search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Trade fair"

    • வர்த்தக கண்காட்சி அடுத்த மாதம் 26-ந்தேதி வரை நடைபெறுகிறது.
    • ஒரு நபருக்கு வார நாட்களில் ரூ.50, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ரூ. 70 நுழைவுக்கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி முத்துநகர் கடற்கரை அருகே அகில இந்திய வர்த்தக தொழில் சங்கம் சார்பில் வர்த்தகக் கண்காட்சி மற்றும் பொருட்காட்சி தொடக்க விழா நேற்று நடைபெற்றது. அதனை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.

    இக்கண்காட்சி அடுத்த மாதம் 26-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் வர்த்தகம் தொடர்பான கண்காட்சி, பெண்களுக்கான அழகு சாதனப் பொருட்கள் அரங்குகள், உள்ளூர் உணவு வகைகளுக்கு தனித்தனி அரங்குகள், வெளிநாட்டுப் பறவைகள் கண்காட்சி அரங்குகள், குழந்தைகளுக்கான விளையாட்டு அரங்குகள், ராட்டிணங்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்துள்ளன. இதற்கு ஒரு நபருக்கு வார நாட்களில் ரூ. 50, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ரூ. 70 நுழைவுக்கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

    தொடக்க விழாவில் அகில இந்திய வர்த்தக தொழில் சங்கத் தலைவர் டி.ஆர்.தமிழரசு, வர்த்தக கண்காட்சி மற்றும் பொருள்காட்சித் தலைவர் ஜி.பி. ஜோ பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பொருட்காட்சியில் 10 ஆயிரம் பேர் நேரடியாகவும், 30 ஆயிரம் பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்.
    • 2020-ம் ஆண்டு வருகையை ஒப்பிட்ட போது, ஒரு லட்சத்து 15 ஆயிரம் பேர் அதிகமாக பார்வையிட்டுள்ளனர்.

    சென்னை :

    சென்னை தீவுத்திடலில் கடந்த ஜனவரி 4-ந்தேதி தொடங்கிய 47-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி நேற்று நிறைவு பெற்றது. இதன் நிறைவு விழா நேற்று இரவு நடந்தது. இதில் சிறந்த அரங்கம் அமைத்த அரசு துறையினருக்கு அமைச்சர்கள் கா.ராமச்சந்திரன், மா.சுப்பிரமணியன் ஆகியோர் பரிசுகள் வழங்கினர்.

    அந்தவகையில் அரங்கம் அமைப்பில் ஓட்டு மொத்தமாக சிறந்து விளங்கியதற்காக காவல்துறைக்கும், தமிழ்நாடு அரசுத்துறைகளில் சிறப்பான அரங்கம் அமைப்பிற்கு முதல் பரிசு பொதுசுகாதாரம் மற்றும் நோய்தடுப்புத்துறைக்கும், 2-ம் பரிசு உயர்கல்வித்துறைக்கும், 3-ம் பரிசு சிறைத்துறைக்கும் வழங்கப்பட்டது. மேலும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தமிழ்நாடு மின்சார வாரியம், தெற்கு ரெயில்வே, மெட்ரோ ரெயில் நிறுவனம் உள்ளிட்ட சிறப்பாக அரங்கம் அமைத்த மத்திய அரசு துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் அரங்குகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    விழாவில் அமைச்சர் ராமச்சந்திரன் பேசியதாவது:-

    47-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி கடந்த ஜனவரி 4-ந்தேதி தொடங்கி நடந்து வந்தது. இதில் மாநில அரசுத் துறைகளின் 27 அரங்கங்களும், 21 பொதுத்துறை நிறுவன அரங்கங்களும், மத்திய அரசின் இரண்டு துறைகளின் அரங்கங்களும் பிற மாநில அரசின் ஒரு அரங்கமும் பொருட்காட்சியில் பங்கேற்றன. அரசின் ஆக்கபூர்வ பணிகளையும் மக்கள் நலனுக்காக செயல்படுத்தும் புதிய திட்டங்களையும் எளிதில் புரிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளன.

    பொருட்காட்சியில் 10 ஆயிரம் பேர் நேரடியாகவும், 30 ஆயிரம் பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். இப்பொருட்காட்சியில் 110 சிறிய கடைகளும், 30 பெரிய அரங்கங்களும் 15-க்கும் மேற்பட்ட சிறப்பு நிகழ்ச்சிகளும் காணக் கிடைத்தன. பனிக்கட்டி உலகம், மீன் காட்சியகம், பேய் வீடு 3 டி தியேட்டர் போன்ற காட்சிகள் கண்காட்சியில் களை கட்டின.

    டெல்லி அப்பளம் உள்ளிட்ட உணவு வகைகளும் 70 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் இதுவரை பார்த்திராத விளையாடி மகிழ்ந்திட 32-க்கும் மேற்பட்ட விளையாட்டுச் சாதனங்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு வளாகமும் இங்கே இடம்பெற்று இருந்தது. சிறுவர் ரெயில், ராட்சத சாகச விளையாட்டு சாதனங்கள், சிறுவர் விளையாட்டுச் சாதனங்கள் மற்றும் நவீன கேளிக்கை சாதனங்கள் இளையோரைச் சுண்டி இழுக்கும் வண்ணம் அமைக்கப்பட்டு ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளன.

    8 லட்சத்து 30 ஆயிரம் பார்வையாளர்கள் கண்டுகளித்துள்ளனர். 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகளும் பார்த்து சென்றுள்ளனர். கடந்த 2020-ம் ஆண்டு வருகையை ஒப்பிட்ட போது, ஒரு லட்சத்து 15 ஆயிரம் பேர் அதிகமாக பார்வையிட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மை செயலாளரும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக தலைவருமான டாக்டர் பி.சந்தரமோகன், சுற்றுலா இயக்குனரும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குனருமான சந்தீப் நந்தூரி, சென்னை மாவட்ட கலெக்டர் சு.அமிர்தஜோதி உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    • சென்னை தீவுத்திடலில் 47-வது இந்திய சுற்றுலா பொருட்காட்சி நடந்து வருகிறது.
    • இந்த கண்காட்சி 70 நாட்கள் நடைபெற உள்ளது.

    சென்னை :

    சுற்றுலாத்துறை இயக்குனரும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குனருமான சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை தீவுத்திடலில் நடைபெற்று வரும் 47-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியில் பல்வேறு திட்டங்களின் செயல் மாதிரிகளுடன் அரசு துறைகளின் அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை தவிர 125 சிறிய கடைகள் மற்றும் 60 தனியார் அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.

    70 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பல்வேறு விளையாட்டுகளுடன் கூடிய பொழுதுபோக்கு வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. சிறுவர் ரெயில், பனிக்கட்டி உலகம். மீன் காட்சியகம், பேய் வீடு, பறவைகள் காட்சி, 3டி தியேட்டர் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பொருட்காட்சி மூலமாக நேரடியாக சுமார் 5 ஆயிரம் பேரும், மறைமுகமாக சுமார் 25 ஆயிரம் பேரும் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

    கடந்த 13-ந்தேதியுடன் (38 நாட்களில்) பொருட்காட்சிக்கு 4,89,669 பெரியவர்கள், 1,12,905 குழந்தைகள் என மொத்தம் 6 லட்சத்து 2 ஆயிரத்து 574 பேர் வந்துள்ளனர். 2019-ம் ஆண்டில் 38 நாட்களில் 4.76 லட்சம் பேரும், 2020-ம் ஆண்டில் 5.31 லட்சம் பேரும் பார்வையிட்டிருந்தனர்.

    இந்த பொருட்காட்சியில் சுற்றுலாத்துறை அரங்கில் மெய்நிகர் காட்சி (விர்சுவல் ரியாலிட்டி) முறையில் யுனெஸ்கோவால் உலக புராதன சின்னங்களக அறிவிக்கப்பட்ட தஞ்சை பெரிய கோவில், மாமல்லபுரம் கடற்கரை கோவில், கங்கை கொண்ட சோழபுரம், நீலகிரி மலை ரெயில், தாராசுரம் கோவில் ஆகியவை படமாக்கப்பட்டுள்ளன.

    மெய்நிகர் காட்சி (விர்சுவல் ரியாலிட்டி) என்ற சிறப்பு பிரத்யோக சாதனத்தின் மூலம் இந்த இடங்களின் புகைப்படங்கள் பார்வையாளர்களுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டு வருகிறது.

    70 நாட்கள் நடைபெற உள்ள இந்த கண்காட்சிக்கு பொதுமக்கள் அதிகளவில் வருகை தந்து தமிழ்நாடு அரசின் ஆக்கப்பூர்வ பணிகளையும், மக்கள் நலனுக்காக செயல்படுத்தப்படும் புதிய திட்டங்கள் மற்றும் சாதனைகளை தெரிந்து கொண்டு பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • இந்திய நாட்டியத் திருவிழா தினமும் நடத்தப்பட உள்ளது
    • இந்த சுற்றுலா பொருட்காட்சி 70 நாட்கள் நடத்தப்பட இருக்கிறது.

    சென்னை :

    இந்திய சுற்றுலா, தொழில் பொருட்காட்சி ஒவ்வொரு ஆண்டும் சென்னை தீவுத்திடலில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் கொரோனா தொற்று காரணமாக நடத்தப்படாமல் போனது.

    இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு, இந்த ஆண்டு 47-வது இந்திய சுற்றுலா, தொழில் பொருட்காட்சி நடைபெறுகிறது.

    இதன் தொடக்க விழா சென்னை தீவுத்திடலில் நேற்று மாலை நடந்தது. விழாவுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, தயாநிதிமாறன் எம்.பி., சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மை செயலாளரும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக தலைவருமான டாக்டர் சந்திரமோகன், சுற்றுலாத்துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தொடக்க நிகழ்வாக, கண்காட்சியின் நுழைவுவாயில் பகுதியில் திருவாரூர் தேர், மாமல்லபுரம் கடற்கரை கோவில், கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை ஆகியவை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு இருந்தன. அவற்றை அமைச்சர்கள் கா.ராமச்சந்திரன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் திறந்து வைத்தனர். அதன் பின்னர், தீவுத்திடல் வளாகத்தில் 10 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் நிரந்தரமாக அமைக்கப்பட்டுள்ள டிரைவ்-இன் ரெஸ்டாரன்ட், டிரைவ்-இன் தியேட்டரும் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து மேடையில் நடந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள், மேயர், அதிகாரிகள் குத்துவிளக்கேற்றி கண்காட்சியை தொடங்கி வைத்தனர்.

    இந்த சுற்றுலா பொருட்காட்சி 70 நாட்கள் நடத்தப்பட இருக்கிறது. சுற்றுலா பொருட்காட்சியில் 27 அரசுத் துறைகள், 21 பொதுத் துறைகளின் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அரசுத் துறையும் செயல்படுத்தும் திட்டங்கள், அவற்றின் மூலம் மக்கள் பெறும் பயன்கள் குறித்து மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் தகவல்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கின்றன.

    இதுதவிர, 60 தனியார் அரங்குகளும், 125 சிறிய கடைகளும் இடம்பெற்றுள்ளன. மேலும் 20 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பொழுது போக்கு விளையாட்டு பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது. 32-க்கும் மேற்பட்ட விளையாட்டு சாதனங்கள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்துடன் வந்து மகிழ்ச்சியுடன் சுற்றிப்பார்க்கும் வகையில் சுற்றுலா பொருட்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

    சிறுவர்களுக்கு ரெயில், பனிக்கட்டி உலகம், மீன் காட்சியகம், பேய்வீடு, 3டி தியேட்டர் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும் மாமல்லபுரத்தில் நடத்தப்படுவது போல, சென்னை தீவுத்திடலில் தமிழர்களின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்திய நாட்டியத் திருவிழா தினமும் நடத்தப்பட உள்ளது என்று அமைச்சர் கா.ராமச்சந்திரன் கூறினார்.

    • பெங்களூரைச் சேர்ந்த பன் வேர்ல்டு என்ற நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
    • ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்து தனி நீதிபதி உத்தரவிட்டார்.

    சென்னை

    சென்னை தீவுத்திடலில் 47-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் வர்த்தக பொருட்காட்சிக்கான டெண்டர் நடைமுறைகளை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் பெங்களூரைச் சேர்ந்த பன் வேர்ல்டு என்ற நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. அப்போது, கடந்த 2017-ம் ஆண்டு நடத்தப்பட்ட சுற்றுலா பொருட்காட்சியின்போது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்துக்கு செலுத்த வேண்டிய ரூ.3 லட்சம் பாக்கியை செலுத்தாததால், அந்த நிறுவனத்தின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இதையடுத்து, ரூ.50 ஆயிரம் வழக்கு செலவு (அபராதம்) விதித்து வழக்கை தள்ளுபடி செய்து தனி நீதிபதி உத்தரவிட்டார்.

    இந்த உத்தரவை எதிர்த்து பன் வேர்ல்டு நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.பரதசக்ரவர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது, டெண்டரில் வெற்றி பெற்ற நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு, பொருட்காட்சி அமைப்பதற்கான பணிகள் தொடங்கி விட்டதாகவும், வருகிற 28-ந்தேதி முதல் பொருட்காட்சி தொடங்கவுள்ளதாகவும் அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், பொருட்காட்சியை திட்டமிட்டபடி வருகிற 28-ந்தேதி தொடங்க அனுமதியளித்தனர். மனுதாரர் நிறுவனத்துக்கு தனி நீதிபதி விதித்த அபராதத்துக்கு மட்டும் தடை விதித்தனர். மேலும், இதுதொடர்பாக அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வருகிற ஜனவரி 5-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.

    • டிசம்பர் 2-வது வாரம் தொடங்குகிறது.
    • இந்த பொருட்காட்சி மார்ச் மாதம் வரை 70 நாட்கள் நடைபெறும்.

    சென்னை :

    சென்னை தீவுத்திடலில் சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி அடுத்த மாதம் (டிசம்பர்) 2-வது வாரம் தொடங்குகிறது.

    இந்த பொருட்காட்சி மார்ச் மாதம் வரை 70 நாட்கள் நடைபெறும்.

    இதற்கென அரசு நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது.

    கண்காட்சியின்போது கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

    சென்னை தீவுத்திடலில் அரசு பொருட்காட்சிக்கு இதுவரையில் 1 ¼ லட்சம் பேர் கண்டு களித்துள்ளனர். இன்று காணும் பொங்கலையொட்டி கூட்டம் நிரம்பி வழிகிறது. #KaanumPongal
    சென்னை:

    சென்னை தீவுத்திடலில் அரசு பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 9-ந் தேதி தொடங்கிய பொருட்காட்சியில் சிறுவர்களை கவரும் விளையாட்டு சாதனங்கள், மத்திய, மாநில அரசுகளின் அரங்குகள், நூற்றுக்கணக்கான ஸ்டால்கள் இடம் பெற்று உள்ளன.

    தாமதமாக தொடங்கப்பட்ட பொருட்காட்சி பொங்கல் விடுமுறையை யொட்டி களைகட்டி வருகிறது. கடந்த சில நாட்களாக கூட்டமின்றி காணப்பட்ட பொருட்காட்சியில் பொங்கல் முதல் கூட்டம் கூடியது.

    நேற்று மாட்டு பொங்கல் ஒரே நாளில் மட்டும் 60 ஆயிரம் பேர் பொருட்காட்சியை கண்டுகளித்தனர். இதுவரையில் 1 ¼ லட்சம் பேர் பொருட்காட்சிக்கு வந்துள்ளனர்.

    இன்று காணும் பொங்கலையொட்டி கூட்டம் நிரம்பி வழிகிறது. குடும்பம், குடும்பமாக பொருட்காட்சிக்கு படையெடுக்க தொடங்கினர். புதுமண தம்பதிகள், காதல் ஜோடிகள் என பிற்பகல் முதல் கூட்டம் கூட தொடங்கியது. இன்று சுமார் 1 லட்சம் பேர் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பொருட்காட்சியில் சிறுவர்களை கவரும் ராட்டினங்கள், விளையாட்டு சாதனங்கள் அதிகம் உள்ளதால் அதில் சிறுவர்களை அமர்த்தி பெற்றோர்கள் மகிழ்வித்தனர். எப்போதும் போல சோலா பூரி, பஜ்ஜி, அப்பளம் போன்ற உணவு கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பொருட்காட்சி இன்னும் 2 மாதம் வரை நடைபெறுகிறது. #KaanumPongal
    ×