search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Keralaflood"

    கத்தார் நாடு, 5 மில்லியன் அமெரிக்க டாலர்களை(சுமார் ரூ.34 கோடி) கேரள மாநிலத்துக்கு முதல் கட்ட நிதியாக வழங்குவதாக நேற்று அறிவித்தது. #Qatar #KeralaFlood #FinancialAid
    துபாய்:

    மழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு பல்வேறு மாநில அரசுகளும், வெளிநாடுகளும் உதவி செய்து வருகின்றன. நேற்று முன்தினம் ஐக்கிய அரபு அமீரகம் கேரளாவில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நிதி திரட்டி வழங்குவதற்காக அவசர குழு ஒன்றை அமைத்தது. இதன் மூலம் நிதி திரட்டப்பட்டு வருகிறது.



    இந்த நிலையில் கத்தார் நாடு, 5 மில்லியன் அமெரிக்க டாலர்களை(சுமார் ரூ.34 கோடி) கேரள மாநிலத்துக்கு முதல் கட்ட நிதியாக வழங்குவதாக நேற்று அறிவித்தது.

    இதற்கான உத்தரவை கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்-தானி பிறப்பித்தார். இதையடுத்து, கத்தார் அரசின் அறக்கட்டளை பிரதிநிதிகள் மூலம் இந்தத் தொகை இந்தியாவிடம் அளிக்கப்பட்டது. இத்தொகை கேரள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளவர்களுக்கு உதவி செய்யும்பொருட்டு வழங்கப்படுவதாக கத்தார் அரசாங்கம் தெரிவித்து உள்ளது. #Qatar #KeralaFlood #FinancialAid

    உணவு பாதுகாப்புத்துறை- பெரம்பலூர் மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் கேரள மாநிலத்திற்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
    பெரம்பலூர்:

    கேரள மாநிலத்தில் வரலாறு காணாத கனமழையின் காரணமாக பல மாவட்டங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த தொடர் கனமழையின் காரணமாக தங்கள் வீடு உள்ளிட்ட உடைமைகளை இழந்து வாடும் கேரள மாநில மக்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் உணவு, பால், குடிநீர் உள்ளிட்ட நிவாரணபொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

    அதனடிப்படையில் உணவு பாதுகாப்புத்துறை மற்றும் பெரம்பலூர் மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில், பல்வேறு வணிக சங்கங்கள் மற்றும் பொது மக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட அரிசி, சர்க்கரை, குடிநீர், பருப்பு வகைகள், சமையல் எண்ணெய் உள்ளிட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான 10 டன் நிவாரண பொருட்களை லாரியில் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா நேற்று கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

    இதில் மாவட்ட நியமன அலுவலர் (உணவு பாதுகாப்புத்துறை) சவுமியா சுந்தரி, மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் சண்முகநாதன், செயலாளர் இளங்கோவன், இணைச் செயலாளர் ரவிசுந்தரம் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 
    சென்னையில் உள்ள ‘எய்டு இந்தியா’ அமைப்பு சார்பில் பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் உணவு, உடை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் சேகரிக்கப்பட்டு கேரளாவுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
    சென்னை:

    கேரளாவில் வரலாறு காணாத கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டு இருக்கிறது. அதோடு நிலச்சரிவும் ஏற்பட்டு உள்ளது. இதில் ஏராளமானோர் சிக்கி உயிரிழந்து உள்ளனர். ஏராளமானோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    கேரளாவில் ஏற்பட்டு உள்ள வெள்ள பாதிப்பையொட்டி திரையுலகினர், தனியார் தொண்டு நிறுவனங்கள் என பல்வேறு அமைப்புகள் சார்பில் உதவிகரம் நீட்டப்பட்டு வருகிறது.

    அந்தவகையில் சென்னையில் உள்ள ‘எய்டு இந்தியா’ அமைப்பு சார்பில் பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் உணவு, உடை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் சேகரிக்கப்பட்டு கேரளாவுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இதுவரை 2 கன்டெய்னர்களில் கேரளாவுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு உள்ளன. தற்போது 3-வது முறையாக நாளை (திங்கட் கிழமை) அனுப்பப்பட உள்ளது.

    இதுகுறித்து ‘எய்டு இந்தியா’ அமைப்பின் இணை செயலாளர் தாமோதரன் கூறுகையில், “மக்கள் மற்றும் வியாபாரிகளிடம் சேகரிக்கப்படும் நிவாரண பொருட்களை நல்ல முறையில் ‘பேக்’ செய்து அனுப்பி வருகிறோம். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் 100-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இந்த பணியில் சேவை மனப்பான்மையுடன் ஈடுபட்டு வருகிறார்கள்”, என்றார். 
    கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதங்களை பார்வையிட மத்திய மந்திரி ரிஜிஜூ தலைமையில் 31 பேர் அடங்கிய மத்திய குழு நாளை வருகிறது. #Southwestmonsoon #Keralaflood

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் மிக கனத்த மழை மாநிலம் முழுவதும் பெய்து வருகிறது.

    கடந்த மே மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழைக்கு ஜூலை 9-ந்தேதி வரை 39 பேர் உயிரிழந்து இருந்தனர். அதன் பிறகு மழை அதிகரித்ததால் பலி எண்ணிக்கை 116-ஐ தொட்டுவிட்டது. நேற்று மட்டும் ஆலப்புழா, பத்தனம் திட்டா, வயநாடு, அடூர் ஆகிய இடங்களில் 2 வயது குழந்தை உள்பட 4 பேர் இறந்துள்ளனர்.

    மேலும் 3 நாட்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எர்ணாகுளம், இடுக்கி, மலப்புரம், கோழிக் கோடு, வயநாடு ஆகிய மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் என்றும், ஆலப்புழா, திருச்சூர், பாலக்காடு ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்றும், திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம் திட்டா போன்ற மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது.

     


    ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்து வருகிறார்கள். மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 564 நிவாரண முகாம்கள் மாநிலம் முழுவதும் திறக்கப்பட்டுள்ளது. இதில் 95 ஆயிரத்து 540 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அதிகபட்சமாக ஆலப்புழா முகாமில் 50 ஆயிரத்து 836 பேர் தங்கி உள்ளனர். கோட்டயம், மலப்புரம், கோழிக்கோடு, பத்தனம் திட்டா, வயநாடு பகுதிகளில் 4 ஆயிரம் வீடுகள் மழை வெள்ளத்தால் சூழப்பட்டு உள்ளது. இவற்றில் 245 வீடுகள் இடிந்து விழுந்து விட்டன.

    மழை தீவிரமடைந்து உள்ளதால் இன்று நடைபெற இருந்த மகாத்மாகாந்தி பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. கோட்டயம், ஆலப்புழா மாவட்டங்களில் வருகிற 24-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை நடைபெற இருந்த மேல்நிலைப்பள்ளி துணைத் தேர்வுகள் ஆகஸ்ட் 1-ந்தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோட்டயம், ஆலப்புழா மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டு உள்ளது.

    தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கிய பிறகு ரூ.113.19 கோடி மதிப்புள்ள தென்னை, வாழை, மரச்சீனி, நெல் உள்பட விவசாய பயிர்கள் சேதமடைந்து உள்ளன.

    மழை பாதித்த மாவட்டங்கள் வழியாக இயக்கப்படும் ரெயில்களை 20 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கும்படி ரெயில்வே நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. ரெயில்வே பாலங்களையும், தண்ட வாளங்களையும் தொடர்ந்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதங்களை பார்வையிட மத்திய மந்திரி ரிஜ்ஜூ தலைமையில் 31 பேர் அடங்கிய மத்திய குழு நாளை கேரளா செல்கிறது. கோழிக்கோடுக்கு விமானம் மூலம் வரும் இந்த குழுவினர் முதல்-மந்திரி பினராய் விஜயனுடன் ஆலோசனை நடத்துகிறார்கள். மேலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் இந்த குழுவினர் நேரில் சென்று பார்வையிடுவார்கள் என்று மத்திய மந்திரி அல்போன்ஸ் கண்ணந்தானம் கூறி உள்ளார். #Southwestmonsoon #Keralaflood

    ×