என் மலர்
நீங்கள் தேடியது "Maha Ganapathi"
- விநாயகரை முழுமுதற் கடவுளாக வழிபடும் முறை ‘காணாதிபத்தியம்’ என அழைக்கப்படுகிறது.
- காவிரி நதிக்காக மனம் இரங்கிய விநாயகப்பெருமானும் காக்கை உருவம் கொண்டு கமண்டலத்தை தனது அலகால் தட்டிவிட்டார்.
இந்து மதத்தில் முழுமுதற் கடவுளாக போற்றப்படுபவர் விநாயகர். இவரை பிள்ளையார், கணபதி, கணேஷா, விநாயகர் என பல்வேறு பெயர்களில் வழிபடுகிறார்கள். விநாயகர் வழிபாடு இந்தியாவில் மட்டுமல்ல நேபாள நாட்டிலும் பரவலாக காணப்படுகிறது. விநாயகரை முழுமுதற் கடவுளாக வழிபடும் முறை 'காணாதிபத்தியம்' என அழைக்கப்படுகிறது.
காணாதிபத்தியம் பின்பு சைவ சமயத்தோடும், வைணவ சமயத்தோடும் ஒன்றிணைந்தது. வைணவர்கள், விநாயகரை 'தும்பிக்கை ஆழ்வார்' என்று அழைப்பார்கள். இவர் கணங்களின் அதிபதி என்பதால் 'கணபதி' என்றும், யானையின் முகத்தினை கொண்டுள்ளதால் 'யானைமுகன்' என்றும் அழைக்கப்படுகிறார்.
இந்து புராணங்களில் சிவன், பார்வதி ஆகியோரின் பிள்ளையாகவும், முருக கடவுளின் அண்ணனாகவும் விநாயகர் வணங்கப்படுகிறார். விநாயகரின் வாகனம் மூஞ்சூறு. கணேச புராணம் கிருத, திரேதா, துவாபர, கலி ஆகிய 4 யுகங்களிலும் 4 அவதாரங்களாக கணபதி அவதரிப்பதாக கூறுகிறது. விநாயகப் பெருமானின் புராணத்துடன் காவிரி டெல்டா பகுதிக்கும் தொடர்பு உள்ளது. காவிரி டெல்டா முழுவதும் பல்வேறு பெயர்களுடன் கோவில் கொண்டு அருள்பாலித்து வரும் விநாயகரை தரிசிக்க முடியும். அந்த வகையில் பிரசித்திப்பெற்ற தலம் கணபதியின் பெயராலேயே அமைந்த கணபதி அக்ரஹாரம் ஆகும். இங்கு மகா கணபதியாக விநாயகப்பெருமான் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இந்த தலம் தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே உள்ளது.
ஒரு காலத்தில் பஞ்சம் நீங்குவதற்காக இத்தலத்தில் கவுதம மகரிஷி பூஜித்ததாகவும், அதனால் பஞ்சம் நீங்கிய காரணத்தால் இந்த இடம் 'அண்ணகோஷஸ்தலம்' என்று அழைக்கப்பட்டதாக புராணங்களில் கூறப்படுகிறது. ஒரு சமயம் அகத்திய முனிவரின் தவத்துக்கு, காவிரி ஆற்றின் 'சல சல' என்ற ஆரவார நீரோட்ட சத்தம் இடையூறாக இருந்து, அவரை கோபம் அடைய செய்தது. இதனால் அகத்திய முனிவர், தனது தவ வலிமையால் காவிரியை தனது கமண்டலத்தில் அடக்கிவிட்டார். இதனால் சோழ தேசமானது வளம் குன்றி, பசி, பஞ்சம் ஏற்பட்டு தேவபூஜைகள் நின்று விட, தேவர்கள் எல்லாம் விநாயகப் பெருமானிடம் முறையிட்டனர்.
காவிரி நதிக்காக மனம் இரங்கிய விநாயகப்பெருமானும் காக்கை உருவம் கொண்டு கமண்டலத்தை தனது அலகால் தட்டிவிட்டார். இதனால் காவிரி ஆறு வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடி, சோழ வளநாடு விநாயகப் பெருமானால் மீண்டும் வளம் பெற்றது. கமண்டலத்தை தட்டி விட்ட காகத்தை அகத்திய மாமுனி பின்தொடர்ந்து சென்றபோது இந்த இடத்தில் (கணபதி அக்ரஹாரம்) விநாயகப் பெருமானாக அவருக்கும், காவிரி தாய்க்கும் காட்சி அளித்ததாக தல வரலாறு கூறுகிறது.
இங்குள்ள மகா கணபதி ஆலயத்தில், தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு வேண்டிய வரங்களை அளித்து காத்தருள்கிறார் மகா கணபதி. இந்த கிராமத்தில் பல குடும்பங்களுக்கு இவர் குல தெய்வமாகவும் விளங்குகிறார். பொதுவாக, முருகனின் வாகனமாகத்தான் மயில் கருதப்படுகிறது. ஆனால் இங்கு கணபதிக்கும் மயில்தான் வாகனமாக திகழ்கிறது. ஆகவே இக்கோவில் மகாகணபதியை 'மயூரிவாகனன்' என்றும் அழைக்கிறார்கள்.
இவ்வூரில் விநாயக சதுர்த்தியை கொண்டாடுவது சற்று வினோதமான வழக்கமாக உள்ளது. விநாயகர் சதுர்த்தி அன்று இந்த ஊர் மக்கள், களிமண்ணில் பிள்ளையார் செய்து, வீட்டில் வைத்து பூஜிப்பது கிடையாது. தங்கள் வீட்டில் செய்த கொழுக்கட்டை போன்ற நைவேத்தியப் பொருட்களை எடுத்துக் கொண்டு அனைவருமே மகாகணபதி சன்னிதிக்கு வருகின்றனர். கோவிலில்தான் விநாயகர் சதுர்த்தி பூஜை, நைவேத்தியம் எல்லாம் செய்கின்றார்கள்.
தஞ்சை மாவட்டம் திருவையாறில் இருந்து 9 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது கணபதி அக்ரஹாரம். தஞ்சை - கும்பகோணம் சாலையில் அய்யம்பேட்டைக்கு வந்து அங்கிருந்து காவிரி ஆற்றுப்பாலம் வழியாக சென்றால் 3 கி.மீ. தொலைவில் இக்கோவிலை அடையலாம், மகாகணபதியை கண்குளிர தரிசிக்கலாம்.
- சந்திர தரிசனத்தில் இருந்து விரதம் இருப்பவர்கள் தீவிரமாக விரதம் கடைப்பிடிப்பார்கள்.
- மறுநாள் காலையில் விநாயகரை வழிபட்டு அருள்பெற்று செல்வார்கள்.
சோழவள நாட்டில் பொன்னிமா நதியின் வடபால் ஸ்ரீ மஹாகணபதி க்ஷேத்திரங்களில் ஒன்றாய் அவரது திருநாமத்தாலேயே விளங்குவது கணபதி அக்ரஹாரம்.
கணபதி ஸ்தலங்களில் மிகவும் சிறப்பாகவும், பழமையாகவும் மிகுந்த அருளோடு விளங்குவதும் அகத்திய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதும் ஆன பெருமை உடையது. பின் ஒரு சமயம் இந்நாட்டில் ஏற்பட்ட கடும் பஞ்சம் நீங்க கௌதம மகரிஷியால் பூஜிக்கப்பட்டு பஞ்சம் நீங்கிய காரணத்தால் இவ்விடத்தை "அண்ணகோஷஸ்தலம்" என்று புராணங்களில் கூறப்படுகிறது.
ஒரு சமயம் அகஸ்திய முனிவர் தவத்திற்கு இடையூறாக இருந்த காவேரியின் "சல சல" என்று நீர்கட்டத்தின் ஆரவார சப்தம் அவரை கோபம் அடைய செய்து அவருடைய தவவலிமையால் காவேரியை தனது கமண்டலத்தில் அடக்கிவிட சோழதேசமானது வளம் குன்றி, பஞ்சம் ஏற்பட்டு தேவபூஜைகள் நின்று விட, தேவர்கள் எல்லாம் விநாயகப் பெருமானிடம் முறையிட விநாயகப்பெருமானும் காக்கை உருவம் ஏற்று கமண்டலத்தை தனது அலகால் தட்டிவிட காவேரியும் பெருக்கு எடுத்து சென்று எல்லா இடங்களிலும் பாய்ந்து மீண்டும் சோழ வளநாடு வளம் பெற்றது. அகஸ்திய மாமுனி தட்டி விட்ட காக்கையை பின்தொடர, அக்காக்கையே இவ்விடத்தில் விநாயகப்பெருமானாய் அவருக்கும், காவேரி தாய்க்கும் காட்சியளித்ததாக வரலாறு கூறுகிறது.
மாதம் தோறும் வளர்பிறை சதுர்த்தியில் காலையில் அபிஷேக ஆராதனையும் மாலையில் சுவாமி புறப்பாடும் தேய்பிறை சதுர்த்தியில் "சங்கடஹர சதுர்த்தியில்" பக்தர்கள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற விரதம் இருந்து அன்று இரவு வருவார்கள். பூஜையில் கலந்து கொண்டு பின் இல்லம் செல்வார்கள்.
சந்திர தரிசனத்தில் இருந்து விரதம் இருப்பவர்கள் தீவிரமாக விரதம் கடைப்பிடிப்பார்கள். மறுநாள் காலையில் விநாயகரை வழிபட்டு அருள்பெற்று செல்வார்கள். மேலும் இவ்வூரில் மிகவும் சிறப்பாக போற்றப்படுவதும் கொண்டாடபடுவதும் ஆன விநாயக சதுர்த்தியை மற்ற ஊர்களில் போல் தத்தம் இல்லங்களில் மண்ணினால் ஆன விக்கிரகத்தை வைத்து வழிபாடு செய்யாமல் அவ்வூர் மக்கள் அனைவரும் விநாயக ஆலயத்திற்கு சென்று அர்ச்சனை செய்து வழிபாடு செய்வார்கள்.
இத்திருத்தலத்தில் விநாயக சதுர்த்தியை முன்னிட்டு பத்து நாள் முன்னதாகவே கொடியேற்றம் நடைபெறும். கொடி ஏற்றத்தின்போது பக்தர்கள் அவர்கள் குறை போக்க தாங்கள் உடுத்தும் சட்டைத்துணியும், துண்டு வஸ்திரத்தை புதிதாக வாங்கி மஞ்சள் காசுடன் சேர்த்து விநாயக பெருமான் கோவிலில் சேர்த்து விடுவார்கள். அப்பொருட்களை சிவாச்சாரியார் பெற்று கொண்டு கொடியேற்றத்துடன் இவைகளையும் கொடிமரத்தில் ஏற்றி பின் கொடி இறக்கம் செய்யும் காலத்தில் பக்தர்கள் பெற்று தங்கள் குறைகளை நிவர்த்தி பெறுவதை கண்கூடாக பார்க்க முடிகிறது.
கொடியேற்றம் நடைபெற்ற பின் காலை, மாலைகளில் விநாயகர் பல்வேறு விமானங்களில் வீதி உலா நடைபெறும். ஒன்பதாம் திருநாள் விநாயகரை தேர் உலா நடைபெற்று விநாயக சதுர்த்தி அன்று மஹா அபிஷேகம் நடைபெற்று விநாயகர் ஆலயத்தில் இருந்து புறப்பாடு செய்து யாகசாலையில் எழுந்தருளச் செய்து பொறிதூவி வழிபாடு செய்து திருவீதி உலா, மற்றும் தீர்த்தவாரி நடைபெற்று பின் பதினெட்டு காலம் பூஜிக்க பட்ட கலசத்துடன் ஆலயத்தை வலம் வந்து விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். பின் அன்னதானம் நடைபெற்று இரவில் கொடி இறக்கம் நடைபெறும். மறுநாள் சப்தவரணம் என்கிற நிகழ்ச்சியாக ஏழுமுறை ஆலயத்தை வலம் வந்து ஒவ்வொரு முறையும் வலம் வரும் நிகழ்ச்சியாக வேத கோஷம், நாட்டியம், சங்கீதம், மௌனம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும். மறுநாள் மாலையில் கண்ணாடி பல்லக்கு திருவீதி உலா நடைபெறும்.
அதன்பின் மஞ்சள் நீர் விளையாட்டு, பந்தல் காட்சிகள், ஊஞ்சல் சேவை என்று தண்டிகேஸ்வரர் உற்சவமும் மறுநாள் விடையாற்றி விழாவாக விநாயகருக்கு ஆஸ்தான பிரவேசம் நடைபெறும்.
இவ்வாலயத்தை தரிசிக்கும் பக்தர்கள் மீண்டும், மீண்டும் வரும் மனம் படைத்தவராகவும் அருள் பெற்றவராகவும் காணமுடிகிறது. நாம் அனைவரும் சென்று முருகனுக்கு மூத்தவரை முக்கண் மகன் கணபதியை வழிபட்டு வாழ்வில் சகல நலன்கள் பெறுவோமாக!






