search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister M. Subramanian"

    • பாதுகாப்பான உணவு என்கின்ற வகையில் உணவு பாதுகாப்பு துறையின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது.
    • உணவு பாதுகாப்பு தொடர்பாக www.foodsafety.tn.gov.in என்ற இணையதளம் மற்றும் கைபேசி செயலி உருவாக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில், உணவு பாதுகாப்புத்துறையின் இணையதளம் மற்றும் நுகர்வோர் குறைதீர்ப்பு கைபேசி செயலியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிமுகம் செய்து வைத்தார்.

    பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாதுகாப்பான உணவு என்கின்ற வகையில் உணவு பாதுகாப்பு துறையின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. உணவு பாதுகாப்பு தொடர்பாக www.foodsafety.tn.gov.in என்ற இணையதளம் மற்றும் கைபேசி செயலி உருவாக்கப்பட்டு உள்ளது. இதனால் உணவு பாதுகாப்புத்துறையின் செயல்பாடுகளை பொதுமக்கள் எளிதாக அறிந்து கொள்ள முடியும்.

    இந்த இணையதளத்தில், உணவு பாதுகாப்புத்துறையைப் பற்றிய அனைத்து தகவல்கள் குறிப்பாக அனைத்து அமலாக்க அதிகாரிகளின் தொடர்பு விவரங்கள், உணவு ஆய்வகங்களின் முகவரிகள், அரசு உணவு பகுப்பாய்வு ஆய்வகங்களில் உணவு மாதிரி பகுப்பாய்வுக்கான கட்டண விவரம், சுகாதார கேடு விளைவிக்கும் உணவு பொருட்களின் தடை உத்தரவு, துறை ரீதியான உத்தரவுகள், கோர்ட்டு வழக்குகளின் உத்தரவு ஆகியவற்றை பொதுமக்கள் தெரிந்து கொள்ள முடியும். உணவு வணிகர்கள் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006 மற்றும் அதன் விதிகள், விதிமுறைகள் 2011 பற்றிய இணையதள இணைப்பும் வழங்கப்பட்டு உள்ளது.

    உணவின் தரம் குறித்து நுகர்வோர் புகார்களை நிவர்த்தி செய்ய 9444042322 என்ற வாட்ஸ்-அப் புகார் எண் கடந்த 2017-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், unavupukar@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் புகார்கள் பெறப்பட்டு 72 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதை மேம்படுத்தும் விதமாக உணவு பாதுகாப்புத்துறை மூலம் நுகர்வோர் குறைகளை நிவர்த்தி செய்வதற்கான பிரத்யேக மொபைல் அப்ளிகேஷன் 'தமிழ்நாடு உணவு பாதுகாப்பு நுகர்வோர் செயலி' (TN Food safety Consumer App) என்ற பெயரில் பொதுமக்கள் எளிதாக கையாளும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது.

    ரசாயன கற்களைக் கொண்டு பழுக்க வைக்கப்படும் பழங்களை உட்கொள்வதால் அனைத்து வயதினருக்கும் உடல் நலக்குறைவு ஏற்படுகிறது என்பது தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் 4 ஆயிரத்து 122 இடங்களில் ஆய்வு செய்யப்பட்டதில் 16 ஆயிரத்து 209 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.9.2 லட்சமாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் ப.செந்தில்குமார், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை ஆணையர் லால்வீனா, தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குனர் டாக்டர் ச.உமா, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் டாக்டர் சண்முகக்கனி, உணவு பாதுகாப்புத்துறை இயக்குனர் மற்றும் கூடுதல் ஆணையர் டாக்டர் தேவபார்த்தசாரதி, துணை இயக்குனர் டாக்டர் பிரதீப் வ.கிருஷ்ணகுமார், சென்னை நியமன அதிகாரி டாக்டர் சதீஷ் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • திருப்பூர் தெற்கு மாவட்டத்தை சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டும் .
    • தி.மு.க. திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளரும், 4-வது மண்டல தலைவருமான இல.பத்மநாபன் அழைப்பு விடுத்துள்ளார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் நாளை அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்கள் உள்ளிட்டவைகளை திறக்க மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வருகிறார். இதில் திருப்பூர் தெற்கு மாவட்டத்தை சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டும் என தி.மு.க. திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளரும், திருப்பூர் மாநகராட்சியின் 4-வது மண்டல தலைவருமான இல.பத்மநாபன் அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நாளை (சனிக்கிழமை) மதியம் 12 மணிக்கு திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் நகராட்சிக்கு உட்பட்ட கரட்டுப்பாளையத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திருப்பூர் மாவட்டத்தில் 12 இடங்களில் கட்டப்பட்டுள்ள அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையங்கள், பிரசவ காத்திருப்பு அறை மற்றும் சித்தா பிரிவு ஆகிய கட்டிடங்களை திறந்து வைக்க உள்ளார்.

    அதன்படி உடுமலை தாலுகாவில் எரிசனம்பட்டி, வெங்கிட்டாபுரம், மானுப்பட்டி, சோமவாரப்பட்டி, ஆண்டியூர், கே.வல்லகொண்டாபுரம், அவினாசி தாலுகாவில் முறியாண்டம்பாளையம், தாராபுரம் தாலுகாவில் டி.ஆலம்பாளையம், வெள்ளகோவில் கரட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் ஆரம்ப துணை சுகாதார நிலையங்கள் திறக்கப்படுகிறது.

    உடுமலை தாலுகாவில் அமராவதிநகரில் பிரசவ காத்திருப்பு அறை மற்றும் மடத்துக்குளம், சாவடிபாளையத்தில் சித்தா பிரிவு கட்டிடங்கள் திறக்கப்படுகிறது. இதில் திருப்பூர் தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், வார்டு, கிளை நிர்வாகிகள், இன்னாள், முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள்,மக்கள் பிரதிநிதிகள், மாவட்ட பிரதிநிதிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், செயல்வீரர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×