என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cauvery Delta Irrigation"

    • காவிரி டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 6,500 கன அடி வீதம் தண்ணீர் நீர்மின் நிலையங்கள் வழியாக காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    • அணையின் மொத்த கொள்ளளவு 124.80 அடியில் இருந்து நீர்மட்டம் 97.96 அடியாக சரிந்துள்ளது.

    சேலம்:

    கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு மற்றும் இரு மாநில எல்லை பகுதியில் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது.

    இந்நிலையில் கர்நாடக மாநில அரசு நேற்று கிருஷ்ண ராஜசாகர் அணை மற்றும் கபினி அணைகளில் இருந்து மொத்தம் 2,787 கன அடி உபரி நீர் திறந்துவிட்டது.

    தொடர்ந்து இன்று கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் அதே அளவு நீர் திறந்து விட்டுள்ளது. அதாவது கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 1,678 கன அடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. இந்த அணைக்கு நீர்வரத்து 3,502 கன அடியாக உள்ளது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 124.80 அடியில் இருந்து நீர்மட்டம் 97.96 அடியாக சரிந்துள்ளது.

    அதேபோல் கபினி அணையில் இருந்து 1,100 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த அணைக்கு நீர்வரத்து 4,223 கன அடியாக உள்ளது. அணையின் முழு கொள்ளளவு 84 அடியில் இருந்து 75.92 அடியாக சரிந்துள்ளது.

    இந்த அணைகளில் இருந்து திறந்து விடப்படுகிற தண்ணீர் முழுவதும் முறையாக தமிழக எல்லையில் உள்ள பிலிகுண்டு பகுதிக்கு வந்து சேருகிறதா? என மத்திய நீர்வளத்துதுறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    இதற்கிடையே மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. நேற்று முன்தினம் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 6,550 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 2,266 கன அடியாக சரிந்தது. இன்று நீர்வரத்து மேலும் குறைந்து வினாடிக்கு 670 கன அடி வீதம் தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

    மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 6,500 கன அடி வீதம் தண்ணீர் நீர்மின் நிலையங்கள் வழியாக காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    அணைக்கு வரும் நீர்வரத்தை விட திறப்பு அதிகமாக உள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் 46.54 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 45.90 அடியாக சரிந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்மட்டம் மேலும் குறைந்து 45.01 அடியானது.

    • ஆண்டுதோறும் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக ஜூன் மாதம் 12-ந்தேதி தண்ணீர் திறப்பது வழக்கம்.
    • மேட்டூர் அணையில் நீர்மட்டம் 103 அடி தண்ணீர் இருந்ததால் காவிரி டெல்டா பாசனத்துக்கு கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    சேலம்:

    ஆண்டுதோறும் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக ஜூன் மாதம் 12-ந்தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். நடப்பாண்டு மேட்டூர் அணையில் நீர்மட்டம் 103 அடி தண்ணீர் இருந்ததால் காவிரி டெல்டா பாசனத்துக்கு கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    பாசன தேவைக்கு ஏற்ப அணையில் இருந்து தண்ணீர் அதிகரித்தும், குறைத்தும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் மூலம் டெல்டாவில் உள்ள 12 மாவட்டங்களில் 3 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி மும்முரமாக மேற்கொள்ளப் பட்டது. தற்போது குறுவை சாகுபடி அறுவடை செய்யும் தருவாயில் உள்ளது. இந்த நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து போதிய அளவு தண்ணீர் தமிழகத்திற்கு கர்நாடக அரசு திறந்து விடவில்லை. இதனால் கடந்த மாதம் 29-ந்தேதி முதல் 15 நாட்களுக்கு (12-ந்தேதி வரை) தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்ட பிறகும் உரிய தண்ணீரை தரவில்லை.

    இதனால் மேலும் 15 நாட்களுக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என பரிந்துரை செய்த பிறகும் அதை கர்நாடக அரசு ஏற்க மறுத்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என கூறி விட்டது.

    இதனிடையே பிலிகுண்டு, ஒகேனக்கல், கொளத்தூர், மேட்டூர் உள்ளிட்ட தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தென்மேற்கு பருவமழை கைகொடுக்கவில்லை. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அடியோடு சரிந்து விட்டது. கடந்த சில நாட்களாக நீர்வரத்து 800 கன அடிக்கும் குறைவாக அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 507 கன அடி நீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து பாசனத்திற்காக 6,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் 45.01 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 44.06 அடியாக சரிந்தது. இன்று நீர்மட்டம் மேலும் குறைந்து 43.11 அடியானது.

    தற்போது அணையில் 13.74 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. இதில் 5 டி.எம்.சி.தண்ணீர் குடிநீர் மற்றும் மீன் வளத்துக்கு பயன்படுத்தப்படும். நீர் திறப்பு ெதாடர்ந்து 6,500 கன அடி அளவில் நீடித்தால் இன்னும் 8 நாட்களுக்கு மட்டுமே அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க முடியும் சூழல் உருவாகி உள்ளது.

    • காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
    • அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் காவிரி ஆறு பாய்ந்தோடும் பகுதிகளில் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

    மேட்டூர் அணை மூலம் சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், தஞ்சை, நாகை, திருவாரூர் உள்பட 13 மாவட்டங்கள் பாசன வசதி பெற்று வருகின்றது.

    மேலும் பல்வேறு கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகளும் நிறைவேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்கு குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்படும்.

    தொடர்ந்து ஜனவரி மாதம் 28-ந் தேதி வரை தண்ணீர் திறக்கப்பட்டு வரும். இந்த கால கட்டத்தில் காவிரி டெல்டா மாவட்டத்தில் உள்ள 16 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். குறுவை, சம்பா, தாளடி ஆகிய முப்போக விளைச்சல் மேட்டூர் அணையை நம்பியே உள்ளது.

    அணையில் 90 அடிக்கு மேல் தண்ணீர் இருக்கும் பட்சத்தில் தொடர்ந்து வினாடிக்கு 10ஆயிரம் கனஅடி தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருந்தால் மட்டுமே குறிப்பிட்ட நாளில், அதாவது ஜூன் 12-ந்தேதி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும். இந்த ஆண்டு அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முடியாத நிலவியது.

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியான கர்நாடக மாநிலம் குடகு, கேரள மாநிலம் வயநாடு ஆகிய பகுதிகளில் ஜூன் மாதம் தொடக்கத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. ஆனாலும் மழை தீவிரம் அடையாததால் அணைகளுக்கு நீர்வரத்து இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் ஜூலை மாதம் 2-வது வாரத்தில் இருந்து தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து பெய்து வருகிறது.

    இதன் காரணமாக கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகள் நிரம்பியது. அந்த அணைகளுக்கு வரும் உபரிநீர் தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் வினாடிக்கு 1 லட்சத்து 65ஆயிரத்து 867 கனஅடி தண்ணீர் இன்று வந்து கொண்டிருக்கிறது.

    இன்று மதியம் 12 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 109.20 அடியை எட்டி இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1 லட்சத்து 47 ஆயிரத்து 896 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. ஆடிப்பெருக்கு விழா கொண்டாடும் வகையில் இன்று முதல் வினாடிக்கு 5ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

    மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக நிரம்பி வரும் நிலையில் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

    இதற்கிடையே சென்னை தலைமை செயலகத்தில் இன்று மதியம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் முன்னிலையில் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது குறித்து காணொளி காட்சி வாயிலாக டெல்டா மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இதில் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, கரூர், நாமக்கல், கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி உள்ளிட்ட கலெக்டர்கள் பங்கேற்றனர்.

    அப்போது அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் காவிரி ஆறு பாய்ந்தோடும் பகுதிகளில் தயார் நிலையில் இருக்க வேண்டும் என கலெக்டர்களுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார். கடைமடை பகுதி வரை நீர் ஆதாரங்களை கொண்டு செல்ல வேண்டும் எனவும், அதற்கான நடவடிக்கையை பொதுப்பணிதுறை, நீர்வளத்துறை சார்பாக செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

    மேலும் மேட்டூர் அணை நீர்மட்டம் 109.20 அடியாக உயர்ந்து இருக்கிறது. நீர் இருப்பு 77.27 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. இதனால் பாசனத்திற்கு எப்போது தண்ணீர் திறக்கலாம் என கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

    மேட்டூர் அணைக்கு 1.14 லட்சம் கன அடிக்கு அதிகமாக வருவதால் அணையை இன்று மாலை 3 மணிக்கு திறக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

    அதன்படி, காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    முதற்கட்டமாக 12 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், கரையோர பகுதி மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும், காவிரி ஆற்றங்கரை ஓரத்தில் நின்று செல்பி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

    காவிரி டெல்டா பாசனத்துக்காக கல்லணையில் இருந்து இன்று 17 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. கல்லணையில் தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.#Kallanai
    பூதலூர்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகள் நிரம்பின. இதையடுத்து கபினி அணை, கிருஷ்ணராஜசாகர் அணைகள் திறக்கப்பட்டதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. இதைதொடர்ந்து அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டியதால் காவிரி டெல்டா பாசனத்துக்கு கடந்த 19-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தண்ணீரை திறந்து வைத்தார்.

    பின்னர் மேட்டூரில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் நேற்று மாலை திருச்சி மாவட்டம் முக்கொம்பு கதவணையை வந்தடைந்தது. அங்கிருந்து தஞ்சை மாவட்டம் கல்லணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    முக்கொம்பில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் இன்று அதிகாலை கல்லணையை வந்தடைந்தது.

    இதைதொடர்ந்து கல்லணையில் இன்று திறக்கப்படுவதை முன்னிட்டு முதலில் கொள்ளிடத்தின் கீழ்பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் மேள தாளத்துடன் சிறப்பு வழிபாடு நடந்தது. பின்னர் கல்லணை கரிகாலன் சோழன் சிலை அருகில் உள்ள ஆதி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. கல்லணையில் உள்ள கரிகாலன் சோழன், அகத்தியர், காவிரியம்மன், ராஜராஜசோழன் ஆகியோரது சிலைகளுக்கு வர்ணம் பூசப்பட்டு மாலைகள் அணிவிக்கப்பட்டு இருந்தன.

    இதையடுத்து டெல்டா பாசனத்துக்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இதில் அமைச்சர்கள் துரைக்கண்ணு, இரா.காமராஜ், ஓ.எஸ்.மணியன், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு கல்லணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தனர்.

    அப்போது மதகுகளில் இருந்து சீறி பாய்ந்த தண்ணீரின் மீது விதைநெல், மலர்களை தூவி காவிரியை வழிபட்டனர். இதையடுத்து கல்லணையில் இருந்து காவிரிக்கு 7 ஆயிரம் கன அடியும், வெண்ணாறில் 7 ஆயிரம் கன அடியும், கல்லணை கால்வாய்க்கு ஆயிரம் கன அடியும், கொள்ளிடத்தில் 2 ஆயிரம் கன அடியும் என மொத்தம் 17 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் எம்.பி.க்கள் வைத்திலிங்கம், தஞ்சை பரசுராமன், மயிலாடுதுறை பாரதிமோகன், நாகை கோபால், திருச்சி குமார் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பட்டுக்கோட்டை சேகர், பேராவூரணி கோவிந்தராசு, மயிலாடுதுறை ராதா கிருஷ்ணன், பூம்புகார் பவுன்ராஜ், சீர்காழி பாரதி, கலெக்டர்கள் தஞ்சை அண்ணாதுரை, திருச்சி ராஜாமணி, நாகை சுரேஷ்குமார், திருவாரூர் நிர்மல்ராஜ் மற்றும் பொதுப் பணித்துறை தலைமை பொறியாளர் செந்தில்குமார், கண்காணிப்பு பொறியாளர் ரவிச்சந்திரன், வேளாண் இணை இயக்குனர் மதியழகன் மற்றும் டெல்டா மாவட்டங்களை சேர்ந்த விவசாய சங்க தலைவர்கள், நிர்வாகிகள், விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    மேலும் புதுச்சேரி விவசாயத்துறை அமைச்சர் கமலக்கண்ணன், புதுச்சேரி கலெக்டர் கேசவன், புதுச்சேரி தலைமை பொறியாளர் சண்முகசுந்தரம், ஆகியோரும் கலந்துகொண்டனர்.

    கல்லணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு இன்று தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் சுமார் 12 லட்சம் ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையொட்டி விவசாயிகள் சாகுபடி செய்ய தேவையான விதை, உரம் ஆகியவை தேவையான அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கல்லணையில் தண்ணீர் திறக்கப்பட்டதால் டெல்டா மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சம்பா சாகுபடி பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.  #Kallanai #KallanaiDam
    காவிரி டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து 22-ந்தேதி தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.
    தஞ்சாவூர்:

    காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. மேட்டூரில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் வருகிற 22-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை கல்லணைக்கு வந்து சேருகிறது.

    பின்னர் காவிரி டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து 22-ந் தேதி காலை 11 மணியளவில் தண்ணீர் திறக்கப்படுகிறது.

    இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைக்கண்ணு, காமராஜ், ஓ.எஸ்.மணியன், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, விஜயபாஸ்கர், எம்.பி.க்கள் வைத்திலிங்கம், பரசுராமன், பாரதிமோகன், குமார், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் செந்தில்குமார், கண்காணிப்பு பொறியாளர் ரவிச்சந்திரன், தஞ்சை, திருவாரூர், நாகை, திருச்சி, அரியலூர் மாவட்ட கலெக்டர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

    கல்லணையில் தண்ணீர் திறப்பு நிகழ்வின் போது முதலில் கொள்ளிடத்தின் கீழ்பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.

    பின்னர் கல்லணை கரிகாலன் சோழன் சிலை அருகில் உள்ள ஆதிவிநாயகர் கோவிலில் வழிபாடு நடைபெறும். அதன் பின்னர் முக்கிய பிரமுகர்கள் காவிரி டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து காவிரியில் தண்ணீரை திறந்து விடுவார்கள்.

    இதைதொடர்ந்து வெண்ணாறு, கல்லணை கால்வாய்களில் தண்ணீர் திறக்கப்படும். நிறைவாக கருப்பண்ணசாமி கோவிலில் வழிபாடு நடைபெற்ற பின்னர் கொள்ளிடத்தில் தண்ணீர் திறக்கப்படும்.

    கல்லணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்கான ஏற்பாடுகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


    ×