search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கல்யாணவரம் அளிக்கும் ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோவில்
    X

    கல்யாணவரம் அளிக்கும் ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோவில்

    காஞ்சீபுரம் அடுத்த செவிலிமேடு பகுதியில் அமைந்துள்ளது சௌந்தர்யவல்லி சமேதே ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    காஞ்சீபுரம் அடுத்த செவிலிமேடு பகுதியில் அமைந்துள்ளது சௌந்தர்யவல்லி சமேதே ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில். காஞ்சீபுரம் நகரத்தில் இருந்து ஏறத்தாழ 3 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. ஏறத்தாழ 800 ஆண்டுகளுக்கு முன்பு பல்லவ வம்சத்தின் கடைசி மன்னரான ராஜேந்திர பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது.

    இந்த கோவிலில் செவ்வாய், சனிக் கிழமைகளில் நெய் விளக்கு ஏற்றி பயபக்தியுடன் சுவாமியை வழிபட்டால் திருமண வரம் கைகூடும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. திருக்கோயிலின் கருவறையில் பிரம்மாண்டமான முறையில் எழுந்தருளி அருள்பாலிக்கும் நரசிம்ம மூர்த்தியின் மடியில் காண்போரை பக்தி பரவசத்துடன் கவரும் சாந்த சொரூபியாக தாயர் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

    சித்ரா பவுர்ணமி அன்று காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் இந்த திருக்கோவிலுக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார் மேலும் திருக்கோவில் சார்பினில் மண்டகப்படியும் நடைபெறும். திருக்கோயிலின் ஈசான்ய பாகத்தில் கிழக்கு கைலாச நாதரும் வடக்கு மூலையில் மேற்கு நோக்கி அமர்ந்து கைலாச நாதரும் பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர்.

    மேலும் ஆலயத்தில் செல்லியம்மன், மாரியம்மன் சன்னதிகளும் உள்ளன. புரட்டாசி மாதம் அனைத்து சனிக்கிழமைகளிலும் இத் திருக்கோயிலில் நடைபெறும் சிறப்பு வழிபாடுகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் மேலும் இத் திருக்கோவிலுக்கு நெய் விளக்கு ஏற்றி வழிபட்டால் பூமி, நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் தீரும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.

    திருக்கோவில் காலை 8 மணி முதல் 10.30 வரையிலும் மாலை 5.30 மணி முதல் 7 மணி வரையும் திறந்திருக்கும். காஞ்சீபுரத்தில் இருந்து நகரப் பேருந்துகள் மற்றும் ஷேர் ஆட்டோக்கள் அதிக அளவில் செவிலிமேடு வழியாக இயக்கப்படுவதால் பக்தர்கள் காஞ்சிபுரத்தில் இருந்து பக்தர்கள் சிரமமின்றி இக் கோயிலுக்கு சென்று வரலாம்.

    அந்நியர்களால் நமது நாட்டில் படை யெடுப்பு நடந்தபோது இந்துக்கோவில்கள் பல சூறையாடப்பட்டும் இடித்தும் தள்ளப்பட்டன. அப்போது காஞ்சியில் உள்ள வரத ராஜ பெருமாள் ஆலயத்தின் உற்சவ விக்ரகங்களை பத்திர மாக பாது காக்க செவிலிமேட்டில் உள்ள இந்த ஆலயத்தில் எழுந்தருளச் செய்தனர்.
    சிலகாலம் காஞ்சி வரதருக்கு இங்கு திருமஞ்சனம், ஆராதனை, விழாக்கள் முதலியவற்றினை செவிலிமேட்டில் உள்ள இந்த ஆலயத்தில் செய்து வந்தனர்.

    அப்போது காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் ஆலயத்தில் இருந்து செவிலிமேட்டில் உள்ள லட்சுமி நரசிம்மர் ஆலயம் வரை சுரங்கப்பாதை அமைத்து வரதர் ஆலய உற்சவர்களை பத்திரமாக இங்கு கொண்டு வந்தனர். இப்போது விஷ ஜந்துக்கள் இருப்பதால் சுரங்கப்பாதையை மூடி வைத்துள்ளனர்.
    பலி பிடத்தைக் கடந்து உள்ளே சென்றால் சுமார் எட்டு அடி உயரமுள்ள துவார பாலகர்கள் இருபுறமும் நம்மை வரவேற்க நாம் மகிழ்ச்சியுடன் உள்ளே செல்லலாம்.

    மூலவர் கருணை தவழும் முகத்தோடும் இடது தொடையில் ஸ்ரீலட்சுமியை இடது கரத்தினால் அணைத்தவாறு மிகப் பெரிய வடிவில் லட்சுமி நரசிம்மராக காண்பவர்களின் கண்களுக்கு கருணைக்கடலாக அற்புத வடிவில் காட்சி தருகிறார். எம்பெருமான் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சேவை சாதிக்கிறார். உற்சவ மூர்த்தி சந்நிதியில் சௌந்தர்ய வரதர், கண்ணன், ஆண்டாள் ஆகிய சிலைகளைக் கண்டு சேவிக்கலாம்.

    இங்குள்ள மகாமண்டபத்தில் காஞ்சியின் தவமுனிவர் பரமாச்சார்யாளின் அனுக்கிரகத்தால் உருவான ஸ்ரீ ஆஞ்சநேயர் கலையழகுடன் அருட்காட்சி தருகிறார். ஆஞ்சநேயருக்குப்பின் இந்த ஆலயத்தில் பக்தர்களின் எண்ணிக்கை கூடி வருகிறது. மூலஸ்தானத்திற்கு நேராக பெரிய திருவடிகள் என்று போற்றப்படுகின்றவரும் பச்சைக் கல்லினால் உருவானவரும் ஆன ஸ்ரீ கருடாழ்வார் கைப்கூப்பிய நிலையில் பெருமாளை நோக்கி சேவை சாதிக்கிறார்.

    ஆலயப் பிராகாரத்தைச் சுற்றி வருகின்றபோது ராமர் மேடு என்று குறிப்பிடும் மண்டபம் உள்ளது. இதில் ஆதிசங்கரர், ராமானுஜர் உருவங்களைக் காண லாம். மற்றும் ஒரு சிறிய மண்டபத்தில் ஒரு கல் தூணில் ஆஞ்ச நேயரின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆலயத்தில் உள்ள தாயாருக்கு ஸ்ரீ சௌந்தரவல்லி என்ற திருநாமம் ஆகும். சுமார் 7 அடி உயரமுள்ள தாயாரின் உருவம் நம்மை பக்தி பரவ சத்தில் ஆழ்த்தும் கையிரண்டும் தானகவே ஒன்று சேர்ந்து அம்மா என்று அழைக்கும். உற்சவ விக்ரகமும் மிக எழிலான அலங்காரத்துடன் காட்சி தருகிறது.

    Next Story
    ×