என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Marathi Poet"

    • நாராயண் சுர்வேவை பற்றி திருட்டில் ஈடுபட்டவருக்கு நன்றாக தெரிந்து இருந்தது.
    • கவிஞர் நாராயண் சுர்வே கடந்த 2010-ம் ஆண்டு தனது 84-வது வயதில் மரணம் அடைந்தார்.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டம் நேரல் பகுதியில் சமீபத்தில் திருட்டு ஆசாமி ஒருவர் நோட்டமிட்டு வந்தார். அப்போது ஒரு வீடு சில நாட்களாக பூட்டிக் கிடப்பதை கவனித்தார். நைசாக பூட்டை உடைத்த ஆசாமி, உள்ளே புகுந்து எல்.இ.டி.டி.வி. உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்றார். மறுநாள் மீண்டும் அதே வீட்டில் மிச்சம் மீதி இருப்பதை திருட வந்தார்.

    அப்போது வீட்டில் பிரபல மராத்தி எழுத்தாளரும், கவிஞருமான நாராயண் சுர்வேவின் புகைப்படம் இருப்பதை பார்த்தார். அப்போது தான் அது பிரபல கவிஞரின் வீடு என்பது திருட்டு ஆசாமிக்கு தெரியவந்தது.

    கவிஞர் நாராயண் சுர்வே அடிமட்டத்தில் இருந்து எழுத்தால் உயர்ந்தவர் ஆவார். அவர் மும்பை தெருக்களில் ஆதரவற்ற சிறுவனாக வாழ்ந்தவர். வீட்டு வேலை, ஓட்டலில் பாத்திரம் கழுவும் வேலை, குழந்தை காப்பாளர், நாய் பராமரிப்பாளர், பால் டெலிவிரி செய்பவர், சுமை தூக்குபவர் என பல்வேறு வேலைகளை செய்து பின்னாட்களில் பிரபல எழுத்தாளர், கவிஞராக மாறியவர். அவரது கவிதைகள் நகர்ப்புற தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டங்களை தெளிவாக சித்தரித்தன.

    நாராயண் சுர்வேவை பற்றி திருட்டில் ஈடுபட்டவருக்கு நன்றாக தெரிந்து இருந்தது. பிரபல கவிஞரின் வீட்டில் திருடி விட்டோமே.. என்ற குற்ற உணர்ச்சி அவரது மனதை உறுத்தியது.

    கவிஞரின் வீட்டில் திருடிய டி.வி. உள்ளிட்ட பொருட்களை அந்த திருடர் மூட்டை கட்டி மீண்டும் கவிஞரின் வீட்டில் கொண்டு வந்து வைத்தார். மேலும் வீட்டில் ஒரு துண்டு சீட்டில் மன்னிப்பு கடிதம் ஒன்றையும் எழுதி சுவரில் ஒட்டிசென்றார். 

    அதில், ''மிக உயர்ந்த எழுத்தாளர், கவிஞர் வீட்டில் திருடியதற்காக என்னை மன்னித்து விடுங்கள்'' என குறிப்பிட்டு இருந்தார்.

    கவிஞர் நாராயண் சுர்வே கடந்த 2010-ம் ஆண்டு தனது 84-வது வயதில் மரணம் அடைந்தார். தற்போது அவரது வீட்டில் மகள் சுஜாதா, கணவர் கணேஷ் காரேவுடன் வசித்து வருகிறார். அவர்கள் கடந்த 10 நாட்களாக விராரில் உள்ள மகன் வீட்டுக்கு சென்று இருந்தனர். அவர்கள் திரும்பி வந்தபோது, வீட்டில் திருடன் எழுதி வைத்து சென்ற மன்னிப்பு கடிதத்தை பார்த்தனர். திருடனின் செயலை பார்த்து நெகிழ்ச்சி அடைந்தனர்.

    இருப்பினும் திருட்டு செயலை ஏற்றுக்கொள்ள முடியாததால், அவர்கள் சம்பவம் குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். டி.வி. உள்ளிட்ட பொருட்களில் உள்ள கைரேகையை சேகரித்து கவிஞரின் வீட்டில் கைவரிசை காட்டிய திருடனை அடையாளம் காண போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    திருடன் ஒருவர் கவிஞரின் வீட்டில் திருடிய பொருட்களை திரும்ப வைத்து, மன்னிப்பு கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்ற சம்பவம் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மும்பையில் வாழ மராத்தி தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று RSS தலைவரின் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
    • RSS தலைவரின் கருத்துக்கு சிவசேனா (உத்தவ் தாக்கரே), காங்கிரஸ் காட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

    மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் வாழ்வதற்கு மராத்தி தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று மூத்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுரேஷ் பையாஜி ஜோஷி தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பையாஜி ஜோஷி, "மும்பையில் ஒரு மொழி பேசுபவர்கள் மட்டும் கிடையாது. இங்கு ஒவ்வொரு பகுதிகளிலும் வெவ்வேறு மொழிகளை பேசுபவர்கள் இருக்கிறார்கள். காட்கோபர் பகுதி மக்கள் குஜராத்தி பேசுகிறார்கள். ஆதலால் நீங்கள் மும்பையில் வசித்தால் மராத்தி மொழி கற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை" என்று தெரிவித்தார்.

    இதே நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா அமைச்சர் மங்கள் பிரபாத் லோபா கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது

    மராத்தி குறித்து சுரேஷ் பையாஜி ஜோஷி தெரிவித்த கருத்துக்கு சிவசேனா (உத்தவ் தாக்கரே), காங்கிரஸ் காட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

    இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுரேஷ் பையாஜி ஜோஷி கருத்து தொடர்பாக பாஜக அரசாங்கம் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்று மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் சிவசேனா (உத்தவ் தாக்கரே) சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் ஜாதவ் கோரிக்கை விடுத்தார்.

    இதற்கு சட்டமன்றத்தில் பதில் அளித்த முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், "ஆர்.எஸ்.எஸ். தலைவர் பேசியதை நான் கேட்கவில்லை. மகாராஷ்டிரா மற்றும் மும்பையின் மொழி மராத்தி தான். இங்கு உள்ள ஒவ்வொருவரும் மராத்தி மொழியை கற்றுக்கொள்ள வேண்டும். எங்கள் அரசாங்கம் அனைத்து மொழிகளையும் மதிக்கிறது.

    நீங்கள் உங்கள் சொந்த மொழியை நேசித்து மதிக்கிறீர்கள் என்றால், மற்ற மொழிகளையும் அவ்வாறே நேசிப்பீர்கள். இந்த கருத்தில் சுரேஷ் பையாஜி என்னுடன் உடன்படுவார் என்று நான் நம்புகிறேன்" என்று தெரிவித்தார். 

    ×