search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kanchipuram Temples"

    108 திவ்ய தேசங்களில் மூன்றாவது இடத்தில் முக்கியத்துவம் வாய்ந்த தலமாக காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் ஆலயம் திகழ்கிறது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    வைணவ தலங்களில் 108 தலங்கள் திவ்யதேசங்கள் என்று அழைக்கப்படுகின்றன. 108 திவ்ய தேசங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயம். அடுத்ததாக திருப்பதி-திருமலை ஏழுமலையானை சொல்வார்கள். மூன்றாவது இடத்தில் முக்கியத்துவம் வாய்ந்த தலமாக காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் ஆலயம் திகழ்கிறது.

    சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயமூலவருக்கு தேவராஜபெருமாள் என்று பெயர். உற்சவரை பேரருளாளன் என்று அழைக்கிறார்கள். தாயாருக்கு பெருந்தேவி தாயார் என்று பெயர் சூட்டி உள்ளனர். இத்தலத்து பெருமாள் மலை மீது அமைந்துள்ளார் என்பதற்கு சான்றாக 24 படிகளை ஏறிச்சென்று தரிசிக்க வேண்டி உள்ளது. பெருந்தேவி தாயார் தனி சன்னதியில் நின்று அருள்பாலிக்கிறார்.

    சக்கரத்தாழ்வாருக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. இந்த சன்னதிக்கு எதிரில் ஆலயத்தின் திருக்குளம் இருக்கிறது. இந்த திருக்குளம்தான் இப்போது அனைத்து பக்தர்களின் எதிர்பார்ப்பையும் அதிகரித்து இருக்கிறது.

    காரணம், இந்த திருக்குளத்துக்குள் மூழ்கி கிடக்கும் அத்திவரதர் நமக்கு ஆசி வழங்க குளத்தில் இருந்து வெளியே வர இருப்பது தான்.40 ஆண்டுகளுக்கு ஒருமுறையே அத்திவரதர் இந்த திருக்குளத்துக்குள் இருந்து வெளியில் வருவார். 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். பிறகு மீண்டும் திருக்குளத்துக்குள் போய் விடுவார். அடுத்து 40 ஆண்டுகள் கழித்துதான் அவர் மீண்டும் வெளியில் வருவார்.

    இதற்கு முன்பு 1939-ம் ஆண்டு அத்திவரதர் வெளியில் வந்தார். அதன் பிறகு 40 ஆண்டுகள் கழித்து 1979-ம் ஆண்டு வெளியில் வந்தார். இதைத் தொடர்ந்து 40 ஆண்டுகள் கழித்து தற்போது (2019) மீண்டும் அத்திவரதர் திருக்குளத்தில் இருந்து வெளியில் வர இருக்கிறார். இந்த அத்திவரதர்தான் வரதராஜ பெருமாள் ஆலயத்தில் ஒரு காலத்தில் மூலவராக திகழ்ந்தார். இவர் மரத்தால் செய்யப்பட்டவர் ஆவார். ஏதோ சில காரணங்களால் அவர் குளத்துக்குள் செல்ல நேரிட்டது. என்றாலும் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை என்ற ஐதீகப்படி அவர் வெளியில் வருவார்.

    ஒவ்வொரு 40 ஆண்டுகளுக்கு ஒரு தடவை பஞ்சாங்க குறிப்புகளின் அடிப்படையில் அத்திவரதரை வெளியில் எடுப்பார்கள். தற்போதைய நிலவரப்படி ஜூன் மாதம் 26-ந்தேதி அல்லது ஜூலை மாதம் 1-ந்தேதி அத்திவரதரை திருக்குளத்துக்குள் வெளியில் அழைத்துவர முடிவு செய்துள்ளனர்.

    40 ஆண்டுகளுக்கு வெளியில் யாருக்கும் தன்னை தெரியாதபடி தண்ணீருக்குள் மூழ்கி இருக்கும் அத்திவரதர் எந்த இடத்தில் மூழ்கி இருக்கிறார் என்பதை பக்தர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த ஆலயத்தின் நூற்றுக்கால் மண்டபத்தின் வடக்கு பகுதியில் அனந்தசரஸ் திருக்குளம் அமைந்துள்ளது. அந்த திருக்குளத்தின் உள்ளே இரண்டு மண்டபங்கள் இருக்கின்றன. அதில் நீராழி மண்டபமும் ஒன்றாகும்.

    இந்த மண்டபத்தின் கீழே அத்திவரதரை சயன கோலத்தில் வைத்துள்ளனர். அத்திவரதர் மரத்தால் செய்யப்பட்டவர் என்பதால் நீரில் மிதந்து விடக்கூடாது என்பதற்காக நான்கு புறமும் தடுப்பு வைத்துள்ளனர். மேலும் வெள்ளி தகடு பதித்த பெட்டியில் அவர் இடம் பெற்றுள்ளார். அவர் பள்ளிக்கொண்டிருக்கும் அனந்தசரஸ் திருக்குளத்தில் ஒருபோதும் தண்ணீர் வற்றுவதே கிடையாது. அதனால்தான் அத்திவரதரை அவ்வளவு எளிதில் யாரும் பார்க்க முடியாது. 40 ஆண்டுகளுக்கு ஒரு தடவை அந்த குளத்து தண்ணீரை முழுமையாக வெளியேற்றி விட்டு அத்திவரதரை வெளியில் எடுத்து தரிசனம் பெற வைப்பார்கள்.

    இந்த அத்திவரதர் பிரம்மனால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர் என்று வரலாறுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. யாகத்தீயில் இருந்து தோன்றியதால் சிறிது பின்னப்பட்டுவிட்டதால் அவர் அசரீரி மூலம் தன்னை குளத்துக்குள் வைக்கும்படி கூறி விட்டாராம். அதன் பிறகு பழைய சீவரத்தில் இருந்து கல்எடுத்து அதில் சிலை செய்து வரதராஜ பெருமாள் ஆலயத்தில் தேவராஜ பெருமாளாக பிரதிஷ்டை செய்துள்ளனர்.

    அத்திவரதர் திருக்குளத்துக்குள் சென்றதற்கு வேறு பல காரணங்களும் சொல்லப்படுகின்றன. யாகத்தீயில் இருந்து தோன்றியதால் உஷ்ணத்தை தணித்துக் கொள்ளவே அவர் திருக் குளத்துக்குள் வாசம் செய்வதாக பேச்சுவழக்கில் கூறப்படுகிறது. திருக்குளத்தில் இருந்து வெளியில் வந்ததும் வசந்த மண்டபத்தில் 48 நாட்களுக்கு அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலித்து சேவை சாதிப்பார். 24 நாட் கள் சயன கோலத்திலும், 24 நாட்கள் நின்ற கோலத்திலும் அத்திவரதர் சேவை சாதிப்பார்.

    அந்த 48 நாட்களும் காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் ஆலயம் திருவிழா கோலமாக காணப்படும். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியில் வரும் அத்திவரதரை தரிசனம் செய்ய தமிழ்நாடு முழுவதும் பக்தர்கள் காஞ்சீபுரத்தில் திரள்வார்கள்.

    ஒரு நாளைக்கு சுமார் 50 ஆயிரம் பக்தர்கள் வரை வருவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு அத்திவரதரை சுமார் 25 லட்சம் பக்தர்கள் நேரில் பார்த்து தரிசனம் செய்ய வாய்ப்புள்ளது. 40 ஆண்டுகளுக்கு ஒரு தடவையே இந்த வாய்ப்பு கிடைக்கும் என்பதால் பெரும்பாலும் வாழ்நாளில் ஒரு தடவைதான் ஒருவருக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும்.

    அத்திவரதரை சிரமமின்றி தரிசனம் செய்ய பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் ஆலயத்தினர் மேற்கொண்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள் என்பதால் அவர்களை ஒரு வாசல் வழியாக வரவழைத்து மற்றொரு வாசல் வழியாக வழியனுப்ப ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதுபோல அத்திவரதரை பக்தர்கள் தரிசிப்பதற்காக எந்த இடத்தில் வைக்கலாம் என்றும் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.இந்த ஆலயத்தின் தலவிருட்சமாக அரச மரம் உள்ளது.

    கீதையில் கிருஷ்ண பகவான் தனது வடிவமாக குறிப்பிட்ட அரச மரமாக இந்த அரச மரம் கருதப்படுகிறது. இந்த மரத்தின் எதிரே கரியமாணிக்க வரதர் சன்னதி உள்ளது. இந்த சன்னதியை திங்கட்கிழமைகளில் வரும் அமாவாசை தினத்தன்று சுற்றி வந்தால் குழந்தை பாக்கியம் உறுதியாக கிடைக்கும் என்று ஐதீகம் உள்ளது. ராமானுஜருக்காக கூரத்தாழ்வார் கண் பார்வை இழந்தது உங்களுக்கு தெரிந்து இருக்கலாம். அவருக்கு மீண்டும் வரதராஜ பெருமாள் ஆலயத்தில்தான் கண் பார்வை திரும்ப கிடைத்தது. எனவே இந்த ஆலயத்தில் வழிபட்டால் கண் தொடர்பான பிரச்சினைகள் நீங்கும்.

    மூலவரை தரிசனம் செய்ய கீழே இருந்து 24 படிகளை ஏறி செல்ல வேண்டும். இந்த 24 படிகளும் காயத்ரி மந்திரத்தின் 24 அட்சரங்களை குறிப்பாக சொல்கிறார்கள். எனவே இந்த படிகள் ஏறி செல்லும்போது பெருமாளை நினைத்தபடியே செல்ல வேண்டும்.

    வரதர்’ என்ற பெயர் எப்படி வந்தது?

    காஞ்சீபுரத்தில் ஒரு தடவை பிரம்ம தேவர் தனது செயல்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாக வேண்டும் என்ற நோக்கத்துடன் யாகம் ஒன்றை நடத்தினார். அந்த யாகத்திற்கு அவர் தனது மனைவி சரஸ்வதியை அழைக்கவில்லை. இதனால் பிரம்மா மீது சரஸ்வதிக்கு கடும் கோபம் ஏற்பட்டது. மனைவி இல்லாமல் பிரம்மாவால் யாகத்தை பூர்த்தி செய்ய முடியாத நிலை உருவானது. இதனால் காயத்ரி மற்றும் சாவித்திரியின் துணைக்கொண்டு பிரம்மா தொடங்கினார்.

    இதை அறிந்த சரஸ்வதி அந்த யாகத்தை தடுத்து நிறுத்த முடிவு செய்தாள். அவள் வேகவதி ஆறாக மாறி யாகத்தை அழிக்க கரைபுரண்டு வந்தாள். இதை கண்டு பெருமாள் அந்த நதியின் குறுக்கே படுத்து சயன கோலமாக தன்னை வெளிப்படுத்தினார். இதை கண்டதும் நதியாக இருந்த சரஸ்வதி தனது பாதையை வேறு திசைக்கு மாற்றிக் கொண்டாள்.

    இதை அறிந்த பிரம்மா மிகவும் நெகிழ்ந்து போனார். தனக்காக ஆற்றின் குறுக்கே படுத்த பெருமாளை வணங்கினார். அப்போது தேவர்களும், ரிஷிகளும் பெருமாளை வணங்கி தங்களது விருப்பங்களும் நிறைவேற வரம் கேட்டனர். அவர்கள் கேட்டதையெல்லாம் பெருமாள் இல்லை என்று சொல்லாமல் வாரி வாரி வழங்கினார். இதனால் அந்த பெருமாளுக்கு கேட்டவரம் தருபவர் என்ற பெயரில் வரதர் என்ற பெயர் உருவானது.

    தோஷங்கள் போக்கும் தங்க-வெள்ளி பல்லி

    சிருங்கி பேரர் என்னும் முனிவரின் இருமகன்கள் கவுதம முனிவரிடம் சிஷ்யர்களாக இருந்தனர். ஒருநாள் அவர்கள் பூஜைக்கு கொண்டு வந்த தீர்த்தத்தில் பல்லிகள் இறந்து கிடந்தன. இதை கண்ட முனிவர் கோபம் கொண்டு இருவரையும் பல்லிகளாகும்படி சபித்து விட்டார்.

    பிறகு சிஷ்யர்கள் வேண்டிக் கொண்டதால் காஞ்சி சென்றால் மன்னிப்பு உண்டு என தெரிவித்தார். அதன்படி இருவரும் சப்தபுரிகளையும் சுற்றி வந்து விட்டு வரதராஜ பெருமாளிடம் மோட்சம் கேட்டனர்.

    பெருமாள் அவர்கள் இருக்கும் மோட்சத்துக்கு செல்ல வழிகாட்டினார். அதோடு சரீரம் பஞ்ச உலோகத்தில் என் பின்புறம் இருக்கும் என்னை தரிசிக்க வருபவர்கள் உங்களை தரிசித்தால் சகல தோஷங்களும் நீங்கி நலம் உண்டாகும். சூரியன், சந்திரன் இதற்கு சாட்சி என்று மோட்சம் அளித்தார்.

    இந்த நிகழ்வை பிரதிபலிக்கும் வகையில் வரதராஜபெருமாள் ஆலயத்தின் கருவறை பின்பகுதியில் மேற்கூரையில் தங்கம், வெள்ளியில் பல்லிகள் அமைத்துள்ளனர். பக்தர்கள் அந்த பல்லிகளை தொட்டு தடவி வணங்குகிறார்கள். இதன் மூலம் தங்கள் தோஷங்கள் நிவர்த்தி பெறுவதாக நம்புகிறார்கள். இதனால் வட மாநில மக்களிடம் வரதராஜபெருமாள் ஆலயம் பல்லி ஆலயம் என்று புகழ் பெற்றுள்ளது.

    தினமும் வரதரை வழிபடலாம்


    40 ஆண்டுகளுக்கு பிறகு திருக்குளத்தில் இருந்து வெளியில் வர இருக்கும் அத்திவரதரை எப்படி வழிபட வேண்டும் என்பது பற்றி காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் ஆலயத்தில் பணிபுரியும் சம்பத்குமார் பட்டர் விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:

    1939-ம் ஆண்டு நான் பிறந்தேன். இப்போது எனக்கு 80 வயதாகிறது. நான் பிறந்த ஆண்டில்தான் அத்திவரதர் வெளியில் வந்திருந்தார். எனவே அந்த ஆண்டு அவரை நான் தரிசிக்க இயலவில்லை. அதன் பிறகு 1979-ம் ஆண்டு அத்திவரதரை வெளியில் வந்தபோது நான் கண்குளிர அவரை தரிசித்து ஆசி பெற்றேன்.

    இப்போது மீண்டும் 2-வது முறையாக அத்திவரதரை தரிசிக்க உள்ளேன். என்னை போன்று அத்திவரதரை 2-வது தடவை தரிசிக்க இருப்பவர்கள் பலர் உள்ளனர். வேங்கடவரத தத்தாச் சாரியார் என்பவர் 1939, 1979-ம் ஆண்டுகளில் அத்திவரதரை தரிசித்துள்ளார். தற்போது அவர் 3-வது முறையாக அத்திவரதர் சேவையை பெற உள்ளார். அவருக்கு 85 வயது ஆகிறது.

    காஞ்சீபுரத்தில் மட்டுமின்றி தமிழ்நாட்டில் பல பகுதிகளில் உள்ளவர்கள் அத்திவரதரை தரிசிக்க உள்ளனர். முன்பெல்லாம் அத்திவரதர் 60 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் திருக்குளத்தில் இருந்து வெளியில் வந்தார். இடையில் அது 40 ஆண்டுகளாக மாறி விட்டது. வரதராஜபெருமாள் ஆலயத்தில் மூலவர் எப்படி இருக்கிறாரோ அதே மாதிரி அத்திவரதர் இருப்பார். 24 படிக்கட்டுகள் கொண்ட திருக்குளத்துக்குள் சில அடி ஆழத்துக்குள் சயன கோலத்தில் அத்திவரதர் வைக்கப்பட்டுள்ளார். கிழக்கு திசையிலும் பாதமும், மேற்கு திசையில் திருமுகமும் கொண்டு அவர் சயன கோலம் கொண்டுள்ளார்.

    4 கால் மண்டபத்தின் கீழே தொட்டி போன்ற அமைப்புக்குள் வெள்ளி பேழையில் அத்திவரதர் இருக்கிறார். அவரை குறிப்பிட்ட தினத்தன்று இரவில்தான் வெளியில் எடுப்பார்கள். உடனடியாக சாந்தி ஹோமம் செய்து சுத்தப்படுத்தப்படும். பிறகு பரிகார பூஜைகள் நடைபெறும். அதன் பிறகு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அவரை தரிசிப்பது நமது பூர்வஜென்ம புண்ணியமாகும்.

    அத்திவரதருக்கு தினமும் நைவேத்தியம் செய்து பூஜைகள் நடைபெறும். இந்த 48 நாட்களில் ஏதாவது ஒரு நாள் அத்திவரதரை வழிபட்டால் நிச்சயமாக நமது கர்மவினைக்கு ஏற்ப உரிய பலன்கள் கிடைக்கும். அதில் சந்தேகமே இல்லை.

    இவ்வாறு சம்பத்குமார் பட்டர் கூறினார்.

    வரதர் குளத்துக்குள் சென்றது ஏன்?

    ஒரு தடவை பிரம்மா யாகம் நடத்திய போது யாக தீயின் காரணமாக மூலவராக நிறுவப்பட்டு இருந்த அத்திமர சிலையில் சற்று பின்னம் ஏற்பட்டு விட்டதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பிரம்மா என்ன செய்வது என்று தெரியாமல் திணறினார். வேறு எந்த வடிவிலும் இத்தகைய பெருமாளை மீண்டும் உருவாக்க இயலாதே? என்று அவர் தவித்தார்.

    தனது தவிப்புக்கு தீர்வு காண பெருமாளிடம் வேண்டினார். இதையடுத்து பெருமாள் அவர் முன் தோன்றி ஆலயத்தின் திருக்குளத்தில் தென் திசையில் நீராழி மண்டபத்தின் கீழே தன்னை சயன கோலத்தில் வைக்கும்படி அறிவுறுத்தினாராம். அதன் பேரில்தான் அத்திவரதர் திருக்குளத்தின் உள்ளே சென்றார் என்று சொல்கிறார்கள்.

    மேலும் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை தன்னை வெளியில் எடுத்து வழிபட வேண்டும் என்றும் அத்திவரதர் உத்தரவிட்டதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில்தான் அத்திவரதரை 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியில் எடுத்து தரிசனம் செய்யும் வழக்கம் நடைமுறையில் உள்ளது.
    பிரசித்தி பெற்ற வைணவத் தலங்களில் ஒன்று காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    பிரசித்தி பெற்ற வைணவத் தலங்களில் ஒன்று காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் கோவில். இது 108 திவ்ய தேசத் தலங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. மலை மீதுள்ள ஆலயத்தில் வரதராஜப் பெருமாள் வீற்றிருக்கிறார். கீழ் தளத்தில் பெருந்தேவி தாயார் அருள்பாலிக்கிறார்.

    இந்தக் கோவிலுக்கு, ஹொய்சாள மன்னன் வீரபல்லாளன், காளிங்கராயன், பாண்டியன் 5-ம் சடையவர்மன், சோழ மன்னர்கள் கி.பி. (1018-1246), சேர மன்னர் (1291-1342) ஆகியோர் திருப்பணிகள் செய்திருக்கிறார்கள். விஜயநகர பேரரசின் ஆட்சி காலத்தில் (1447- 1642), இத்திருக்கோவிலில், பல புதிய கட்டிடங்கள் தோன்றின. அவற்றுள் முக்கியமானது ஒற்றைக்கல் தூண்களில் அழகிய சிற்ப வேலைபாடுகள் நிறைந்ததும், ராமாயணம், மகாபாரதத்தை பிரதிபலிக்கும் சிற்பங்களும் கொண்ட 100 கால் மண்டபம் ஆகும்.

    இந்த ஆலயத்தில் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். பிரம்மா தன்னுடைய மனம் தூய்மை பெறுவதற்காக காஞ்சியில் யாகம் செய்தார். அப்போது அவர் தனது மனைவி சரஸ்வதியை விட்டு விட்டு, மற்றவர்களான சாவித்திரி, காயத்திரி ஆகியோரை வைத்து அந்த யாகத்தைச் செய்தார். இதனால் கோபம் கொண்ட சரஸ்வதி, யாகத்தை அழிப்பதற்காக வேகவதி என்ற ஆறாக உருவெடுத்து, பாய்ந்தோடி வந்தாள். இதையடுத்து பிரம்ம தேவன், மகாவிஷ்ணுவிடம் வேண்டினார். பெருமாள், வெள்ளப்பெருக்கு வரும் வழியில் சயனித்து கிடந்தார். இதனால் அவரைத் தாண்டி ஆற்று நீர் செல்ல முடியவில்லை. இப்படி பிரம்மன் வேண்டியதும் வரம் தந்தவர் என்பதால் ‘வரதராஜர்’ என்று பெயர் பெற்றார்.

    இந்த ஆலயத்தில் பெருமாளை, ஐராவதம் யானையே மலையாக நின்று தாங்குவதாக ஐதீகம். எனவே இந்த திருத்தலத்திற்கு ‘அத்திகிரி’ என்றும் பெயர் உண்டு. பெருமாளின் துணை கொண்டு யாகத்தை பூர்த்தி செய்த பிரம்மனுக்கு, யாக குண்டத்தில் இருந்து புண்ணிய கோடி விமானத்துடன் பெருமாள் தோன்றி அருள் செய்தார். பிறகு பிரம்ம தேவன், அத்தி மரத்தில் ஒரு சிலை வடித்து அதனை இங்கே பிரதிஷ்டை செய்தார்.

    பிரம்மனின் யாகத்தில் இருந்து 16 கைகளுடன் சங்கு சக்கரம் தாங்கியபடி சுதர்சன ஆழ்வார் தோன்றினார். இவரே இந்த ஆலயத்தில் பிரதான மூர்த்தியாக இருக்கிறார். இவரை வழிபட்ட பிறகே மூலவரான வரதராஜ பெருமாளை பக்தர்கள் தரிசனம் செய்கிறார்கள்.

    ஸ்ரீ வேதாந்த தேசிகர், ஒரு ஏழையின் திருமணத்திற்காக இங்குள்ள பெருந்தேவி தாயாரை வணங்கினார். அப்போது தாயாரின் சன்னிதியில் ‘தங்க மழை’ கொட்டியது. இப்படி பல்வேறு சிறப்புகளைக் கொண்ட ஆலயமாக இது திகழ்கிறது.

    ஸ்ரீ ஸ்ருங்கி பேரர் என்ற முனிவரின் இரண்டு மகன்கள், கவுதம முனிவரிடம் சீடர்களாக இருந்தனர். ஒரு முறை பூஜைக்கு அவர்கள் இருவரும் தீர்த்தம் கொண்டு வந்தனர். அந்த தீர்த்தத்தில் பல்லி கிடந்தது. இதனால் கோபம் கொண்ட கவுதமர், அவர்கள் இருவரையும் பல்லிகளாக மாறும்படி சபித்தார். பிறகு சீடர்களை காஞ்சி சென்று வழிபட்டால் மோட்சம் உண்டு என்று கூறினார். இதையடுத்து இவரும் இத்தலம் வந்து வழிபட்டனர். இறைவன் உங்கள் ஆத்மா வைகுண்டம் செல்லும். அதே நேரம் உங்களின் சரீரம் பஞ்சலோகங்களால் எனக்கு பின்புறம் இருக்கட்டும். என்னை தரிசிக்க வருபவர்கள், உங்களையும் தரிசித்து சகல தோஷங்களும் நீங்கப் பெறுவார்கள் என்று அருளினார். அதன் படி இந்த ஆலயத்தில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளியால் ஆன பல்லிகளை பக்தர்கள் வணங்குகிறார்கள்.

    வரதராஜப்பெருமாள் கோவிலில், அனந்தசரஸ் திருக்குளம், பொற்றாமறை திருக்குளம் ஆகிய 2 திருக்குளங்கள் அமைந்துள்ளன. மேற்கு ராஜகோபுரத்தில் வடகிழக்கிலும், 100 கால் மண்டபத்திற்கு வடக்கேயும் இருக்கிறது அனந்தசரஸ் திருக்குளம். இந்த குளத்தில் நீராவி மண்டபத்திற்கு தெற்கேயும், விமானத்துடன் கூடிய நான்கு கால் மண்டபத்தில் தான் அத்தி வரதர் அருள்கிறார். இவர் சுமார் 10 அடி உயரமும், 4 அடி அகலமும் கொண்டவர். முழுவதும் அத்தி மரத்தால் செய்யப்பட்டவர்.

    இவர் திருக்குளத்தில் உள்ளே இருந்து 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் வெளியே வருவார். அப்போது கோவில் வளாகத்தில் அவரை பக்தர்கள் தரிசிக்கலாம். ஒரு மண்டல காலம் (48 நாட்கள்), அவர் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். 30 நாட்கள் சயன கோலத்திலும், 18 நாட்கள் நின்ற நிலையில் அருள்வார்.

    40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் இந்த நிகழ்வு கடந்த 2.7.1979-ம் ஆண்டு நடைபெற்றது. அதன்படி இந்த வருடத்தில் தான் மீண்டும் அந்த நிகழ்வு நடைபெற உள்ளது. இது பற்றி வரதராஜர் ஆலயத்தில் வைகாசி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவின் போது முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது.
    காஞ்சீபுரம் அடுத்த செவிலிமேடு பகுதியில் அமைந்துள்ளது சௌந்தர்யவல்லி சமேதே ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    காஞ்சீபுரம் அடுத்த செவிலிமேடு பகுதியில் அமைந்துள்ளது சௌந்தர்யவல்லி சமேதே ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில். காஞ்சீபுரம் நகரத்தில் இருந்து ஏறத்தாழ 3 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. ஏறத்தாழ 800 ஆண்டுகளுக்கு முன்பு பல்லவ வம்சத்தின் கடைசி மன்னரான ராஜேந்திர பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது.

    இந்த கோவிலில் செவ்வாய், சனிக் கிழமைகளில் நெய் விளக்கு ஏற்றி பயபக்தியுடன் சுவாமியை வழிபட்டால் திருமண வரம் கைகூடும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. திருக்கோயிலின் கருவறையில் பிரம்மாண்டமான முறையில் எழுந்தருளி அருள்பாலிக்கும் நரசிம்ம மூர்த்தியின் மடியில் காண்போரை பக்தி பரவசத்துடன் கவரும் சாந்த சொரூபியாக தாயர் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

    சித்ரா பவுர்ணமி அன்று காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் இந்த திருக்கோவிலுக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார் மேலும் திருக்கோவில் சார்பினில் மண்டகப்படியும் நடைபெறும். திருக்கோயிலின் ஈசான்ய பாகத்தில் கிழக்கு கைலாச நாதரும் வடக்கு மூலையில் மேற்கு நோக்கி அமர்ந்து கைலாச நாதரும் பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர்.

    மேலும் ஆலயத்தில் செல்லியம்மன், மாரியம்மன் சன்னதிகளும் உள்ளன. புரட்டாசி மாதம் அனைத்து சனிக்கிழமைகளிலும் இத் திருக்கோயிலில் நடைபெறும் சிறப்பு வழிபாடுகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் மேலும் இத் திருக்கோவிலுக்கு நெய் விளக்கு ஏற்றி வழிபட்டால் பூமி, நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் தீரும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.

    திருக்கோவில் காலை 8 மணி முதல் 10.30 வரையிலும் மாலை 5.30 மணி முதல் 7 மணி வரையும் திறந்திருக்கும். காஞ்சீபுரத்தில் இருந்து நகரப் பேருந்துகள் மற்றும் ஷேர் ஆட்டோக்கள் அதிக அளவில் செவிலிமேடு வழியாக இயக்கப்படுவதால் பக்தர்கள் காஞ்சிபுரத்தில் இருந்து பக்தர்கள் சிரமமின்றி இக் கோயிலுக்கு சென்று வரலாம்.

    அந்நியர்களால் நமது நாட்டில் படை யெடுப்பு நடந்தபோது இந்துக்கோவில்கள் பல சூறையாடப்பட்டும் இடித்தும் தள்ளப்பட்டன. அப்போது காஞ்சியில் உள்ள வரத ராஜ பெருமாள் ஆலயத்தின் உற்சவ விக்ரகங்களை பத்திர மாக பாது காக்க செவிலிமேட்டில் உள்ள இந்த ஆலயத்தில் எழுந்தருளச் செய்தனர்.
    சிலகாலம் காஞ்சி வரதருக்கு இங்கு திருமஞ்சனம், ஆராதனை, விழாக்கள் முதலியவற்றினை செவிலிமேட்டில் உள்ள இந்த ஆலயத்தில் செய்து வந்தனர்.

    அப்போது காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் ஆலயத்தில் இருந்து செவிலிமேட்டில் உள்ள லட்சுமி நரசிம்மர் ஆலயம் வரை சுரங்கப்பாதை அமைத்து வரதர் ஆலய உற்சவர்களை பத்திரமாக இங்கு கொண்டு வந்தனர். இப்போது விஷ ஜந்துக்கள் இருப்பதால் சுரங்கப்பாதையை மூடி வைத்துள்ளனர்.
    பலி பிடத்தைக் கடந்து உள்ளே சென்றால் சுமார் எட்டு அடி உயரமுள்ள துவார பாலகர்கள் இருபுறமும் நம்மை வரவேற்க நாம் மகிழ்ச்சியுடன் உள்ளே செல்லலாம்.

    மூலவர் கருணை தவழும் முகத்தோடும் இடது தொடையில் ஸ்ரீலட்சுமியை இடது கரத்தினால் அணைத்தவாறு மிகப் பெரிய வடிவில் லட்சுமி நரசிம்மராக காண்பவர்களின் கண்களுக்கு கருணைக்கடலாக அற்புத வடிவில் காட்சி தருகிறார். எம்பெருமான் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சேவை சாதிக்கிறார். உற்சவ மூர்த்தி சந்நிதியில் சௌந்தர்ய வரதர், கண்ணன், ஆண்டாள் ஆகிய சிலைகளைக் கண்டு சேவிக்கலாம்.

    இங்குள்ள மகாமண்டபத்தில் காஞ்சியின் தவமுனிவர் பரமாச்சார்யாளின் அனுக்கிரகத்தால் உருவான ஸ்ரீ ஆஞ்சநேயர் கலையழகுடன் அருட்காட்சி தருகிறார். ஆஞ்சநேயருக்குப்பின் இந்த ஆலயத்தில் பக்தர்களின் எண்ணிக்கை கூடி வருகிறது. மூலஸ்தானத்திற்கு நேராக பெரிய திருவடிகள் என்று போற்றப்படுகின்றவரும் பச்சைக் கல்லினால் உருவானவரும் ஆன ஸ்ரீ கருடாழ்வார் கைப்கூப்பிய நிலையில் பெருமாளை நோக்கி சேவை சாதிக்கிறார்.

    ஆலயப் பிராகாரத்தைச் சுற்றி வருகின்றபோது ராமர் மேடு என்று குறிப்பிடும் மண்டபம் உள்ளது. இதில் ஆதிசங்கரர், ராமானுஜர் உருவங்களைக் காண லாம். மற்றும் ஒரு சிறிய மண்டபத்தில் ஒரு கல் தூணில் ஆஞ்ச நேயரின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆலயத்தில் உள்ள தாயாருக்கு ஸ்ரீ சௌந்தரவல்லி என்ற திருநாமம் ஆகும். சுமார் 7 அடி உயரமுள்ள தாயாரின் உருவம் நம்மை பக்தி பரவ சத்தில் ஆழ்த்தும் கையிரண்டும் தானகவே ஒன்று சேர்ந்து அம்மா என்று அழைக்கும். உற்சவ விக்ரகமும் மிக எழிலான அலங்காரத்துடன் காட்சி தருகிறது.

    45 அடி உயர முருகன் சிலை கொண்ட கோவில் என பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆலயமாகத் திகழ்வது, காஞ்சீபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள, நடுபழனி தண்டாயுதபாணி திருக்கோவில்.








    பனையபுரம் அதியமான்
    கோவில் முகப்புத் தோற்றம்
    45 அடி உயர முருகன் சிலை
    மரகதத்தால் ஆன பாலதண்டாயுதபாணி சிலை








    முத்துசுவாமி சித்தரால் எழுப்பப்பட்ட மலைக்கோவில், நடுபழனி என காஞ்சிப் பெரியவரால் பெயர் சூட்டப்பட்டத் தலம், மரகத மூலவரைக் கொண்டு விளங்கும் திருக்கோவில், மணப்பேறு, மகப்பேறு அருளும் ஆலயம், 45 அடி உயர முருகன் சிலை கொண்ட கோவில் என பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆலயமாகத் திகழ்வது, காஞ்சீபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள, நடுபழனி தண்டாயுதபாணி திருக்கோவில்.

    தல வரலாறு :

    சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு, பொள்ளாச்சியைச் சார்ந்த முத்துசுவாமி என்ற மிராசுதாரர், முருகப்பெருமானின் திருவருளால் வடஇந்திய யாத்திரையை முடித்து, அச்சிறுபாக்கம் அருகேயுள்ள பெரும்பேர் கண்டிகை என்ற திருப்புகழ் தலத்திற்கு வந்தார். மலை மீது சுமார் நான்கு ஆண்டுகள் தவமிருந்தார்.

    அங்கு தங்கியிருந்த காலத்தில் அவரது கனவில் குழந்தை வடிவத்தில் தோன்றிய முருகப்பெருமான், ‘பெருங்கரணையில் உள்ள மலையில் எனக்கு ஒரு கோவில் எழுப்ப வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டார்.

    அதன்படி, அச்சிறுபாக்கம் அருகேயுள்ள பெருங் கரணை ஊரில் உள்ள மலையைக் கண்டறிந்தார். அதன் உச்சியில் வேலாயுதத்தை நிறுவி வழிபாடு செய்யத் தொடங்கினார். செடிகள், பாறைக் கற் களைச் சரிசெய்து, அதன்பிறகு அங்கேயே முருகன் சிலையை வைத்து சிறிய கொட்டகை அமைத்து வழிபாடு தொடங்கினார். இதற்கு ஊர் மக்கள் பெரும் ஒத்துழைப்பு தந்தனர்.

    ஒருநாள் பெருத்த மழையால் கீற்றுக்கொட்டகை விழுந்துவிட, தனி ஆலயம் எழுப்ப தீர்மானித்து, சிறிய ஆலயம் எழுப்பினர். இந்த மலையைச் சீரமைக்க முத்துசுவாமி சித்தர் பெரும்பாடுபட்டுள்ளார். அருகில் உள்ள ஊர்களுக்கு காவடியெடுத்து ஆடி, அவர்கள் தரும் அரிசி உள்ளிட்ட காணிக்கைகளைப் பெற்றார். அதனைக் கொண்டு மலையைச் சீரமைக்கும் பணியாட்களுக்குச் சமைத்து தந்தார். பக்தர்கள் தரும் காணிக்கைகளைத் திருப்பணிக்கு பயன்படுத்தினார். எவரிடமும் கையேந்தி நன்கொடை கேட்டதில்லை. குறையோடு வருபவர்களுக்கு திருநீறு தந்து குணமாக்கும் வல்லமையும், முத்துசுவாமி சித்தருக்கு முருகன் திருவருளால் கிடைத்துள்ளது. இப்படி முத்துசுவாமி சித்தரின் ஐம்பது ஆண்டு கால உழைப்பில் உருவானதே நடுபழனி திருக்கோவில்.

    இந்த சமயத்தில் காஞ்சிப் பெரியவர் ஒருமுறை வருகை தந்தார். அவருக்கு இந்த ஆலயத்தில் உள்ள முருகப்பெருமான், பழனி பாலதண்டாயுத பாணியாகவே காட்சி தர, இந்தத் தலத்தை ‘நடு பழனி’ என்று அழைத்தார் காஞ்சிப் பெரியவர். அதன்பிறகு, முருகப்பெரு மானின் மூலவர் சிலையை, மரகத சிலையாக வடித்து, புதிய தண்டாயுதபாணியாக பிரதிஷ்டை செய்து, 1993-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    தமது பூவுலக நிறைவுக்காலம் வருவதை உணர்ந்த முத்துசுவாமிகளின் கனவில், மைசூர் கணபதி சச்சிதானந்த சுவாமிகளின் உருவம் வந்தது. அதே போல் கணபதி சச்சிதானந்த சுவாமிகளின் கனவில், முத்துசுவாமி சித்தரின் உருவம் தோன்றியிருக்கிறது. அதன்பிறகு ஒரு முறை நடுபழனிக்கு, மைசூர் கணபதி சச்சிதானந்த சுவாமிகள் வருகை தந்தார். அவரைக் கண்ட முத்துசுவாமி சித்தருக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. இருவரும் தங்களுக்கு தோன்றிய கனவைப் பற்றி பேசிக்கொண்டனர். அப்போதுதான் இருவருக்குமே ஒரே நேரத்தில் இதுபோன்ற கனவு வந்திருப்பது தெரியவந்தது.

    ஆலய அமைப்பு :

    நடுபழனி மலை, பசுமையான பெருங்கரணை கிராமத்தில் அமைந்துள்ளது. சுமார் 300 அடி உயரமுள்ள கனக மலையான நடுபழனி, வடக்கில் 128 படிகள் கொண்டு மலையேற வசதியாக நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது. மேற்குப்புறம் வாகனங்கள் மலையேறும் சாலை வசதியும் இருக்கிறது. அங்கே மலேசியாவில் பத்துமலைப் பகுதியில் உள்ள முருகப்பெருமான் சிலையைப் போலவே, 45 அடி உயர முருகப்பெருமான் கம்பீரமாய் மேற்கு நோக்கி காட்சியளிக்கின்றார். மலை உச்சியில் இந்த கோவில் உருவாக மூலக்காரணமான முத்துசுவாமி சித்தரின் ஜீவ சமாதி அமைந்துள்ளது. அவரது சமாதி முன்மண்டபத்தோடு எழிலாக ஆலய வடிவில் கட்டப்பட்டுள்ளது.

    சற்று மேலே இடும்பன் சன்னிதியைக் கடந்து சில படிகள் ஏறினால், நடுபழனி முருகன் ஆலயம் கிழக்கு முகமாய் காட்சி தருகின்றது. கணபதி, தத்தாத்ரேயர் சன்னிதிகள் சுற்றி அமைந் திருக்க, நடுநாயகமாக மரகதக் கல்லால் ஆன தண்டாயுதபாணி கிழக்கு நோக்கியபடி அருள்காட்சி தருகிறார். இவரின் வடிவம் நமக்கு பழனி மலையில் இருக்கும் பாலதண்டாயுதபாணியின் உருவத்தை நினைவுபடுத்துகிறது.

    ஆலய மகாமண்டபத்தின் இடதுபுறம் வள்ளி- தெய்வானை சமேத சண்முகப்பெருமான், வலது புறம் விநாயகர், பிரம்மன், விஷ்ணு, ருத்திரன் வடிவமான தத்தாத்ரேயர், நாக தத்தாத்ரேயர், லட்சுமி, சரஸ்வதி, பார்வதி வடிவமான அனகா லட்சுமி, உற்சவர் விநாயகர், வள்ளி- தெய்வானை சமேத சுப்பிர மணியர் சிலா வடிவங்கள் அமைந்துள்ளன. மலை அடிவாரத்தில் விநாயகர், அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள், திருப்போரூர் சிதம்பரம் சுவாமிகள், ராஜேஸ்வரி அம்மன், நவக்கிரகங்கள் சன்னிதி அமைந்துள்ளன.



    சுவாமிகளின் நெருங்கிய நண்பராக விளங்கிய முறப்பாக்கம் சுவாமிகளின் சமாதி மலையடிவாரத்தில், நவக்கிரக சன்னிதி அருகே அமைந்துள்ளது. இதனை சுவாமிகளே செய்து முடித்தார். இத்தலம் திருமண வரம், குழந்தை வரம் அருளும் தலமாக பக்தர்களால் போற்றப்படுகிறது. தொடர்ந்து 6 செவ்வாய்க் கிழமைகளில் விரதம் கடைப்பிடிப்பவருக்கும் பக்தர்களுக்கு, கைமேல் பலன் கிடைப்பதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

    விழாக்கள்:

    இந்த ஆலயத்தில் பங்குனி உத்திரத் திருவிழா மூன்று நாட்கள் நடைபெறுகிறது. சஷ்டி உற்சவம் மற்றும் திருக்கல்யாணம், கார்த்திகை மாதம் கார்த்திகை தீபத்திருநாள், முத்துசுவாமி சித்தர் குருபூஜை வெகு சிறப்பாக நடைபெறுகிறது. இது தவிர, முருகனுக்குரிய கிருத்திகை உள்ளிட்ட விழாக்கள் சிறப்புடன் நடத்தப்படுகிறது. பவுர்ணமி தோறும் கிரிவலம் நடக்கிறது.

    இந்த ஆலயம் தினமும் காலை 7.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் பக்தர்கள் தரி சனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    எல்லப்ப சித்தர்:

    முத்துசுவாமி சித்தருக்கு முன்பாக, இம்மலை உச்சியில் எல்லப்ப சித்தர் என்பவர், வேல் ஒன்றை நிறுவி வழிபட்டு வந்ததாக ஊர் மக்கள் கூறுகின்றனர். இவரின் சமாதி, மலையடிவாரத்தில் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இங்கே, விரிவாக்கம் செய்த குளம், ஆலயத்தின் தீர்த்தக்குளமாக அமைந்துள்ளது.

    45 அடி உயர முருகன் :

    இம்மலையின் மேற்கு அடிவாரத்தில் 45 அடி உயர முருகன் சிலை, மலேசிய பத்துமலை முருகன் சிலையைப் போல அமைக்கப்பட்டுள்ளது. இச்சிலை மைசூர் கணபதி சச்சிதானந்த சுவாமிகளின் அவதூத தத்த பீடத்தின் முயற்சியால் உருவாக்கப்பட்டு, சுவாமிகளின் திருக்கரங்களால் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்தச் சிலை கனகமலை எனும் நடுபழனியின் அழகுக்கு அழகு சேர்ப்பதாக அமைந்திருக்கிறது.

    முத்துசுவாமி சித்தர் :

    நடுபழனி தண்டாயுதபாணி மலைக்கோவிலை எழுப்பியவர் இவர்தான். இவர் முருகப்பெருமான் அருளால் பல சித்து விளையாட்டுகள் கை வரப்பெற்றிருந்தார். ஆனால் அந்த சக்திகளை எல்லாம் பக்தர்கள் நலம் பெறு வதற்காக மட்டுமே பயன்படுத்தினார். தன்னை நாடி வந்த அடியார்களுக்கு திருநீறு மட்டுமே தந்து அனைத்து வகை நோய் மற்றும் ஆபத்துக்களில் இருந்தும் காத்தருளியுள்ளதை பக்தர்கள் நினைவு கூருகின்றனர். இவர் கூடுவிட்டுக் கூடு பாயும் வித்தையில் வல்லவர் என்று இவரது சீடர்கள் பலரும் கூறுகின்றனர்.

    அமைவிடம் :

    காஞ்சீபுரம் மாவட்டம், செய்யூர் தாலுகா பெருங் கரணை கிராமத்தில் உள்ள சிறிய மலையே நடுபழனியாகும். மேல்மருவத்தூருக்குத் தெற்கே 2 கி.மீ. தூரத்தில் இடதுபுறம் முருகன் கோவில் வளைவு வரும். அதில் நுழைந்ததும் ரெயில் கிராசிங் வரும். அதில் இருந்து 5 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது.
    ×