search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "meenakshi sundareswarar temple"

    • 21 வகையான பொருட்களால் நந்தி பெருமானுக்கு அபிஷேகம் நடந்தது.
    • ரிஷப வாகனத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    விளாத்திகுளம்:

    ஆனி மாத சனி பிரதோஷத்தை முன்னிட்டு விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் நேற்று பால், சந்தனம், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 21 வகையான பொருட்களால் நந்தி பெருமானுக்கு அபிஷேகம் நடந்தது. பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரிஷப வாகனத்தில் மீனாட்சி சுந்தரே ஸ்வரர் கோவில் வளாகத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    விழாவில், விளாத்திகுளம் இன்ஸ்பெக்டர் வீரசோலை, இந்து தமிழர் கட்சி மாநில தலைவர் ராம ரவிக்குமார், மாநில பொருப்பாளர் ஈசான சிவம், ராகவேந்திரா, ராஜா சுவாமிகள், அனுஷராஜா, கோவில் செயல் அலுவலர் (கூடுதல் பொறுப்பு) வெள்ளைச்சாமி, கோவில் எழுத்தர் மகாராஜன், திருக்கோவில் பணியாளர்கள் உட்பட ஏராள மான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • விளாத்திகுளம் யூனியன் அலுவலகம் சார்பில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு மண்டகப்படி கொண்டு வரப்பட்டது.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 8-ம் நாளான நேற்று அதிகாலை 2 மணிக்கு ராஜராஜேஸ்வரி மீனாட்சி அம்பிகைக்கு பட்டாபிஷேகம், 6 மணிக்கு அம்மன் பூப்பல்லாக்கில் எழுந்தருளல், மாலை 5 மணிக்கு சிவகாமி அம்பிகா சமேத நடராஜருக்கு அபிஷேகம், இரவு 7 மணிக்கு நடராஜர் பச்சை சாத்தியில் எழுந்தருளல், 8.30 மணிக்கு சுவாமி அம்பாள் அபிஷேகம், 11 மணிக்கு சுவாமி அம்பாள் எழுந்தருளல் திக்விஜயம் ஆகியவை நடந்தது.

    முன்னதாக மாலை 6 மணிக்கு விளாத்திகுளம் யூனியன் அலுவலகம் சார்பில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு மண்டகப்படி கொண்டு வரப்பட்டது.

    யூனியன் சேர்மன் முனியசக்தி ராமச்சந்திரன் தலைமையில் யூனியன் அலுவலகத்தில் இருந்து அம்பாளுக்கு அலங்காரம் பட்டு மற்றும் பூஜை பொருள்கள் ஆகியவை மேளங்கள் முழங்க மதுரை சாலை, காய்கறி மார்க்கெட் ஆகிய முக்கிய வீதிகள் வழியாக மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது. பின்பு அங்கு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் செய்யப்பட்டது.நிகழ்ச்சியில் யூனியன் துணைத்தலைவர் சுப்புலட்சுமி, பி.டி.ஓ தங்கவேல் மற்றும் யூனியன் அலுவலக ஊழியர்கள் உட்பட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.
    • விழாவில் 7-ம் நாளான வருகிற (29-ந் தேதி) இரவு 7 மணிக்கு நடராஜர் சபாபதி சப்பரத்தில் சிவப்பு சாத்தி எழுந்தருள் நடக்கிறது.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.

    இதையொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து சுவாமி, அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. காலை 6 மணிக்கு கோவிலில் இருந்து கொடிப்பட்டம் ரதவீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பின்னர் 10.30 மணிக்கு கோவில் கொடிமரத்தில் திருவிழா கொடியேற்றப்பட்டது.

    அதனை தொடர்ந்து கொடிமரம், பலிபீடம், நந்தியம் பெருமான் ஆகியவற்றுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., கோவில் செயல் அலுவலர் வெள்ளைச்சாமி, எழுத்தர் மகாராஜன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்ன மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து திருவிழா பணிகளை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.

    விழா நாட்களில் காலை, மாலை சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    விழாவில் 7-ம் நாளான வருகிற (29-ந் தேதி) இரவு 7 மணிக்கு நடராஜர் சபாபதி சப்பரத்தில் சிவப்பு சாத்தி எழுந்தருளலும், 9 மணிக்கு அபிஷேகமும், 10 மணிக்கு வெள்ளை சாத்தி எழுந்தருளலும் நடக்கிறது.

    8-ம் நாளான (30-ந் தேதி) அதிகாலை 2 மணிக்கு ராஜராஜேஸ்வரி மீனாட்சி அம்பிகைக்கு பட்டாபிஷேகம், 6 மணிக்கு அம்மன் பூப்பல்லாக்கில் எழுந்தருளல், மாலை 5 மணிக்கு சிவகாமி அம்பிகா சமேத ஸ்ரீநடராஜருக்கு அபிஷேகம், இரவு 7 மணிக்கு ஸ்ரீநடராஜர் பச்சை சார்த்தி எழுந்தருளல் ஆகியவை நடக்கிறது.

    9-ம் நாளான மே 1-ந் தேதி காலை 9 மணிக்கு ஸ்ரீமீனாட்சி திருக்கல்யாணம் நடக்கிறது. 10-ம் நாளான மே 2-ந் தேதி மாலை 4.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. 5-ந் தேதி தீர்த்தவாரியும், 6-ந் தேதி ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் வெள்ளைச்சாமி தலைமையில் திருக்கோவில் பணியாளர்கள், மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.

    புதுக்கோட்டை அருகே உள்ள திருக்கோ கர்ணத்தில் உள்ளது மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    போக்குவரத்து முன்னேற்றம் காணப்படாத காலத்தில், காசி யாத்திரை என்பது மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது. எல்லோராலும் காசிக்கு செல்ல முடியாது. அப்படியே ஒருசிலர் சென்றாலும், அவர்கள் திரும்பி வர பல காலம் ஆகும். அப்படி திரும்பி வந்தவர்களிடம், காசிக்கு செல்ல முடியாதவர்கள், ‘காசி விஸ்வநாதரையும், விசாலாட்சியையும் நம்மால் தரிசிக்கத் தான் முடியவில்லை. அந்த இறைவனை தரிசித்து வந்தவர்களிடம் ஆசியாவது பெறலாம்’ என்று நினைத்து ஆசி பெறுவார் களாம்.

    இந்த சூழ்நிலையில் காசி விஸ்வநாதரையும், விசாலாட்சியையும் எளிதில் தரிசிக்க என்ன செய்யலாம் என்ற வினா சிலரது மனதில் எழுந்தது. அதற்கு விடையையும் கண்டுபிடித்தனர்.

    காசியிலிருந்து சிவலிங்கத்தை கொண்டு வந்து நம் ஊரில் பிரதிஷ்டை செய்தால் என்ன? என எண்ணினார்கள்.

    முடிவு? அவர்கள் எண்ணியபடியே காசியில்இருந்து சிவலிங்கத்தை கொண்டு வந்து பிரதிஷ்டை செய்து தங்கள் ஊரில் ஆலயம் அமைத்தனர். விசாலாட்சி அன்னையையும் பிரதிஷ்டை செய்தனர். இப்படி உருவான பல ஆலயங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. அவைகள் ‘காசி விஸ்வ நாதர் ஆலயம்’ என்று அழைக்கப்படுகின்றன.

    காசிக்கு செல்ல இருந்தவர்கள் தங்கள் ஊரில் உள்ள ஆலயம் சென்று விஸ்வநாதரையும், விசாலாட்சியையும் தரிசித்து இப்போதும் பலன் பெறுகின்றனர்.

    இதே போல் மதுரையில் அருள்பாலிக்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரரை தரிசிக்க இயலாதவர்களுக்காக தமிழ்நாட்டில் சில ஆலயங்கள் கட்டப்பட்டன. அங்கு சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். இப்படிப்பட்ட ஒரு ஆலயம் புதுக்கோட்டை அருகே உள்ள திருக்கோ கர்ணத்தில் உள்ளது.

    மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் என்று அந்த ஆலயத்திற்கு பெயர். ராஜா ராமச்சந்திர தொண்டமான் காலத்தில் கட்டப்பட்டது இந்த ஆலயம் என தலபுராணம் கூறுகிறது.

    ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. அழகிய முகப்பைத் தாண்டியதும் மகாமண்டபம். அர்த்த மண்டப நுழைவுவாசலில் துவாரபாலகர்கள் கொலுவிருக்க, தொடர்ந்து நந்தியும் பீடமும் இருக்க, கருவறையில் இறைவன் சுந்தரேஸ்வரர் சிவலிங்கத் திருமேனியில் அருள்பாலிக்கிறார்.

    மகாமண்டபத்தின் வலதுபுறம் அன்னை மீனாட்சியின் சன்னிதி உள்ளது. அன்னை நின்ற கோலத்தில் தென்திசை நோக்கி இன்முகம் தவழ அருள்பாலிக்கிறாள். திருச்சுற்றில் கிழக்கில் சூரியன், காலபைரவர், மேற்கில் பிள்ளையார், நாகர், முருகன் சன்னிதிகள் உள்ளன. வடக்குப் பிரகாரத்தில் சண்டிகேஸ்வரரின் சன்னிதியும், வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள் சன்னிதியும் உள்ளன. தேவக்கோட்டத்தின் தென் திசையில் தட்சிணாமூர்த்தி அருள் பாலிக்கிறார்.

    இங்கு பிரதோஷம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து இறைவனை தரிசித்து பயன்பெறுகின்றனர். சனிப் பெயர்ச்சி, குருப் பெயர்ச்சி போன்ற கிரகப் பெயர்ச்சி நாட்களில் நவக்கிரக நாயகர்களுக்கு இங்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

    தினசரி ஒரு கால பூஜை மட்டுமே இங்கு நடைபெறுகிறது. திருமணம் நடக்க வேண்டி இங்கு வந்து அன்னை மீனாட்சியை ஆராதிக்கும் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடந்தேறும் என்கின்றனர் பக்தர்கள்.

    ஆலயம் தினமும் காலை 5.30 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவிலுள்ள திருக்கோகர்ணத்தில் உள்ளது இந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம். பேருந்து நிலையத்திலிருந்து நகரப் பேருந்து மற்றும் ஆட்டோ வசதியும் உண்டு. 
    ×