search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jaya dead probe"

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தும் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. #ArumugasamyCommission #JayaDeathProbe
    புதுடெல்லி:

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை மற்றும் குறுக்கு விசாரணைக்கு நேற்று அப்போலோ டாக்டர்கள் மற்றும் டெக்னீசியன்கள் ஆஜராக வேண்டும் என்று ஆணையம் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.
     
    இதை எதிர்த்து அப்போலோ நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து அப்போலோ நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை சுட்டிக்காட்டி ஆணைய விசாரணையில் இருந்து மருத்துவர்கள் ஆஜராக விலக்கு அளிக்குமாறு அப்போலோ நிர்வாகம் சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டது.



    இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் அப்பல்லோ நிர்வாகம் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அப்போலோ நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்ற உச்ச நீதிமன்றம், ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது.

    டாக்டர்கள் ஆஜராவதில் இருந்து விலக்கு கோருவது தொடர்பாக இன்று பிற்பகல் அப்போலோ நிர்வாகம் விளக்கம் தர வேண்டும் என ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டிருந்த நிலையில், விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #ArumugasamyCommission #JayaDeathProbe
    ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அரசுக்கு இதயம் போன்றவர்கள் என்றும் யாரையும் தனிப்பட்ட முறையில் குற்றம்சாட்ட வேண்டும் என்பது தங்களின் எண்ணம் இல்லை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். #IASOfficers #MinisterJayakumar
    ராயபுரம்:

    சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் நுண் கதிரியல் துறையில் ‘கேத் லேப்’ மற்றும் ஆஸ்பத்திரி வளாகத்தில் அம்மா குடிநீர் விற்பனை நிலையத்தை அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஜெயக்குமார், எம்.ஆர்.விஜய பாஸ்கர் ஆகியோர் திறந்து வைத்தனர்.

    பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இயற்கைக்கு இடர்பாடுகள் அளிக்கக்கூடிய மற்றும் சுகாதாரமற்ற நிலையை கொண்ட 14 பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கணவன்-மனைவி போல் மக்களுடன் ஒன்றி இருந்த பிளாஸ்டிக் பொருட்களை விவாகரத்து செய்ய வேண்டும் என்கிற அளவுக்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

    ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அரசுக்கு இதயம் போன்றவர்கள். அவர்களை அரசு மதிக்கிறது. எனவே யாரையும் தனிப்பட்ட முறையில் குற்றம்சாட்ட வேண்டும் என்பது எங்கள் எண்ணம் இல்லை.


    சட்ட அமைச்சர் குற்றம் சாட்டி உள்ளார். அதுகுறித்து உண்மை நிலை மக்களுக்கு தெரிய வேண்டும் என்று தான் விசாரணை வேண்டும் என்று தெரிவித்தோம். அமைச்சரவை, முதல்-அமைச்சரின் கட்டுக்குள்தான் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அமைச்சர் விஜயபாஸ்கர் கூறும்போது, “நுண் கதிரியல் துறையில் ரத்தநாளங்களில் ஏற்படும் வீக்கம், ரத்தகசிவு, அடைப்பு, ரத்தநாள வெடிப்பு உள்ளிட்ட நோய்களுக்கு நுண்துளைகள் மூலம் அறுவை சிகிச்சை இல்லாமல் அதிநவீன சிகிச்சை வழங்க ரூ.6.5கோடி மதிப்பில் பிப்லேன் டிஜிட்டல் சப்ஸ்ட்ராக்சன் ஆஞ்சியோகிராம் கேத்லேப் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

    இந்த கருவி மூலம் மூளை, குடல் மற்றும் உள்ளுறுப்புகளில் ஏற்படும் ரத்த கசிவு, மற்றும் கல்லீரல் புற்றுநோய் உட்பட புற்றுநோய்களை தெளிவாக கண்டறிந்து, அறுவை சிகிச்சை இல்லாமல் சிகிச்சை வழங்கப்படும்.

    அதுமட்டுமின்றி குறைவான மருத்துவ செலவில் மக்களுக்கு சிகிச்சைகள் அளிக்க வேண்டும் என இத்திட்டம் துவக்கப்பட்டுள்ளது” என்றார்.

    நிகழ்ச்சியில் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி டீன் பொன்னம்பல நமச்சிவாயம், மருத்துவ நிலைய அதிகாரி ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். #IASOfficers #MinisterJayakumar
    ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் பாதுகாப்பு அதிகாரி பெருமாள் சாமி இன்று ஆஜரானார். #JayaDeathprobe
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தில் அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், பணியில் இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், செயலாளர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள், உறவினர்கள், ஊழியர்கள் என பலர் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

    ஜெயலலிதாவின் பாதுகாப்பு போலீஸ் அதிகாரி பெருமாள்சாமி இன்று ஆஜரானார். அவரிடம் விசாரணை நடத்திய போது அவர் அளித்த பதில்கள் பதிவு செய்யப்பட்டன.

    அப்பல்லோ மருத்துவர்கள் 11 பேர் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. ஆனால் அவர்கள் ஆஜராகவில்லை. அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் வக்கீல் மஹீடினா பாட்ஷா ஆஜராகி விளக்கம் அளித்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    விசாரணை ஆணையத்தில் 11 மருத்துவர்கள் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.

    ஆணையத்தில் ஆஜராகும் மருத்துவர்களின் வாக்குமூலங்கள் தவறாக பதிவு செய்யப்படுகிறது. இது ஆணையத்திற்கு எதிரானதாக உள்ளது.

    அதனால் அவற்றை சரியாக பதிவு செய்ய ஆணையத்தில் மருத்துவக் குழு அமைக்க கோரி மனு அளித்துள்ளோம். நிறைய சிறப்பு மருத்துவர்கள் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்துள்ளனர். அனைத்து மருத்துவர்களும் சிறப்பான சிகிச்சை வழங்கியுள்ளனர்.


    ஜெயலலிதாவுக்கு அப்பல்லோ மருத்துவர்கள் மட்டுமே சிகிச்சை அளிக்கவில்லை. பல்வேறு விருதுகள் பெற்ற மருத்துவர்களான ரிச்சர்டு பீலே, எய்ம்ஸ் டாக்டர்கள் சிகிச்சை அளித்துள்ளனர்.

    மாநில அரசு கோரிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு எய்ம்ஸ் மருத்துவர்களை அனுப்பி வைத்தது.

    ஆணைய வக்கீல்கள் சார்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு அப்பல்லோ மருத்துவமனைக்கு எதிராக உள்ளது. நாங்கள் மருத்துவக்குழுவை காலதாமதமாக கேட்கவில்லை. கடந்த ஜூன் மாதமே மருத்துவ குழுவை கேட்டு மனுதாக்கல் செய்துள்ளோம்.

    மருத்துவகுழு அமைக்கப்பட்டால் மட்டுமே அப்பல்லோ மருத்துவர்கள் அளிக்கும் தகவல்களை முறையாக பதிவு செய்ய முடியும். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட முழு சிகிச்சை விவரங்களை வழங்கி உள்ளோம்.

    மருத்துவம் குறித்த விவரங்கள் தெரியாமல் ஜெயலலிதாவுக்கு மூளைச்சாவு ஏற்பட்டதாக தவறான தகவல்களை பரப்புகின்றனர். அனைத்து மருத்துவர்களும் அவருக்கு முடிந்த அளவு சிறப்பு சிகிச்சையை வழங்கி உள்ளனர். எய்ம்ஸ் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தது அப்பல்லோவின் முடிவல்ல. அரசின் முடிவு.

    ஆணையம் சார்பில் மருத்துவகுழு அமைக்கப்படும் வரை அப்பல்லோ மருத்துவர்கள் ஆணையத்தில் ஆஜராக மாட்டார்கள். எனவே வேறு ஒரு நாளில் மருத்துவர்களுக்கு சம்மன் அளிக்க வேண்டும் என மனு அளித்துள்ளோம். 21 மருத்துவர்கள் அடங்கிய மருத்துவ குழு அமைக்கப்பட வேண்டும் என கூறியுள்ளோம்.

    இவ்வாறு அவர் பேசினார். #JayaDeathprobe
    அமைச்சர் சி.வி.சண்முகம் ஆதாரம் இன்றி பேசி வருவதால் சம்மன் அனுப்பி அவரை அழைத்து விசாரிப்பதற்கு கமி‌ஷனிடம் அனுமதி கேட்போம் என்று சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார். #CVShanmugam
    சென்னை:

    ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், சிறப்பு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்றும் அமைச்சர் சி.வி.சண்முகம் நேற்று பரபரப்பாக கூறி இருந்தார். அதுமட்டுமல்ல ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்தபோது அமைச்சரவை கூடி விவாதிக்கவில்லை என்றும் கூறி இருந்தார்.

    நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமி‌ஷனில் சசிகலா தரப்பில் ஆஜராகி வரும் வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியனிடம் இதுகுறித்து கேட்டபோது அவர் கூறியதாவது:-

    அமைச்சர் சி.வி.சண்முகம் ஆதாரம் இன்றி பல்வேறு தகவல்களை வெளிப்படுத்தி வருகிறார். ஜெயலலிதா அமைச்சரவையில் அன்று முதல் இன்று வரை இவர் அமைச்சராக இருந்தவர். தினமும் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு வந்து சென்றவர். அவருக்கு எல்லாம் தெரிந்தும் தெரியாதது போல் பேசுகிறார்.


    சசிகலா குடும்பத்தினர் சாப்பிட்டு தான் இவ்வளவு பில் வந்ததாக அமைச்சர் குற்றம் சாட்டுகிறார். அது தவறு. அப்பல்லோவில் தரப்பட்ட டீ, காபி, சமோசா, வடை, பிஸ்கட், மதிய உணவு ஆகியவற்றை யார் யாரெல்லாம் சாப்பிட்டார்கள் என்பது பத்திரிகையாளர்களுக்கு தெரியும். காலையில் இருந்து இரவு வரை இருந்த அமைச்சர்களுக்கும் தெரியும்.

    ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது ஒருமுறை கூட அமைச்சரவை கூட்டம் நடைபெறவில்லை என்றும் ஒரு குற்றச்சாட்டை கூறி இருக்கிறார். அது தவறு.

    உண்மை என்னவென்றால் ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்தபோது 19.10.2016 அன்று கேபினட் கூட்டம் நடைபெற்றதாகவும், அதில் அம்மா பூரண நலம் பெற வேண்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் இப்போதைய தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் 31.10.2018 அன்று ஆணையத்தில் கடிதம் சமர்ப்பித்துள்ளார்.

    ஆனால் வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை பெறுவது குறித்து அதில் எந்த அம்சமும் இடம்பெறவில்லை என தெரிகிறது. இதுபற்றி அப்போதைய தலைமை செயலாளராக இருந்த ராமமோகன ராவிடம் ஆணையத்தில் கேள்விகள் கேட்கப்பட்டது. அவரும் கேபினட் கூட்டம் நடந்ததை தெரிவித்துள்ளார்.

    எனவே அமைச்சர் சி.வி.சண்முகம் ஆதாரம் இன்றி பேசி வருவதால் சம்மன் அனுப்பி அவரை அழைத்து விசாரிப்பதற்கு கமி‌ஷனிடம் அனுமதி கேட்போம்.

    ஆறுமுகசாமி விசாரணை கமி‌ஷன் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருக்கிறார். எங்களுக்கு தெரிந்தவரை இடைக்கால அறிக்கை வழங்க ஆணைய விதிகளில் இடம் இல்லை என தெரிகிறது.

    சி.வி.சண்முகம் இப்போது புதுப்புது தகவல்களை கூறுவதை பார்க்கும் போது கமி‌ஷன் விசாரணை இன்னும் 6 மாதத்துக்கு மேல் செல்லும் என தெரிகிறது.

    சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் மருத்துவத்தை தாண்டி அரசியல் நடைபெறுவதாகவே கருத வேண்டி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #CVShanmugam #RajaSenthurpandian
    ×