search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Golden Robe"

    • மண்டல பூஜையின் போது சபரிமலையில் ஐயப்ப சுவாமிக்கு தங்க அங்கி அணிவிக்கப்படும்.
    • மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வருகிற 30-ந்தேதி மாலை திறக்கப்படுகிறது.

    திருவனந்தபுரம்:

    மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்தமாதம் 16-ந்தேதி திறக்கப்பட்டது. இதையடுத்து மாலையணிந்து விரதமிருக்கும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் தினமும் சபரிமலைக்கு சென்று வருகின்றனர்.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் திரண்டனர். இதனால் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி அவதிக்குள்ளாகினர். இந்த விவகாரத்தில் கேரள ஐகோர்ட்டு தலையிட்டது. சபரிமலைக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்யவும், கூட்ட நெரிசலில் சிக்கி அவதிப்படாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு ஐகோர்ட் உத்தரவிட்டது.

    ஐகோர்ட்டு வழங்கிய ஆலோசனைகளை அமல்படுத்தியதால் சபரிமலையில் ஏற்பட்டிருந்த நெரிசலுக்கு தீர்வு காணப்பட்டது. அதனைத்தொடர்ந்து பக்தர்களின் வருகை சற்று குறைந்து காணப்பட்டது.

    மண்டல பூஜைக்கு சில நாட்களே இருப்பதால், பக்தர்கள் வருகை மீண்டும் அதிகரித்திருக்கிறது. மண்டல பூஜையின் போது சபரிமலையில் ஐயப்ப சுவாமிக்கு தங்க அங்கி அணிவிக்கப்படும்.

    ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அந்த அங்கி மண்டல பூஜையன்று ஐயப்பனுக்கு அணிவிக்கப்படுகிறது. இதற்காக தங்க அங்கி ஊர்வலமாக கொண்டுவரப்படுகிறது.

    தங்க அங்கி ஊர்வலம் ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து நாளை (23-ந்தேதி) காலை 7 மணிக்கு தொடங்குகிறது. தங்க அங்கி ஊர்வலம் வரக்கூடிய இடங்களில் பல்வேறு கோவில்களுக்கு செல்கிறது. அப்போது தங்க அங்கியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்கிறார்கள்.

    தங்க அங்கி ஊர்வலம் வருகிற 26-ந்தேதி பம்பைக்கு வருகிறது. பம்பை கணபதி கோவிலில் பக்தர்கள் தங்க அங்கியை தரிசனம் செய்யலாம். அதன்பிறகு தங்க அங்கி ஊர்வலம் நீலிமலை, அப்பாச்சிமேடு, சபரிபீடம் வழியாக சன்னிதானத்தை நோக்கி செல்கிறது.

    மாலை 5 மணிக்கு சரங்குத்திக்கு ஊர்வலம் வந்தடையும். அங்கிருந்து சன்னிதானத்துக்கு ஊர்வலம் புறப்பட்டு செல்லும். சன்னிதானத்தில் தங்க அங்கியை தந்திரி மற்றும் மேல்சாந்தி ஆகியோர் பெற்றுக்கொண்டு கோவிலுக்குள் எடுத்துச் செல்வார்கள்.

    அதன்பிறகு ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும். மறுநாள்(27-ந்தேதி) வரை அய்யப்பன் தங்க அங்கியில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். சபரிமலையில் 27-ந்தேதி மண்டல பூஜை நடைபெறுகிறது.

    மண்டல பூஜை விழா முடிந்து அன்று இரவு 11 மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகிறது. பின்பு மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வருகிற 30-ந்தேதி மாலை திறக்கப்படுகிறது. ஜனவரி 15-ந்தேதி மகரவிளக்கு பூஜை நடைபெறும்.

    ×