையத்தில் புதிய டவர் வேகன் சைடிங்கும் அமைய உள்ளது. எடமன்-பகவதிபுரம் இடையே 34.677 கி.மீ. தொலைவுக்கான மின்மயமாக்கல் பணிகள் வருகிற டிசம்பர் மாதத்துக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    புனலூர்-கொல்லம் இடையே ஏற்கனவே மின் மயமாக்கல் முடிக்கப்பட்டு, அங்கு கடந்த மார்ச் மாதம் முதல் செயல்படத் தொடங்கி உள்ளது.

    • நெல்லை-மதுரை இடையே கடைசி பகுதியாக இரட்டை அகல ரெயில் பாதை பணியானது மதுரை - திருமங்கலம் இடையே முடிவடைந்துள்ளது.
    • நெல்லை ரெயில் நிலையத்தை அடையும் வகையில் அட்டவணையில் மாற்றம் செய்ய வேண்டும் என்று பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

    நெல்லை:

    நெல்லையில் இருந்து சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் மக்களுக்கு வரப்பிரசாதமாக தென்மாவட்டங்களில் இருந்து இயக்கப்படும் ரெயில்கள் அமைந்துள்ளது.

    இந்த ரெயில்கள் தினமும் சிக்னலுக்காக பல்வேறு ரெயில் நிலையங்களில் மணிக்கணக்கில் காத்துகிடந்து சென்றுவந்ததால் நேரம் விரயமானது. இதனை தொடர்ந்து நேரத்தை குறைக்கும் வகையில் பயணிகள் கோரிக்கையை ஏற்று இரட்டை அகல ரெயில் பாதை அமைக்கப்பட்டு வந்தது.

    அந்த வகையில் நெல்லை-மதுரை இடையே கடைசி பகுதியாக இரட்டை அகல ரெயில் பாதை பணியானது மதுரை - திருமங்கலம் இடையே முடிவடைந்துள்ளது. இதனை தென்னக ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய் குமார் நாளை(திங்கட்கிழமை) ஆய்வு மேற்கொள்கிறார்.

    நெல்லை - மதுரை அகல ரெயில் பாதை பணிகளில், நெல்லை - திருமங்கலம் இடையே சுமார் 139 கிலோமீட்டர் பாதை பணிகள் முடிந்து பயன்பாட்டில் உள்ள நிலையில், திருமங்கலம் - மதுரை இடையே 17.32 கிலோமீட்டர் தூரத்திற்கு புதிய இரட்டை ரெயில் பாதை அமைக்கப்பட்டு உள்ளது.

    மதுரை ரெயில் நிலையத்தில் உள்ள மேம்பாட்டு பணிகள் முடிவடைந்ததும் சில நாட்களில் நெல்லை - மதுரை இடையே இரட்டை அகல ரெயில் பாதையில் ரெயில்கள் இயங்க தொடங்கிவிடும். இந்த 2 பணிகளும் முடிவடைந்த உடன் கிராசிங்கிற்காக ரெயில்கள் நிறுத்தப்படும் நிலை இருக்காது. இரண்டரை மணி நேரத்தில் மதுரையில் இருந்து நெல்லையை அடைந்து விட முடியும்.

    எனவே ஈரோடு - நெல்லை ரெயிலின் வேகத்தை அதிகரித்து இரவு 8.45 மணிக்குள் நெல்லை ரெயில் நிலையத்தை அடையும் வகையில் அட்டவணையில் மாற்றம் செய்ய வேண்டும் என்று பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

    இதுகுறித்து ரெயில் பயணிகள் கூறுகையில், நெல்லையில் இருந்து தினமும் காலை 6.15 மணிக்கு ஈரோட்டுக்கு எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகிறது. மறுமார்க்கமாக மதியம் 1.35 மணிக்கு ஈரோட்டில் புறப்படும் ரெயிலானது மாலை 5.45 மணிக்கு மதுரை வந்து அங்கிருந்து மணியாச்சி வரை முழு வேகத்துடன் இரவு 8.15 மணிக்கு வந்தடைந்து விடுகிறது.

    மணியாச்சியில் இருந்து நெல்லைக்கு மீதமுள்ள 29 கிலோமீட்டர் தூரத்தை அடைவதற்கு 1 மணி 30 நிமிடங்கள் ஆகிறது. தினமும் இரவு 9.40 மணிக்கு இந்த ரெயில் நெல்லையை அடைவதால் அங்கிருந்து பஸ் கிடைக்காமல் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு பயணிகள் கடும் அவதிப்படுகின்றனர்.

    இரட்டை அகல ரெயில் பாதை பணிகள் 100 சதவீதம் முடிந்துள்ளதால் அட்டவணையில் மாற்றம் செய்து இரவு 8.30 மணிக்குள் நெல்லையை சென்றடையும் வகையில் ரெயிலை இயக்க வேண்டும் என்றனர்.

    அரக்கோணம் அருகே சரக்கு ரெயில் தடம் புரண்டதால் சென்னை செல்லும் ரெயில்கள் தாமதமாக சென்றன. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
    அரக்கோணம்:

    மைசூரில் இருந்து சென்னை கார் கம்பெனியில் கார்களை ஏற்றுவதற்காக சரக்கு ரெயில் நேற்று இரவு புறப்பட்டு வந்தது. இன்று அதிகாலை 3.30 மணிக்கு அரக்கோணம் அடுத்த மேல்பாக்கம் வந்தது.

    அங்குள்ள யார்டு லைன் அருகே வந்தபோது சரக்கு ரெயிலில் 5 மற்றும் 6-வது பெட்டிகள் திடீரென தடம் புரண்டன. இதனால் ரெயில் அங்கேயே நிறுத்தப்பட்டது. இது பற்றி அரக்கோணம் ரெயில் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து பெங்களூரில் இருந்து வந்த காவேரி எக்ஸ்பிரஸ், கேரளவில் இருந்து வந்த ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தபட்டன. இதனால் பயணிகள் அவதியடைந்தனர்.

    சென்னை மண்டல மேலாளர் மகேஷ், அரக்கோணம் ரெயில் நிலைய மேலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

    தடம்புரண்ட பெட்டிகளை கழட்டி விட்டு மற்ற பெட்டிகள் யார்டு பகுதியில் நிறுத்தப்பட்டன. இதனையடுத்து 1½ மணி நேரத்துக்கு பிறகு காவேரி எக்ஸ்பிரஸ், ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. அதன்பிறகு வந்த ரெயில்கள் மாற்று பாதையில் இயக்கப்பட்டன.

    தடம் புரண்ட ரெயில் பெட்டியை சீரமைக்க கிரேன் கொண்டு வரப்பட்டது. அதன் மூலம் ரெயில் பெட்டிகளை தண்டவாளத்தில் தூக்கி நிறுத்தும் பணிகளில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
    ஐ.ஏ.எஸ். அதிகாரி மற்றும் ரெயில்வே துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி தொழில் அதிபரிடம் ரூ. 24½ லட்சம் மோசடி செய்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.
    போரூர்:

    கடலூர் மாவட்டம் கூத்தப்பாக்கம் பெருமாள் நகரைச் சேர்ந்தவர் சதாசிவம் தொழில் அதிபர். இவர் அரும்பாக்கம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

    என்னுடைய நண்பர் மூலம் எனக்கு மாயவரம் பசுபதி அகரத்தைச் சேர்ந்த மணி வெங்கடகிருஷ்ணன் என்பவர் அறிமுகமானார் மணி வெங்கடகிருஷ்ணன் தனக்கு டெல்லியில் மத்திய அரசின் பல துறை அதிகாரிகள் உடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாக என்னிடம் அடிக்கடி கூறி வந்தார்.

    என்னுடைய மகள், மகன் ஆகிய இருவருக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரி மற்றும் ரெயில்வே துறையில் ஸ்டே‌ஷன் மாஸ்டர் வேலை வாங்கி தருவதாக என்னிடம் உறுதி அளித்தார்.

    இதற்காக மணி வெங்கட கிருஷ்ணன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அண்ணா நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் வைத்து என்னிடம் இருந்து இரண்டு தவணையாக மொத்தம் ரூ.24 லட்சத்து 50ஆயிரம் பெற்று கொண்டார். ஆனால் இதுவரை வேலை வாங்கி தரவில்லை. பணத்தையும் திருப்பி தராமல் தலைமறைவாகி விட்டார்.

    வேலை வாங்கித் தருவதாக ரூ. 24½ லட்சம் மோசடி செய்த மணிவெங்கடேசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    ×