search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    3-வது நாளாக ஸ்டிரைக் நீடிப்பு - வெளிமாநில லாரிகள் வராததால் தமிழகத்தில் தொழில் பாதிப்பு
    X

    3-வது நாளாக ஸ்டிரைக் நீடிப்பு - வெளிமாநில லாரிகள் வராததால் தமிழகத்தில் தொழில் பாதிப்பு

    லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் இன்று 3-வது நாளாக நீடித்து வரும் நிலையில் வெளி மாநிலங்களில் இருந்து லாரிகள் குறைவாக வந்துள்ளதால் காய்கறிகள் விலை 30 சதவீதம் உயர்ந்துள்ளது. #Truckersstrike
    சென்னை:

    டீசல் விலையை குறைத்து 3 மாதங்களுக்கு ஒருமுறை விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய தரைவழி போக்குவரத்து சங்கங்களின் கீழ் உள்ள தமிழக லாரி உரிமையாளர்கள் சங்கம் உள்பட 15-க்கும் மேற்பட்ட சங்கங்கள் நேற்று முன்தினம் முதல் லாரி ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளன.

    இன்று 3-வது நாளாக ஸ்டிரைக் நீடித்து வருகிறது. இந்த வேலை நிறுத்தத்தில் பெரும்பாலான முக்கிய லாரி சங்கங்கள் பங்கேற்காததால் மிகப்பெரிய அளவில் சரக்கு போக்குவரத்து பாதிக்கப்படவில்லை. தமிழகத்தில் 10 சதவீத லாரிகள் மட்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.



    ஆனாலும் வெளி மாநிலங்களில் இருந்து வர வேண்டிய லாரிகள் தமிழகத்திற்கு அதிகமாக வரவில்லை. பருப்பு வகைகள், மைதா, காய்கறிகள், ஜவுளி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தமிழகத்திற்கு குறைந்த அளவிலேயே வருகின்றன. இதனால் அவற்றின் விலை உயர்ந்து வருகிறது.

    சென்னையில் லாரிகள் ஸ்டிரைக் தீவிரமாக இல்லை. பெரும்பாலான லாரிகள் ஓடுவதால் பொருட்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கின்றன.

    கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வழக்கமாக வர வேண்டிய 350 லாரிகளில் 220 லாரிகள் மட்டுமே வந்துள்ளன. வெளி மாநிலங்களில் இருந்து வர வேண்டிய காய்கறிகள் குறைவாக வந்துள்ளதால் காய்கறிகள் விலை 30 சதவீதம் உயர்ந்துள்ளது.

    இதற்கிடையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள லாரி உரிமையாளர்கள், அழைத்து பேசும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர்.

    மத்திய அரசிடம் வைத்துள்ள கோரிக்கைகள் குறித்து இதுவரையில் எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அதனால் ஸ்டிரைக் தொடர்ந்து நடைபெறும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

    இந்த வேலை நிறுத்தம் லாரி உரிமையாளர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் திட்டமிட்டு செய்கின்றன என்று தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் எம்.ஆர்.குமாரசாமி தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது:-

    ஜூலை 20-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடத்தப்படும் என்று மத்திய அரசுக்கு கடிதம் கொடுத்து விட்ட நிலையில் திடீரென ஒரு சிலர் பொதுமக்களையும், லாரி உரிமையாளர்களையும் குழப்பி ஒற்றுமையை குலைக்கும் செயல்களில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பது குறித்து பொதுக் குழுவில் முடிவு செய்வோம் என்றார். #Truckersstrike
    Next Story
    ×