search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "petrol diesel hike"

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கம்யூனிஸ்டுகள் சார்பில் ஈரோடு மேட்டூர் ரோட்டில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. #BharathBandh #PetrolDieselPriceHike

    ஈரோடு:

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கம்யூனிஸ்டுகள் சார்பில் ஈரோடு மேட்டூர் ரோட்டில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி ஈரோடு பஸ் நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ரகுராமன் ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.

    பெட்ரோல், டீசல் விலை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பினர். மேலும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி ஈரோடு மேட்டூர் ரோட்டில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் ஈரோடு மேட்டூர் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து ஈரோடு டவுன் போலீசார் மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட கம்யூனிஸ்டுகளை கைது செய்தனர். #BharathBandh #PetrolDieselPriceHike 

    லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் இன்று 3-வது நாளாக நீடித்து வரும் நிலையில் வெளி மாநிலங்களில் இருந்து லாரிகள் குறைவாக வந்துள்ளதால் காய்கறிகள் விலை 30 சதவீதம் உயர்ந்துள்ளது. #Truckersstrike
    சென்னை:

    டீசல் விலையை குறைத்து 3 மாதங்களுக்கு ஒருமுறை விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய தரைவழி போக்குவரத்து சங்கங்களின் கீழ் உள்ள தமிழக லாரி உரிமையாளர்கள் சங்கம் உள்பட 15-க்கும் மேற்பட்ட சங்கங்கள் நேற்று முன்தினம் முதல் லாரி ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளன.

    இன்று 3-வது நாளாக ஸ்டிரைக் நீடித்து வருகிறது. இந்த வேலை நிறுத்தத்தில் பெரும்பாலான முக்கிய லாரி சங்கங்கள் பங்கேற்காததால் மிகப்பெரிய அளவில் சரக்கு போக்குவரத்து பாதிக்கப்படவில்லை. தமிழகத்தில் 10 சதவீத லாரிகள் மட்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.



    ஆனாலும் வெளி மாநிலங்களில் இருந்து வர வேண்டிய லாரிகள் தமிழகத்திற்கு அதிகமாக வரவில்லை. பருப்பு வகைகள், மைதா, காய்கறிகள், ஜவுளி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தமிழகத்திற்கு குறைந்த அளவிலேயே வருகின்றன. இதனால் அவற்றின் விலை உயர்ந்து வருகிறது.

    சென்னையில் லாரிகள் ஸ்டிரைக் தீவிரமாக இல்லை. பெரும்பாலான லாரிகள் ஓடுவதால் பொருட்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கின்றன.

    கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வழக்கமாக வர வேண்டிய 350 லாரிகளில் 220 லாரிகள் மட்டுமே வந்துள்ளன. வெளி மாநிலங்களில் இருந்து வர வேண்டிய காய்கறிகள் குறைவாக வந்துள்ளதால் காய்கறிகள் விலை 30 சதவீதம் உயர்ந்துள்ளது.

    இதற்கிடையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள லாரி உரிமையாளர்கள், அழைத்து பேசும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர்.

    மத்திய அரசிடம் வைத்துள்ள கோரிக்கைகள் குறித்து இதுவரையில் எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அதனால் ஸ்டிரைக் தொடர்ந்து நடைபெறும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

    இந்த வேலை நிறுத்தம் லாரி உரிமையாளர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் திட்டமிட்டு செய்கின்றன என்று தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் எம்.ஆர்.குமாரசாமி தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது:-

    ஜூலை 20-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடத்தப்படும் என்று மத்திய அரசுக்கு கடிதம் கொடுத்து விட்ட நிலையில் திடீரென ஒரு சிலர் பொதுமக்களையும், லாரி உரிமையாளர்களையும் குழப்பி ஒற்றுமையை குலைக்கும் செயல்களில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பது குறித்து பொதுக் குழுவில் முடிவு செய்வோம் என்றார். #Truckersstrike
    லாரிகள் ஸ்டிரைக் இன்று 2-வது நாளாக நீடித்து வருவதால் காய்கறிகளின் மொத்த விற்பனை விலை நேற்றை விட 20 சதவீதம் உயர்ந்துள்ளது.
    சென்னை:

    டீசல் விலை உயர்வு, காப்பீட்டு கட்டணம், சுங்க கட்டணம் உயர்வு ஆகியவற்றை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி லாரி உரிமையாளர்களில் ஒரு பிரிவினர் நாடு முழுவதும் நேற்று முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    லாரிகள் ஓடாததால் பொருட்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல முடியாமல் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    தமிழகத்தில் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் முழு அளவில் நடைபெறவில்லை.

    முக்கியமான லாரி சங்கங்கள் இந்த ஸ்டிரைக்கில் ஈடுபடாததால் பெரும்பாலான லாரிகள் இயக்கப்படுகின்றன. ஆனாலும் ஒரு பிரிவினர் லாரிகளை இயக்காமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    தமிழகத்தில் லாரிகள் அதிகமுள்ள நாமக்கல், சேலம் மாவட்டங்களில் பெரும்பாலான லாரிகள் வழக்கம் போல் ஓடின. சென்னை மற்றும் ஒரு சில மாவட்டங்களில் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    கோயம்பேடு, மாதவரம், வானகரம், நெற்குன்றம் உள்ளிட்ட பல இடங்களில் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கும் வெளி மாநிலங்களுக்கும் லாரிகள் அதிகளவு இயக்கப்படவில்லை. அதே போல வெளி மாநிலங்களில் இருந்தும் குறைந்த அளவில்தான் லாரிகள் சென்னைக்கு வருகின்றன.

    இன்று 2-வது நாளாக ஸ்டிரைக் நீடித்து வருவதால் அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்வதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. லாரி உரிமையாளர்களின் போராட்டத்தில் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. லாரி உரிமையாளர்களும் நஷ்டத்தை சந்தித்து வருகிறார்கள்.

    சரக்கு போக்குவரத்து பாதிக்கப்படுவதால் பொருட்கள் விலை உயரும் அபாயம் உள்ளது. அழுகும் பொருளான காய்கறிகள் விலை உடனே உயர்ந்து விட்டது.

    லாரிகள் ஸ்டிரைக் காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு குறைந்த அளவில் லாரிகள் இன்று வந்தன. வழக்கமாக தினமும் 350 லாரிகளில் காய்கறிகள் வருவது உண்டு. ஆனால் ஸ்டிரைக் காரணமாக 200 லாரிகள் மட்டுமே இன்று வந்துள்ளன.

    இதனால் காய்கறிகளின் மொத்த விற்பனை விலை நேற்றை விட 20 சதவீதம் உயர்ந்துள்ளது. பீன்ஸ், தக்காளி, உருளை, இஞ்சி போன்ற காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.

    லாரி வாடகையும் உயர்ந்து இருப்பதாக மார்க் கெட் மொத்த வியாபாரி சவுந்தர்ராஜன் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-

    லாரிகள் குறைவாக வருவதால் குறிப்பிட்ட காய்கறிகள் விலை அதிகரித்துள்ளது. பீன்ஸ், தக்காளி, அவரைக்காய், பச்சை மிளகாய் போன்றவை விலை உயர்ந்துள்ளது. கேரட், பீட்ரூட், நூல்கோல் ஆகியவை 10 சதவிகிதம் விலை உயர்ந்துள்ளது. நாளையும் லாரிகள் வரவில்லை என்றால் மேலும் உயரும் என்றார்.

    இன்று நடக்கும் லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் நாங்கள் பங்கேற்கவில்லை. ஈரோடு மாவட்டத்தில் லாரிகள் வழக்கம் போல் ஓடும் என்று லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குணசேகரன் கூறினார்.
    ஈரோடு:

    டீசல் விலையை தினசரி நிர்ணயிக்காமல் 3 மாதத்துக்கு ஒரு முறை நிர்ணயம் செய்ய வேண்டும். 3-வது நபர் காப்பீட்டு தொகையை 30 சதவீதத்தில் இருந்து குறைக்க வேண்டும். சுங்க கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட போவதாக லாரிகள் உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்திருந்தது.

    அதன்படி நாடு முழுவதும் 75 லட்சம் லாரிகள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளன.

    ஆனால் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈரோடு லாரி உரிமையாளர்கள் சங்கம் பங்கேற்கவில்லை.

    இதுகுறித்து ஈரோடு மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குணசேகரன் கூறியதாவது.-

    பெட்ரோல், டீசல் விலை தினம் தினம் உயர்த்தப்படுவதால், சரக்கு லாரிகள் நஷ்டத்தை சந்திக்கின்றன. எனவே மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இவற்றின் விலையை உயர்த்த வேண்டும்.

    தேசிய அளவில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு, ஆண்டுக்கு ஒரே ஒரு முறை, ஒரே தொகையாக பெற வேண்டும்.

    வாகனங்களுக்கான மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் கட்டண உயர்வை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் ஜீலை 20-ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. மாநில லாரி உரிமையாளர் சம்மேளனத்தில் அங்கத்தினர் என்ற முறையில் தாங்களும் பங்கேற்கிறோம்.

    எனவே இன்று நடக்கும் லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் நாங்கள் பங்கேற்கவில்லை. ஈரோடு மாவட்டத்தில் லாரிகள் வழக்கம் போல் ஓடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஈரோடு நரிப்பள்ளம் ஓடை பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் இரவில் நிறுத்தி வைக்கப்பட்டு காலையில் அந்தந்த பகுதிகளுக்கு சரக்குகளை ஏற்றி செல்லும்.

    அதே போன்று இன்று நரிப்பள்ளம் ஓடையில் இருந்து லாரிகள் வழக்கம் போல் இயங்கின.

    லாரி உரிமையாளர்கள் இன்று நடத்தும் வேலை நிறுத்தத்திற்கு தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளதாக அதன் தலைவர் செல்ல.ராஜா மணி தெரிவித்து உள்ளார்.
    நாமக்கல்:

    டீசல் விலை உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு முழு ஆதரவு தெரிவித்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

    இதனால் 75 ஆயிரம் லாரிகள் ஓடாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஒன்றரை லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். நாள் ஒன்றுக்கு சுமார் 3 கோடி ரூபாய்க்கு மேல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    முன்பு நாள் ஒன்றுக்கு தமிழகம் முழுவதும் 40, ஆயிரம் மணல் லாரிகள் லோடுகளை ஏற்றி வந்தன. தற்போது ஆன்லைன் வர்த்தகம் வந்த பின் தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் மணல் லாரிகளுக்கு மட்டுமே லோடு கிடைப்பதால் மற்ற லாரிகள் லோடு கிடைக்காமல் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    ஓட்டுநர் பற்றாக்குறை, உதிரி பாகங்கள் விலை உயர்வு, 8-ம் வகுப்பு படித்தவர்களுக்குத்தான் ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட காரணங்களால் 30 சதவீத லாரிகள் இயக்கப்படாமல் உள்ளன. இதனால் மணல் லாரி தொழிலாளர்கள் வேலையில்லாமல் உள்ளனர். இந்நிலையில் டீசல் விலை உயர்வு கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    லாரி சங்கங்கள் இரண்டாக செயல்படுகின்றன. இதில் ஒரு சங்கம் இன்றும், மற்றொரு சங்கம் ஜூலை மாதம் 20-ந் தேதியும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளன. லாரி சங்கங்கள் ஒன்றிணைந்து ஒற்றுமையாக செயல்பட்டால் தான் லாரி தொழிலை காக்க முடியும். எனவே லாரி சங்கங்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.



    ×