search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kalaiselvan mla"

    சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றால் அ.தி.மு.க. அரசுக்கு ஆதரவாக செயல்படுவோம் என்று எம்.எல்.ஏ.க்கள் கலைச்செல்வன், பிரபு ஆகியோர் கூறியுள்ளனர். #kalaiselvanmla #admk #prabhumla

    கள்ளக்குறிச்சி:

    சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் தனபாலை சந்தித்து அரசு கொறடா ராஜேந்திரன், அமைச்சர் சி.வி.சண்முகம், அ.தி.மு.க.அமைப்பு செயலாளரும், வக்கீலுமான மனோஜ்பாண்டியன் ஆகியோர் மனு ஒன்று கொடுத்தனர்.

    அதில் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ.பிரபு, விருத்தாசலம் எம்.எல்.ஏ.கலைச்செல்வன், அறந்தாங்கி எம்.எல்.ஏ. ரத்தினசபாபதி ஆகிய 3 பேரும் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும், அவர்கள் கட்சியை பாதிக்கும் வகையில் விரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

    எனவே 3 எம்.எல்.ஏ.க்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர். அதனைத்தொடர்ந்து 3 எம்.எல்.ஏ.க்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ. பிரபு நிருபர்களிடம் கூறியதாவது:-

    அரசு கொறடா ராஜேந்திரன் சபாநாயகர் தனபாலை சந்தித்து எங்கள் மூன்று பேரையும் தகுதி நீக்கம் செய்ய மனு அளித்துள்ளார். நாங்கள் அரசு கொறடாவின் உத்தரவை எதிர்த்து எப்போதும் வாக்களிக்க வில்லை.


    சட்டமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக தான் வாக்களித்துள்ளோம். அ.ம.மு.க என்பது அ.தி.மு.க.வின் அங்கம் தானே தவிர இது தனிக்கட்சி கிடையாது. எதற்காக அரசு கொறடா எங்களை தகுதி நீக்கம் செய்வதற்கு மனு அளித்துள்ளார் என்பது தெரியவில்லை.

    எனவே அதிகாரப்பூர்வமாக நோட்டீஸ் கிடைத்தவுடன் நாங்கள் சட்டபூர்வமாக அதனை சந்திப்போம். தொடர்ந்து நான் அதிமுக உறுப்பினராகவே உள்ளேன் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வாக தான் செயல்படுகிறேன்.

    நாங்கள் வேறு எந்தக் கட்சியிலும் சேர்ந்து விடவில்லை. நடைபெறுகின்ற இடைத் தேர்தல் முடிவுக்குப் பிறகு சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றால் அரசு கொறடாவின் உத்தரவின் படியே செயல்படுவேன். அ.தி.மு.க.வை அழிப்பதற்காக நாங்கள் செயல்படவில்லை. முதல்-அமைச்சர் எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க.அரசின் கீழ்தான் செயல்பட்டுகொண்டு இருக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விருத்தாசலம் தொகுதி எம்.எல்.ஏ. கலைச்செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் உருவான எம்.எல்.ஏ.வாக நான் இருந்து வருகிறேன். ஜெயலலிதா முதல்-அமைச்சராக வர வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தொகுதி மக்கள் என்னை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுத்தார்கள். அன்று முதல் இன்று வரை அ.தி.மு.க.விற்கும், இந்த அரசுக்கும் ஆதரவாக செயல்பட்டு வருகிறேன்.

    கடந்த சட்டசபை தொடர் முழுவதும் கலந்து கொண்டுள்ளேன். எந்த காலகட்டத்திலும் தி.மு.க.வுடனோ மற்றவர்களுடனோ எந்தவித தொடர்பும் கிடையாது. இது அனைவருக்கும் தெரியும். ஜெயலலிதாவின் கனவு, 100 ஆண்டுகள் இந்த இயக்கம் தமிழகத்தை ஆளும் என்று சொன்னார்கள். அந்த நல்ல எண்ணத்தில் நானும் ரத்தினசபாபதி எம்.எல்.ஏ.வும் அனைவரையும் இணைத்து செயல்பட வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் இணைந்து பேசியிருக்கிறோம்.

    ஜெயலலிதாவை பாதுகாத்த சசிகலா தலைமையில் அ.தி.மு.க. அம்மா அணி என்று இயங்கிய போது கூட நாங்கள் இருந்தோம். ஆனால் இப்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்று ஆரம்பித்து பதிவு செய்துள்ளார்கள். அதிலே நான் உறுப்பினராக கூட இல்லை. அந்த நிகழ்ச்சிகளில் எதிலும் நான் கலந்து கொள்ளவில்லை, என்பதை தெளிவாக தெரிவித்துக் கொள்கிறேன்.

    குறிப்பாக அரசுக்கு ஆதரவாகவும், அ.தி.மு.க.விற்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகிறோம். இனியும் செயல்படுவோம் என்பதை தெளிவாக தெரிவித்துக் கொள்கிறேன். அரசு கொறடா சபாநாயகரை சந்தித்து ஏதோ ஒரு கடிதம் அனுப்புவதாக தொலைக்காட்சியில் பார்த்தேன். என்ன கடிதம் வருகிறது என்று தெரியவில்லை. வந்ததற்குப் பிறகு அதில் என்ன கேள்வி கேட்கப்பட்டுள்ளது, என தெரிந்துகொண்டு அதற்கான பதிலை சபாநாயகரை நேரில் சந்தித்து தெரிவிப்பேன்.

    அ.தி.மு.க.விற்கு எதிராக நான் செயல்படவில்லை. சசிகலா தலைமையில் அம்மா அணி இயங்கிய போது எடுத்த போட்டோக்கள் அவர்களிடம் இருக்கலாம். அந்த ஆதாரத்தை வைத்துக் கொண்டு அவர்கள் பேசலாம். இரட்டை இலை எங்கு இருக்கிறதோ அங்கு தான் இருப்பேன். ஜெயலலிதா ஆட்சி தொடர வேண்டும். அதற்கு தொடர்ந்து அ.தி.மு.க. ஆட்சிக்கு ஆதரவாக செயல்படுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #kalaiselvanmla #admk #prabhumla

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செயல்படவும் இல்லை பேசவும் இல்லை என்று கலைச்செல்வன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார். #KalaiselvanMLA #ADMK #Kalaiselvan
    விருத்தாசலம்:

    அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களான பிரபு (கள்ளக்குறிச்சி), ரத்தின சபாபதி (அறந்தாங்கி), கலைச்செல்வன் (விருத்தாசலம்) ஆகியோர் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்கள். அவர்கள் முதல்-அமைச்சருக்கு எதிராக பேசி வருவதாக கூறப்படுகிறது.

    இதையொட்டி அந்த 3 எம்.எல்.ஏ.க்கள் மீதும் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்ப உள்ளதாக தெரிகிறது.

    இதுகுறித்து கலைச்செல்வன் எம்.எல்.ஏ.விடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    சபாநாயகரிடமிருந்து எனக்கு நோட்டீஸ் வரவில்லை. நோட்டீஸ் வந்தபிறகு அதுகுறித்து நான் பதில் சொல்கிறேன். நான் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.தான். இரட்டை இலை சின்னம் எங்கு இருக்கிறதோ அங்கு நான் இருப்பேன்.

    சின்னம்மா சசிகலா தான் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்.

    இதுதொடர்பாகவும், இரட்டை இலை சின்னம் சம்பந்தமாகவும் கோர்ட்டில் வழக்கு உள்ளது. அதில் ஒரு முடிவு வரட்டும்.

    நான் முதல்- அமைச்சருக்கு எதிராக செயல்படவில்லை. கூட்டத்தில் முதல்- அமைச்சருக்கும் எதிராகவும் நான் பேசவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.


    இதுதொடர்பாக பிரபு எம்.எல்.ஏ.விடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    இதுவரை எந்த நோட்டீசும் எனக்கு வரவில்லை. அப்படி வந்தால் அதை சட்டப்படி எதிர் கொள்வேன். நான் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினராக உள்ளேன்.

    இந்தநிலையில் நான் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபடுகிறேன் என்று கூறுவது ஏற்புடையது அல்ல.

    இந்த ஆட்சி மீது மக்களுக்கு இருக்கும் எண்ணம் எப்படி பட்டது என்று அனைவருக்கும் தெரிந்ததே.

    இவ்வாறு அவர் கூறினார். #KalaiselvanMLA #ADMK #Kalaiselvan
    அதிமுகவுடன் கருத்து வேறுபாடு இல்லை, நட்பு ரீதியில் தினகரனுடன் உள்ளேன் என்று கலைச்செல்வன் எம்எல்ஏ கூறியுள்ளார். #dinakaran #kalaiselvanmla #admk

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கலைச்செல்வன். இவரிடம் தற்போது தினகரன் அணியில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து கேட்டபோது கூறியதாவது:-

    முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா என்னை நேரடியாக விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவித்ததால்தான் எம்.எல்.ஏ.வாக தேர்வானேன். நான் அ.தி.மு.க.வில்தான் இருந்து வருகிறேன். இரட்டை இலை எங்கு இருக்கிறதோ அங்குதான் நான் இருப்பேன்.

    ஜெயலலிதா இறந்த பின்னர் சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரன் அ.தி.மு.க. அரசை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் எடப்பாடி பழனிச்சாமியை முதல்-அமைச்சராக்க வேண்டும் என கேட்டுக்கொண்டதால் நாங்கள் அவருக்கு வாக்களித்து முதல்-அமைச்சராக தேர்வு செய்தோம்.

    தற்போது டி.டி.வி.தினகரனுடன் நட்பு ரீதியாகதான் இருந்து வருகிறேன். மேலும் அவர்தான் என்னை அவரது அணிக்கு மாவட்ட செயலாளராக நியமித்துள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அ.தி.மு.க.வில்தான் இருப்பதாக கூறுகிறீர்கள், ஆனால், தமிழக அரசை மட்டும் குறை கூறி வருகிறீர்களே ஏன் என்று கேட்டபோது, தமிழக அரசுக்கும், எனக்கும் மாற்று கருத்துதான் உள்ளது. அதனால்தான் எங்கள் பகுதியில் உள்ள குறைகளை சட்டமன்ற கூட்டத்தொடரில் கூறினேன். அதற்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினேன். மேலும் கடலூர் மாவட்டத்தில் தற்போது நியமித்துள்ள சத்துணவு பணியாளர்கள் தேர்வில் முறைகேடு நடந்துள்ளது. 

    கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி, குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட தி.மு.க. தொகுதிக்கு சுமார் 10 கோடி அளவில் சாலை அமைப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டுள்ளது. ஆனால், எனது தொகுதி முழுவதும் புறக்கணிக்கப்பட்டு அடிப்படை வசதியான குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட எந்தவித வசதியும் செய்து கொடுக்காமல் மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் செயல்பட்டு வருகிறது. கோரிக்கைகளை நிறைவேற்ற நான் வலியுறுத்தி வருகிறேன். கேள்வி கேட்பது என்னுடைய உரிமை, அதை செய்து வருகிறேன். ஆனால், அ.தி.மு.க. கட்சிக்கும், எனக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை என்றார்.  #dinakaran #kalaiselvanmla #admk

    ×