search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "governor palace"

    கவர்னர் மாளிகையில் ஒரு போதும் பணபரிவர்த்தனை நடந்தது கிடையாது என்றும் இணைப்பு பாலமாக மட்டுமே செயல்படுவதாகவும் முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு கவர்னர் கிரண்பேடி பதில் அளித்துள்ளார். #Kiranbedi #Narayanasamy
    புதுச்சேரி:

    கார்ப்பரேட் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் சமூக பங்களிப்பு நிதியை முறைகேடாக கவர்னர் மாளிகை வசூலித்ததாக முதல்- அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டியிருந்தார்.

    முதல்-அமைச்சர் நாராயணசாமியின் குற்றச்சாட்டிற்கு, கவர்னர் கிரண்பேடி பதில் அளித்தார். அதில் கவர்னர் மாளிகையில் எந்தவித பணபரிவர்த்தனையும் நடைபெறவில்லை என்று கூறினார்.

    இதனையடுத்து நேற்றைய தினம் முதல்-அமைச்சர் நாராயணசாமி மீண்டும் பேட்டி அளித்தார். அப்போது அவர் கவர்னர் மாளிகையில் இருந்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பை வெளியிட்டு அதில் சமூக பங்களிப்பு நிதி பெற கவர்னர் மாளிகையில் 2 அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டினார்.

    மேலும், சமூக பங்களிப்பு நிதி வசூல் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி பெற்று கவர்னர் கிரண்பேடி மீது நீதி விசாரணை நடத்தப்படும் என்றும் கூறினார்.

    இதற்கு பதில் அளிக்கும் வகையில் கவர்னர் மாளிகையில் இருந்து ஒரு செய்திக் குறிப்பு வெளியிடப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-


    முதல்-அமைச்சர் நாராயணசாமி அரசு அலுவலகங்கள் நிதி பரிமாற்றங்கள் இல்லாமல் சேவை செய்ய முடியும் என்பதை நம்பகூட முடியாமல் இருக்கலாம். புதர்களை கொண்ட 86 கி.மீ. உள்ள 23 கால்வாய்கள் நன்கொடையாளர்கள் மூலம் எந்திரத்தைக் கொண்டு தூர்வாரப்பட்டது. இதை செய்ய அரசுக்கு ரூ.10 கோடிக்கு மேல் செலவு பிடித்திருக்கும். இது அரசுக்கு ஒரு பைசா கூட செலவு இல்லாமல் சமூகத்தினால் செயல்படுத்தப்பட்டுள்ளது.

    இது அவர்களுக்கு நன்றி செலுத்தி கொண்டாடப்பட வேண்டிய தருணம். ஒரு வேளை முதல்-அமைச்சர் இவ்வளவு பெரிய சமுதாய ஆதரவை அரசு சேவைக்காக ஒரு போதும் அனுபவத்தில் கொண்டிருக்கமாட்டார் போலும். நீண்ட நாள் நீர் மிகு புதுவையாக மாற்றம் காண இது ஒரு எழுதப்படுகின்ற சரித்திரம்.

    நன்கொடையாளர்களில் பலர் அடுத்த ஆண்டு முதல் ஆண்டு பராமரிப்பை ஏற்றுக்கொள்ள தயாராகி வருகின்றனர். இது அவர்களுக்கு சொந்த செலவையே தரும். புதுவை இனி எப்போதும் நீர் மிகுந்தும் வளமாகவும், பசுமையாகவும் காணப்படும்.

    இதற்காக கவர்னர் மாளிகையில் ஒரு போதும் பணபரிவர்த்தனை நடந்தது கிடையாது. ஆனால், நமது முதல்-அமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டை முன் வைக்கிறார். பொய் சொல்வது பாவம் என்பதை அவர் உணரவில்லை. அவர் கூறிய குற்றச்சாட்டுக்கு மாறாக நாங்கள், கவர்னர் மாளிகைக்கு வரும் பரிசு பொருட்களை பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு தினமும் கொடுத்து வருகிறோம்.

    இதில் கூட முதல்- அமைச்சர் பொய் கூறுவது வருத்தமளிக்கிறது. இவை அனைத்தும் என்னுடைய அறிவுறுத்தல்களின் படியே நடக்கிறது. இங்கு வாங்கப்படுகின்ற தனிப்பட்ட பரிசு முதற்கொண்டு அனைத்தும் திரும்ப வெளியே வழங்கப்படுகிறது. அல்லது கலைப் பொருட்களாக பாவிக்கப்படுகிறது.

    கவர்னர்மாளிகை தேவையானவர்களுக்கும், நன்கொடையாளர்களுக்கும் இடையே இணைப்பு பாலமாக செயல்படுகிறது. அரசின் நிதி பற்றாக்குறையை போக்க இது ஒரு சிறந்த வழியாக விளங்குகிறது.

    பொருளாதாரம் படைக்கப் பெற்றவர்களுக்கும், பொருளாதாரத்தில் வாடுபவர்களுக்கும் இடையே கவர்னர் மாளிகை தொடர்ந்து ஒரு பாலமாகவே செயல்படும். ஒரு வேளை, முதல்- அமைச்சர் சமுதாயமும், அரசு அலுவலர்களும் ஒருங்கிணைந்து மேற்கொள்ளும் ஒரு நேர்மறை சேவைக்கான கலாச்சார சந்தர்ப்பத்தை கடந்த கால அனுபவத்தில் பெற்றிருக்கமாட்டார் போலும்.

    இதை கற்றுக்கொள்ள இன்னும் இது தாமதமில்லை. முதல்-அமைச்சர் அவருடைய மக்களுக்காக தன்னை மாற்றி கொள்ள வேண்டுகிறோம்.

    இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. #PondicherryGovernor #Kiranbedi #Narayanasamy
    கவர்னர் பன்வாரிலால் புரோகித் தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் கட்டணத்தை செலுத்தியே உணவு வகைகளை பெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. #TNGovernor #Banwarilalpurohit
    சென்னை:

    சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை இதுவரை இல்லாத அதிரடி மாற்றங்களை சந்தித்து வருகிறது.

    தமிழகத்தின் புதிய கவர்னராக கடந்த அக்டோபர் மாதம் 6-ந்தேதி பதவி ஏற்ற பன்வாரிலால் புரோகித் இந்த அதிரடி மாற்றங்கள் ஒவ்வொன்றையும் அரங்கேற்றி வருகிறார்.

    பன்வாரிலால் சென்னை கவர்னர் மாளிகைக்கு வந்ததும் சிக்கனத்துக்குதான் முதலிடம் கொடுத்தார். தேவையில்லாத இடங்களில் குளிர்சாதன பெட்டிகள் இருக்க கூடாது என்று உத்தரவிட்டார். உடனடியாக ஏராளமான ஏ.சி. பெட்டிகள் அகற்றப்பட்டன.

    அதுபோல பழைய குண்டு பல்புகளை மாற்றி எல்.இ.டி. விளக்குகளை பொருத்த உத்தரவிட்டார். இதன் காரணமாக கிண்டி கவர்னர் மாளிகையில் மின்சார கட்டண செலவு கணிசமான அளவுக்கு குறைந்தது.

    முன்பெல்லாம் கவர்னர் மாளிகையில் சாப்பாடு செலவு மிக கடுமையாக இருக்கும். இதனால் 2015-2016-ம் ஆண்டு கவர்னர் மாளிகை செலவு ரூ. 1.33 கோடியாக இருந்தது. 2016-2017-ம் ஆண்டு அது ரூ.1.43 கோடியாக உயர்ந்தது.

    கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை மட்டும் செலவான தொகை ரூ.1.68 கோடி. அக்டோபர் மாதம் கவர்னராக பொறுப்பு ஏற்ற கவர்னர் பன்வாரிலால் இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார்.

    கவர்னர் மாளிகையில் உணவு விநியோகம், மின்சாரம், சுற்றுப்பயணம், பராமரிப்பு ஆகியவற்றில் சிக்கனத்தை கடைபிடிக்க முடிவு செய்தார். அதன்படி கவர்னர் மாளிகையில் பெறப்படும் ஒவ்வொரு உணவுக்கும் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற புதிய நடைமுறையை கொண்டு வந்துள்ளார்.

    அதன்படி காலை உணவுக்கு கட்டணமாக ரூ.50 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மதியம் மற்றும் இரவு உணவுக்கு தலா ரூ.80 என்று கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கவர்னர் தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் இந்த கட்டணத்தை செலுத்தியே உணவு வகைகளை பெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    கவர்னரின் உறவினர்கள், நண்பர்கள் சென்னை வந்தால் கவர்னர் மாளிகையில் தங்குகிறார்கள். அவர்கள் தங்குவதற்கும், உணவு சாப்பிடுவதற்கும் கவர்னர் பன்வாரிலால் தனது சொந்த பணத்தில் இருந்து கட்டணத்தை கொடுத்து விடுவதாக தெரிய வந்துள்ளது.

    டெல்லி மற்றும் வேறு மாநிலங்களில் இருந்து வரும் அரசுத்துறை உயர் அதிகாரிகளுக்கு மட்டுமே கவர்னர் மாளிகையில் உணவை கட்டணமின்றி பெற்றுக் கொள்ள விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மற்றபடி கவர்னர் மாளிகை சமையல் கூடத்தில் இருந்து வெளிவரும் ஒவ்வொரு உணவுக்கும் கண்டிப்பாக கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று கவர்னர் பன்வாரிலால் உத்தரவிட்டுள்ளார்.

    கவர்னர் மாளிகையில் உள்ளவர்கள் உணவு வகைகள் வாங்கி சாப்பிடும்போது அவர்களுக்குரிய பில் உடனுக்குடன் வழங்கப்படுகிறது. இந்த சிக்கன நடவடிக்கை காரணமாக மாளிகையின் உணவு விநியோக செலவு மிக மிக குறைந்து விட்டது.


    மின்சாரம், உணவு போன்று தனது சுற்றுப்பயணத்தையும் கவர்னர் பன்வாரிலால் மிக மிக எளிமையாக்கி உள்ளார். இதற்கு முன்பு கவர்னராக இருந்தவர்கள் டெல்லிக்கு செல்லும்போது விமானத்தில் முதல் வகுப்பில் பயணம் செய்வார்கள். ஆனால் கவர்னர் பன்வாரிலால் சாதாரண வகுப்பு பயணத்தை மேற்கொள்கிறார்.

    அதுபோல ரெயில்களில் சொகுசு பெட்டிகளில்தான் கவர்னர்கள் செல்வதுண்டு. ஆனால் பன்வாரிலால் முதல் வகுப்பு குளிர்சாதன பெட்டியை தேர்வு செய்து பயணம் செய்கிறார்.

    பெரும்பாலும் கவர்னர்கள் வெளிமாவட்டத்துக்கு செல்லும் போது இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்களை பயன்படுத்துவது உண்டு. அதற்கான கட்டணத்தை கவர்னர் மாளிகையில் இருந்து விமானப்படை கொடுப்பார்கள்.

    ஆனால் கவர்னர் பன்வாரிலால் ஹெலிகாப்டர் பயணத்தை முழுமையாக நிராகரித்துள்ளார். இதனால் அத்தகைய செலவுகள் எதுவும் ஏற்படவில்லை.

    இதற்கிடையே கவர்னர் மாளிகையில் உள்ள பராமரிப்பிலும் கவர்னர் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். இதனால் அதற்கான மாத செலவும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

    கவர்னர் பன்வாரிலாலின் இத்தகைய நடவடிக்கைகளின் காரணமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் கடந்த மார்ச் மாதம் வரை 6 மாதங்களுக்கு வெறும் ரூ.30 லட்சம்தான் செலவாகி உள்ளது. பல லட்சம் ரூபாயை கவர்னர் பன்வாரிலால் தனது சிக்கனத்தால் மிச்சப்படுத்தி கொடுத்துள்ளார். #TNGovernor #Banwarilalpurohit
    தமிழக கவர்னராக பன்வாரிலால் புரோகித் பதவி ஏற்ற பின், அவரது சிக்கன நடவடிக்கையால் கவர்னர் மாளிகை செலவு பெருமளவு குறைந்து உள்ளது.
    சென்னை:

    தமிழக கவர்னராக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், 30-ந் தேதி பன்வாரிலால் புரோகித் பதவி ஏற்றார். அவர் பதவியேற்ற பின், கவர்னர் மாளிகையில், பெருமளவு சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளார். அவர் தனது சுற்றுப்பயணத்தின்போது, கூடுமானவரை ரெயில்களில் பிரயாணம் செய்கிறார். விமானத்தில் பயணம் செய்வது என்றால், அரசு விமானத்தையோ, ஹெலிகாப்டரையோ எடுத்து பயணிப்பது இல்லை. சாதாரண விமானத்தில் மற்ற பயணிகளோடு பயணியாக பயணம் செய்து வருகிறார். கவர்னர் மாளிகையின் செலவுகளிலும், சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளார்.

    முன்னதாக 2015-2016-ல் கவர்னர் மாளிகையின் உணவு செலவு மற்றும் விருந்தினர் செலவாக 29 லட்சத்து 24 ஆயிரத்து 325 ரூபாயும், 2016-2017-ல் 44 லட்சத்து 27 ஆயிரத்து 297 ரூபாயும், 1.4.2017 முதல் பன்வாரி லால் புரோகித் பதவி ஏற்கும் வரை அதாவது 30.9.2017 வரை 41 லட்சத்து 74 ஆயிரத்து 733 ரூபாயும் செலவாகி இருந்தது.

    இதே போன்று, இதே காலகட்டங்களில் முறையே போக்குவரத்து செலவாக 25 லட்சத்து 31 ஆயிரத்து 836 ரூபாயும், 21 லட்சத்து 46 ஆயிரத்து 613 ரூபாயும், 80 லட்சத்து 55 ஆயிரத்து 405 ரூபாயும், தோட்டச் செலவாக 9 லட்சத்து 97 ஆயிரத்து 798 ரூபாயும், 15 லட்சத்து 6 ஆயிரத்து 823 ரூபாயும், 11 லட்சத்து 98 ஆயிரத்து 780 ரூபாயும், பெட்ரோல், டீசல் செலவாக 5 லட்சத்து 26 ஆயிரத்து 263 ரூபாயும், 4 லட்சத்து 92 ஆயிரத்து 93 ரூபாயும், 1 லட்சத்து 98 ஆயிரத்து 146 ரூபாயும், துப்புரவு மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக 5 லட்சத்து 13 ஆயிரத்து 125 ரூபாயும், 2 லட்சத்து 48 ஆயிரத்து 872 ரூபாயும், 3 லட்சத்து 24 ஆயிரத்து 625 ரூபாயும், மின் கட்டணமாக 58 லட்சத்து 88 ஆயிரத்து 755 ரூபாயும், 55 லட்சத்து 14 ஆயிரத்து 797 ரூபாயும், 28 லட்சத்து 56 ஆயிரத்து 737 ரூபாயும் செலவாகி இருந்தது.

    ஆக மொத்தத்தில் இந்த இனங்களில் 2015-2016-ல் ஒரு கோடியே 33 லட்சத்து 82 ஆயிரத்து 102 ரூபாயும், 2016-2017-ல் 1 கோடியே 43 லட்சத்து 36 ஆயிரத்து 495 ரூபாயும், 1.4.2017 முதல் 30.9.2017 வரை 1 கோடியே 68 லட்சத்து 8 ஆயிரத்து 426 ரூபாயும் செலவாகி இருந்தது.

    பன்வாரிலால் புரோகித் பதவி ஏற்ற உடன் மேற்கொண்ட சிக்கன நடவடிக்கைகளால் 1.10.2017 முதல் 31.3.2018 வரை உணவு மற்றும் விருந்தினர் செலவாக 9 லட்சத்து 22 ஆயிரத்து 673 ரூபாயும், போக்குவரத்து செலவாக 4 லட்சத்து 74 ஆயிரத்து 955 ரூபாயும், தோட்ட செலவாக 2 லட்சத்து 83 ஆயிரத்து 335 ரூபாயும், பெட்ரோல் டீசல் செலவாக 1 லட்சத்து 86 ஆயிரத்து 407 ரூபாயும், துப்புரவு மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக 64 ஆயிரத்து 906 ரூபாயும், மின்கட்டணமாக 10 லட்சத்து 99 ஆயிரத்து 145 ரூபாய் மட்டுமே செலவாகி உள்ளது. ஆக இவை அனைத்துக்கும் சேர்த்து மொத்தத்தில், 30 லட்சத்து 31 ஆயிரத்து 421 ரூபாய் செலவாகி உள்ளது.

    இந்த செலவுகளை இனிவரும் காலகட்டங்களில் மேலும் குறைக்க வேண்டும் என்று கவர்னர் உத்தரவிட்டுள்ளார். 
    ×