search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hydrocarbon gas"

    மக்களுக்கு எதிரான திட்டங்களை கருத்து கேட்காமல் செயல்படுத்த நினைப்பதா? என்று அ.தி.மு.க. அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். #MKStalin
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டம் உள்ளிட்ட எண்ணெய் மற்றும் எரிவாயு குழாய்களை பதிக்கும் திட்டங்களை நிறைவேற்றும் முன்பு பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டங்களை நடத்த வேண்டும் என்ற விதியிலிருந்து விலக்கு அளிக்குமாறு, மத்திய பா.ஜ.க. அரசிடம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசு கோரிக்கை விடுத்திருப்பதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

    குறிப்பாக ஸ்டெர்லைட் தனியார் ஆலையை நடத்தும் வேதாந்தா குழுமத்தின் நிறுவனத்திற்கு, தமிழ்நாட்டில் இரண்டு இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ள பேனா மை ஈரம் காய்வதற்குள், அ.தி.மு.க அரசு விடுத்துள்ள இந்த திடீர் கோரிக்கை உள்நோக்கத்துடன் கூடிய சுயநலம் கொண்டது. சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் இதற்காகவே டெல்லி சென்று மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரியை சந்தித்து இந்த கோரிக்கையை வலியுறுத்தியிருப்பது, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு ஏற்கனவே உதவியது போல், அந்த குழுமத்தின் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கும் உதவுவதற்கான அ.தி.மு.க அரசின் முன்னோட்டமாக அமைந்துள்ளது.

    மக்களின் நலனுக்காக போராடும் அரசியல் கட்சிகள் மற்றும் அரசு சாரா அமைப்புகளால் திட்டங்களை நிறைவேற்றுவது தாமதமாகிறது என்று அந்த கோரிக்கை மனுவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தெரிவித்திருக்கும் கருத்துகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். ஏனென்றால் அரசியல் கட்சிகளோ, அரசு சாரா அமைப்புகளோ எந்த காலத்திலும் மாநிலத்தில் நிறைவேற்றப்படும் திட்டங்களுக்கும், வளர்ச்சிக்கும் நிச்சயமாக எதிரானவை அல்ல. அதனால்தான் மக்களின் விருப்பத்துடன் கூடிய ஒப்புதலுடன் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று நல்லெண்ண அடிப்படையில் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

    ஆனால், இதைக்கூட சரியான கோணத்தில் புரிந்து கொள்ளாத அ.தி.மு.க அரசு, தனது கையாலாகாத தனத்தை மறைப்பதற்காக, வேண்டுமென்றே அரசியல் கட்சிகள் மீது பழி போட்டு, இப்படியொரு கோரிக்கையை மத்திய அரசிடம் முன் வைத்திருப்பது மிகவும் வருந்தத்தக்கது. தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய தொழிற்சாலைகளோ, புதிய திட்டங்களோ, முதலீடுகளோ தலைவிரித்தாடும் அ.தி.மு.க அரசின் ஊழல் மற்றும் கமிஷன் கலாசாரத்தால், வேறு மாநிலங்களுக்குச் செல்கின்றனவே தவிர, மக்கள் நலனுக்காகவும் மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும் ஓயாமல் குரல் கொடுக்கும் அரசியல் கட்சிகளால் அல்ல.

    தங்கள் முதுகில் படிந்திருக்கும் ஊழல் அழுக்கை கிஞ்சிற்றும் நீக்க முடியாத அ.தி.மு.க அரசும், அதன் அமைச்சர்களும் மக்களுக்கு எதிரான திட்டங்களை, கருத்துக்கேட்காமலேயே செயல்படுத்துவோம் என்ற எதேச்சதிகார மனப்பான்மையில் செயல்படுவது, ஆணவத்தின் உச்சகட்டம். ஆகவே, மத்திய அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கையை அ.தி.மு.க அரசு உடனடியாக திரும்பப் பெற்று, முக்கியத் திட்டங்களை நிறைவேற்றும் முன்பு அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, ஜனநாயக ரீதியாக மக்களிடம் கருத்துக்கேட்கும் கூட்டங்களை நடத்த கண்டிப்பாக முன் வர வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார். #MKStalin #DMK #ADMK #BJP
    முத்துப்பேட்டை அருகே ஓ.என்.ஜி.சி. நிறுவன கூடாரத்தில் தீ விபத்தில் 1500 சிமெண்ட் மூட்டைகள் முற்றிலும் எரிந்து சாம்பலானது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #ONGC

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டத்தில் ஓ.என்.ஜி.சி. எரிவாயு நிறுவனம் சார்பாக பல்வேறு இடங்களில் குழாய்கள் பதிக்கப்பட்டு வருகிறது. இதற்கு அந்தந்த பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    ஓ.என்.ஜி.சி எரிவாயு குழாய் பதிப்பால் விவசாயம் பாதிக்கப்படும். நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விடும் என்று விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவாரூர் மாவட்டம், கருப்பூர் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சார்பாக குழாய்கள் பதிக்கப்பட்டு அதற்கான வேலைகள் நடைபெற்று கொண்டிருந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த மர்ம கும்பல் இரவு இரும்பு குழாய்களில் தீ வைத்தனர். இதில் ரூ.40 லட்சம் மதிப்புள்ள 20 ராட்சத இரும்பு குழாய்கள் தீயில் எரிந்து சேதம் ஆனது.


    தீ விபத்தில் சேதமான சிமெண்டு மூட்டைகள்.

    இதேபோல் சம்பவம் முத்துப்பேட்டை பகுதியில் ஓ.என்.ஜி.சி. நிறுவன கூடாரத்தில் இருந்த சிமெண்டு மூட்டைகளை மர்ம கும்பல் தீ வைத்து எரித்துள்ளனர். நேற்று நள்ளிரவில் நடந்த இந்த சம்பவம் பற்றிய விவரம் பின் வருமாறு:-

    முத்துப்பேட்டை அருகே உள்ள மங்கலநாயகி புரத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சார்பாக குழாய் பதிக்கும் வேலை நடைபெறஉள்ளது. இதற்காக கூடாரம் அமைக்கும் பணி புதுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் மூலம் நடந்து கொண்டிருக்கிறது.

    இந்தநிலையில் நேற்று நள்ளிரவு திடீரென அங்குள்ள கூடாரத்தில் தீ பிடித்து மளமளவென எரிந்தது. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கு வேலை பார்க்கும் வட மாநில இளைஞர்கள் உடனே திருவாரூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    அதன்பேரில் அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனால் கூடாரத்தில் இருந்த 1500 சிமெண்ட் மூட்டைகள் மற்றும் ஒருமோட்டார் சைக்கிள் தீயில் முற்றிலும் எரிந்து சாம்பலானது.

    இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள சிமெண்டு மூட்டைகள் எரிந்து போனதால் ஓ.என்.ஜி.சி. நிறுவன அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருன்றனர்.

    ஓ.என்.ஜி.சி. நிறுவன குழாய் அமைக்கும் இடத்தில் உள்ள கூடாரத்தில் தீ விபத்து எப்படி ஏற்பட்டது? மர்ம கும்பல் யாரேனும் தீ வைத்தார்களா? என்ற போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

    ஓ.என்.ஜி.சி. நிறுவன கூடாரத்தில் தீ விபத்து சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #ONGC

    ×