search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "anjaneyar temples"

    • அனுமன் ஜெயந்தி விழா நாளை (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது.
    • இதையொட்டி நெல்லையில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது.

    நெல்லை:

    அனுமன் ஜெயந்தி விழா நாளை (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்ப டுகிறது.

    இதையொட்டி நெல்லையில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது. நெல்லை அருகன்குளம் காட்டு ராமர் கோவில் எனப்படும் எட்டெழுத்து பெருமாள் கோவிலில் அனுமன் ஜெயந்தியையொட்டி நாளை காலை பூர்ணாபி ஷேகம் நடக்கிறது. அதன் இறுதியில் பஞ்சாபிஷேகம் நடக்கிறது.

    இதில் குழந்தை பாக்கியம் வேண்டி ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்வார்கள்.

    இதில் வழங்கப்படும் பஞ்சாமிர்தத்தை சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம் ஆகும்.

    அதனைத்தொடர்ந்து பல்வேறு பழங்களை கொண்டு பழக்காப்பு விழா நடக்கிறது. இதில் பழங்களால் செய்யப்பட்ட மாலைகள் ஆஞ்சநேயருக்கு அணிவிக்கப்படுகிறது. மாலையில் புஷ்பாஞ்சலி நடக்கிறது. தொடர்ந்து கடன் தொல்லை நீங்க வேண்டுவோர் வெற்றிலை மாலை சாற்றி வழிபாடு நடத்துவர்.

    நெல்லை சுத்தமல்லி ஜெய்மாருதி ஞானபீடம் ஆஞ்சநேயர் கோவிலில் நாளை அதிகாலை சிறப்பு ஹோமங்கள், தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், 108 தேங்காய் கொண்டு ஆஞ்சநேயர் ஹோமம், அலங்கார தீபாராதனை, சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

    பின்னர் அன்னதானமும், மாலையில் ராமர்சீதா திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடக்கிறது.

    இதேபோல் நெல்லை சந்திப்பு கெட்வெல் ஆஞ்சநேயர் கோவில், நெல்லை பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில், சந்திப்பு வரதராஜபெருமாள் கோவில், தச்சநல்லூர் டவுன் ரோட்டில் உள்ள ஆஞ்சநோயர் கோவில், பாளை ராஜ கோபாலசுவாமி கோவில், ராமசாமி கோவில், டவுன் கரியமாணிக்க பெருமாள் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் நாளை ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவையொட்டி சிறப்பு வழிபாடு நடக்கிறது.

    தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அனுமன் கோவில் என்றால் அது நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் தான். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அனுமன் கோவில் என்றால் அது நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் தான். புனிதப் பயணிகளும், சுற்றுலாப் பயணிகளும் பார்க்க வேண்டிய முக்கிய இடம் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலாகும். 1500 ஆண்டுகள் பழமையான இந்த கோவில் நாமக்கல் கோட்டைக்கு கீழே அமைந்துள்ளது.

    மலைக்கோட்டைக்கு மேற்கே நரசிம்மரும், நாமகிரி தாயார் கோவிலுக்கு நேர் எதிரே அமைந்துள்ளது. இங்குள்ள ஆஞ்சநேயர் எதிரில் உள்ள நரசிம்மரை திறந்த விழிகளுடன் கைகூப்பி வணங்கிய நிலையில் காட்சி தருகிறார்.

    கோவில் வரலாறு

    ராமாயண காலத்தில் சஞ்சீவி மலையில் உள்ள மூலிகையைப் பெறுவதற்காக இமயத்தில் இருந்து மலையைப் பெயர்த்து எடுத்து வந்தார். பணி முடிந்ததும் மலையை அதே இடத்திலேயே வைத்துவிட்டு திரும்பினார். அவ்வாறு வருகையில் அங்கிருந்து ஒரு பெரிய சாளக்கிராமத்தை பெயர்த்து எடுத்து வந்தார். அந்த நேரத்தில் சூரியன் உதயமானதால் வான்வழியாக வந்துகொண்டிருந்த ஆஞ்சநேயர், தமது கையில் இருந்த சாளக்கிராமத்தை கீழே வைத்துவிட்டு சூரிய நமஸ்காரம் செய்தார். மீண்டும் வந்து சாளக்கிராமத்தைத் தூக்க முயற்சித்தார். ஆனால் அதைத் தூக்க அவரால் முடியவில்லை.

    அப்போது ராமனுக்கு செய்ய வேண்டிய உதவிகளை செய்து முடித்துவிட்டு பிறகு வந்து என்னை எடுத்துச் செல் என்று அசிரீரி ஒலி கேட்க, ஆஞ்சநேயரும் சாளக்கிராமத்தை அங்கேயே விட்டு விட்டு கிளம்பினார். ராமன் போரில் வென்று சீதையை மீட்ட பிறகு ஆஞ்சநேயர் மீண்டும் அங்கே வந்தார். ஆஞ்சநேயர் விட்டுப் போன சாளக்கிராமம் நரசிம்ம மூர்த்தியாக வளர்ந்து நிற்க ஆஞ்சநேயர் நரசிம்மரை வணங்கியவாறு நின்று நமக்கெல்லாம் அருள்பாலிக்கிறார்.

    தல பெருமைகள்

    இங்குள்ள ஆஞ்சநேயர் சிலை மிகவும் பிரம்மாண் டமானது. பீடத்திலிருந்து 22 அடியும், பாதத்திலிருந்து 18 அடியும் உயரம் கொண்டதாக உள்ளது. இங்குள்ள ஆஞ்சநேயர் முகம் மிகவும் அழகாக தேஜஸ் உள்ளதாக இருப்பது மிக முக்கியமான சிறப்பம்சம். தமிழகம் முழுவதும் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து கும்பிட்டுச் செல்லும் புகழ் பெற்ற கோவில்.

    எதிரே உள்ள லட்சுமி நரசிம்மர் ஆலயத்தின் உப கோவில்தான் இந்த ஆஞ்சநேயர் சன்னதி என்றாலும் இச்சன்னதி யில்தான் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. இச்சா சக்தி (நாமகிரி அம்மன்), கிரியாசக்தி (நரசிம்மர்), ஞானசக்தி(ஆஞ்சநேயர்) ஆகிய மூன்று சக்திகளும் ஒருங்கே அமையப்பெற்ற கோவில் இது.
    இங்குள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு நேர் எதிராக இருக்கும் லட்சுமி நரசிம்மர் ஆலயத்தை தொழுதபடி இருக்கிறார். மிக பிரம் மாண்டமாக காற்று, மழை, வெயில் இவைகளை தாங்கிக் கொண்டு திறந்த வெளியில் தொழுத கைகளோடு நின்றிருக்கிறார்.

    வடைமாலை நேர்த்திக் கடன்

    முன்பு ஒருசமயம் நவக்கிரகங்களில் அதிக குரூரமான ராகுவும், சனியும் ஸ்ரீ ஆஞ்சநேயரிடம் தோல்வியுற்றதனால் ஆஞ்ச நேயருக்கு கீழ்ப்படிந்தார்கள். பூவுலகில் மாந்தர்களுக்கு சனியாலும், ராகுவாலும் ஏதேனும் இடையூறு ஏற்படின் அவர்களை திருப்திபடுத்துவதின் பொருட்டு ராகுவுக்கு பிடித்த உளுந்தும், சனிக்கு பிடித்த எள் எண்ணெயாலும் செய்த வடைமாலையை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு சாத்தி வழிபட்டால் சனி, ராகு இவர்களுடைய இடையூறுகளில் இருந்து விடு படுகிறார்கள் என்பதற்காகத் தான் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்துகிறார்கள்.
    கோபுரம் இல்லை

    லோகநாயகனான ஸ்ரீ நரசிம்மரே (எதிரில் உள்ள ஆலயம்) கிரி உருவில் மேல் விதானம் இல்லாமல் இருப்பதால் தாசனான எனக்கும் விதானம் தேவையில்லை என்று ஸ்ரீ ஆஞ்சநேயர் திறந்த வெளியில் கோபுரம் இல்லாமல் நின்றிருக்கிறார்.

    தங்க ரதம்

    இக்கோவிலில் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் பொருட்டு ரூ.1500 கட்டணம் செலுத்தி தங்க ரதம் இழுத்து வழிபட்டு வருகிறார்கள்.

    108 தங்க மலர் அர்ச்சனை செய்வதற்கு கட்டணம் ரூ. 250 ஆகும். இந்த அர்ச்சனை செய்யும் நேரம் காலை 6.30 மணி முதல் 9.30 மணி வரை.
    மதியம் 12.30 மணி முதல் 1.00 மணி வரை, மாலை 4.30 மணி முதல் 9.00மணி வரை
    ஒரு கட்டண சீட்டுக்கு அதிகபட்சமாக 5 பெயர்கள் (ராசி, நட்சத்திரம் அர்ச்சனை செய்யப்படும்)

    அன்னதானம்

    தமிழக முதல்- அமைச்சரின் திருக்கோவில் அன்னதானத் திட்டம் மூலம் தினமும் இக்கோவிலில் 125 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    தங்கத்தேர் கட்டணம்

    நாமக்கல்லில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் அபிஷேக, ஆராதனை மற்றும் பூஜைக்குரிய கட்டணம் எவ்வளவு என்பது குறித்த விபரம் வருமாறு:- அன்னதானம் 100 நபர்களுக்கு வழங்க கட்டணம் ரூ.2500, ஆஞ்சநேயர் வடைமாலை அபிஷேக கட்டணம் (1 பங்கு) ரூ.6000, தங்கத்தேர் புறப்பாடு கட்டணம் ரூ.2000, வெள்ளி கவசம் சாத்துபடி கட்டணம் ரூ.750, தங்க கவசம் சாத்துபடி கட்டணம் ரூ.5000, முத்தங்கி சாத்துபடி கட்டணம் ரூ.3000, திருக்கல்யாண உற்சவ கட்டணம் ரூ.2500, வெண்ணெய் காப்பு (1 பங்கு கட்டணம் ரூ.15000 வீதம் 5 பங்கு கட்டணம்) ரூ.75000, 108 தங்கமலர் அர்ச்சனை கட்டணம் ரூ.250, ஸ்ரீசுத்த பாராயணம் ரூ.250 ஆகும்.

    பிரார்த்தனை சீட்டு மூலம் கோரிக்கை நிறைவேறும்

    மாணவ, மாணவிகள் படிப்பு நன்றாக வரவும், அதிக மதிப்பெண் எடுக்கவும் ஸ்ரீராமஜெயம் மற்றும் “ஸ்ரீஆஞ்சநேயா போற்றி” என்று 108 முறை எழுதி நூலில் கட்டி சன்னதியின் பின்புறம் உள்ள ஜன்னலில் கட்டித் தொங்கவிடுகிறார்கள். அதேபோல தொழிலதிபர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் பிரார்த்தனையை ஆஞ்சநேயர் நிறைவேற்றித் தரவேண்டும் என்று கூறி பிரார்த்தனை சீட்டு எழுதி தொங்கவிடுகிறார்கள். இப்படி பிரார்த்தனை சீட்டு எழுதினால் தங்கள் கோரிக்கையை ஆஞ்சநேயர் நிறைவேற்றுவதாக பக்தர்கள் நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.

    முக்கிய திருவிழாக்கள்

    நாமக்கல் நரசிம்ம சுவாமி கோவிலோடு இணைந்து ஆஞ்சநேயர் கோவில் இருப்பதால் இந்த கோவில்களுக்கு திருவிழாக்கள் ஒன்றாக நடத்தப்படுகிறது. முக்கிய திருவிழாக்கள் வருமாறு:-

    தமிழ் வருடப் பிறப்பு (சித்திரை)
    தெலுங்கு வருடப் பிறப்பு
    வைகாசி விசாகம் (ஏப்ரல் - மே)
    ஆடி 18 (ஆகஸ்டு)
    ஆடி பூரம் - ஸ்ரீநாமகிரி தாயர் ஊஞ்சல் சேவை
    ஆவணி பவுத்திர உற்சவம் (செப்டம்பர்)
    ஸ்ரீ நரசிம்மர் ஜெயந்தி (செப்டம்பர்)
    ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி (செப்டம்பர் - அக்டோபர்)
    புரட்டாசியின் அனைத்து சனிக்கிழமைகள் (செப்டம்பர் - அக்டோபர்)
    நவராத்திரி உற்சவம் (அக்டோபர்)
    விஜயதசமி
    திருகார்த்திகை தீபம் (டிசம்பர்)
    அனுமன் ஜெயந்தி (மார்கழி மாதம் மூல நட்சத்திரம் அமாவாசை)
    மார்கழி மாதம் முழுவதும் சிறப்பு வழிபாடுகள்
    வைகுண்ட ஏகாதசி (ஸ்ரீ அரங்கநாதருக்கு சிறப்பு வழிபாடுகள்)
    அறுவடைத் திருநாள் (பொங்கல்- ஜனவரி)
    வருட உற்சவம் (பங்குனி)
    அஸ்த நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. இது 15 நாட்கள் திருவிழாவாகும். மூன்றாம் நாள் திருத் தேர் உலா நடைபெறும்.

    பஸ்-ரெயில் வசதிகள்

    நாமகிரி என்ற சிறப்புமிக்க நாமக்கல் நகரின் மையத்தில் இக்கோவில் வீற்றிருக்கிறது. நாமக்கல் ரெயில் நிலையத்திலிருந்து 2 கி.மீ தொலைவிலும், பஸ் நிலையத்திலிருந்து 1 கி.மீ. தொலைவிலும் இக்கோவில் அமைந்துள்ளது.

    நாமக்கல் பஸ் நிலையத்தில் இருந்து ஆட்டோவில் ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்லலாம். சேலத்தில் இருந்து பஸ்சில் வருபவர்கள் சேலம் ரோடு சிக்னலில் இறங்கி நடந்து கோவிலுக்கு செல்லலாம். நாமக்கல் பஸ் நிலையத்தில் இருந்து ராசிபுரம் செல்லும் டவுன் பஸ்சில் டிரைவர் பஸ்சை நிறுத்தினால் கோவில் வாசலில் இறங்கி கொள்ளலாம். இல்லை என்றால் சேலம் ரோடு சிக்னலில் இறங்கி கோவிலுக்கு செல்லலாம். நாமக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து ஆட்டோவில்தான் ஆஞ்சநேயர் கோவிலுக்கு வர முடியும். இக்கோவிலில் தங்கும் விடுதிகள் உள்ளன.

    தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் நாமக்கல்லுக்கு பஸ் வசதி உள்ளது. இக்கோவில் சேலத்தில் இருந்து 57 கிலோ மீட்டர் தூரத்திலும், கரூரில் இருந்து 43 கிலோ மீட்டர் தூரத்திலும், ஈரோட்டில் இருந்து 50 கிலோ மீட்டர் தூரத்திலும் கோவையில் இருந்து 120 கிலோ மீட்டர் தூரத்திலும், திருச்சியில் இருந்து 85 கிலோ மீட்டர் தூரத்திலும் உள்ளது.

    இந்த கோவிலுக்கு முக்கிய நகரங்களில் இருந்து ரெயில் மூலமும் வரலாம். நாமக்கல் ரெயில் நிலையத்தில் பெங்களூர்-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், சென்னை சென்ட்ரல் - பழனி எக்ஸ்பிரஸ், பழனி-சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ், சேலம் - கரூர் பாசஞ்சர் ரெயிலும் நாமக்கல் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்.
    ×