search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Andippatti"

    ஆண்டிப்பட்டி அருகே மது குடித்த அண்ணன்-தம்பி பலியானார்கள். மேலும் 2 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ஆண்டிப்பட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள மேக்கிழார் பட்டியை சேர்ந்தவர்கள் ஜோதி லட்சுமணன்(வயது31), முனீஸ்வரன்(33), ரமேஷ்(35), இவரது தம்பி பாண்டியன்(28).

    இவர்களுக்கு குடிப்பழக்கம் இருந்தது. அடிக்கடி ஒன்றாக அமர்ந்து மது குடிப்பார்கள். கடந்த 8-ந்தேதி 4 பேரும் வீட்டில் அமர்ந்து மது குடித்தனர். பின்பு உணவு சாப்பிட்டனர். அதன்பின் சிலமணிநேரத்தில் அவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.

    உடனே அவர்களை தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே பாண்டியன் பரிதாபமாக இறந்தார். அவரது அண்ணன் ரமேஷ் உள்பட 3 பேரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதில் ரமேஷ் சிகிச்சை பலனளிக்காமல் நேற்றிரவு பரிதாபமாக இறந்தார். இதை தொடர்ந்து ரமேசின் மனைவி அமுதா தனது உறவினர்களுடன் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் எனது கணவரும், அவரது தம்பியும் மது குடித்து மர்மமான முறையில் இறந்துள்ளனர்.

    இதுபற்றி உரிய விசாரணை நடத்த வேண்டும். மேலும் இப்பகுதியில் போலி மது விற்பனை நடக்கிறது. அதற்கு காரணமானவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதனிடையே பாண்டியனின் மனைவி லதாவும், தனது கணவர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஆண்டிப்பட்டி போலீசில் புகார் செய்திருந்தார். பாண்டியன் இறந்ததும் அவரது உடல் புதைக்கப்பட்டது. லதா புகார் செய்ததை தொடர்ந்து பாண்டியன் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய போலீசார் முடிவு செய்தனர்.

    இதையடுத்து ஆண்டிப்பட்டி தாசில்தார் பாலசுப்பிரமணி, ஏ.டி.எஸ்.பி பழனிக்குமார் ஆகியோர் முன்னிலையில் பாண்டியன் உடல் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்பு மீண்டும் அதே இடத்தில் உடல் புதைக்கப்பட்டது.

    மது குடித்த அண்ணன்-தம்பி பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஆண்டிப்பட்டி அருகே சொத்து கேட்டு மிரட்டிய அண்ணன் தலையில் கல்லைப்போட்டு கொன்ற தம்பியை போலீசார் கைது செய்தனர்.

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகே உள்ள முறுக்கோடை பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவரது மனைவி பெருமாயி. இவர்களுக்கு பட்டுராஜன் (வயது26), சவுந்தர்ராஜன் (24) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆக வில்லை.

    பட்டுராஜன் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். இதனால் அடிக்கடி குடிக்க பணம் கேட்டு தனது வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். மேலும் தனது சேர வேண்டிய சொத்தை பிரித்து எழுதி தரும்படி தகராறு செய்து வந்துள்ளார்.

    நேற்று மாலை வழக்கம் போல் போதையில் வந்த பட்டுராஜன் சொத்து கேட்டு தனது தாயிடம் தகராறு செய்தார். சொத்தை எழுதி தராவிட்டால் தாய் மற்றும் தம்பியை கொலை செய்யவும் தயங்க மாட்டேன் என மிரட்டினார்.

    பின்னர் வீட்டு திண்ணையில் தூங்கி விட்டார். அதன் பின் வீட்டுக்கு வந்த சவுந்தர்ராஜனிடம் தாய் நடந்த விபரங்களை கூறினார். இதை கேட்டு ஆத்திரமடைந்த அவர் தூங்கிக் கொண்டு இருந்த தனது அண்ணன் பட்டு ராஜன் தலையில் கல்லைப் போட்டார். பலத்த காயங்களுடன் அவரை தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.

    ஆனால் வரும் வழியிலேயே பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து வரு‌ஷநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து சவுந்தர்ராஜனை கைது செய்தனர்.

    ஆண்டிப்பட்டி அருகே கல்லூரி மாணவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஆண்டிப்பட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள ஜக்கம்பட்டி சீத்தாராம் தாஸ் நகரைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகன் நாகேந்திரபிரசாத் (வயது 18). ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் டிப்ளமோ முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார். ஞாயிற்றுக்கிழமை மாலை தனது நண்பர்கள் 4 பேருடன் வெளியே சென்றார். ஆனால் அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அவரது செல்போன் எண்ணும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

    இன்று காலை ஜக்கம்பட்டி அருகே உள்ள தனியார் பள்ளிக்கு பின்புறம் காட்டுப்பகுதியில் நாகேந்திரபிரசாத் வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்தார். அவரை மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்தது தெரிய வந்தது. இது குறித்து ஆண்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    டி.எஸ்.பி. தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மோப்பநாய் மற்றும் தடயவியல் நிபுணர்களைக் கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவர் உடலை போலீசார் கைப்பற்றி ஆண்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவருடன் சென்ற நண்பர்கள் எங்கு சென்றார்கள்? என தெரியவில்லை. எனவே இந்த கொலைக்கும் அவர்களுக்கும் சம்பந்தம் உள்ளதா? என போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×