search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Road picekt in Ulundurpet"

    அரசு பஸ்களை கூடுதலாக இயக்கக்கோரி உளுந்தூர்பேட்டையில் கல்லூரி மாணவ- மாணவிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    உளுந்தூர்பேட்டை:

    விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான செங்குறிச்சி, பாதூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரியில் படித்து வருகின்றனர்.

    உளுந்தூர்பேட்டை பகுதியில் இருந்து கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் அரசு பஸ்கள் மூலம் விருத்தாசலம் கலைக்கல்லூரிக்கு சென்று வந்தனர். இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக அந்த பகுதியில் சரிவர அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் சரியான நேரத்தில் செல்ல முடியாமல் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.

    இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கல்லூரி மாணவர்கள் பலமுறை புகார் மனு கொடுத்தனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இந்தநிலையில் இன்று காலை உளுந்தூர்பேட்டை பஸ்நிறுத்தத்தில் விருத்தாசலம் கல்லூரிக்கு செல்வதற்காக 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பஸ்சுக்காக காத்திருந்தனர். ஆனால் அரசு பஸ்கள் எதுவும் அந்த வழியாக வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவர்கள் உளுந்தூர்பேட்டை பஸ்நிறுத்தம் அருகே உள்ள சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக வாகனங்கள் எதுவும் செல்லமுடியாமல் நீண்ட நேரம் அணிவகுத்து நின்றன.

    இதுகுறித்து தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் உளுந்தூர்பேட்டை பஸ்நிறுத்தம் வழியாக விருத்தாசலத்துக்கு அரசு பஸ்களை முறையாக இயக்க வேண்டும். மேலும் காலை மற்றும் மாலை நேரங்களில் கல்லூரி மாணவ, மாணவிகள் செல்வதற்கு வசதியாக அரசு பஸ்களை கூடுதலாக இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    அதற்கு போலீசார் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து மாணவர்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த திடீர் சாலைமறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் ½ மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #Tamilnews
    ×