search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆண்டிப்பட்டியில் மது குடித்த அண்ணன்-தம்பி பலி
    X

    ஆண்டிப்பட்டியில் மது குடித்த அண்ணன்-தம்பி பலி

    ஆண்டிப்பட்டி அருகே மது குடித்த அண்ணன்-தம்பி பலியானார்கள். மேலும் 2 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ஆண்டிப்பட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள மேக்கிழார் பட்டியை சேர்ந்தவர்கள் ஜோதி லட்சுமணன்(வயது31), முனீஸ்வரன்(33), ரமேஷ்(35), இவரது தம்பி பாண்டியன்(28).

    இவர்களுக்கு குடிப்பழக்கம் இருந்தது. அடிக்கடி ஒன்றாக அமர்ந்து மது குடிப்பார்கள். கடந்த 8-ந்தேதி 4 பேரும் வீட்டில் அமர்ந்து மது குடித்தனர். பின்பு உணவு சாப்பிட்டனர். அதன்பின் சிலமணிநேரத்தில் அவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.

    உடனே அவர்களை தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே பாண்டியன் பரிதாபமாக இறந்தார். அவரது அண்ணன் ரமேஷ் உள்பட 3 பேரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதில் ரமேஷ் சிகிச்சை பலனளிக்காமல் நேற்றிரவு பரிதாபமாக இறந்தார். இதை தொடர்ந்து ரமேசின் மனைவி அமுதா தனது உறவினர்களுடன் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் எனது கணவரும், அவரது தம்பியும் மது குடித்து மர்மமான முறையில் இறந்துள்ளனர்.

    இதுபற்றி உரிய விசாரணை நடத்த வேண்டும். மேலும் இப்பகுதியில் போலி மது விற்பனை நடக்கிறது. அதற்கு காரணமானவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதனிடையே பாண்டியனின் மனைவி லதாவும், தனது கணவர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஆண்டிப்பட்டி போலீசில் புகார் செய்திருந்தார். பாண்டியன் இறந்ததும் அவரது உடல் புதைக்கப்பட்டது. லதா புகார் செய்ததை தொடர்ந்து பாண்டியன் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய போலீசார் முடிவு செய்தனர்.

    இதையடுத்து ஆண்டிப்பட்டி தாசில்தார் பாலசுப்பிரமணி, ஏ.டி.எஸ்.பி பழனிக்குமார் ஆகியோர் முன்னிலையில் பாண்டியன் உடல் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்பு மீண்டும் அதே இடத்தில் உடல் புதைக்கப்பட்டது.

    மது குடித்த அண்ணன்-தம்பி பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×