search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Accident case"

    விபத்து வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர்களுக்கு இரவு 9 மணிக்கு ஜாமீன் வழங்கியது குறித்து விளக்கம் அளிக்கும்படி மாவட்ட முதன்மை நீதிபதிக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக இருந்தவர் சுனந்தா. சேத்துப்பட்டில் மோட்டார் சைக்கிளில் சென்ற போது, வேகமாக வந்த கார் மோதி பலியானார்.

    அந்த காரை ஓட்டி வந்த சட்டக்கல்லூரி மாணவர்கள் இருவரை போலீசார் உடனடியாக கைது செய்யவில்லை. அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதையடுத்து சுனந்தாவின் கணவர் சுரேந்திரன் நாயர், ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    மாணவர்கள் இருவரும் குடிபோதையில் காரை வேகமாக ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த என் மனைவி, பல நாட்கள் சிகிச்சைக்கு பின் மரணமடைந்தார். அவர் உடல் நலத்தை பற்றித் தெரிந்துக் கொண்ட போலீசார், அவர் இறப்பதற்கு முதல் நாள் காரை ஓட்டியதாக ஒரு மாணவனை கைது செய்து, அவனை உடனடியாக ஜாமீனிலும் விடுவித்து விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி என்.ஆனந்தவெங்கடேஷ், போலீசாரின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். இந்த விபத்து வழக்கின் புலன் விசாரணையை ஐகோர்ட்டு கண்காணிக்கும் என்றும் அவர் கருத்து தெரிவித்து, விசாரணையை ஜனவரி 7-ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.

    இதையடுத்து காரை ஓட்டியதாக மாணவர்கள் கரண், மதன் ஆகியோர் மீது உள்நோக்கம் இல்லாமல் பிறரது மரணத்தை ஏற்படுத்துதல் என்ற சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் டிசம்பர் 18 மற்றும் 19-ந்தேதிகளில் போலீசார் கைது செய்தனர்.

    அவர்கள் தங்களுக்கு ஜாமீன் வழங்ககோரி சென்னை மாவட்ட செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி அவர்கள் இருவருக்கும் கடந்த டிசம்பர் 21-ந்தேதி இரவு 9.15 மணிக்கு ஜாமீன் வழங்கினார். இந்த ஜாமீன் உத்தரவுக்கு, சென்னை ஐகோர்ட்டு டிசம்பர் 22-ந்தேதி தடை விதித்தது.

    இந்த நிலையில், வக்கீல் சுனந்தாவின் கணவர் ஒரு மனு தாக்கல் செய்தார், அதில் “இந்த விபத்து வழக்கை ஐகோர்ட்டு கண்காணித்து வருகிறது என்று தெரிந்தும், சென்னை மாவட்ட முதன்மை நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் இரவு சுமார் 9.15 மணிக்கு ஜாமீன் வழங்கியுள்ளார்” என்று கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதி என்.ஆனந்தவெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் கஜா மொய்தீன் கிஸ்தி ஆஜராகி வாதிட்டார்.

    இதையடுத்து நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவருக்கு இரவு 9.15 மணிக்கு மாவட்ட நீதிபதி எப்படி ஜாமீன் வழங்கினார்? என்று கேள்வி எழுப்பினார்.

    ‘இரவு ஜாமீன் வழங்கியது குறித்து மாவட்ட முதன்மை நீதிபதி விளக்கம் அளித்து விரிவான மனுவை தாக்கல் செய்யவேண்டும்’ என்று உத்தரவிட்டார். விசாரணையை வருகிற 7-ந் தேதிக்கு தள்ளிவைத்தார். #HighCourt
    கோவில்பட்டியில் விபத்து வழக்கில் இழப்பீடு வழங்காததால், அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
    கோவில்பட்டி:

    கோவில்பட்டியை அடுத்த இலுப்பையூரணியைச் சேர்ந்தவர் பேச்சிமுத்து. இவருடைய மகன் அய்யனார் (வயது 25). சுமை தூக்கும் தொழிலாளியான இவர் கடந்த 15-4-2009 அன்று சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டு சென்றார். கோவில்பட்டி-கடலையூர் ரோட்டில் சென்றபோது, எதிரே வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக சைக்கிளில் மோதியது. இதில் அய்யனார் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதையடுத்து அய்யனாரின் தாயார் முத்துலட்சுமி, அரசு போக்குவரத்து கழகத்திடம் இழப்பீடு கேட்டு, கோவில்பட்டி சப்-கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    கடந்த 13-12-2016 அன்று வழக்கை விசாரித்த நீதிபதி, அரசு போக்குவரத்து கழகம் ரூ.3 லட்சத்து 53 ஆயிரத்து 400-யை இழப்பீடாக முத்துலட்சுமிக்கு வழங்க உத்தரவிட்டார்.

    ஆனால் அரசு போக்குவரத்து கழகம் இழப்பீடு வழங்கவில்லை. இதையடுத்து வட்டியுடன் சேர்த்து ரூ.5 லட்சத்து 95 ஆயிரத்து 203-யை இழப்பீடாக வழங்குமாறு முத்துலட்சுமி, கோவில்பட்டி சப்-கோர்ட்டில் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்தார்.

    கடந்த 14-ந் தேதி வழக்கை விசாரித்த சப்-கோர்ட்டு நீதிபதி பாபுலால், அரசு போக்குவரத்து கழகம் இழப்பீடு வழங்காததால், அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதன்படி கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து மதுரைக்கு புறப்பட தயாராக இருந்த அரசு பஸ்சை கோர்ட்டு ஊழியர் சங்கரநாராயணன் ஜப்தி செய்து, கோர்ட்டு வளாகத்தில் நிறுத்தினார்.
    நாட்டிலேயே முதன்முறையாக விபத்தில் இறந்த வாலிபர் குடும்பத்துக்கு நெடுஞ்சாலை ஆணையம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று மதுரை செசன்சு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    மதுரை:

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கருங்காலக்குடியை சேர்ந்தவர் கண்ணன் (37). இவர் கடந்த மார்ச் மாதம், 23-ந் தேதி, இரவு 8 மணியளவில், மதுரை- திருச்சி இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டு இருந்தார்.

    அப்போது சாலை விதிகளுக்கு மாறாக எதிர் திசையில் நின்ற லாரி மீது மோதி படுகாயமடைந்த கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    கண்ணனின் மனைவி வாசுகி மற்றும் அவரது குடும்பத்தினர், மதுரை 4-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விபத்தில் உயிரிழந்த கண்ணனுக்கு உரிய இழப்பீடு கோரி மனு தாக்கல் செய்தனர்.

    அந்த மனுவில் ‘’மதுரை- திருச்சி இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் விபத்தை ஏற்படுத்திய லாரி, 2 நாட்களாக நின்றதும், இதை முறையாக எடுத்துச்செல்ல தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நடவடிக்கை எடுக்காததாலும்தான் விபத்து ஏற்பட்டது’’ என்று கூறப்பட்டிருந்தது.

    இதனையடுத்து நீதிபதி சஞ்சய்பாபா தாமாக முன்வந்து இந்த வழக்கில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய தலைமை அதிகாரியை எதிர் மனுதாரராக சேர்த்தார்.

    வழக்கு விசாரணையின் போது இரு தரப்பு விவாதங்களையும் கேட்ட நீதிபதி சஞ்சய்பாபா தீர்ப்பு வழங்கினார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

    4 வழிச்சாலைகளில் கட்டணம் வசூலிப்பது மட்டுமின்றி, சாலைகளை முறையாக பராமரிப்பதும், விபத்து ஏற்படாமல் தடுப்பதும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் பணி. ஆனால் தங்களது பணியை கவனிக்க அவர்கள் தவறிவிட்டனர். இந்த வழக்கில், ரூ.19 லட்சத்து 97 ஆயிரத்து 800 இழப்பீடு வழங்க வேண்டும்.

    மனுதாரரின் கணவர் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியுள்ளார். எனவே, இழப்பீட்டில் 15 சதவீதம் குறைக்கப்படுகிறது. மீதமுள்ள பணத்தில், லாரி இன்சூரன்ஸ் செய்யப்பட்ட நிறுவனம் 50 சதவீதமும், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் 35 சதவீதமும் என கணக்கிட்டு மனுதாரருக்கு வழங்க வேண்டும்.

    மேற்கண்டவாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

    விபத்து வழக்கில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையமும் இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது நாட்டிலேயே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

    ×