search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Digital Technology"

    • நெல்லை மாநகர பகுதியில் தற்போது ஓரளவு குடிநீர் தட்டுப்பாடு குறைந்துள்ளது.
    • பாளை மண்டலத்தில் சட்ட விரோத குடிநீர் இணைப்புகள் பெரும் அளவில் கண்டுபிடிக்கப்பட்டன.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி யில் உள்ள 4 மண்டலங்களிலும் சுமார் 5 லட்சம் பேர் வசித்து வருகின்றனர்.

    குடிநீர் தட்டுப்பாடு

    இங்குள்ள மக்களுக்கு தினமும் சராசரியாக 75 முதல் 79 எம்.எல்.டி. குடி தண்ணீர் தேவைப்படுகிறது. வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆறு மாநகரப் பகுதியில் ஓடி தூத்துக்குடி மாவட்டத்தை அடைகிறது.

    இதன் காரணமாக மாநகரப் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு என்பது இருக்கக் கூடாது. ஆனால் ஆற்றின் கரையை ஒட்டி அமைந்திருக்கும் கொக்கிரகுளம் பகுதியில் கூட வாரம் ஒரு முறை தான் தண்ணீர் கிடைக்கிறது என்ற நிலைதான் தற்போது நெல்லை மாநகராட்சியில் நிலவி வருகிறது.

    அரியநாயகிபுரம் திட்டம்

    மொத்த தேவையான 79 எம்.எல்.டி. தண்ணீருக்கு இதுவரை பழைய திட்டத்தின்படி 47 முதல் 48 எம்.எல்.டி. குடிநீர் மட்டுமே மாநகரப் பகுதி மக்களுக்கு கிடைத்து வந்தது.கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவரப்பட்ட அரியநாயகிபுரம் திட்டத்தின் மூலம் இந்த குடிநீர் தேவை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    இதன் மூலம் தற்போது 65 எம்.எல்.டி. தண்ணீர் கிடைப்பதால் மாநகர பகுதியில் ஓரளவு குடிநீர் தட்டுப்பாடு குறைந்துள்ளது. குறிப்பாக நெல்லை, தச்சநல்லூர், மேலப்பாளையம் மண்ட லங்களில் சமீப காலமாக குடிநீர் தட்டுப்பாடு பெரு மளவுக்கு குறைந்துள்ளது.

    பாளை மண்டலம்

    ஆனால் பாளை மண்ட லத்தில் மட்டும் குறிப்பாக அந்த மண்டலத்துக்குட்பட்ட விரிவாக்க பகுதிகளில் மட்டும் குடிநீர் தட்டுப்பாடு என்பது இன்னும் தீரவில்லை.

    இதற்காக மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்.

    ஆனாலும் தொடர்ந்து அந்த மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு இருந்து கொண்டு தான் இருக்கிறது.

    மின்மோட்டார்கள்

    இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் சிலர் கூறியதாவது:-

    பாளை மண்டலத் துக்குட்பட்ட விரிவாக்க பகுதிகளில் பெரும்பாலான வீடுகளில் குடிநீரை மின் மோட்டார்கள் மூலம் உறிஞ்சி எடுக்கிறார்கள். இது தொடர்பாக பலமுறை மனு அளித்து இருக்கிறோம்.

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சட்ட விரோத குடிநீர் இணைப்புகள் பெரும் அளவில் பாளை மண்டலத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. 2 நாட்களுக்கு முன்பு குடிநீர் உறிஞ்சிய 59 மின் மோட்டார்கள் அந்த மண்டலத்தில் மட்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    செயற்கை தட்டுப்பாடு

    இந்த பகுதியில் செயற்கையாக தான் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுத்தப்படுகிறது. ஒரு சில குடிநீர் வால்வு ஆபரேட்டர்கள் அரசியல் பிரமுகர்களுக்கு சாதகமாக செயல்பட்டு அவர்களுக்கு தேவையான நபர்கள் உள்ள தெருக்களுக்கு மட்டும் தண்ணீர் திறந்து விடுகின்றனர் என்ற குற்றச்சாட்டு பரவலாக இருந்து வருகிறது.

    எனவே செயற்கை குடிநீர் தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் கண்டுபிடித்து மாநகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இந்த பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க முடியும் என்று ஆதங்கமாக கூறினர்.

    இது தொடர்பாக கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்டபோது, பாளை பகுதியில் மின் மோட்டார்கள் மூலம் குடிநீர் உறிஞ்சப்படுவதாக தகவல் கிடைத்ததால் அங்கு சிறப்பு குழு மூலமாக அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதில் சுமார் 59 சட்ட விரோத மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலான பகுதிகளில் இது போன்ற செயற்கை குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்காக முழுமையாக டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் கம்ப்யூட்டர் மூலம் தண்ணீர் சப்ளை மேற்கொள்ள திட்டம் செயல்படுத்த உள்ளோம். முழுமையாக கம்ப்யூட்டர் மயமாக்கல் பணிகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு வார்டுக்கும் எத்தனை மணிக்கு தண்ணீர் திறந்து விடப்படும், எத்தனை மணிக்கு தண்ணீர் நிறுத்தப்படும், எவ்வளவு தண்ணீர் ஒரு வார்டுக்கு தேவை என்று அனைத்து விபரங்களும் கம்யூட்டரில் ஏற்றப்பட்டு அதன் மூலம் எவ்வித தட்டுப்பாடும் இன்றி குடிநீர் சப்ளை செய்ய ஒரு திட்டத்தை பரிசீலனை செய்து வருகிறோம்.

    இது தவிர பாளை மண்டலம் விரிவாக்கப் பகுதிகளில் மாற்று ஏற்பாடாக முறப்பநாட்டில் இருந்து வரும் குடிநீர் திட்டம் மூலமாக குடிநீர் சப்ளை செய்வதற்கு ஒரு திட்டம் பரிசீலனையில் உள்ளது.

    விரைவில் அந்தத் திட்டத்தை செயல்படுத்தினால் விரிவாக்கப் பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு குறைக்கப்படும். வால்வு ஆபரேட்டர்கள் குறித்து தொடர்ந்து புகார் வந்ததால் முருகேசன், மந்திரம் என்ற 2 பேரை வேறு இடத்துக்கு மாற்றம் செய்துள்ளோம். தொடர்ந்து வேறு எந்த பகுதியிலும் இது போல் புகார்கள் வந்தால் அங்கும் வால்வு ஆபரேட்டர்கள் மாற்றம் செய்யப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    உலகளவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் இந்தியா இரண்டாவது இடம் பிடித்துள்ளது. ஆய்வு குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    உலகில் தொழில்நுட்பங்களின் ஆதிக்கம் மெல்ல நம் வாழ்வியலை மாற்ற துவங்கியிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் உலக தொழில்நுட்ப சந்தையில் வெளியான பல்வேறு சாதனங்கள் நம் பணியை சுலபமாக்கும் என்றும் நேரத்தை மிச்சம் செய்யும் என்ற போர்வையில் நம் பழக்கவழக்கங்களை அடியோடு மாற்றிவிட்டன, சில இடங்களில் மெல்ல மாற்றி வருகின்றன. 

    இந்தியாவில் விலை குறைவாக கிடைக்கும் அனைத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பது அனைவரும் அறிந்திருக்கும் நிலையில், வியாபார மையங்கள் மற்றும் பெரும் நிறுவனங்களும் அறிந்து வைத்திருப்பதில் ஆச்சரியம் இருக்க முடியாது. அந்த வகையில் டிஜிட்டல் உலகில் விலை குறைவாகவோ அல்லது எளிதில் அனைவராலும் வாங்கக்கூடியதாகவும் வெளியிடப்படும் சாதனங்கள் நம் பயன்பாடுகளையும் கடந்து விற்பனையாகி வருகிறது.

    இவ்வாறு நம் தகவல் பரிமாற்றத்துக்கு அவசியமானதாக கண்டறியப்பட்ட தொலைபேசிகள், மொபைல் போன்களாகவும் பின் ஸ்மார்ட்போன், டேப்லெட் என உருவெடுத்து இன்று தகவல் பரிமாற்றத்தை கடந்து பல்வேறு பயன்களை இவை வழங்கி வருகின்றன. இந்தியாவில் மலிவு விலையில் துவங்கி அனைவருக்கும் ஏற்ற விலையில் ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்படுகிறது. 

    இந்நிலையில், ஸ்மார்ட்போன் பயன்பாடு குறித்த ஆய்வை சர்வதேச டிஜிட்டல் தரவு விநியோக தளமான லைம்லைட் நெட்வொர்க்ஸ் நடத்தியது. 2018-இல் டிஜிட்டல் வாழ்கைமுறையின் நிலை (The State of Digital Lifestyles - 2018) என்ற தலைப்பில் உலகம் முழுக்க நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 48% பேர் மொபைல் போன்களின் அடிமைகளாகி விட்டனர் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் கிடைத்திருக்கிறது.


    கோப்பு படம்

    உலக நாடுகளில் டிஜிட்டல் சாதனங்களுக்கு அடிமையானவர்கள் பட்டியலில் மலேசியா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் இருக்கிறது. உலகின் பத்து நாடுகளில் டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்துவோரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியா இரண்டாவது இடம் பிடித்து இருக்கிறது.

    இந்தியர்கள் அதிகம் சார்ந்து இருக்கும் டிஜிட்டல் சாதனங்களில் லேப்டாப் மற்றும் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்கள் இரண்டாவது இடம் பிடித்து இருக்கின்றது. ஆய்வில் கலந்து கொண்டவர்களில் 45% பேர் இந்த சாதனம் இன்றி ஒரு நாள் கூட இருக்க முடியாது என பதில் அளித்துள்ளனர். இது சர்வதேச அளவின் 33% விட 12 சதவிகிதம் அதிகம் ஆகும்.

    ஆய்வில் கலந்து கொண்ட இந்தியர்களில் 90% பேர் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் தங்களது வாழ்வில் நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளது. அனைத்து வித  டிஜிட்டல் தரவுகளையும் அதிகம் பயன்படுத்துவோர் பட்டியலில் உலகின் மற்ற நாடுகளை விட இந்தியர்கள் அதிகம் பயன்படுத்தி வருவதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

    இந்தியர்களில் 75% பேர் வாரத்தில் ஒருமுறையேனும் இசையை ஸ்ட்ரீம் செய்தோ அல்லது டவுன்லோடு செய்தோ பயன்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளனர். இதுவும் உலகின் மற்ற நாடுகளை விட அதிகம் என லைம்லைட் தெரிவித்துள்ளது. இத்துடன் திரைப்படங்களை டவுன்லோடு செய்து அவற்றை ஆஃப்லைனில் பார்ப்பதிலும் இந்தியர்கள் முதன்மையாக இருக்கின்றனர். மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியர்கள் 12 சதவிகிதம் அதிகமாக திரைப்படங்களை பார்த்து வருகின்றனர்.

    புகைப்படம்: நன்றி PIXABAY
    ×