என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

7 மாவட்டங்களில் நாளை மருத்துவ முகாம்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்
- சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது.
- 7 மாவட்டங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை 500 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்.
சென்னை:
வங்கக்கடலில் நேற்று உருவான ஃபெஞ்சல் புயல், காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே புதுச்சேரி அருகே இன்று இரவுக்குள் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் நாளை 7 மாவட்டங்களில் மருத்துவ முகாம் நடத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 7 மாவட்டங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை 500 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்.






