என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "karpaga vinayagar temple"

    • 8-வது நாளாக வருகிற 25-ந்தேதி வெள்ளி குதிரை வாகனத்திலும் சுவாமி எழுந்தருளுகிறார்.
    • பஞ்சமூர்த்தி சுவாமிகளின் புறப்பாடு நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பகவிநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு விழா கடந்த 18-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவையொட்டி தினமும் இரவு சுவாமி மூஷிக வாகனம், சிம்ம வாகனம், பூத வாகனம், கமல வாகனம், ரிஷப வாகனம் ஆகிய வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இன்று (சனிக்கிழமை) மாலை கஜமுகசூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு மேல் வெள்ளி யானை வாகனத்தில் கோவிலில் இருந்து புறப்பட்டு கோவிலை சுற்றி அசுரனை வதம் செய்ய வீதி உலா வருகிறார். பின்னர் இரவு 7 மணி அளவில் கோவில் தெப்பக்குளம் முன்பு சூரனை யானை தந்தத்தால் வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    தொடர்ந்து 8-வது நாளாக வருகிற 25-ந்தேதி வெள்ளி குதிரை வாகனத்திலும் சுவாமி எழுந்தருளுகிறார். 9-வது நாள் திருவிழாவான 26-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை தேரோட்டம் நடக்கிறது. முன்னதாக காலை அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி எழுந்தருளுகிறார்.

    அதன் பின்னர் ஆண்டிற்கு ஒருமுறை சந்தனகாப்பு அலங்காரத்தில் மூலவர் கற்பகவிநாயகர் காட்சியளிக்கும் வகையில் அன்று மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை மூலவர் கற்பகவிநாயகர் சந்தனகாப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கிறார். பின்னர் மாலை தேரோட்டம் நடக்கிறது.

    இரவு சுவாமி யானை வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வருகிறார். 10-ம் திருநாளான 27-ந்தேதி விநாயகர் சதுர்த்தி அன்று தங்க மூஷிக வாகனத்தில் உற்சவர் கற்பகவிநாயகர் எழுந்தருளி கோவில் திருக்குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நிகழ்ச்சி நடக்கிறது.

    தொடர்ந்து உச்சிகால சிறப்பு பூஜைகள் மற்றும் மூலவர் கற்பகவிநாயகருக்கு முக்குறுணி கொழுக்கட்டை, படையல் படைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு பஞ்சமூர்த்தி சுவாமிகளின் புறப்பாடு நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர்கள் காரைக்குடி பழனியப்பச்செட்டியார் மற்றும் நச்சாந்துபட்டி குமரப்பச் செட்டியார் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    • 6-ம் நாளான வருகிற 23-ந்தேதி, கஜமுக சூரசம்ஹாரம் நடக்கிறது.
    • ஆண்டுக்கு ஒரு முறைதான் மூலவருக்கு சந்தனகாப்பு அலங்காரம் நடைபெறும்.

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் இந்த ஆண்டுக்கான சதுர்த்தி விழா நேற்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடிமரம் அருகே உற்சவர் வெள்ளி மூஷிக வாகனத்திலும், சண்டிகேசுவரர் ரிஷப வாகனத்திலும் எழுந்தருளினர். ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    விழா நாட்களில் இரவில் விநாயகப்பெருமான் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். நேற்று இரவு மூஷிக வாகனத்தில் வீதி உலா வந்தார். இன்று இரவு சிம்ம வாகனத்திலும், நாளை பூத வாகனத்திலும் உலா வருகிறார்.

    6-ம் நாளான வருகிற 23-ந்தேதி, கஜமுக சூரசம்ஹாரம் நடக்கிறது.

    9-வது நாளான வருகிற 26-ந்தேதி மாலையில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது.

    இதற்கிடையே அன்று மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை மூலவர் கற்பகவிநாயகர், சந்தனகாப்பு அலங்காரத்தில் காட்சி அளிப்பார். ஆண்டுக்கு ஒரு முறைதான், மூலவருக்கு இந்த சந்தனகாப்பு அலங்காரம் நடைபெறும். 10-ம் நாளான வருகிற 27-ந்தேதி, விநாயகர் சதுர்த்தி அன்று தங்க மூஷிக வாகனத்தில் உற்சவர் கற்பக விநாயகர் எழுந்தருள்கிறார். அதன் பின்னர் கோவில் திருக்குளத்தில் தீர்த்தவாரி நடக்கிறது. தொடர்ந்து உச்சிகால சிறப்பு பூஜைகள் மற்றும் மூலவருக்கு முக்குறுணி கொழுக்கட்டை படையல் நடக்கிறது.

    • பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் திருக்கோவில் குடைவரை கோவிலாகும்.
    • இந்து சமய நம்பிக்கைப்படி தேவலோகத்தில் இருக்கும் மரம் கற்பக மரமாகும்.

    பிள்ளையார்பட்டி என்று பெயர் வரக்காரணமே கற்பக விநாயகர் இந்த ஊரில் அமைந்து இருப்பது தான். இந்த ஆலயம் மிகவும் பழமையான ஆலயம், விநாயகர் வழிபாடுக்காக போற்றப்படும் ஆலயம். உலகின் பல இடங்களில் விநாயகர் வழிபாடு இருந்துள்ளது. விநாயகர் சிற்பங்களும் பல இடங்களில் பிரசித்தி பெற்று விளங்குகிறது. உலகத்திலேயே முதல் பிள்ளையாராக விளங்குவது பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் சிற்பம் என்றால் மிகையாகாது.

    உலகிலேயே இரண்டு கைகள் உடன் காணப்படும் விநாயகரின் சிற்பங்கள் இரண்டு மட்டுமே உள்ளது. ஒன்று பிள்ளையார் பட்டியிலும், மற்றொன்று ஆப்கானிஸ்தானிலும் காணப்படுகின்றன. ஆப்கானிஸ்தானில் உள்ள விநாயகரின் சிற்பம் நின்ற கோலத்தில் காணப்படுகிறது. ஆனாலும் பிற்கால அணிகலன்களுடன் அவர் காணப்படுகிறார். ஆனால் பிள்ளையார்பட்டியில் பிற்கால அணிகலன்கள் இல்லாமல் பழைய வடிவத்தில் காணப்படுவது சிறப்பாகும். தெய்வீக சிற்பக் கலை வரலாற்றின் மூலமும், கல்வெட்டுகளின் சான்றுகளின் மூலமும் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரின் சிற்பமே உலகத்தில் முதன்முதல் வடிவமாக போற்றப்படுகிறது.

    பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் திருக்கோவில் குடைவரை கோவிலாகும். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு முற்கால பாண்டிய மன்னர்கள், குன்றைக் குடைந்து கோவிலையும், கற்பக விநாயகர் சிற்பத்தையும், திருவீசர் என்னும் லிங்கத்தையும் இவ்வூரில் வடிவமைத்துள்ளனர். கி.மு 500 முதல் கி.பி 1284 வரையான 14 கல்வெட்டுகள் இக்கோவிலில் உள்ளது.

    பாற்கடலை கடைந்து அமிர்தம் பெறுவதற்காக தேவர்களும், அசுரர்களும் முயற்சி செய்தனர். அவர்கள் மேரு மலையை மத்தாகவும், வாசுகி பாம்பினை கயிறாகவும் எடுத்துக்கொண்டனர். அசுரர்கள் பாம்பின் தலை புறமும், தேவர்கள் வாலின் புறமும் நின்று இழுத்து கடைந்தார்கள். அப்போது கற்பக மரம், பாரிஜாதம், ஹரிசந்தனம், சந்தனம், மந்தாரம் முதலிய ஐந்து மரங்கள் பாற்கடலிலிருந்து வெளிப்பட்டன. இவை 'பஞ்ச தருக்கள்' என்று அழைக்கப்படுகின்றன.

    இந்து சமய நம்பிக்கைப்படி தேவலோகத்தில் இருக்கும் மரம் கற்பக மரமாகும். தேவலோகத்தில் உள்ள இந்த மரத்தடியில் நின்றுகொண்டு என்ன வரம் கேட்டாலும் கிடைக்கும். அதுபோல கேட்ட வரம் அனைத்தும் தருவதால் பிள்ளையார்பட்டி விநாயகருக்கு 'கற்பக விநாயகர்' என்ற பெயர் ஏற்பட்டது. அதற்கு முன்பு இவர் 'தேசிய விநாயகம் பிள்ளையார்' என்ற பெயரில் அழைக்கப்பட்டுள்ளார்.

    பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரை தரிசிக்க பிரதான சாலையில் இருந்து தெற்குநோக்கி செல்ல வேண்டும். சிறிது தூரம் சென்றால் அங்கே பிரமாண்டமான குளம் தென்படும். இந்த திருக்குளத்தில் கோவில் கோபுரத்தில் நிழல் விழுவது மிகச்சிறப்பாகும். அதைத்தொடர்ந்து கோவிலுக்கு முன்புறம் செல்கிறோம். கிழக்கே இருந்து கோபுர தரிசனம் முடித்துவிட்டு உள்ளே செல்கிறோம். அங்கே சிவபெருமான் திருவீசுவராக காட்சியளிக்கிறார். சிவகாமி அம்மை தெற்கு நோக்கி அமர்ந்து அருள்பாலிக்கிறார்.

    கற்பக விநாயகரோ வடக்கு நோக்கி அமர்ந்து பக்தர்கள் கேட்கும் வரத்தினை அள்ளித்தருகிறார். இரண்டு கரங்களுடனும், அங்குச பாசங்கள் இல்லாமலும் இங்கு சிறப்பாக காட்சி தருகிறார். அர்த்தபத்ம ஆசனம் போன்று கால்கள் மடித்து அருள் புரிகிறார். இந்த அமைப்பு எல்லாம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரிடம் வித்தியாசமாக உள்ளது.

    கற்பக விநாயகரின் சிற்பத்தை வடிவமைத்த சிற்பி அதன் அருகிலேயே அவரது கையெழுத்தை கல்வெட்டில் செதுக்கியுள்ளார். எக்காட்டூர் கோன் பரணன் பெருந்தச்சன் என அவரது கையெழுத்து உள்ளது. இங்குள்ள கற்பக விநாயகர் தனது கையில் மோதகத்தை வைத்திருக்கவில்லை. யோக நிலையில் அமர்ந்து உலக நன்மைக்காக கையில் லிங்கத்தை வைத்து தியானம் செய்யும் திருக்கோலத்தில் அமர்ந்த நிலையில் காணப்படு கிறார். அவர் யோக விநாயகராக இருப்பதால் கேட்ட வரங்கள் எல்லாம் எளிதில் கொடுக்க வல்லவராக இருக்கிறார்.

    விநாயகரின் தும்பிக்கை வலது பக்கமாக வளைந்திருப்பது தனிச்சிறப்பாகும். வலம்புரி சங்கு போல் வலம்புரி துதிக்கையும் தனித்தன்மை வாய்ந்ததாகும். வடக்கு திசையை நோக்கி இருக்கும் வலம்புரி விநாயகர் இவர் மட்டுமே. எனவே தான் பிள்ளையார்பட்டி வலம்புரி விநாயகரை வணங்குபவர் களுக்கு வெற்றி மேல் வெற்றி என்கிறார்கள். இந்த கோவிலில் திருமண வரம் தரும் காத்தாயினி வழிபாடு, செல்வ வளம் தரும் பசுபதிசுவரர் வழிபாடு சிறப்பானதாகும்.

    இந்த கோவிலில் நடைபெறும் விழாக்களில் மிகப்பெரியது, விநாயகர் சதுர்த்தி திருவிழாவாகும். இந்த விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக 9 நாட்களுக்கு முன்பே காப்புக் கட்டி விடுவார்கள். இத்திருவிழா பத்து நாட்கள் மிகச் சிறப்பாக நடைபெறும். அவ்வேளையில் பல்வேறு பகுதியில் இருந்து கற்பக விநாயகரின் பக்தர்கள் ஒன்று கூடுவார்கள். ஒரு வருட காலத்திற்கு சதுர்த்தி நாட்களில் உண்ணாவிரதம் இருந்த பக்தர்கள், அதை நிறைவு செய்ய பிள்ளையார்பட்டி வந்து சேருவார்கள்.

    விநாயகர் சதுர்த்தி திருவிழா அன்று விநாயகர் சன்னிதியில் உண்ணாநோன்பு இருந்து கும்ப ஜெபத்தில் கலந்துகொள்வது சிறப்பாகும். இந்த கும்பத்தினை தரிசனம் செய்யும் போது கேட்ட வரம் கிடைக்கிறது என்பதால் வருடத்துக்கு வருடம் கூட்டம் கூடுகிறது.

    விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் இரவு கணேசப்பெருமான் வாகனங்களில் திருவீதி உலா வருவார். இறுதி நாளில் தேர் பவனி நடைபெறும்.

    வைகாசி மாதம் இவ்வூரின் காவல் தெய்வமான கொங்குநாச்சியம்மனின் கோவில் திருவிழா பத்து நாட்கள் மிகச்சிறப்பாக நடைபெறும். அவ்வேளையில் இந்த ஆலயத்தோடு இணைந்தே திருவிழா நடைபெறும்.

    இந்த ஆலயத்தில் ஒவ்வொரு சதுர்த்தியன்றும் வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகப்பெருமான் எழுந்தருளி கோவில் உட்பிரகாரம் சுற்றி வருவார். திருக்கார்த்திகையன்று விநாயகப்பெருமானும், உமாதேவி சமேத சந்திரசேகரப்பெருமானும் திருவீதி பவனி வர சொக்கப்பனை கொளுத்தப்பெறும். மார்கழித் திருவாதிரை நாளன்று நடராஜப்பெருமான் வீதி உலா வருவார்.

    இந்த ஆலயத்தில் கார்த்திகை மாதம் முதல் தினத்தில் இருந்து மார்கழி மற்றும் தை மாதம் பூச நட்சத்திரம் நாள் வரை காலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை பக்தர்களுக்காக கோவில் திறந்திருக்கும். மற்ற நாட்களில் தினமும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் நடை திறந்து இருக்கும்.

    சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடியில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும், மதுரையில் இருந்து 71 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்குடி - திருப்பத்தூருக்கும் இடையில் குன்றக்குடிக்கு அருகில் மூன்று கிலோமீட்டர் தொலைவிலும் பிள்ளையார்பட்டி அமைந்துள்ளது.

    பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் ஐயப்பன் மற்றும் முருகப் பக்தர்களின் வசதிக்காக பகல் முழுவதும் நடை திறந்து சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    திருப்புத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீகற்பக விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் ஒவ்வொறு வருடமும் கார்த்திகை மாதம் தொடங்கி தைப்பூசம் வரை பகல் நேரம் முழுவதும் நடைத்திறந்திருக்கும்.

    பொதுவாக கார்த்திகை மாதம் ஐயப்ப பக்தர்களும், மார்கழி மாதம் முருகப்பக்தர்களும் மாலை அணிவிந்து விரதம் இருக்க தொடங்குவது வழக்கம். இதை முன்னிட்டு பக்தர்கள் சபரிமலை, பழனி கோவிலுக்கு செல்லும் வழியில் பிரசித்திப்பெற்ற கற்பக விநாயகர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வார்கள். இதனால் பக்தர்களின் வசதிக்காக இந்த கோவிலில் கார்த்திகை பிறந்தவுடன் பகல் நேரம் முழுவதும் நடை திறந்திருக்கும்.

    இந்தாண்டும் கார்த்திகை மாதம் முதல் நாள் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கி உள்ளனர். இதையொட்டி பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் காலை 6 மணியிலிருந்து இரவு 8 மணிவரையும், வருகிற 16-ந்தேதி முதல் அதிகாலை 4 மணியிலிருந்து இரவு 8 மணி வரையும் நடை திறந்திருக்கும்.

    இந்த நடைமுறையின்படி கற்பக விநாயகர் திருக்கோவில் தைப்பூசம் வரை பகல் முழுவதும் நடை திறந்து இருக்கும். அதைத்தொடர்ந்து கோவிலுக்கு வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏதுவாக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த தகவலை கோவில் டிரஸ்டிகள் அமராவதி புதூர் ஆர்.எம்.அண்ணாமலை செட்டியார் மற்றும் தேவகோட்டை எம்.நாகப்பசெட்டியார் தெரிவித்துள்ளனர்.
    ×