search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nakheeran gopal"

    பொள்ளாச்சி சம்பவம் விஸ்வரூபம் எடுத்ததையடுத்து நக்கீரன் கோபால், சபரீசன் மீதான 5 வழக்குகளும் சி.பி.ஐ.க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. #pollachiissue #cbi

    கோவை:

    பொள்ளாச்சி பாலியல் வழக்கு விஸ்வரூபம் எடுத்ததையடுத்து சி.பி.சி. ஐ.டி.க்கு மாற்றி தமிழக அரசு உத்தர விட்டது.

    அடுத்த சில மணி நேரத்தில் இவ்வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. சி.பி.ஐ. விசாரணை தொடங்கும் வரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே பொள்ளாச்சி வழக்கு தொடர்பான வீடியோ வெளியிட்டதாக நக்கீரன் கோபால் மீது சென்னை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    அதேபோல தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன், பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக தன் குடும்ப உறுப்பினர்கள் மீது அவதூறு பரப்புவதாக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கொடுத்த புகாரின்பேரில் சபரீசன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுதவிர மேலும் 3 வழக்குகளை சிலர் மீது பதிவு செய்துள்ளனர்.

    இந்த வழக்கில் முன் ஜாமீன் அளிக்கக்கோரி நக்கீரன் கோபால் தாக்கல் செய்த மனு ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் மாநில தலைமை குற்றவியல் வக்கீல் ஏ.நடராஜன் ஆஜரானார்.

    அவர் ‘பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக நக்கீரன் கோபால், சபரீசன் உள்பட பலர் மீது பதிவு செய்யப்பட்ட 5 வழக்குகளையும் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது’ என்றார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. எனவே மனுதாரர் தேவைப்படும் போது முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தை அணுகலாம் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

    பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி கொடுத்த புகாரின்பேரில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதிஷ், வசந்தகுமார் ஆகிய 4 பேரை பொள்ளாச்சி கிழக்கு போலீசார் கைது செய்தனர்.


    பாதிக்கப்பட்ட மாணவியின் அண்ணனை தாக்கியதாக பார்நாகராஜ், செந்தில், பாபு, வசந்தகுமார் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கில் மணிவண்ணன் என்பவர் தலைமறைவாக உள்ளார். இந்த இரண்டு வழக்குகளையும் சி.பி.ஐ.க்கு மாற்றி தமிழக அரசு கடந்த வாரம் அரசாணை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பான மேலும் 5 வழக்குகளும் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #pollachiissue #cbi

    ஆளுநர் கொடுத்த புகாரின் பேரில் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதற்கு அரசியல் கட்சி தலைவர்கள கண்டனம் தெரிவித்துள்ளனர். #NakheeranGopal #MKStalin #Thirumavalavan
    சென்னை:

    நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பேராசிரியை நிர்மலா தேவி தொடர்பான “தொடர்” ஒன்றை வெளியிட்டு வரும் நக்கீரன் பத்திரிகையின் ஆசிரியரை, சர்வாதிகார பாசிச மனப்பான்மையுடன் கைது செய்திருப்பது, கருத்துச் சுதந்திரம் மற்றும் பத்திரிகைச் சுதந்திரத்தின் கழுத்தில் ஏறி அமர்ந்து சவாரி செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசும், தமிழக ஆளுநரும் எண்ணுவது, தமிழ்நாட்டில் நடப்பது பா.ஜ.க. ஆட்சியே என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

    அ.தி.மு.க ஆட்சியின் அனைத்து வகை ஊழல்களுக்கும், சட்டத்திற்குப் புறம்பாக முட்டுக் கொடுத்துக் காப்பாற்றிக் கொண்டிருக்கும் மத்திய பா.ஜ.க. அரசும், மாநிலத்தில் உள்ள ஆளுநரும் “பொம்மை” எடப்பாடி பழனிசாமி அரசைப்பயன்படுத்தி, ஜனநாயகத்தைக் குழி தோண்டிப்புதைக்கும் வேலையில் ஈடுபடுவது கடும் கண்டனத்திற்குரியது.



    ஆளுநர் கொடுத்த புகாரின் பேரில், நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது. சென்னை உயர்நீதி மன்றத்தையே கொச்சைப்படுத்திப் பேசிய எச்.ராஜாவை கைது செய்யவில்லை. போலீஸ் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கின்ற நேரத்தில் ஆளுநரே அவரை சந்தித்துப் பேசுகிறார். இன்னொரு பக்கம் “பாசிச பா.ஜ.க” என்றதால் மாணவி சோபியா கைது செய்யப்படுகிறார். கைது செய்யப்பட்டுள்ள பேராசிரியை பற்றி, தொடர் எழுதினால் நக்கீரன் பத்திரிக்கை ஆசிரியர் கைது செய்யப்படுகிறார். என்னதான் நடக்கிறது தமிழகத்தில்?

    தமிழ்நாடு என்ன ஜனநாயக நாடா என்றே கேட்கத்தோன்றுகிறது. ஊழல் அ.தி.மு.க அரசும், பாசிச பா.ஜ.க. அரசின் முகவராக இருக்கும் ஆளுநரும் தமிழ்நாட்டில் ஒரு அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையை அமல்படுத்தி, பத்திரிகைச் சுதந்திரத்திற்கு பகிரங்கமான அச்சுறுத்தல் விடுக்கிறார்கள்.

    பொம்மை அரசை வைத்துக் கொண்டு தங்கள் சித்தாந்தங்களுக்கு வேண்டாதவர்களை கைது செய்யத்தூண்டும் மத்திய பா.ஜ.க. அரசும், மாநில ஆளுநரும் இந்த அரசை டிஸ்மிஸ் செய்து விட்டு நேரடியாகவே பா.ஜ.க. வழிகாட்டுதலில் மாநில அரசை நடத்தலாம். அதை விடுத்து விட்டு, கொல்லைப்புற வழியாக முகமூடி அணிந்துகொண்டு தங்கள் கட்டளைகளை நிறைவேற்ற எடுபிடி அரசைப் பயன்படுத்துவது வெட்கக்கேடானது.

    பொறுப்பான மாநில ஆளுநர் பதவியில் இருப்பவர் மறைமுகமாக அரசியல் செய்ய நினைக்கும் போது, விமர்சனங்களைத் தாங்கிக் கொள்ளும் பக்குவத்தைப் பெற வேண்டும். அப்படி பொறுத்துக்கொள்ள இயலாமல், முதலமைச்சரை ராஜ்பவனுக்கே அழைத்து, நக்கீரன் கோபாலை கைது செய்யச் சொல்லியிருப்பது ஒரு மாநில ஆளுநருக்கு அதுவும் அரசியல் சட்டப் பதவியை வகிப்பவருக்கு அழகா?

    ஆகவே, கைது செய்யப்பட்ட திரு நக்கீரன் கோபாலை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும், அவர் மீது போடப்பட்டுள்ள வழக்கினை நிபந்தனையின்றி திரும்பபெற வேண்டும் என்றும் வலியுறுத்திக்கேட்டுக் கொள்கிறேன்.

    சென்னை விமான நிலையத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை இருந்து வருகிறது. அதனால் தான் நக்கீரன் கோபாலை விமான நிலையத்தின் உள்ளேயே போலீசார் கைது செய்து இருக்கிறார்.

    பாஷிச அதிகாரத்தை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று நக்கீரன் கோபாலுக்கு தெரியும். பத்திரிக்கை மற்றும் ஊடகத்தின் கருத்து சுதந்திரத்தை பறிக்கும் செயலில் கவர்னர் ஈடுபட்டு வருகிறார்.

    கவர்னர் மாளிகையில் இருந்து எந்த ஒரு அதிகாரியும் உத்தரவு போட முடியாது. நக்கீரன் கோபாலை கைது செய்யக்கோரி கவர்னர் தான் சொல்லி இருக்கிறார்.

    நக்கீரன் கோபாலை கைது செய்ததை வன்மையாக கண்டிக்கிறேன். தமிழக அரசையும், காவல்துறையையும் கவர்னர் தனக்காக பயன்படுத்துகிறார்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்:-

    உயர் பதவிகளில் உள்ளவர்கள் மீதான புகார்கள், குற்றச்சாட்டுகள் எழும் போது அதை வெளியுலகத்திற்கு கொண்டு வருவதும், அதன் மீது முறையான நடவடிக்கை எடுக்க வற்புறுத்துவதும் பத்திரிகை சுதந்திரத்தின் உயிர் நாடியாகும்.

    அதை பறிக்கும் வகையில் இன்று நக்கீரன் கோபால் கைது செய்திருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.

    குற்றச்சாட்டுக்களை முன்வைப்போர் மீது இத்தகைய தாக்குதல்கள் தொடுப்பது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாகும். எனவே, ஆளுநர் தமிழகத்திலிருந்து திரும்ப அழைக்கப்பட வேண்டுமென்கிற கோரிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் வலியுறுத்துகிறது.

    தமிழகத்தில் எதிர்கட்சியினர் மற்றும் மக்கள் உரிமைகளுக்காக போராடுகிற பல அமைப்புகளைச் சார்ந்தவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது, அலைக்கழிக்கப்படுவது, சிறையில் அடைக்கப்படுவது அன்றாட நடவடிக்கைகளாக மாறியுள்ளது.

    இத்தகைய தாக்குதல்களின் மூலம் தமிழக மக்களின் உரிமை போராட்டங்களை முடக்கி விட நினைப்பது பகல் கனவாகவே முடியும் என சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

    எனவே, கைது செய்யப்பட்ட நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் கோபால்லை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-



    தமிழக ஆளுநர் மூலம் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மூத்த பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக் கிறோம். அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனத் தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.

    ஆளுநர் அலுவலகத்திலிருந்து பத்திரிகையாளர் மீது புகார் அளிக்கப்பட்டு கைது செய்யப்படுவது இந்தியாவில் வேறெங்குமே நடந்ததாகத் தெரியவில்லை. தமிழ்நாட்டில் இப்படி ஒரு மிக மோசமான முன்னுதாரணம் ஏற்படுத்தப்பட்டிருப்பது வேதனைக்குரியது.

    பல்கலைகழகத்துணை வேந்தர் நியமனங்களில் முறைகேடு நடந்ததாக ஆளுநர் கூறியிருந்தார். துணைவேந்தர்களை நியமனம் செய்யும் அதிகாரம் கொண்ட ஆளுநரே அப்படி சொன்னது எல்லோருக்கும் வியப்பளித்தது. அது குறித்த விவரங்களை வெளியிட வேண்டுமென்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தன. அதை திசை திருப்புவதற்காகவே இப்படி கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருகிறதோ என்ற அய்யம் நமக்கு எழுகிறது.

    தமிழ்நாட்டில் ஊடகங்களுக்கு ஆளும் தரப்பினரால் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் தொடர்ந்து நெருக்கடிகள் தரப்படுகின்றன. இதைப்பற்றி பிரதமரிடமே சென்று ஊடக வியலாளர்கள் முறையிட்டு உள்ளனர்.

    இந்தச் சூழலில் பத்திரிக்கை சுதந்திரத்தை நெரிக்கும் செயலில் ஆளுநர் அலுவலகமே ஈடுபடுவது அதிர்ச்சியளிக்கிறது. இது கருத்துரிமைக்குப் பேராபத்தாகும். இதை எதிர்த்து அனைத்துக் கட்சிகளும் குரலெழுப்ப முன்வரவேண்டும் என்று அழைக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்ஜி.கே.வாசன் கூறியதாவது:-

    பத்திரிகை சுதந்திரத்திற்கு பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக உள்ளது. நக்கீரன் கோபாலை தமிழக காவல்துறை கைது செய்து, வழக்கும் பதிவு செய்திருக்கிறது. இது கண்டிக்கத் தக்கது.

    அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். மேலும் அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கினை வாபஸ் பெற வேண்டும். பத்திரிக்கையாளர்களை அடக்கினால் அது பத்திரிக்கை சுதந்திரத்தை முடக்கும் செயலாகும்.

    நக்கீரன் ஆசிரியர் கோபால் புனே செல்லுவதற்காக சென்னை விமான நிலையத்திற்குச் சென்றபோது, காவல்துறையினரால் திடீரென்று கைது செய்யப்பட்டுள்ளார். ஆளுநர் மாளிகையில் இருந்து வந்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. அவரிடம் என்ன குற்றத்திற்காக கைது செய்யப்படுகிறார் என்பது தெரிவிக்கப்படவில்லை என்றே கூறப்படுகிறது.

    நக்கீரன் கோபாலின் கைதினைத் தொடர்ந்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்திற்கு விரைந்தார். வழக்கறிஞர் என்ற முறையில் நக்கீரன் கோபாலை சந்திக்கவேண்டும் என்று வைகோ கூறியதையும் காவல்துறையினர் ஏற்றுக்கொள்ளவில்லை.

    வேறு வழியின்றி வைகோ காவல் நிலையத்திலேயே அமர்ந்து மறியல் செய்தார். அதனைத் தொடர்ந்து அவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

    நடக்கின்ற நடவடிக்கைகளை பார்த்தால் தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை அமலில் உள்ளதா? பத்திரிகையாளர்களையும், கருத்துக்கூறக் கூடியவர்களையும் நசுக்கலாம், ஒடுக்கலாம், அச்சுறுத்தலாம் என்று நினைப்பது ஜனநாயக நாட்டில் அனுமதிக்கப்படாதவையாகும்.

    அண்ணா பெயரில் உள்ள ஆட்சிக்கு இது அழகல்ல; கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

    மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச். ஜவா ஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டிருப்பது ஆளுநர் அலுவலகத்தின் பதட்டத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள கோபால் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது அதிகார துஷ்பிரயோகத்தின் உச்ச நிலையாக அமைந்துள்ளது.

    நாட்டின் நீதி பரிபாலன சபையான உயர்நீதி மன்றத்தையும், காவல் துறையையும் மிக மோசமாக விமர்சித்த பா.ஜ.கவின் தேசிய செய லாளர் எச். ராஜாவை கைது செய்யாத காவல்துறை, ஆளுநர் அலுவலகம் புகார் அளித்த உடனேயே நக்கீரன் கோபாலை கைதுச் செய்திருப்பது தமிழக அரசின் பாரபட்சப் போக்கை அம்பலப்டுத்தியுள்ளது.

    தமிழகத்தில் பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்பட்டு வருகிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. ஜனநாயக நாட்டில் ஆளுநரும் விமர்சனத்திற்கு உட்பட்டவர்தான். ஆளுநரின் செயல்பாட்டை விமர்சித்தால் அது அவரது பணியில் தலையிடுவதாக குறிப்பிடுவது தமிழகத்தில் ஜனநாயகம் கேள்வி குறியாக்கப்ட்டுள்ளது என்பதன் அடையாளமாக அமைந்துள்ளது.

    இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் முத்தரசன் கூறியதாவது:-

    நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டுள்ளதை மிக வன்மையாக கண்டிப்பதுடன் அவர் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெற்று, உடனடியாக அவரை நிபந்தனையின்றி விடுதலை செய்யுமாறு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதுடன், ‘ஜனநாயக குரலை அடக்க நினைக்கும் ஆளுநர் மற்றும் மாநில அரசின் செயலை ஊடகத் துறையினரும், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள அனைவரும் ஒருங்கிணைந்து முறியடிக்க முன்வர வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #NakheeranGopal #MKStalin #Thirumavalavan
    ×