search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "college students struggle"

    கொரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால் மெரினா கடற்கரையில் சட்ட விரோதமாக கூடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கமி‌ஷனர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

    சென்னை:

    தமிழக கல்லூரிகளில் மாணவர்களுக்கு நேரடி தேர்வு நடத்த கல்லூரி தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. இதையொட்டி மாணவர்களுக்கு கல்லூரிகளில் நேரடி தேர்வை நடத்த கூடாது மீண்டும் ஆன்லைனில் மட்டுமே தேர்வு நடத்த வேண்டும் எனக்கோரி மதுரை உள்பட பல இடங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இதைதொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த வரும்படி வாட்ஸ் ஆப், பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சிலர் அறிவிப்பு செய்து இருந்தனர். ஆனால் இந்த தகவல் உண்மைக்கு புறம்பானது என போலீசார் மறுத்தனர்.

    இது போன்று பொய்யான வதந்திகளை சமூக வலை தளங்களில் பரப்புவர்கள் மீது தகவல் தொழில் நுட்ப சட்டம் உள்பட இதர சட்டப்பிரிவுகள்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

    மெரினா கடற்கரை பகுதியில் எந்த விதமான போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த கூடாது என சென்னை ஐகோர்ட்டு உத்தரவும் அமலில் உள்ளது.

    கொரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால் மெரினா கடற்கரையில் சட்ட விரோதமாக கூடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கமி‌ஷனர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

    இதையொட்டி மெரினா கடற்கரையில் மயிலாப்பூர் துணை கமி‌ஷனர் தீஷா மிட்டல் தலைமையில் 6 உதவி கமி‌ஷனர்கள், 10 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 200 போலீசார் பாதுகாப்பு பணிக்கு குவிக்கப்பட்டனர்..

    மெரினாவில் இரண்டு போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ள காட்சி

    இதையொட்டி மெரினா கடற்கரையில் சந்தேகத்துக்குரிய வகையில் கூட்டமாக திரண்டவர்களை போலீசார் எச்சரித்து திருப்பி அனுப்பினர். மாணவர்கள் போராட்டம் அறிவிப்பு காரணமாக நிலைமை சீராகும் வரை மெரினா கடற்கரையில் போலீஸ் பாதுகாப்பு நீடிக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

    இதையும் படியுங்கள்...பேஸ்புக் காதலன் மீது ஆசிட் வீசிய இளம்பெண் கைது

    இந்த முறை செமஸ்டர் தேர்வுகளை நேரடியாக நடத்தினால் தேர்வு எழுதுவதும், தேர்ச்சி பெறுவதும் கடினம் என்று மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கல்லூரிகளில் நேரடி வகுப்புக்கு பதிலாக ஆன்லைன் மூலம் பாடம் கற்பிக்கப்பட்டது. ஆன்லைன் மூலமே செமஸ்டர் தேர்வும் நடைபெற்றது. ஆன்லைன் தேர்வுகளில் வினாத்தாள் ஆன்லைனில் அனுப்பப்பட்டு மாணவர்கள் வீட்டில் இருந்தே தேர்வு எழுதினர்.

    இப்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு பாடம் கற்பிக்கப்படுகிறது.

    மேலும் நவம்பர், டிசம்பர் மாதத்துக்கான செமஸ்டர் தேர்வுகள் விரைவில் தொடங்கவுள்ளன.

    இந்நிலையில் உயர்கல்வித்துறை, செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக நடத்தப்படும் என்று அறிவித்தது. ஆனால் இந்த முறை செமஸ்டர் தேர்வை நேரடியாக இல்லாமல் ஆன்லைனிலேயே நடத்த வேண்டுமென மாணவர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையே பெரும்பாலான மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் ஆதரிக்கின்றனர்.

    குறிப்பாக பொறியியல் கல்லூரிகள் நேரடி வகுப்புகளை நடத்தாமல் ஆன்லைன் வகுப்புகளையே நடத்தி வந்தன. நேரடி வகுப்புகள் துவக்கப்படவில்லை. நேரடி வகுப்புகளை நடத்தாமல் நேரடி தேர்வுகளை நடத்த அறிவித்திருப்பது கவலை அளிப்பதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

    மதுரை கலெக்டர் அலுவலகத்தில் கல்லூரி மாணவ-மாணவிகள் முற்றுகை

    அதாவது இந்த முறை செமஸ்டர் தேர்வுகளை நேரடியாக நடத்தினால் தேர்வு எழுதுவதும், தேர்ச்சி பெறுவதும் கடினம் என்று மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

    தற்போது சென்னை, மதுரை, புதுக்கோட்டை, சேலம், திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களில் கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் தேர்வு நடத்த வேண்டும் எனப் போராடி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட சில மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    எனவே தமிழக அரசு கல்லூரி மாணவர்களுக்கு இந்த முறை செமஸ்டர் தேர்வை ஆன்லைன் மூலம் நடத்தவும், மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை திரும்ப பெறவும் நல்ல முடிவு எடுத்து மாணவர்கள் நலன் காக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இதையும் படியுங்கள்...ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி மீண்டும் வீட்டுக் காவலில் அடைப்பு

    அரசு பஸ்களை கூடுதலாக இயக்கக்கோரி உளுந்தூர்பேட்டையில் கல்லூரி மாணவ- மாணவிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    உளுந்தூர்பேட்டை:

    விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான செங்குறிச்சி, பாதூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரியில் படித்து வருகின்றனர்.

    உளுந்தூர்பேட்டை பகுதியில் இருந்து கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் அரசு பஸ்கள் மூலம் விருத்தாசலம் கலைக்கல்லூரிக்கு சென்று வந்தனர். இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக அந்த பகுதியில் சரிவர அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் சரியான நேரத்தில் செல்ல முடியாமல் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.

    இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கல்லூரி மாணவர்கள் பலமுறை புகார் மனு கொடுத்தனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இந்தநிலையில் இன்று காலை உளுந்தூர்பேட்டை பஸ்நிறுத்தத்தில் விருத்தாசலம் கல்லூரிக்கு செல்வதற்காக 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பஸ்சுக்காக காத்திருந்தனர். ஆனால் அரசு பஸ்கள் எதுவும் அந்த வழியாக வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவர்கள் உளுந்தூர்பேட்டை பஸ்நிறுத்தம் அருகே உள்ள சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக வாகனங்கள் எதுவும் செல்லமுடியாமல் நீண்ட நேரம் அணிவகுத்து நின்றன.

    இதுகுறித்து தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் உளுந்தூர்பேட்டை பஸ்நிறுத்தம் வழியாக விருத்தாசலத்துக்கு அரசு பஸ்களை முறையாக இயக்க வேண்டும். மேலும் காலை மற்றும் மாலை நேரங்களில் கல்லூரி மாணவ, மாணவிகள் செல்வதற்கு வசதியாக அரசு பஸ்களை கூடுதலாக இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    அதற்கு போலீசார் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து மாணவர்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த திடீர் சாலைமறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் ½ மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #Tamilnews
    ×