என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bus overturned accident"

    • பேருந்தில் பயணித்த 24 ஆண்கள், 15 பெண்கள் காயமடைந்தனர்.
    • காயமடைந்த பயணிகள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    கீழக்கரை:

    ராமநாதபுரம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து கீழக்கரை நோக்கி அரசு நகர் பேருந்து ஒன்று புறப்பட்டது. இந்த பேருந்தில் 28 ஆண்கள், 18 பெண்கள் உள்பட மொத்தம் 46 பயணிகள் பயணம் செய்தனர். இந்த பேருந்தை ஆர்.எஸ்.மடை கிராமத்தை சேர்ந்த ஓட்டுநர் ஆத்திமுத்து(வயது 50) என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில் திருப்புல்லாணி அருகே சென்று கொண்டிருந்தபோது பேருந்து தாறுமாறாக ஓடியதை கண்டு பயணிகள் கூச்சலிட்டுள்ளனர்.

    ஓட்டுநர் அலட்சியமாக செல்போனில் பேசியபடியே பேருந்தை ஓட்டி சென்றதாக பயணிகள் தெரிவித்தனர். ஆனால் இதை கவனத்தில் கொள்ளாத ஓட்டுநர் தொடர்ந்து அலட்சியமாக செல்போனில் பேசியபடி பேருந்தை ஓட்டி சென்றுள்ளார்.

    இந்த சூழலில் திருப்புல்லாணி அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த டிராக்டருக்கு வழி கொடுப்பதற்காக பேருந்தின் ஓட்டுநர் பேருந்தை சாலையின் ஓரமாக இறக்கினார்.

    அப்போது திடீரென பஸ் நிலைத்தடுமாறி சாலையோரம் உள்ள பள்ளத்தில் தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 24 ஆண்கள், 15 பெண்கள் காயமடைந்தனர். உடனடியாக அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து தலைகுப்புற கவிழ்ந்து கிடந்த பேருந்தில் சிக்கிய பயணிகளை மீட்டனர். மேலும் மீட்புபடையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசாரும், மீட்புப்படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பஸ்சுக்குள் சிக்கியிருந்த அனைவரையும் விரைவாக உயிருடன் விரைவாக மீட்டனர். இந்த விபத்தில் காயமடைந்த பயணிகள் அனைவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கீழக்கரை தாசில்தார் பழனிக்குமார் காயமடைந்த சிலரை தனது வாகனத்தில் ஏற்றி உடனடியாக ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

    இந்த விபத்து குறித்து திருப்புலாணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.செல்போனில் பேசியபடியே டிரைவர் பேருந்தை அலட்சியமாக ஓட்டி சென்றதே விபத்துக்கு காரணம் என பயணிகள் தெரிவித்தனர். பொதுமக்களை ஏற்றி செல்லும் போக்குவரத்து

    துறை ஊழியர்கள் மிகுந்த எச்சரிக்கையோடு பேருந்துகளை இயக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • அரசு பஸ் கவிழ்ந்து வாலிபர் பலி.
    • கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓர பள்ளத்தில் கவிந்து விபத்துக்குள்ளானது.

    குன்னம்:

    குமரி மாவட்டம் களியக்காவிளையில் இருந்து சென்னைக்கு நேற்று இரவு ஒரு தனியார் ஆம்னி பஸ் புறப்பட்டு வந்தது. பஸ்சை கன்னியாகுமரி எஸ்.டி.மந்தாரு வாவரை பகுதியை சேர்ந்த அமர்நாத்(வயது36) என்பவர் ஓட்டினார்.

    பஸ்சில் ஏராளமான பயணிகள் இருந்தனர். திருச்சியை அடுத்து பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் தனியார் பள்ளி அருகே பாலம் கட்டுமான பணி நடக்கிறது.

    இந்த பகுதியில் போக்குவரத்து சர்வீஸ் ரோட்டில் திருப்பி விடப்பட்டது. இன்று அதிகாலை இந்த பகுதியில் பஸ் வந்தபோது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓர பள்ளத்தில் கவிந்து விபத்துக்குள்ளானது.

    இதில் பஸ்சில் வந்த குமரி மாவட்டம் விளவங்கோடு அருகே உள்ள மருதங்கோடு பால்குளத்து விளை வீட்டை சேர்ந்த ரெத்தினன் மகன் அஜின்மோன்(25) என்பவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

    மேலும் பயணிகள் சுமார் 8 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் பாடாலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

    பலியான அஜின்மோன் உடல் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அஜின்மோன் பலியான தகவல் அவர்களது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் பெரம்பலூருக்கு விரைந்துள்ளனர்.

    இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் விபத்துக்குள்ளான பஸ்சை மீட்டு போக்குவரத்தை சரிசெய்தனர். தொடர்ந்து பாடாலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
    • 10 அடி பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

    ராசிபுரம்:

    புதுச்சத்திரம் அருகே உள்ள நவனி தோட்டக்கூர்பட்டி ஊராட்சியிலுள்ள பள்ளிப்பட்டி மற்றும் ஓலப்பாளையம் கிராமங்களை சேர்ந்த குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்கள் என 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் நேற்று முன்தினம் இரவு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு தனியார் டிராவல்ஸ் பஸ் மூலம் சென்றனர். அவர்களுடன் ராசிபுரத்தை சேர்ந்த 10 பேரும் மேல்மருவத்தூர் சென்றுள்ளனர்.

    பின்னர் வழிபாடு செய்துவிட்டு அங்கிருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தனர். ராசிபுரத்தை சேர்ந்தவர்களை இறக்கிவிட்டு விட்டு, அதிகாலை 4 மணியளவில் நவனி தோட்டக்கூர்பட்டி பஸ் நிறுத்தம் அருகே உள்ள லக்கியம்பட்டி பகுதியில் உள்ள வளைவில் சென்றபோது தனியார் பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் சுமார் 10 அடி பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது.

    இதில் ஓலப்பாளையம் பகுதியை சேர்ந்த மோகனாம்பாள் (37), சுவேதா(15), விசாகா (8), ஜெகதீஸ்வரி (40), பாப்பாத்தி (70), தமிழ்ச்செல்வி (31) ஆகியோர் உட்பட 25-க்கும் மேற்பட்ட பெண்கள் காயமடைந்தனர். பஸ் பள்ளத்தில் கவிழ்ந்த தகவல் அறிந்து அப்பகுதி மக்கள் ஏராளமானோர் சம்பவ இடத்தில் திரண்டனர்.

    பின்னர் காயமடைந்தவர்கள் அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ராசிபுரம் மற்றும் நாமக்கல்லில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.


    மேலும் தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். வளைவு பகுதியில் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் சாலையோர பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளாகி இருக்கலாம் என கூறப்படுகிறது.

    இருப்பினும் சம்பவம் தொடர்பாக புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். காயம் அடைந்தவர்களுக்கு ராசிபுரம் மற்றும் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிகளில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

    ×