search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "how to know family deity"

    • அண்ணாமலையாரை குல தெய்வமாக கும்பிட ஆரம்பிக்கலாம்.
    • திருச்செந்தூர் முருகனை வணங்கலாம்.

    ஒரு சில குடும்பங்கள் ஏதாவது ஒரு காரணத்திற்காக சொந்த ஊரை விட்டு வேறு இடத்திற்கு சென்று வாழ்க்கை நடத்துவர். இதன் காரணமாக 2 அல்லது 3 தலைமுறைகள் குலதெய்வக் கோவில் வழிபாடு பற்றி அறியாமலேயே வாழ்ந்திருப்பார்கள். அவர்கள் நல்ல நிலைக்கு வரும் போது குலதெய்வம் எது என்று அவர்களுக்கு தெரியாமல் போய்விடும்.

    சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாகவோ, அல்லது குல தெய்வத்தின் உதவி கூட ஒரு சிலருக்கு கிடைக்கவிடாத கர்ம வினை காரணமாக எது குலதெய்வம் என்றே தெரியாத சூழல் ஒரு சிலருக்கு ஏற்பட்டு விடுகிறது. உங்களுக்கு ஒரு பிரச்சினை என்றால், உங்கள் சகல முயற்சியும் பலனளிக்கவில்லை என்றால், உடனடியாக நீங்கள் நாட வேண்டியது உங்கள் குல தெய்வத்தையே.

    சரி குல தெய்வம் தெரியாதவர்கள் என்ன செய்யலாம்?

    உங்களுக்கு ஜாதகம் இருந்தால், லக்னத்தில்- ஜந்தாம் வீடு, ஐந்தில் உள்ள கிரகம், ஐந்தாம் வீட்டை பார்வையிடும் கிரகம் ஆகியவற்றைப் பாருங்கள். அவற்றின் அடிப்படையிலேயே உங்கள் குல தெய்வம் இருந்திருக்கும். உதாரணத்திற்கு ஐந்தாம் வீட்டிற்கு குருவும், சூரியனும் சம்பந்தபட்டு இருந்தால் சிவ அம்சம் பொருந்திய குரு ஸ்தானத்தில் உள்ளவர் உங்கள் குல தெய்வமாக இருக்கலாம். ஐந்தில்- ஒரு நீச கிரகமோ, அல்லது ஐந்தாம் வீட்டுக்கு உரியவர் நீசமாகவோ இருந்தால் உங்கள் குல தெய்வத்தை நீங்கள் கண்டு கொள்ளவேயில்லை என்று அர்த்தம்.

    உங்கள் தாத்தா காலத்திலேயே அதை ஒரு பொருட்டாக மதித்து வணங்கவில்லை என்று அர்த்தம். நீங்கள் உரிய, முறைப்படி வணங்கி அந்த குல தெய்வத்தின் ஆசி பெறவில்லை என்றால், உங்களுக்கு வாழ்நாள் முழுக்க, தடைகள், முட்டுக்கட்டைகள் என்று தொடர் போராட்டம் தான்.

    உங்கள் பரம்பரையின், ஒட்டு மொத்த பாவக் கணக்கில் ஒரு பெரும் பகுதியை நீங்கள் தீர்த்து, அதன்பிறகு உங்கள் சொந்தக் காலில் நிற்க வேண்டும். குல தெய்வம்- உங்கள் வம்சா வழியில் பிறந்து வளர்ந்து, உங்கள் வம்சம் தழைக்க தன் உடல், பொருள் ஆவியை அர்ப்பணித்தவராக கூட இருக்கலாம்.

    சரி, குல தெய்வம் தெரியாதவர்கள் எந்த தெய்வத்தை வணங்கலாம்?

    இயல்பிலேயே உங்களுக்கு எந்த தெய்வத்தின் மேல் ஈடுபாடு என்று பாருங்கள். பரம்பரையாக, ஜென்ம ஜென்மமாக உங்கள் உணர்வில் ஊன்றி இருக்கும் விஷயம் அது. அது சிவனோ, பெருமாளோ, அம்மனோ, முருகனோ, கருப்பசாமியோ, முனியோ எதுவாக வேண்டுமானாலும் பரவாயில்லை.

    அண்ணாமலையாரை குல தெய்வமாக கும்பிட ஆரம்பிக்கலாம். சதுரகிரி அருகில் இருப்பவர்கள்- மகாலிங்கத்தை குல தெய்வமாக வழிபடலாம். இல்லையா, திருச்செந்தூர் முருகனை வணங்கலாம். பொதுவாக குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்று கூறுவர். ஆனால் திருச்செந்தூரில் நீர்நிலைக்கு (கடல்) அருகில் உள்ள திருத்தலத்தில் முருகப் பெருமான் வீற்றுள்ளதும், இந்த கோவிலுக்கு தனிச் சிறப்பை அளிக்கிறது.

    மேலும், திருச்செந்தூர் சம்ஹார ஸ்தலமாகவும் விளங்குகிறது. எனவே, தீய சக்தியை மட்டுமின்றி, மனிதர்கள் மனதில் இருக்கும் அளவுக்கு மீறிய ஆசை, கோபம், காமம், ஆகியவற்றையும் அழிக்கக் கூடிய சக்தி இந்த திருத்தலத்திற்கு உள்ளது.

    இது போன்ற சூழலில் இருப்பவர்கள் திருச்செந்தூருக்கு ஆண்டுக்கு ஒரு முறை சென்று வருவதுடன், திருச்செந்தூர் முருகனை குல தெய்வமாகவும் ஏற்றுக் கொள்ளலாம். திருச்செந்தூர்- குருவுக்கும், செவ்வாய்க்கும் உரிய ஸ்தலமாகவும் விளங்கும் இடம் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×