search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "herb garden"

    • புதிய கட்டிடத்தில் போலீஸ் நிலையம் செயல்பட்டாலும் அதனை சுற்றி உள்ள சுமார் 3 ஏக்கர் அரசு நிலம் முட்புதர்களாக கிடந்தன.
    • விவசாயிகள் போன்று தினந்தோறும் தோட்டத்தை பார்வையிட்டு கீரைகள், செடிகளுக்கு தேவையான தண்ணீர் பாய்ச்சுகின்றனர்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழகம்-ஆந்திரா எல்லையில் ஆர்.கே.பேட்டை அருகே உள்ளது பொதட்டூர்பேட்டை. மாவட்ட எல்லையின் கடைசி போலீஸ்நிலையம் இங்கு அமைந்து உள்ளது. ஒரு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 10 போலீசார் பணியாற்றி வருகிறார்கள்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொதட்டூர் போலீஸ் நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இந்த புதிய கட்டிடத்தில் போலீஸ் நிலையம் செயல்பட்டாலும் அதனை சுற்றி உள்ள சுமார் 3 ஏக்கர் அரசு நிலம் முட்புதர்களாக கிடந்தன.

    இதனை பயன் உள்ளதாக மாற்ற திட்டமிட்ட போலீசார் அந்த நிலத்தை சீரமைத்து முள்வேலி அமைத்து உள்ளனர். மேலும் மூலிகை மற்றும் காய்கறி தோட்டம் அமைத்து பராமரித்து வருகிறார்கள்.

    இந்த தோட்டத்தில் துளசி, கற்பூரவள்ளி, சிறியாநங்கை, பாகற்காய் , அருகம்புல், ஓமவல்லி, ஆடாதொடை, தூதுவளை, எலுமிச்சை, கருந்துளசி, வாழை, முருங்கை, வள்ளிக்கிழங்கு, கொய்யா, மாமரம், தென்னை மரம், முசுமுசுக்கை, கீழாநெல்லி, வெண்டைக்காய், கத்தரி போன்ற பல்வேறு வகையான மூலிகை, காய்கறி செடிகளையும் உடலுக்கு ஆரோக்கியம் தரும் பொன்னாங்கண்ணி, பசலை, முளைக்கீரை, மணத்தக்காளி, வல்லாரை போன்ற பலவகைக் கீரைகளையும் வளர்த்து வருகின்றனர். இதனால் தற்போது பொதட்டூர் பேட்டை போலீஸ்நிலையத்தை சுற்றிலும் ரம்மியமாக காட்சி அளிக்கிறது. சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவின் மேற்பார்வையில் போலீசார் தங்களது அன்றாட கடமைகளுடன் இந்த காய்கறி, மூலிகை தோட்டத்தையும் சிறப்பாக கவனித்து வருகிறார்கள். விவசாயிகள் போன்று தினந்தோறும் தோட்டத்தை பார்வையிட்டு கீரைகள், செடிகளுக்கு தேவையான தண்ணீர் பாய்ச்சுகின்றனர்.

    போலீசாரின் இந்த முயற்சிக்கு திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண், திருத்தணி போலீஸ் துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ் ஆகியோர் பொதட்டூர்பேட்டை காவல் நிலையத்தில் பணிபுரியும் போலீசாரை பாராட்டி உள்ளனர்.

    இதனால் இந்த போலீஸ் நிலையத்துக்கு புகார் அளிக்கவும், விசாரணைக்கு வருபவர்களும் தங்கள் பிரச்சினைகளை மறந்து, அந்தத் தோட்டத்தை ஆர்வத்துடன் சுற்றிப்பார்த்து செல்கின்றனர். மேலும், தங்களுக்குத் தேவையான மூலிகைகளை அனுமதிபெற்று பறித்துச்செல்கின்றனர்.

    • 5 வகையான பழ செடிகள் அடங்கிய பழ தொகுப்பு ஆகியவை மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.
    • மாடித்தோட்ட கிட் 50 சதவீதம் மானியத்தில் ரூ.750-க்கு வழங்கப்படுகிறது.

    மடத்துக்குளம் :

    வீடுகளில் மூலிகைத்தோட்டம் அமைக்க மாடித்தோட்டம் கிட் தோட்டக்கலைத்துறை சார்பில் மானிய விலையில் வழங்கப்படுகிறது. இது குறித்து மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சுரேஷ்குமார் கூறியதாவது :- மடத்துக்குளம் வட்டாரத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் காய்கறி விதைகள் அடங்கிய விதைத்தொகுப்பு, 5 வகையான பழ செடிகள் அடங்கிய பழ தொகுப்பு ஆகியவை மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் தற்போது மூலிகை தோட்டம் அமைக்க 10 வகையான மூலிகை செடிகள் அடங்கிய மாடித்தோட்ட கிட் மானிய விலையில் வழங்கப்படுகிறது.

    தூய்மையான காற்றை சுவாசிக்கவும், உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் நாட்டு மருத்துவத்தை ஊக்குவிக்கும் வகையிலும், மருத்துவ தாவரங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் அழிந்து வரும் மருத்துவ தாவரங்களை பாதுகாக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    மாநில தோட்டக்கலை வளர்ச்சித்திட்டத்தின் கீழ் நடப்பாண்டு வீடுகளில் மூலிகை தோட்டம் அமைக்க, தமிழக அரசு தோட்டக்கலைத்துறை வாயிலாக 10 வகையான மூலிகைச்செடிகள் அடங்கிய மாடித்தோட்ட கிட் 50 சதவீதம் மானியத்தில் ரூ.750-க்கு வழங்கப்படுகிறது.இதில் வழங்கப்படும் துளசி, இருமல், சளி, வயிற்றுப்புழு நீக்கம் உள்ளிட்ட பயன்பாட்டிற்கும், கற்பூரவல்லி, சளி, இருமல், ஆஸ்துமா, வயிற்றுப்புண், அஜீரணப் பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுகிறது.திருநீற்றுப்பச்சை, வயிறு தொடர்பான நோய்களுக்கு சுவையின்மை, வாந்தி, குடல் புண் ஆகியவற்றை போக்குகிறது.ஆடாதொடை, இருமல், சளி, தொண்டைக்கட்டு, இளைப்பு, வாந்தி, விக்கல் ஆகிய நோய்களுக்கு தீர்வாகவும், வல்லாரை, நினைவாற்றலைப்பெருக்கவும், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.திப்பிலி, இருமல், இரைப்பு அனாமிகா, சுவையின்மை பொருமல், தலைவலி, நீரேற்றம், தொண்டை நோய்கள் நீங்கும்.

    அமுக்கிராக்கிழங்கு, பசியை உண்டாக்குதல், தோல் நோய்கள் ஆகியவற்றுக்கும், பிரண்டை, வயிற்றுப்புண்ணை ஆற்றும். பசியை உண்டாக்கும். எலும்புகளை வலுப்பெறச்செய்யும் திறன் உள்ளதாகும். கற்றாழை, குடல் புண்ணை ஆற்றவும், மூலம் பவுத்திரம் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வாகவும், கீழாநெல்லி, சர்க்கரை நோயை கட்டுப்படுத்தவும், நாக்கு வறட்சி, தாகம் ஆகியவற்றை போக்கும் மருந்தாக சித்தமருத்துவத்தில் பயன்படுகிறது.இவ்வாறு 10 வகையான மூலிகைத்தோட்ட தொகுப்பில் ஒவ்வொரு வகையில் தலா 2,10 செடி வளர்ப்பு பைகள், 10 தென்னை நார் கட்டிகள், மண் புழு உரம், 4 கிலோ மற்றும் தொழில் நுட்ப புத்தகம் வழங்கப்படுகிறது.நிலப்பகுதி மற்றும் வீடுகளிலுள்ள மாடிப்பகுதியில் மூலிகைத்தோட்டம் அமைக்கலாம். பையில் தென்னை நார் கட்டியை வைத்து 10 லிட்டர் நீர் ஊற்ற வேண்டும்.

    ஒரு பைக்கு 400 கிராம் மண்புழு உரம் கலந்து, தென்னை நார் கழிவுடன் கலந்த உரத்தை செடிகள் வளர்ப்பதற்கான பைகளில் நிரப்பி 7 முதல் 8 நாட்கள் வைத்திருந்து ஒரு பையில் ஒரே வகையான இரண்டு மூலிகைச்செடிகள் நட வேண்டும்.பிறகு பூ வாளி கொண்டு நீர் ஊற்ற வேண்டும். கோடை காலத்தில் ஒரு நாளைக்கு இருமுறை நீரூற்ற வேண்டும்.மூலிகை தோட்ட தொகுப்பு பெற மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

    மேலும் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் தாமோதரன் 96598 38787 என்ற எண்ணிலும், நித்யராஜ் 84890 95995 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்றனர். 

    • கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராமங்களான சுள்ளிப்பாளையம், குப்பிரிக்கபாளையம் ஆனங்கூர், சிறுநல்லிக்கோவில், வடகரையாத்தூர் ஆகிய கிராமங்களுக்கு மட்டும் மூலிகை தோட்டம் அமைக்க ரூ.750 மானிய விலையில் இடுபொருட்கள் வழங்கப்பட உள்ளது.
    • இடுபொருட்கள் 10 வகையான மூலிகைச் செடிகள் வழங்கப்படுகிறது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை வட்டார தோட்டக்கலைத் துறையின் மூலம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராமங்களான சுள்ளிப்பாளையம், குப்பிரிக்கபாளையம் ஆனங்கூர், சிறுநல்லிக்கோவில், வடகரையாத்தூர் ஆகிய கிராமங்களுக்கு மட்டும் மூலிகை தோட்டம் அமைக்க ரூ.750 மானிய விலையில் இடுபொருட்கள் வழங்கப்பட உள்ளது.

    இடுபொருட்கள் விபரம்(1 நபருக்கு): 10 வகையான மூலிகைச் செடிகள் (20எண்கள்), செடி வளர்ப்பு பைகள்-10, தென்னை நார்க்கட்டி-10 கிலோ, மண்புழு உரம் -4 கிலோ வழங்கப்படுகிறது. மூலிகை தோட்டம் அமைக்க மானியம் பெற தேவைப்படும் ஆவணங்கள்: ஆதார் அட்டை நகல் -1, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-2. எனவே தேவைப்படும் நபர்கள் கபிலர்மலை வட்டார தோட்டக்கலை துறை அலுவலகத்தில் ஆவணங்களை கொடுத்து பதிவு செய்து கொள்ள வேண்டும் என கபிலர்மலை வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

    ×